Thursday, August 29, 2013

இந்தச் சந்தைக் கூட்டத்தில்...

ண்பர்களே,

‘நட்பு வட்டம் அதிகமாக இருக்க வேண்டும்’ என்றோ  ‘அதிகம் இருக்கிறது’ என்றோ எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்று  கண்டதையெல்லாம் எழுதிவரும் பேர்வழிகளால்  வெட்டித்தனமான வார்த்தைகளும் விளையாட்டுத்தனமான கருத்துக்களும் முகநூலில் அதிகரித்து வருகின்றன.

’கண்ணியமாக எழுதி,கருத்துப் பரவலை உருவாக்க முகநூலில்-குறிப்பாக தமிழர்கள் பயன்படுத்தும்  முகநூலில் இயலாது என்பது’ கண்கூடான  அனுபவம்.

நாட்டுப் பிரச்சினைகளிலும் நமது வருங்கால,நிகழ்காலப் பிரச்சினைகளிலும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து எழுதி,அதை கருத்துப் பரவலாக்க  முயற்சித்தால்,முயற்சிப்பவனை முட்டாள்’ என்று ஆக்கும் கூட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.

அறிவு சார்ந்த வேட்கையோடும் சமூகப் பண்பாடு போற்றும் அக்கறையோடும் இங்கே தேடல் கொண்டிருப்போர் மிக மிகக் குறைவு. 

அதேசமயம்,பொழுது போக்குக்காகவும், பாலினக் கவர்ச்சி விஷயங்களுக்காகவும் மட்டுமே கூடி நிற்கும் சந்தைக் கூட்டமாகத்தான் முகநூல்  பதிவாளர்களில் 90 சதவீதம் பேர் இருக்கின்றார்கள்.

இந்தப் பெரும்பான்மையோரில் முக்கால்வாசிப்பேர்கள், இங்கே போலி முகவரிகளில் உலா வரும் ஆண்-பெண் பக்கங்களிலும், தன்னை,சாகச வார்த்தைகளில் சங்கடமின்றி வெளிப்படுத்திக் கொள்கிற ‘சரஸவாணிகளின் பக்கத்திலும் சென்று மேய்வது ஒன்றுதான் பேரின்பமென்றிருக்கின்றார்கள்.

இந்தச் சந்தைக்கூட்டத்தில், மிகச் சிறந்த பதிவுகளை நாட்டு மக்களுக்காகவும் நல்ல விஷயங்களுக்காகவும்  தருவோர் மிகக் குறுகிய எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை.

இலக்கிய ரசனையும் சமூக அக்கறையும் நம் சந்ததிகளின் சத்தான எதிர்காலச் சிந்தனையும் இல்லாத எழுத்துக்களைப் புறக்கணிப்பதுடன், கலாச்சாரச் சீர்கேட்டுச் சிந்தனைகளைக் கண்டித்துக் காறி உமிழும் சினமும் சிந்தனையும் இன்னும் நம்மவர்களுக்கு வரவில்லை.

என்னைப் பொறுத்தவரை  ‘எனது நண்பர்கள் என் எழுத்துக்களை ரசிக்க வேண்டுமென்றில்லாமல் சிந்திக்க வேண்டும்’ என்ற இலக்கில் மட்டுமே தந்து வருகிறேன்.

இது இலவசம்தான்; எனினும் இதன் நோக்கம்: தமிழ்ப் பண்பாட்டின் கவசம் எனத் திகழச் செய்வது ஒன்றுதான்.

எத்தனையோ முறை செவிட்டில் அறைந்து சொன்ன விஷயம்தான்; என்றாலும்  இங்கே மீண்டும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது:

“திண்ணைப்பேச்சுக்கும்  ‘தில்லாலங்கடி’ திருவாளத்தான்களுக்கும் இங்கே இடமில்லை”

தமிழர்களின் ரசனை மாறிக் கொண்டிருந்தாலும் நாறிக் கொண்டிராமல் இருக்க  வீரமும் காரமு'மான’ எழுத்துக்களை நாம் இங்கே கலந்து கொண்டுதான் இருக்கிறோம்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
29.8.2013


Thursday, August 22, 2013

இது சேரன் எழுதாத கதை- Part:2

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

நண்பர்  ஒருவர் ‘கூகுள் ப்ளஸில்’  எனது ‘சேரன் எழுதாத கதை’ என்ற பதிவு பற்றி, இப்படி எழுதியிருந்தார்.

//திரு கிருஷ்ணன் பாலாவின் பதிவுகளை மிகவும் விரும்பி படிப்பவன்  நான்.

ஆனால், இது ஒரு குரூரமான சிந்தனையின் விளைவு -  இந்த பதிவு.

ஏன் தாமினி கெட்டுப் போனவள் என்று சொல்ல வேண்டும்? உங்களுக்கு தெரியுமா? அவள் கெட்டுப்போனாள் என்று?

எந்த ஒரு பெண்ணுக்குமே தனக்கு இவன் கணவனாக வாய்க்க மாட்டானா என்று ஆர்வம், ஏதோ ஒரு சில தகுதிகளை மட்டுமே வைத்து, அது தகுதிகள் அல்ல என்பது வேறு விஷயம், காதல் வயப்படலாம். எந்த ஒரு பெண்ணு,மே அந்த ஒரு அனுபவத்தைக் கடந்தே வந்திருப்பாள்.

இன்றைய நாகரீக உலகில் அது வெளிப்படையாக தெரிகிறது. தாமினியின் விவகாரத்தில் அதுதான் நடந்து விட்டது.

யாரும் இங்கே ராமன் இல்லை.
யாரும் இங்கே சீதையும் இல்லை.

மனச்சாட்சி இருந்தால் இதனை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் ஒப்புக் கொண்டே ஆவார்கள்.

தாமினியை கெட்டுப்போனவள் அல்லது ஓடிப்போனவள் என்று சொல்வது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டும். தவறு செய்ய இருந்தவள் தவறை உணர்ந்து திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லுங்கள்.

பாவம் சேரனை அவமானப்படுத்தியது போதும். தாமினியின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம். //

அதற்கு நான் எழுதிய பதில் இதுதான்.

இது,தமிழ்ப் பண்பாடு தலை நிமிர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதி வரும் என்னை ஏதோ ஒரு வக்கிரம் அல்லது குரூரப் பார்வை’கொண்டவனாக எண்ணித் தங்களுக்குள்ளேயே தகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்குமாகச் சேர்த்து இருக்கட்டும் என்று கருதி எழுதுகிறேன்:

நண்பரே திரு...................
எனது பதிவுகளை  எல்லாம் படித்திருந்தால் என்னை நீங்கள் ஒரு குரூரமானவனாகக் காட்டி, குரூரப்பார்வை கொண்டிருக்க மாட்டீர்கள்.

பெண்ணின், குறிப்பாகத் தமிழ்ப் பெண்ணின் கற்பின் மாண்பு எந்த அளவுக்குக் காப்பாற்ற பட்டிருக்க வேண்டும்? காக்கப் பட்டிருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாகச் சிந்திப்பவர்க்கும் தமிழச்சிகளின் கற்பு நெறி பற்றி உணர்ந்தவர்களுக்கும்தான் எனது வருத்தமும் கோபமும் விளங்கும்.

சினிமாக்காரர்கள் தூண்டி விட்ட சிற்றின்பக் கதைகளில் வரும் ஆட்டமும் கூத்தும்தான் நமது தமிழப்பண்பாட்டின் ஆணிவேரையே அரித்துத் தின்றதில் அதிகம்.

நாட்டு நடப்பில் உள்ள கேடு கெட்ட காதலைச் சினிமாவாகச் சித்தரித்துக் காசும் பணமும் புகழும் சேர்த்த சேரன் அவர்களுக்கு,இன்று 'நாய் விற்ற காசு குரைக்கிறது’

சேரனை நாமா அவமானப் படுத்தினோம்?
அவர் மகள் அல்லவா அதை உலகறியப் படுத்தியது?

தாமினி வாழ்வதிலும் வாழாதிருப்பதிலும் நமக்கென்ன பங்கு இருக்கிறது?. அவர் தந்தையிடம் உள்ள பணமும்  பாசமும் அவரை, வாழ வைத்தால் சரி.

‘நன்றி கெட்ட மகனை (ளை) விட நாய்கள் மேலடா” என்று கவியரசு பாடியதை வாழ்விலும் காண்கிறவன் நான்.

//யாரும் இங்கே ராமன் இல்லை;
யாரும் இங்கே சீதையும் இல்லை.//

என்று  கூறிக்கொள்ளும் நீங்கள் சினிமாவில் சீரழிந்து போன எண்ணங்களில் வாழ்பவராகத்தான்  இருக்க வேண்டும்.

இல்லையென்றால், 'எல்லோருமே ஒழுக்கங்கெட்டவர்கள்தான்’ என்று வாய் கூசாமல்  உங்களால் ஒப்புத்தல் வாக்குமூலம்  தரமுடியுமா? அது     ‘வாலறுந்துபோன நரிகளின் நாட்டாமைத் தீர்ப்பு’ என்பேன்!

என்னைப்பொறுத்தவரை-
நான் காதலுக்கு எதிரி அல்ல; கற்புடைய காதலை ’காலமெல்லாம் வாழ்க’ என்பவன் நான்.

கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஓடிக் குதிப்போரின்   காமக் களியாட்டத்தைக் கட்டாயம் சாடுவேன்.

நீங்கள் ஒழுக்கத்தையும் பண்பபையும் ஆதரிக்கத் தயாராக இல்லை’எனில் பின் உங்கள் சந்ததி உங்கள் முன்னேயே சரிந்து போகக் காண்பீர்கள்.

உங்களை வருத்தப்படுத்துவதற்காக நான் இதை எழுதவில்லை; எனது வருத்தத்தை இப்படித்தான் என்னால் எழுத முடிகிறது.


இவண்-
கிருஷ்ணன்பாலா
22.08.2013

Monday, August 19, 2013

தேசபக்தி என்பது.....




றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இன்றைய இந்தியச் சுதந்திரக் காலச் சிந்தனையாக  ‘ பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றில் நம்முள் பல்வேறு முரண்பட்ட எண்ணங்கள் புற்றுக்களாக நமக்குள் விரவிக் கிடக்கின்றன’

இந்திய சுதந்திரத்தில்  பலருக்கும் வெறுப்பும் கசப்பும் கோபமும் குற்றச் சாட்டுக்களும் உருவாகி இருக்கின்றன. 
அவற்றில் நியாயமும் காயமும் இல்லாமல் இல்லை.

ஆனாலும்,
நாம் அவற்றை விதிவிலக்காகக் கொள்ளாமல் விநயத்தோடு சிந்திக்க வேண்டும்.

நமது சுதந்திரத்தின் மீது  நமது சகோதர மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூன்று வகையாகப் பிரித்துணர வேண்டும்:

  1. நம் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை முழுமையாகத் தெரியாதவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவர்களப் பெற்றோராகக் கொண்டிருப்பவர்களாகத்தான் அவர்களில் 90 சதம் இருக்க முடியும்.அவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை; ‘அந்த அக்கறையை ஊட்டி வளர்த்தவர்களாக அந்தப் பெற்றோர்கள் இருக்கவில்லை’ என்ற உண்மையையும் இது சார்ந்திருக்கிறது. 
  2. ஆரம்பம் முதலே இந்திய தேசிய காங்கிரஸை எதிர்த்து வந்த குடும்பங்களிலிருந்தும் சுதேசியத்துக்கு எதிரான கொள்கையாளர்களின் குடும்பங்களிலிருந்தும் பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பவர்கள்.
  3.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாடு போய்க் கொண்டிருக்கிற நிலைமையின் மீதும் இதன் கேடு கெட்ட ஆட்சியாளர்கள் மீதும் அந்த கேடு கெட்டவர்களின் பின்னே சென்று ஓட்டுப் போடும் மெஜாரிட்டியான ஆட்டு மந்தைகள் மீதும் அந்த ஆட்டு மந்தைகளைக் குழு குழுவாகப் பிரித்து மேய்த்துக் கொண்டிருக்கிற அரசியல் மே()ய்ப்பவர்கள் மீதும் கோபமும் வருத்தமும் கொண்டிருப்பவர்கள்.
இந்த மூன்று வகைக் குடிமக்களில், மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவன் நான்.

‘என்னைப் போன்றோரின் வெறுப்பு என்பது, இந்தியச் சுதந்திரத்தின் மேன்மையான விழிப்புணர்வைக் கொழுந்து விட்டு எறியச் செய்யும் எழுத்து நெய்யாகத்தான் இங்கே வடிக்கப்பட்டு வருகிறது.

எனினும்
எங்கே சுதந்திரம்;இதுவா சுதந்திரம்?” என்ற கோபத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களையும் இந்த சமூக வலைத்தளங்களில் பார்க்கின்றேன்.

நண்பர்களே,
நாம் தேடிக் கொண்டிருப்பதும் தேடும்போது சலிப்புக் கொள்வதும் தேடிய பின்பு அதைத் திட்டித் தீர்ப்பதும் யாவும் ஒன்றுதான். அதன் பேர்: சுதந்திரம்.

உலகில், இந்தியா மிக மோசமான நிலைக்குக்குச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணமே நாம் பெற்ற வரையற்ற சுதந்திரம்தான்.
எனக்கு இந்தியாவை ஆளுகின்றவர்களின் மீது எல்லையற்ற கோபமும் குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆனால் இந்தியாவின் மீதல்ல.

இந்தியா எனது தாய் மண். அதில் பல வர்ணங்கள், சாதி,மதம், இனம்.மொழி,கலாச்சாரம் என்று இருப்பதைப் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலையைப் போல் காண்கின்றேன்.

அந்தச் சோலையுள் நான் சுதந்திரமாக நடை பயில்கின்றேன்.

எனவே -
எனக்கு வரையற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ள
இந்த நந்தவனத்தை என் சொந்தவனமாக நேசிக்கின்றேன்;பூசிக்கின்றேன்.

அருமைப் பெற்றோர்களே,கற்றோர்களே,
உங்களுக்குத் தெரியாததல்ல,: ‘நான் சொல்லித்தான் நம் சுதந்திரத்தின் பெருமை விளங்கும்’என்பது.

எனினும் சொல்கிறேன்: உங்களுக்கு அல்ல; உங்களின் வாரிசுகளுக்காக!

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்
வாராது போல்வந்த மாமணி நம் சுதந்திரம்!

செந்நீரும் கண்ணீரும் சிந்தி
நம் பாட்டனும் பூட்டனும்
சேவித்த சித்திரம்  நம் சுதந்திரம்!

எந்தையும் தாயும் தங்கள்
இன்னுயிர் ஈந்து பெற்றுத் தந்தது: இச் சுதந்திரம்!

ஆயிரம் பேதங்கள் உண்டு நமக்குள்;
எனினும்
அந்நியர் வந்து நம்மை
ஆளக் கூடாத தேசியச் சொத்து இது.

‘இந்தச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றோம்?
என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த-

அருமைப் பெற்றோர்களே,
‘கப்பலோட்டிய’ தமிழன்’
திரைப்படத்தையாவது
குறைந்த பட்சம்
உங்கள் வீட்டில் போட்டுக் காட்டுங்கள்.

நம் பெற்றோர்ளையெல்லாம்  பெற்றுத் தந்து
நம்மையெல்லாம் ஈன்றெடுத்த
பாரத மாதாவைக்
காங்கிரஸின் கைப் பொம்மைபோல் காணாதீர்கள்!
 
பாரத நாடு பழம் பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;இந்நினை வகற்றாதீர்!”

என்ற மகாகவி பாரதி பூசித்த அந்தப் பாரத அன்னையை,
நாம் நமது பெற்ற தாயையும் பெற்றெடுத்த அன்னைத் தெய்வமாய்
நமது  நெஞ்சக் கோவிலில் நித்தமும் கண்டு பூசிப்போம்;நேசிப்போம்!

//முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.//


என்று -

நம் பாரதி பாட்டன், சென்ற இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 
எழுதிய கவிதையின் பொருள் இன்று மூன்றரை மடங்காகப் பெருகி நிற்கின்றன.அமரகவியின், ஜீவ வரிகள் அல்லவா,இவை?

ஆம்.
நண்பர்களே,
தேசப்பக்தி என்பது எந்த அரசியல் சூழ்நிலைகளிலும் குன்றிப் போவதல்ல;

குன்றின் மேலிட்ட விளக்காக காலம்தோறும் தன் ஒளியைக் கூட்டி ஒளிரும்;மிளிரும்.

“பாரத நாடு;பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;இந்நினைகற்றாதீர்”  

என்று -
பாட்டன் பாரதி சொன்னதை
பாரத மைந்தர்களே மறவாதீர்.

இந்த சுதந்திரத்தத்தைத் ‘தந்திரமாக’ அல்ல: 
நிரந்தரமாகவே நேசிப்போம்!

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
15.8.2013

Wednesday, August 7, 2013

சேரன் எழுதாத கதை!



றிவார்ந்த நண்பர்களே
வணக்கம்.

தர்மபுரி ’திவ்யா-இழவரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்படும் இன்னொரு காதல் விவகாரம் சினிமா இயக்குநர்நடிகர் சேரன் மகள் தாமினிசந்துரு காதல் விஷயம்தான்.

சினிமாக்களில் காதலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எழுதிப் பிரபலமான சேரன், இந்தக் காதல் கதையை எழுதவில்லை ஆயினும் அவருடைய மகள் நம்மையெல்லாம் எழுதும்படிச் செய்து விட்டார்.

ஆகையா’ல்  ‘இது சேரன் எழுதாத கதை’ என்று தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைபோல் ஆகிவிட்டது.

இன்று நம் இளைஞர்,இளைஞிகளிடையே பரவலாகத் தொற்றிக் கொண்டிருக்கும் காதல், வீட்டுக்கு வீடு வெந்து தணிந்து கொண்டிருக்கிற விஷயம்.

அதைப்பற்றி எல்லாம் நம் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை கொள்ளாமல் சினிமாக்காரர் வீட்டுக் காதல் பிரச்சினை என்பதால் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதித்து தங்கள் மேதைமையைக் காட்டிக் கொள்கிற அவலம்தான் இங்கே ஆட்கொண்டிருக்கிறது.

காதல் என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமாகக் கவனிக்கப்பட்டு, அதன் மூலம் குடும்பக் கவலைகள், உறவுக் கவலைகள், ஊர்க் கவலைகள், சாதிக் கவலைகள் முதலான கவலைகள் வாராமல் தடுத்து சமூக நல்லிணக்கத்தின் நடுகல்லாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.

தர்மபுரி ’திவ்யா-இழவரசன்’ காதல் விவாகரத்தால் 200 குடிசைகள் எரிக்கப்பட்டது முதலேபருவக் காதலை சமூக அக்கறையுள்ள எவரும் ஆதரிக்கக்கூடாது’ என்றும் மாறாக  ‘அதனை ஊக்குவித்தும் அரசியல் ஆக்கியும் அது சமூகநீதியின் சின்னம்’ என்றும் பேசுவோர் சமூகக் கேடர்கள் என்றும் எழுதி வருகின்றவன் நான்.

வயதுக்கு வந்த பெண்ணும் வாலிபத்தைத் தொட்ட ஆணும் பருவக் கவர்ச்சியாலும் பாலின ஈர்ப்பாலும் ஒருவரை ஒருவர் நெருங்கி உணர்ச்சிகளைப் பறிமாறிக் கொண்டுஉயிர் நீ;உடல் நான்; என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு, சதைப்புணர்வு கொள்வதைக்காதல்என்று கதைக்கின்றார்கள்.

அதனடிப்படையில் தாங்கள் ஒருவரை ஒருவர் மணம் புரிந்து கொள்ள விழையும்போது, அவர்களின் பெற்றோர் அதை அதிர்ச்சியுடன் எதிர்க்கின்றார்கள்.

அதன் பிறகு, இது சட்டப் பிரச்சினையாகி, பெற்றவர்களுக்கும் விரோதமாக சட்டத்தின் துணையோடு பிள்ளைகள் காதல் மணம் புரிந்து கொண்டு தங்களைப் பெற்றவர்களைப் பிரிந்து வாழத் தலைப்படுகிறார்கள்.

இதில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் சில மாதங்களிலோ,சில வருடங்களிலோ இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து விட வாய்ப்புக்கள் இருக்கின்றன

வெவ்வேறு சாதிகள் என்றால் இரண்டு சாதிகளிடையே பகைமை வளர்ந்து சாதிச் சண்டையாக உருவெடுத்து விடுகிறது. இரண்டு வெவ்வேறு சாதி மண உறவுகள் தொடர்பான குடும்பங்கள் பின்னாளில் சேரும் நிலை ஏற்பட்டாலும்கூட மெஜாரிட்டி சாதியானது அந்தக் குடும்பங்களைஊர்க் கட்டுப்பாடு’ என்ற பெயரில் ஒதுக்கி விடுகின்றன.

இப்படியான காதல் பிரச்சினைகள் அநேகமாக ஊர்கள் தோறும் இப்போது முளைக்கத்தொடங்கி விட்டன.

இத்தகைய காதல் வாழ்க்கையானது பெரும்பாலும் நீடித்து நிலைப்பதில்லை.
பருவம் வந்ததும் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு எப்படியோ போராடி அல்லது பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம் செய்து கொண்டு வாழத்தொடங்கிய பின், சில ஆண்டுகளிலேயே கணவன் -மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு காதல் கசந்துபோய் விவாக ரத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. ‘ஆசை அறுபது நாள்;மோகம் முப்பது நாள்என்று முன்னோர் சொன்னது இங்கே முழு உண்மையாகி விடுகிறது.

இப்படி,காதல் பருவக் காமத்தின் உந்துதலால் கலப்புத் திருமணம் செய்து கொண்டு வாழாவெட்டிகளாகிப் போகின்ற ஜோடிகளின் விகிதாச்சாரம் 40 விழுக்காடுகள். வேறு வழியில்லாமல் துக்கப்பட்டும் வெட்கப்பட்டும் தலைகுனிந்து கொண்டு வாழ்கின்றவர்களின் விகிதாச்சாரம் 25 விழுக்காடுகள்; வாழ்க்கை கசந்து போய் கணவன்மனைவி இடையே பரஸ்பரம்  துரோகம் இழைக்கப்பட்டு,விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்து கொள்கின்றவர்களின் விகிதாச்சாரம் 15 விழுக்காடுகள்; ’காதல் என்ற பருவத் தூண்டலில் நமது வாழ்க்கையை நாமே தொலைத்து விட்டோமேஎன்று சுய தரிசனம் கொண்டு  மீளாக் கவலையில் தற்கொலை செய்து கொள்வோரின் விகிதாச்சாரம் 5 விழுக்காடுகள்.

இப்போது சொல்லுங்கள்:
விடலைக் காதல் வாழ்க்கை எங்கே நமது இளைஞர்களையும் இளைஞிகளையும் வாழ வைக்கிறது?

இப்படி,காதல் திருமணம் செய்து கொண்டு வெகு விரைவில் வீணாய்ப் போகின்றவர்களுக்காகக் குரல் கொடுப்போர் உண்மையில் தமிழன் வாழவா, போராடுகிறார்கள்.?

தமிழ்ச் சாதி நிலைகுலைந்து, நீர்த்துப் போகும்படிச் செய்யும் இத்தகைய விடலைக் காதலைத்தான் நாம் வீறு கொண்ட எழுத்துக்களால் சாடுகிறோம்; எதிர்க்கின்றோமே தவிர, நியாயமான நேர்மையான காதலை அல்ல!

வாழ்க்கைத் துணையைத் தேடுவதில்  நியாயமான தேவைகளை முன்னிட்டும் நேர்மையான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டும்
காதல் திருமணங்கள் உருவாகுமானால் அதை முன் நின்று வாழ்த்தும் முதல் ஆளாக நாமிருப்போம்என்பதை இங்கே பலரும் உணர்வதில்லை.

விவாகரத்து மூலம் கணவனை இழந்து வாழும் பெண்ணோ; மனைவியைப் பிரிந்து விட்ட ஆணோ, அல்லது விதவைகளோ காதல் மூலம் மறுமணம் புரிந்து கொள்வதோ கடிமணம் புரிந்து கொள்வதோ  இயற்கைக்கு உகந்த நியதிதான்.

ஒரு ஆணும் பெண்ணும் முதிர்ச்சியான சிந்தனையில் இணந்து வாழ்வது என்பது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் பேணுகின்ற விஷயம்.. அறிவுடையோர் இதற்கு எதிராக எழுத மாட்டார்கள்; அப்படி எழுதுவோர் அறிவுடையோர் ஆக மாட்டாரகள்; அவர்களைப் பத்தாம் பசலிகள் என்றுதான் கூறமுடியும்.

இக்காலத்தில் வயதுக்கு வந்த பெண்ணையும் ஆணையும் முறையாகக் கண்காணித்து அவர்களின் கவனம் ஒழுக்கமற்ற சிந்தனைகளில் புகுந்து விடாமல் குடும்பப் பொறுப்புக்களையும் பெற்றவர்களின் நேசத்தையும் பாசத்தையும் இடைவிடாமல்  அவர்களிடையே நிலைக்கச் செய்ய வேண்டியது பெற்றவர்கள் கடமை.

முன்பெல்லாம்,குழந்தைத் திருமணங்களை நம் முன்னோர்  செய்து முடித்த காரணம் ‘இந்தப் பருவக் கிளர்ச்சியால் விடலைகள் இப்படி வாழ்க்கையை வீணாக்கி விடக் கூடாதேஎன்ற சிந்தனையை முன்னிட்டுத்தான்.

காதலர்களை வாழ வைக்கஎன்று ஒரு கூட்டம் சமூக நோக்கர்கள் என்ற போர்வையிலோ; பெண்ணியவாதிகள் என்ற பித்தலாட்டத்திலோ,புரட்சிச் சிந்தனையாளர்கள் என்ற பொய்யிலோ புதைந்து கொண்டு பெற்றவர்களின் பிரிக்க ஒண்ணாப் பாசத்தைக் கேலியாக்கி விடலைக் காதலில் போதை ஏறிய ஜோடிகளுக்கு அடைக்கலம் தந்து கடைசியில் அவர்களைக் காதல் திருமண ஜோடிகளாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

எங்கேனும் ஒரு காவல் நிலையத்தில் இளம் காதல் ஜோடிகள் தஞ்சம் என்ற செய்தி வந்தால் போதும். அதற்கென்றே காத்துக் கொண்டிருக்கும் இந்தச் ‘சமூக சீர்திருத்த வியாதிகள் அங்கு ஓடிப்போய். ’கூவாத கோழி கூவுற வேளைஎன்று குழுமிக் கும்மி அடிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களின் நம்பிக்கையை நாசமாக்கி, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறவுக்களுக்குச் சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு ஆண்பிள்ளையுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ ஓடிப்போய்த் திருமணம் செய்து கொள்வது என்பது நீதிக்கும் பண்புக்கும் சமூக ஒழுக்கத்துக்கும்  எதிரானது.

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாசத்தையும் அவர்களின் கஷ்டத்தையும்  ‘தங்கள் மகள் எப்படி எல்லாம் வாழ வேண்டும்?’ என்ற பாசக் கனவுகளையும் கேலிக் கூத்தாக்கி விடுகின்ற இத்தகைய இழிநிலைப் பருவ உணர்ச்சிக் காதலை சரியானபடி தடுக்காமல் போனால், அது,  அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை இருட்டுக்குள் மூடி வைக்கின்ற முயற்சியே தவிர முன்னேற்றக் கருத்து ஆகாது.

இங்கேதான் நடிகர்-இயக்குநர் சேரன் எழுதாத காதல் கதை சின்னாபின்னப்படுகிறது.

தன் மகள் தாமினியை அவர் வளர்த்த விதமும்;தாமினி. சந்துரு என்ற இளைஞனின் காதல் வலையில் வீழ்ந்த விதமும் முதலில் அவர்கள் காதலை சேரன் ஆமோதித்து விட்டுப் பின்,’இப்போது தாமினியின் சாய்ஸ் சரியில்லை;சந்துருவை மருமகனாக ஏற்க முடியாதுஎன்று ஊடகங்களின் முன்னிலையில் கண்ணீர் விடும் அவல நிலையும் இந்தச் சமூகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

இதுபற்றி நமது கருத்துக்களாக, கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு சூழ்நிலைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியவற்றை   ‘உலகத் தமிழர் மையத்தின்’ வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறேன்:

தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவருவரும் நமது சந்ததியினரின் நல் வாழ்வுக்காக சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை எப்படிக் கண்காணித்து வளர்த்தால் இம்மாதிரியான அவல நிலைக்கு ஆளாகாமல் இருப்போம் என்பதை நாம் நமது சூழ்நிலைகளுக்கேற்ப சிந்திக்க வேண்டுகிறேன்:

  •   
அன்புக்கும் காதலுக்கும் ஆங்கிலத்தில் வேண்டுமானால் ஒரே அர்த்தம் தேடலாம்; ஆனால் வாழ்க்கையில்,யதார்த்தத்தில் அப்படி எல்லாம் இல்லை

அறிவுடையோர் அன்பு காதலாகாது; இளைஞர்களின் காதல் அன்பு ஆகாது.


பருவத் தூண்டலின் காரணமாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை நட்பு என்றும் அன்பு என்றும் கூறிக் கொண்டு காமப் புனைவு கொள்வதற்கு அனர்த்தம் கற்பித்து அநேகம் பேர் காதலும் அன்பும் ஒன்று என்றும் காதலின் பரிணாமத் தோற்றமே காமம்என்றும் கதைப்பது அறிவீனம்.

காமம் என்ற சொல் பல்வேறு நிலைகளில் பல்வேறு அர்த்தங்களை உடையது.



ஒருதவறு சரித்திரம் என்று ஆகிவிட்டால் பிறகு எல்லாத் தவறுகளுமே அதன் பிரஜா உற்பத்திதான்!



தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து மகிழ வைத்த அப்பா,தனக்குப் பருவ ஆசை வந்த பின் காதலன் பொம்மையை வாங்கித்தர மறுப்பதால் இப்போது அப்பா எதிரி ஆகிறான்.

தன் குழந்தை கேட்டதையெல்லாம்,வாங்கித்தராமல் அவளுக்கு  ‘எது தேவை?;எது தேவை இல்லை?’ என்பதை நிதானித்துக் கற்றுத் தராதவன், இப்போது தன் மகள் சூட்டும்  தரம் கெட்ட காதலனைக் கை நீட்டுவதை நிராகரிக்கின்றான்.

இப்போது,மகள் அவனுக்கு எதிரி ஆகிறாள்.

  •   
சமூகக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கற்பிக்கப்படாத செல்லுலாயிட் குழந்தைகளைப் பெற்று வளர்த்து, பிறகு அவர்கள் அதே செல்லுலாயிட் காதலில் துணிந்தபிறகு அவர்களுக்காக அசிங்கப்பட்டுப் போவதை விட பெற்றவர்களுக்கு வேறு வழி இல்லை.

பெண்மையையும் உண்மையையும் இழந்த பெண்ணை மீட்டு, எங்கே யார் தலையில் கட்டி வைப்பதாக உத்தேசம்?

சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.


காதலை எடுத்துச் சொல்ல அனுபவம் வேண்டும்;
காதலை இடித்துச் சொல்ல அறிவு வேண்டும்.

இரண்டுமே இல்லாத கத்துக் குட்டிகள்காதலை வாழ வைப்போம்
என்று இங்கே கதைப்பதும் அவற்றின் பின்னே நின்று, ‘ஆமாம்போடுவதைப்போல் Like போடுகிற கூட்டமும் அஃறிணைகளே அன்றி உயர்திணைகள் அல்லர்.



எந்தச் சூழ்நிலையிலும் கைவிட முடியாத தன் மகளுக்காக நடிக்கத்தெரியாது அழுகிறான் அப்பன்.

எப்போதோ கசக்கி எறியப் படக் கூடிய தன் காதலிக்காக அழுவதைப் போல் நடிக்கிறான் காதலன்.

ஆடு அறுக்கிறவனைத்தான் நம்புகிறது.



பெற்றோரை வெறுத்து வெறும் சதை இன்பத்துக்காக நேற்றுக் கண்டவனுடன் கைகோர்த்து வாழுவதே வாழ்க்கைஎன்று காதல் வசனம் பேசும் கத்துக் குட்டிகள், தங்களைப்போலவே ஓடிப் போய்க் கல்யாணம் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள் எத்தனை பேர்? கசந்து போய்க் கல்லாய் வாழ்கிறவர்கள் எத்தனை பேர்? தங்கள் காதலுக்காகக் குரல் கொடுத்து விட்டு, காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? ’காதல் என்பது நிஜம்தான்’ என்று சாட்சி சொல்லும் காதல் தம்பதிகள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்துக் கொண்டு காதலித்தல் நன்று. 
  •  
“காதலுக்கு நீங்கள் ஆதரவா? அல்லது எதிர்ப்பா?’’ என்று ஓட்டெடுப்பு
நடத்தப்பட்டால் நிச்சயம் காதலுக்கான ஆதரவே வெல்லும்.

உண்மை வென்றால்தானே இன்றைய உலகில் ஆச்சர்யம்?

  •   
சேரன் ஒரு கோழை என்பது மட்டும் புரிகிறது.

சினிமாவில் காதலைச் சொல்லும்போது அதன் யோக்கியதை என்ன என்பதையும் சொல்லாமல் காதலை மிகைப்படுத்திக் காட்டியவர் இன்றுதன் மகள் அப்படியே மிகைபடச் சென்ற பின்னரும் அழுவது கோழைத்தனம் அன்றி வேறென்ன?

இந்தக் காதல் பணத்தையும் அந்தஸ்தையும் வைத்து நடத்தப்படுவதால் தாமினியின் காதலன் தரமற்றவன் என்கிறார்.

உப்பைத் தின்று ஊருக்கு சொன்ன உபதேசம்,இன்று தப்பைத்தானே எதிர்வினையாய்த் தரும்?

இந்தப் பதிவின் மூலம்தாமினியின் தகப்பன் விரோதக் காதலைநான்
சந்துரு-தாமினி
ஆதரிப்பதாக எவரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

என்ற வள்ளுவனின் தீர்ப்பை,இந்த விவகாரத்தில் பொருத்தி பார்த்தால்
தேராதவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தாமினி ஆகட்டும்;அந்தப் பெண் அவனைத் தேர்ந்தெடுக் கொண்டபின் -அவ்விஷயம் தெரிந்து முதலில் சம்மதம் தெரிவித்து விட்டு (அதாவது தெளிந்து கொண்டபிறகுஇப்போது அவளுடைய காதலனைப் பற்றி சந்தேகம் கொண்டு பேசும் சேரன் ஆகட்டும் இருவருக்குமே தீரா இடும்பை (கடக்க முடியாத துன்பம்) என்பது விளைந்திருக்கிறது.

சரி,விஷயத்துக்கு வருவோம்:

தாமினியின் காதல் விவகாரத்தில், சினிமா இயக்குநர் சேரன் அவர்களின் கொள்கையும் குடும்பப் பாசமும் தமிழ்ப் பண்பாட்டின் முன்னே சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

காதலா,ஒழுக்கமா?’ என்ற கேள்வி இங்குள்ளோர் முன்பு காணாமல் போய், சேரன் பாவமா? தாமினி நியாயமா? என்ற பட்டி மன்றம் எங்கும் நடக்கத் தொடங்கி உள்ளது.

கெட்டவன்என்று தெரிந்தும்அவனோடுதான் வாழ்வேன்என்று அப்பனையும் அம்மையையும் துச்சமெனப் பேசுபவளுக்காகக் கண்ணீர் விடும் சேரன், ’ஒருவேளை தன் மகளின் மனதை மாற்றி விட்டார்என்று வைத்துக் கொள்வோம்; அந்தப் பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு வேறு ஒரு தகுதி வாய்ந்த மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்கத்தானே விரும்புவார்?

அவ்வாறாயின், அந்தக் கெட்டவனை விட படு கேவலமானவன் அல்லவா தாமினிக்குத் தன் தலையைக் கொடுக்கத் துணிவான்?

ஊரறிய,உலகறிய ஒருவனுடன் ஓடிப் போனவளைத் திருத்தி, பணத்தையும் செல்வாக்கையும் காட்டி, ஒரு இளிச்சவாயனை மடக்குவதை விடவும் இந்தக் கெட்டவனுடன் எப்படியோ வாழ்ந்து போ என்று வைராக்கியம் கொள்வதல்லவா, கற்பு நெறி பேணும் பொற்புடைய வாழ்வு?

ஒழுக்கம் என்பது குறித்து இந்த சினிமாக்காரர்களுக்குச் சிறிதுகூடக் கவலை வராதோ?

சிந்தித்தாரா சேரன்?


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
6.8.2013