Friday, January 11, 2013

எக்காலம்?
























வாழ்க்கைஎனும் நீள்பாதை
வார்த்திருக்கும் காலடிகள்
ஊழ்வினையின் உறுத்தலெனெ
உணர்ந்திருப்ப தெக்காலம்?

பின்னாள் விளைவுகளைச்
பிழையற்ற வாழ்வாக்க
முன்னாள் அறிவோடு
மூழ்குவது எக்காலம்?

செய்யாத செயல்களுக்குப்
சிறிதளவும் உண்மையின்றிப்
பொய்யாய்ப் புகழ்வதைநாம்
புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லாத மானிடர்பால்
காட்டுகின்ற அக்கறையில்
இல்லாத பொருளுரைக்கும்
இலக்கொழிப்ப தெக்காலம்?

பொய்யை, புனைசுருட்டைப்
போற்றுகின்ற கூட்டத்தார்
கையொலியை மறுத்துக்
கையெடுப்ப தெக்காலம்?

நீதிநெறி முறைகள்
நில்லாத சிந்தனையை
ஓதி மகிழ்வோரை
ஒதுக்குவது எக்காலம்?

சாதிக் கண்ணோட்டம்
சண்டாளர் சகவாசம்
தீதென்று சொல்லி,அதை
தீ வைப்பதெக் காலம்?

போதிக்கும் பொய்யரெலாம்
புறவேஷ தாரி எனும்
சேதிசொல்லி நாற்றிசையும்
சிந்திப்ப தெக்காலம்?

தோல்,சதையில் மயங்கித்
துவளுகின்ற பேய்மனதைக்
காலால் உதைத் திங்கு
கட்டிவைப்ப தெக்காலம்?

வீட்டுக்குள் இருந்தாலும்
வெளிஉலகில் மனம்திரியும்
கேட்டுக்குள் வீழ்வோரைக்
கேடறுப்ப தெக்காலம்?

வீட்டு நினைவுக்குள்
வீழ்ந்தாலும் நாம் அதனை
நாட்டுநலன் ஆக்கி,
நாடுவது எக்காலம்?

இறக்காமல் பிறக்கின்ற
எண்ணத்தை வளப் படுத்தி
மறக்காமல் வாழுகின்ற
மனம்பெறுவ தெக்காலம்?

வையம் அழிக்கின்ற
வன்செயல்கள் புரிந்திங்கு
தெய்வம் தொழுவோரைத்
திருடரென்ப தெக்காலம்?

நீதிசெயும் ஆசனத்தில்
நிமிர்ந்திருக்கும் நேர்மையின்றிச்
சாதிக்கும் சபை ஒழித்துச்
சாற்றுவது எக்காலம்?

ஓட்டுக்கள் வாங்குதற்கு
ஊழல்பணம் நீட்டும்
நோட்டுப் பேய்களைநாம்
நோகடிப்ப தெக்காலம்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.1.2013

Tuesday, January 1, 2013

பொய்ம்மை அகல;மெய்ம்மை மேவ...!


நண்பர்களே,

அனைவருக்கும் 2013ன் புத்தாண்டு வணக்கமும் வாழ்த்துக்களும்.

அஸத்தோம ஸத் கமய;
தமஸோம ஜ்யோதிர் கமய;
ம்ருத்யோர்ம அம்ருதம் கமய...”

என்று உலகின் நன்மைக்காகப்
ப்ரார்த்திக்கிறது ரிக் வேதம்.

பொய்யிலிருந்து உண்மைக்கும்
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும்
அழிவிலிருந்து அழியாத நிலைக்கும்

எங்களை வழி நடத்திச் செல்வாயாக!”

என்று-

செழுஞ்சுடராம் சூரியனை நோக்கி நம் முன்னோர் வேண்டிக் கொள்ளும் வழிபாடு இது.

சூரியனே உலகின் கண்கண்ட  கடவுள் என்று 
ரிக் வேதம் சொல்கிறது.

நம் அறிவுக்கு மெய்ஞ்ஞான  வித்து சூரியன்தான் என்பதைக் கண்டுணர்ந்த உண்மை இது.

மத உணர்வுகளை எல்லாம் கடந்துஉள்முகம் கொண்டு உணர்ந்தால் இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.


உலகின் மிகத் தொன்மை வாய்ந்த வேதம் என, கற்றாய்ந்த அறிஞர்களாலும் மானுடவியலாளர்களாலும் போற்றப்படும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட இவ்வாசகம் மிக நுட்பமான மெய்ஞ்ஞானச் சிந்தனைக்கு நம்மை வழிநடத்தக் கூடியதாகும்.

உலகின் கண்கண்ட முழுமுதல் கடவுள் என சூரியனை நோக்கி வணங்கி வேண்டுவதுபோல் இந்த வழிபாடு காட்டும் உணர்வினை நாம் சிந்தையில் கொண்டு
இந்த நாளில் நம் எல்லோருக்குமாக  வேண்டுவோம்:

பொய்ம்மையிலிருந்து மெய்ம்மைக்கு;
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு;
அச்சத்திலிருந்து துணிச்சலுக்கு;
சுயநலத்திலிருந்து பொது நன்மைக்கு....

நம் அனைவரையும் இப் புத்தாண்டு (2013) வழி நடத்திச் செல்லுமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
1.1.2013