Tuesday, November 5, 2013

தேடல்:2






தா’ என்று யாரிடத்தும் தாழாத மனமும்
‘சீ’என்று ஒருவரையும் சினவாத  குணமும்;
‘போ’ என்று சொன்னால் உயிர் போகின்ற நிலையும்
‘தா’வென்றே பணிந்தேன்நான்;தந்தருளென் குரு நாதனே!

தேடுகின்ற பொருட்களிலே தெளிந்த ஞானம் கொண்டும்;
தெளிந்த ஞானம் இன்னதென்று தேடுகின்ற போதும்;
வாடுகின்ற மனதில் ஒரு வாட்டம் நேரும் என்றால்;
வருத்தம் போக்க உலகிலென்ன மார்க்கம் உண்டு;சொல்க!

விதி வழியே வாழ்க்கை என்று நம்புகின்றபோது;
வேறு வேறு திட்டங்களைத் தீட்டி விதியை இங்கு
மதிவழியே காணுகின்ற மனதைக் கண்டு கொண்டு
மயங்கின்றேன்;தயங்குகின்றேன் குழப்பம் அகலவில்லை!

ஊருக்கெல்லாம் சொல்லுகின்ற அறிவுரைகள் வழியே
உண்மையாக வாழ்ந்து நிற்கும் உறுதி இங்கு தேடி
பாருக்கெல்லாம் காட்டுகின்ற  நேர்மை கொண்ட நெஞ்சம்
படைத்திடாத போதில் ஞானம் எங்கு கூடும்: சொல்வீர்?

தன்மனதை அறிந்திடாது தத்துவங்கள் சொல்லி;
தமிழை இங்கு கெடுப்பதற்கா இங்கு கூட வேண்டும்?
புன்மையான பொய்யறிவைப் போற்றிடாது இங்கு
பொய்களோடு வாழ்ந்து விட்டுப் போகும் பாதை எங்கு?

-கிருஷ்ணன்பாலா
5.11.2013

No comments: