Saturday, November 30, 2013

எனது ஆத்திச் சூடி!

 

ஆத்திச் சூடி அவ்வை சொன்னாள்;
அவளென் பாட்டி; அவள் மொழி கொண்டு
யாத்திடும் இதுவும்  அஃதே என்று
ஏற்போர் என்றன் தமிழ்க் கேளிரே!
-------------------------------------------------

அறத்தமிழ், நாடு;
ஆரியம் பேசேல்;
இறைநெறி உணர்;
ஈனரை விலக்கு;
உலகததில் ஓங்கு;
ஊருடன் வாழ்;
எதிரியை வீழ்த்து;
ஏய்த்து உண்ணேல்;
ஐயம் கொள்ளேல்;
ஒன்றே இறை;
ஓடி ஒளியேல்:
ஒளவை சொல் கேள்;
அஃதே வாழ்க்கை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2013

தாயுமானவனே!



எந்தை,’ தாயுமானவன்’ அமரர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்   
(1905 1990)

அன்னைக் கருவ றையில் என்னைச் சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த உன்னில் எனைச் சுமந்தாய்;

தந்தை என்றெ னக்குச் சிந்தை உரைத் தவளை
முந்தி இருந்த உயிர்ச் சொந்தம் உனை மறவேன்!

வயிற்றில் சுமந் தாளை வாழ்வில் சுமந் தாய்நீ;
கயிற்றில் வாழ்ந் தாளின் கருத்தில் வாழ்ந்தாய் நீ!

பத்து மாதம் எனைப் பதித்து வளர்த் தாளைச்
சொத்துச் சுகம் போலச்சுமந்த உயிர் நீதான்!

உதிரப்பால் ஊட்டி உயிரை வளர்த் தாளின்
எதிரில் இணை வைக்க இல்லை ஒரு தெய்வம்!

எனினும் அவள் மேனி இளைத் துவிடா திருக்க
உனது உதி ரத்தை உழைப்பில் சிந்தி யவன்;

எனது தந்தை யென எண்ணி நெகிழ்கின்றேன்!
மனதில் வைத் துன்றன் மாண்பில் மகிழ்கின்றேன்;

தந்தை என்று மட்டும்தனித்து இல்லா மல்,
எந்தை நீ எனக்குஎல்லா முமாய் இருந்தாய்;

அறிவு புகட்டி எனை ஆளாக்கி இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய் ஓங்க வளர்த் தவனே!

தோயும் உணர்வுகளில் தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த் தனித்து வணங்கு கிறேன்.

இவண்-

கிருஷ்ணன்பாலா
30.11.2013

தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் -2

மிழக் கடல் நெல்லைக் கண்ணன் அய்யா அவர்களை நீண்ட காலமாக அவரது சொற்பொழிவுகள் மூலம் அறிந்திருந்தவன் என்ற போதிலும் 14.& 2010 வரை அவரை நேரில் சந்தித்தது இல்லை. சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.

2010 நெல்லையில் உள்ள SCAD நிறுவனத்தின் சார்பில்  Director -Public Relations என்ற பொறுப்பில் இருந்தேன். அவ்வமயம் நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள ’Francis Xavier பொறியியற் கல்லூரி மாணவர் தன்னம்பிக்கையூட்டு விழா’வுக்காகச்  சொற்பொழிவு நிகழ்த்த அய்யா’ தமிழ்க் கடல்’ அவர்களை அழைத்திருந்தோம்.

அய்யா அவர்களும் வந்தார்.

கல்லூரிவிழா அரங்கத்தில் அவரை முதன் முதலாக வரவேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அன்று,விழா மேடையில் நான் அவருக்காக வரவேற்புக் கவிதை மடல் ஒன்று வாசித்தளித்தேன். (அது பற்றிய  விவரம் இதே வலையில்  தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் -1’ என்ற பதிவில் அறியலாம். பதிவு தேதி:14.10.2013)

அதன் பிறகு அன்று இரவே அவருக்கு ஒரு மின்னஞ்சலைக் கவிதை வடிவில் எழுதி அனுப்பி அனுப்பினேன். அம்மடலில் நட்பையும் அதன் மான்பும் குன்றாதிருக்க  நாடும்  மனதைக் காட்டி இருந்தேன்.

அது இன்றுவரை நீள்கிறது;தொடர்கிறது....

இனி,  அம்மடலின் கவிதை வரிகளை நீங்கள் கண்டு இன்புறலாம்,இங்கே:


குருவருள் நம்மைக் கூட்டுவிக்க!
---------------------------------------------------

அன்பிற் சிறந்தோய்; வணக்கம்;இதுஉன்
அகத்துள் நுழைதற்குரிய கடிதம்;
தன்னல மின்றிப்  பொதுநலம் நாடும்
தமிழ்க்கடல்உன்னை வாழ்த்தும் இதயம்!

'என்றுனைக் காணும் வாய்ப்புக் கிட்டும்?'
என்றிருந்தேன்; நீ எளிதாய்த் தோன்றிக்
'குன்றென' நின்றாய்;மலைத்துப் போனேன்;
நன்றியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!

வாழ்வில் பற்பல சொற்பொழிவாளர்கள்;
'வந்தனர்;போயினர்' எனும்படி அவர்கள்,
சூழ்நிலை கண்டு,சொல் விளையாடி
சுய நலம் தேடிப் பிழைத்தவர் ஆயினர்!

'நீர்மேல் எழுதிய எழுத்துக்கள்' போல
நீர்த்துப் போன அவர்களின் நடுவே;
நீர் 'கல்எழுத் தாய்'த் தோன்றி;இந்த
நெஞ்சக் கல்லையும் நெகிழச் செய்தீர்!

கண்ணீர் மல்கிக் கசிந்துளம் உருகி;
கண்ணன் தமிழில் எதையும் துறப்பர்;
மண்ணில் உன் உரை கேட்பவர் பெருகி,
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் தம்நிலை மறப்பர்!

பேசிடும் ஒவ்வொரு வார்த்தையும் வாய்மை;
பிழையறச் சொல்லி நிமிர்த்திடும் தூய்மை;
ஏசிடும்போதும் எதிர்ப்படும் நேர்மை;
இருப்பது கண்டேன், உன்னிடம் மட்டும்!

உன்னைத் தவிர மக்கள் சபைமுன்
உண்மையைச் சொல்லி நிமிர்பவர் இல்லை;
உன்னைப் போன்று சொல்லும் செயலும்
ஒன்றாய்க் காட்டித் துணிபவர் இல்லை!

மக்களை யெல்லாம் 'மாக்கள்' ஆக்கி
மழுங்கத் தனமாய் 'மாண்புகள்' ஆன
வெட்கங் கெட்ட வீணர்கள் தம்மை
வெட்கப் படும்படிச் செய்பவன் நீதான்!

அகமே முகமாய்,அருட் பெருந் திருவாய்
அய்யா,உன்னை அடியேன் கண்டேன்!
'முகத் துதி' என இதை நகைத்து விடாதீர்;
மூத்தோர் சபையிலும் இதையே சொல்வேன்!

இந்நாள் எனக்கு நன்னாள்;உன்னை
எதிர்கொண்டழைத்த பொன்னாள்;
குன்றாதிந்தத் தகு நாள் நிலைக்கக்
குருவருள் நம்மைக் கூட்டுவிக்க!

தங்கள்,
கிருஷ்ணன் பாலா
14.07.2010 


Thursday, November 28, 2013

தர்மம் தலைசாயுமா?



றிவார்ந்த நண்பர்களே,இந்து தர்மத்தின் ஏந்தல்களே,

வணக்கம்.

ஸ்ரீ ஜெயேந்திரர் எத்தனையோ புரட்சீகர மாறுதல்களைக் காஞ்சி மடத்தில் கொண்டு வந்தவர்தான்.

‘அந்தணர்களை விட அந்தணர் அல்லாதோர் ஆதரவின்றி காஞ்சி மடத்தின் புகழை, அதன் ஆளுமையை பரப்ப முடியாது’ என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் அனுசரணையைப் பெறுவதற்கான  காய்களை நகர்த்தினார்.

அதன் நோக்கில்,  சிந்தித்ததில், செயல்பட்டதில்  ‘இன்னும் வேகம் வேண்டும்’ என்று நினைத்தாரே தவிர அதில் விவேகம் வேண்டும் என்று நினைத்தாரில்லை.

அதன் விளைவாக, ஒரு துறவிக்கு உரிய லட்சணங்கள் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, தேர்ந்தெடுத்த அரசியல்வாதியின் எண்ணங்களே  அவரை ஆட் கொண்டு, அவரையே அவை அதிகாரம் செய்யத் தொடங்கின.

விளைவு:
தூய்மையும் வாய்மையும் மிக்க காஞ்சி மடத்தின் மாண்புகளைக் கறைபடியச் செய்து விட்டன.

‘எவையெல்லாம் தனது தவறுகள்;எவை எல்லாம் துறவி என்ற நிலையில் தான் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது? என்பதை அவர் சிந்திக்கவில்லை.

மடத்தைத் தரிசிக்கவரும் வருகையாளர்களாக, இந்தத் தேசத்தின் உயர் அதிகார வர்க்கமே இருந்ததாலும் அவர்களுக்கென்று தனி மரியாதையும் தனி ஆசீர்வாதங்களும் தரப்படும் அவலம்  ‘மட அதிபரிடம்’ அவதானித்துக் கொண்டதாலும், அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியின் அகந்தையைவிட அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின்  அவஸ்தையைத்தான் அவரோகணம் செய்து கொண்டது.

‘அன்று அவரை வசீகரித்த அதிகார வர்க்கத்தினர் எவரும் இப்போதெல்லாம் தலை நிமிர்ந்து கொண்டு அவரைத் தேடி வந்து காட்சி கொடுப்பதில்லை’ என்பதிலிருந்தே காஞ்சி மடத்தின்  பெருமையைச் சீர் குலைத்து விட்ட தனது செயல்களை அவர் சிந்திக்க வேண்டும்.

அவருக்காக வக்காலத்து வாங்குவோர் இன்று ஈனஸ்தாயியில்தான் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவும் சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்க வேண்டும் என்று தலை குனிந்து கொண்டுதான் கோரிக்கை விட முடிகிறது.

அன்று,வந்தாருக்கெல்லாம் ஆசிகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தவர்  இன்று,வக்கீல்களையும்  ‘வாழ்க’ கோஷமிடுவோரையும் வளைந்து  கட்டிக் கொண்டு வரம் கேட்க வேண்டிய நிலை தோன்றி விட்டது.

அஞ்ச வேண்டிய சூழ்நிலைகளுக்கு அஞ்சாமல் இருந்த காரணத்தால் அஞ்சக் கூடாத சூழ்நிலைகளில் அஞ்சி வாழும் அவல நிலைக்கு ஆளாகி விட்டார்.


‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்ற வள்ளுவப் பெருமானின்   ‘குரலை’ அவர் கேட்கத் தவறியதன் விளைவு இது.


மனசாட்சியும் சத்திய உணர்வும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கொஞ்சமேனும் இருப்பது உண்மையானால், அவரும் அவருடைய இளைய மடாதிபதியும் காஞ்சி மடத்தை விட்டும் அதன் பொறுப்புகளிலிருந்தும் விலகி முற்றாகத் துறவு கொள்ள வேண்டும்; அதன் மூலம் அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று  வாழ்ந்த மாபெரும் துறவி’ என்று சரித்திரம் பேசத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்’

இதுவே, இந்து தர்மத்தைப் பேணுவோரின் இதயக் குரலாக இருக்க முடியும்

இதை விட்டு, ஸ்ரீ ஜெயேந்திரர் அப்பழுக்கற்றவர்; அவர்மீது அநியாயமாகப்
பழி சுமத்தப்பட்டு விட்டது; இப்போது நீதி வென்று விட்டது’ என்றெல்லாம் கூடி, அநீதிக்காகவும் அறியாமைக்காகவும் வக்காலத்து வாங்குவது
ஸ்ரீ ஜெயேந்திரரை மேலும் கறை படிய வைக்குமே தவிர,கரை ஏற்றாது.


தர்மம் தலை காக்குமே தவிர, அது எதன் பொருட்டும் தலை சாயாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.11.2013

Wednesday, November 27, 2013

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஓர் திறந்த மடல்!





நிறையப் பேர்களின் வணக்கத்துக்கும் வருத்தத்துக்கும் உரிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு,

சம்பிரதாய வணக்கங்கள்.

வேதநெறிகளை விளைவித்து வந்த காஞ்சி சங்கர மடம் தங்களின் ஆளுமையில் அவற்றை  வெகுவாகக் கொச்சைப் படுத்தி வந்தது.

அதன் உச்சக்கட்டமாக  அரசியல் சதிகளும் கொலைத் திட்டங்களும் உருவாக்கப்படும் அதர்மச் செயல்கள் நிலைகொண்ட ஆடுகளமாக அவதானித்து விட்டது.

சங்கரராமன் கொலை மூலம்தான் இந்த அவதானம்  அனைவருக்கும் அறிவிக்கப்பட்டதாகி விட்டது.

ஆக, எப்படியோ ஒருவகையில் அதைக் கறைபடியச் செய்து விட்ட 'பெருமை' உங்களால் ஏற்பட்டு விட்டது.

சனாதனதர்மங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட  இந்தப் புராதனச் சொத்தை'சொத்தைஆக்கிச் சூறையாட எவர்க்கும் தர்மம் இடம் கொடுக்காது.

ஆனால், வெளியே சொல்லமுடியாத காஞ்சிமடத்தின் விவகாரங்களின் விளைவாக, பட்டப் பகலில், மிகப் புராதானமும் மேன்மையும் தெய்வச் சந்நதமும்  பரவி நிற்கும் வரதராஜப் பெருமாளின் திருக்கோவில் வளாகத்தில்  துடிக்கத் துடிக்கச் சங்கர ராமன் வெட்டிச் சாய்க்கப்பட்டது, உலகமே கண்டு அதிர்ந்து போன கொடூர நிகழ்வு.

நீங்களும் உங்களை அடுத்த சந்நிதானமும், நிதானமற்று ஆடிய ஆட்டத்தின் விளைவு  இஃதென்று இந்த நாட்டின் சாதாரணக் குடிமகன்கூட, குலை நடுங்கிச் சொல்லும் கொலைச் சம்பவம் இது.

நீங்களோ, விஜேந்திரரோ வேலும் வாளும்  எடுத்தோ தண்டத்தைத் தூக்கிக் கொண்டோ சென்று சங்கரராமனைக் கொல்லவில்லை என்பது சத்தியம்.

ஆனால், கடந்த காலச் செய்திகளும் ஆரம்பத்தில் சங்கர ராமன் மனைவி அளித்திருந்த சாட்சியங்களும் பிற செய்திகளும் உங்களுடைய  திரை மறைவுச் சிந்தாந்தாங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஆன்மீக நெறியாளர்களைத் தலை குனியச் செய்தது; ஏன் நீங்களேகூட நீதிபதியிடம் உங்கள் விடுதலைக்காகப் பேரம் பேசிய தொலைப் பேசி உரையாடல் கேட்டு மீடிய உலகமே சிரித்ததே.

உங்கள் கடந்த காலச் செயல்பாடுகள்  பார்ப்பன எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்புச் சித்தாந்தவாதிகளைத் தலை நிமிரச் செய்ததுஎன்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

காவியை அணிந்து கொண்டு எந்தத் தர்ம சாஸ்திரங்களை மேடை தோறும் ஊருக்கு உபதேசிக்கின்றீர்களோ, அதே சாஸ்திர அறிவைத் தங்களுடைய  அந்தரங்கத் தவறுகளுக்குக் கவசம் ஆக்கிக் கொண்டுஆஷாடபூதியாய் அவதானித்துக் கொண்டு வந்திருக்கின்றீரகள்என்பது வெட்ட வெளிச்சமான நிலையில் உங்களுடைய  குற்றங்கள்நீதி மன்றத்தால் அங்கீரிக்கப்பட்டு,  புனிதர் எனப் புதிதாகஞானஸ்தானம்கொடுக்கப்பட்டிருக்கிறது. சாட்சியக் குளறுபடிகளால் சங்கரராமன் கொல்லப்படவில்லை என்பது நீதியின் கண்களுக்கு மட்டும் தெரிந்து விட்ட உண்மையாகி விட்டது.

சரி...
இந்தத் தீர்ப்பு வருவதற்காக என்ன மாதிரியான தவங்களையெல்லாம் செய்தீர்களோ?, உங்களுடைய  தவத்தை மெச்சி எந்த வடிவில் தெய்வம் வரம் கொடுத்ததோ? யாவும்  உங்களுடைய  மனச் சாட்சிக்குத்தான் தெரிந்திருக்க முடியும்.

என்றாலும், அந்த மனச்சாட்சியின்  பிரதிநிதித்துவம் பெற்ற  ஆலோசனைகளையும் தூண்டுதல்களையும் தர்மத்துக்கு அஞ்சுகின்ற எவரும் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் நீங்கள் சிந்திப்பீர்கள்என்று  இன்னமும் செத்துப் போகாத தர்மத்தின் வாயிலில் நின்று நம்புகிறேன்.

அதனால் உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது.

’இது என்னுடைய தனிப்பட்ட விண்ணப்பம் அல்லஎன்பதையும்தர்மத்தையும் ஒப்பற்ற இறை ஞானத்தைத் தேடும் தாகமும் கொண்டவர்களின் சார்பாக விடுக்கப்படும் விண்ணப்பம்என்பதையும்  தாங்கள் பரிசீலிக்க வேண்டும்; பரிசீலித்துப் புனிதக் காஞ்சி மடத்தைப் புனருத்தாரணம் செய்ய  நீங்கள் வகை செய்ய வேண்டும்.

அதற்கு,உலகம் போற்றி மதித்து வணங்கும் மகாப் பெரியவர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுவதுடன், இனி எந்த வகையிலும் சங்கர மடத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கடும் துறவு பூணுங்கள்.

வேதமும் அதன் வித்துக்களையும்  சொத்துக்களாகக் கொண்டு தூய நெறிகளுடன் வாழ்கின்ற அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை காஞ்சி சங்கர மடத்தின்  அதிபதியாக வர வழி அமையுங்கள்.

அவ்வாறு இல்லாமல் ‘நான் புனிதமானவன்என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் உங்களுக்கு இல்லை;இல்லவே இல்லை.

இந்த வழக்கில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத 'அப்பாவி நீங்கள் என்றால் நிச்சயம் நீங்கள் புனிதமானவராக இருக்க முடியாது; புனிதமானவர் என்றால் அப்பாவியாக இருக்க முடியாது.

புனிதரும் இல்லாமல்,அப்பாவியாகவும்  இல்லாத தாங்கள், ஒரு வேளை காஞ்சி மடத்தைத் துறப்பீர்கள் என்றால் அப்போது வேண்டுமானல் உங்களை உண்மையான  துறவி என்று உலகம் சொல்லும்.

நீங்கள் அவ்வாறு துறவியாகி  உபதேசிக்கும் நாளை என்னைப் போன்றோர் வரவேற்கவும்  வாழ்த்தவும் வணங்கவும் தயாராக இருக்கின்றோம்.

நகரேஷு காஞ்சி என்பது  வரலாறு போற்றும் உண்மை.

காஞ்சி போற்றுதும்;காஞ்சி போற்றுதும்

என்னைப்போன்றோர் அந்தக் காஞ்சியைப் போற்றுகின்றோம்.
எங்களையெல்லாம் விட அதிகம் போற்ற வேண்டியவர் நீங்கள் அன்றோ?

உங்களை நீதி மன்றம் இப்போது விடுதலை செய்திருப்பது, இதையெல்லாம் செய்வதற்குத்தானோ?’ என்று என் மனம் சிந்திக்கின்றது.

தங்கள் உண்மையுள்ள,
கிருஷ்ணன்பாலா
27.11.2013