Tuesday, August 30, 2011

சிந்தியுங்கள், சிறுமதியாளர்களே! (எழுதுகிறேன் தொடர்:10)

அறிவார்ந்த நண்பர்களே,


"தூக்குத் தண்டனை பற்றி உங்கள் மன நிலை என்ன?” எனறு முக நூல் நண்பர் திரு ஜெய் கணேஷ் நாடார் (@JaiGanesh Nadar) என்று நேற்று முன்தினம் தன் முக நூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.


நான் எனது கருத்தை இவ்வாறு சொல்லியிருந்தேன்:
"அதைத் தூக்கில் போடுங்கள். இறைவன் கொடுக்கும் தண்டனையை  மனிதன் கொடுக்க அதிகாரம் இல்லை. (மனிதன் மூலம் இறைவன் அதைத் தருகிறான் என்பதை ஏற்க இயலாது;அப்படி ஏற்பதானால் அதற்கு ஏற்படும் எதிர்ப்பையும் ஏற்கத்தான் வேண்டும்)”

நண்பர்களே,


நம் தமிழர் மூவரை வரும் செப்டம்பர் 9 ஆம் நாளன்று தூக்கில் இடுவதற்கு நமது சென்னை உயர் நீதி மன்றம் இன்று (30.8.2011) தடை விதித்து விட்டது.


நீதி இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது, நண்பர்களே!

கொல்லப் பட்டது நம் மதிப்புக்குரிய ராஜிவ் காந்தி. அவர் கொல்லப் பட்டதற்கான காரணம் உண்மையிலேயே யாருக்கும் தெரியவில்லை;அதே போல் கொன்றவர்கள் யார் என்பதும் உண்மையிலேயே யாருக்கும் தெரியவில்லை. கொன்றவர்கள் ‘இவர்கள்தான்’


என்பதை நமது புலன் திறமை (?) மிக்க காவல்துறை நிபுணர்கள் பல ஆண்டுகளாக, பல கோடிகளைச் செலவிட்டு அனுபவித்துக் கண்டு (?) சொன்ன உண்மையின் (?) பேரில் குற்றத்தில் நேரிடையாகத் தொடர்பறற அப்பாவிகளைத் தூக்கில் இடுவது என்பது சரியென்றால்.... இதுவரை நாட்டில் வெவ்வேறு ஆயிரக்கணக்கான கொலைக் குற்றங்களில் 'நேரிடைத் தொடர்புக்கான காரணங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை’ என்று சொல்லி,’சந்தேகத்தின் பலனைத் தந்து விடுதலை செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான உயர் நீதி மன்ற,உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களை என்ன சொல்வது?


’ராஜிவ் காந்தி கொல்லப் பாட்டார்’என்பதற்காக அவர்மீது வைத்திருக்கும் அறிவற்ற அபிமானத்துக்காக, ‘அப்பாவிகளைத் தூக்கிலிடுவது கூடாது’என்று குரல் கொடுப்பவர்கள் மீது அக்கினி அம்புகளை ஏவுவது அதைவிட அறிவற்ற செயல்.


‘ராஜிவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்று துடித்தவர்களை விட ’அவர் உயிருடன் இருந்தால் நாம் அதிகாரத்தை அடிய முடியாது‘ என்று புழுங்கிக் கொண்டிருந்தோர் அவரைப் பிறர் நெருங்க முடியாதபடிச் சுற்றி இருந்தவர்கள்தானே? அவர் சாவில் யார் யார் எல்லாம் அதிகாரத்தை அடைந்து எண்ணற்ற கோடி ஊழல் பணத்தைச் சுருட்டி ‘இன்று உழன்று கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஏன் அவர் மரணத்துக்கு மறைவில் இருந்து இயங்கி இருக்க முடியாது? அரசியலில் இவ்வாறு நடப்பது சரித்திரக் காலம் முதல் தொடரும் சதிச் செயல்தானே?


இனியாவது சிந்தியுங்கள், சிறுமதியாளர்களே!.


இவண்-
கிருஷ்ணன் பாலா.
30.8.2011

Friday, August 26, 2011

கவிதையின் கருவாக்கம்! (இலக்கியத் தடங்கள்:5)

நண்பர்களே,
வணக்கம்.
'காதலைப் பாடும்’ கானக் குயிலுக்கு, இந்த பாலகன் அன்பு வணக்கம். அருமையான கவிதைகள்.....,இந்தக் கவிதை மரபிலக்கண வழியில் எழுதப்பட்டதா? அப்படி எனில் எமக்கு எந்த மரபில் அமைந்தது என கூறவும்; தயை கூர்ந்து” என்று முக நூல் நண்பர் திரு,முத்து பாலகன் எனது ‘காதலைப் பாடுகிறேன்’ என்ற கவிதையையும் பிற கவிதைகளையும் படித்ததன்  பின்னூட்டமாய்க் கேட்டிருந்தார் முகநூலில்.


இது ஒரு நுட்பமான கேள்விதான்.

கவிதை என்று பலராலும் ரசிக்கப் பட்டு.ஒவ்வொருவர் மனதிலும்  பதிகின்ற ஒரு கட்டுக்கோப்பான படைப்பு எந்த மரபுக்குட்பட்டது? என்று சிந்திப்பதும்  மரபுக் கட்டுப்பாட்டுக்குள் மிகச் செறிவான கருத்துக்களைப் புகுத்தி அதைப் பிதுங்க வைப்பதும் சிக்கலான விஷயம் அல்லது சிக்கலுக்கு ஆட்படும் விஷயம் என்பது என் கணக்கு. இதற்குச்சரியான பதில் எவ்விதம் அமையும்?

இன்று பலரும் பலவகை சந்த அமைப்புக்களுடன் கவிதை எனும் பெயரில் கவிதைகள் படைக்கின்றனர்; குறிப்பாக ‘காதலையும் காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்தி ‘சைனா’சரக்குகளை போல் மெலிந்த,மெலிந்த தயாரிப்புக்களை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


நூறு வரிகளில் சொல்லுகின்ற ஒரு விஷயத்தை நறுக்குத் தெறித்தாற் போல் ஒரு வரியில் சொல்லும் திறன் படைத்தவையே. இதை எல்லோரும் அவ்வளவு எளிதாகச் சொல்லும் சிந்தனைத் திறன் பெற்றவர்களாக இருக்க முடியாது.


பலரும் கவிதைகள் எழுதுவதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதினாலும்;அவர்கள் எழுது’வதை’ அவர்களுகளுடைய நண்பர்கள் ‘ஆஹா…ஓஹோ’ என்று பின்னூட்டங்கள் அளித்து ஊக்கப் படுத்தினாலும் குதிரையும் கழுதையும் ஒன்றாகி விட முடியாது.


குதிரையையே கண்டிராதவர்கள் கழுதையைக் குதிரையாய் எண்ணிக் களிப்புறும் நிலையிலேயேதான் இவர்கள் தங்கள் கற்பனைக் கழுதைகளில் களிப்போடு ஊர்வலம் கண்டு மகிழ்வது. இதை ’விதியே’ என்று நொந்து கொள்வதை விட வேறு என்ன சொல்ல முடியும்?


கவிதை எழுதுவதற்கு முன்பு,ரசனையும் சொல்லும் பொருளும் எளிமையும் மிக்க கவிதைகளை படித்துப் படித்து பைத்தியம் கொண்டவர்களாக எவர் திரிய முடியுமோ அவர்கள் நிச்சயம் நல்ல கவிதை தருபவர்களாக இருப்பார்கள் என்பது எனது அனுபவம்.


ஆம்.முதலில் நம்மைத் தூஊண்டிவிடும் ஆற்றல் கொண்ட படைப்புக்களைப் படியுங்கள்;அவற்றின் பொருட் சுவையை அறிவார்ந்த விவாதங்களின் போதோ நண்பர்கள் மத்தியிலோ எடுத்துக் கையாளுங்கள். பிறரை அந்தக் கவிடஹி உணர்வுகளில் மூழ்க வைத்து நீங்களும் நீந்துங்கள். உங்களை அறியாமலேயே கவிதை உணர்வுகள் உங்களுக்குள்ளிருந்து பொத்துக் கொண்டு வரப் பழகி விடும்..


அத்தோடு, உங்களுக்கு இயல்பாகவே சமூக நலனிலும் மொழியைக் கையாளுவதிலும் உண்மையை நேசிப்பதிலும் அதில் உறுதி மாறாது நிலைத்திருப்பதிலும்,சிறுமைச் செயல் புரிவோர் மீது சினம் கொண்டு சீறும் குணம் கொள்வதிலும் மழலையரின் குறும்புச் செயல்,மழலை மொழி மங்கையரின் அச்சம்,,மடம்,நாணம்,பயிர்ப்பு இவற்றின்பால் தீராக் காதலும் மதிப்பும் முதியோரிடம் கருணையும் அக்கறையும்,இயற்கையின் எழில் வனப்பை எடுத்தியம்பும் சொல் வளமும் தேசப் பற்றும் உங்களுக்குள் இயபாகவே இருக்குமானால் நீங்கள் ஒரு பிறவிக் கவிஞர்தான். உங்கள் கவிதைகள் இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் தகுதுதிக்குதானாவே உயர்ந்து விடும்;நம்பலாம்.


சரி,‘எனது கவிதைகள் எப்படி,,எந்தக் கட்டுக் கோப்புள் உருவாக்கப் பட்டது?’ என்று நண்பர் திரு முத்து பாலகன் அவர்கள் கேட்ட கேள்விக்கு எனது பதிலைத் தெரிவித்து விடுகிறேன்.


நான்,மரபுகளைச் சிந்தித்துக் கொண்டு எழுதுகின்ற மரபுக்குள் என்றுமே என்னை மடித்துக் கொண்டு,அதில் என் மனதைச் செலுத்துவதில்லை. ஒருவகைத் திடீர் சாம்பார்,திடீர் ரசம் போல சிந்தனையின் வசப் பட்டு அதில் மனம் ஒன்றிப் பாடத் தோணும் சூழ்நிலையில் இயல்பாக ஓர் லயம் உருவாகும்; .அந்த லயத்தின் வழியே கவிதையின் மொழிகள் தாமாகவே உருக் கொண்டு உயிர் பெறுவதுதான் உண்மை. இது என்ன மரபு? என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.


ஆனால் அத்தைய சூழ்நிலைகளில்தான் நான் நிறையக் கவிதைகளை எழுதியிருக்கின்றேன். வாழ்க்கை,காதல்,ஆன்மீகம்,இறைத் தத்துவம்,சமூகம்,அதன் மாந்தர்கள்,இயற்கை என்று பல்வேறு பரிமானங்களில் எனது கண்களும் மனமும் இரண்டறக் கலந்து கண்ட காட்சிகளே எனது கவிதைகள்.


எனது க’விதை’கள் முளைத்தெழ, திருமந்திரம்,சங்க இலக்கியங்கள், கம்பன், இளங்கோ,வள்ளுவன்,அவ்வை,சித்தர் பாடல்கள், திருக்குறள், தேவாரம், திருவாசகம்,திருப் புகழ்,,திவ்யப் பிரபந்தம்,வள்ளலார்,தாயுமானவர்,குற்றலக் குறவஞ்சி, பாரதி,கண்ணதாசன் மற்றும் புதுமைப் பித்தன்.ஜெயகாந்தன் இவர்கள் எனக்கு ஆதார நிலம் தந்த வள்ளல்கள். இவர்கள் அளித்த நன்கொடை நிலத்தில் நான் ஆழ உழுது, அகலப் பயிர் செய்கின்றேன்.


கவிதைகள் என்னுள் உருவாகும் நிலையை கவிதை உருவத்திலேயெ ‘அடடா,அந்த நிலை..’ என்று எழுதியிருக்கின்றேன்.


கவிதையும் அதன் உணர்வுமாய்க் கலந்திருப்போர் அதைப் படித்து,உங்கள் அனுபவங்களையும் இங்கே சொல்லலாம். குறிப்பாக நண்பர் திரு முத்து பாலகன் அவர்களே.


சரிதானே நண்பர்களே?


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
--------------------------------------------------------------------
அடடா,அந்த நிலை....!

சிந்தனை லயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்த நிலையினில்இருந்தது என்பதை
எண்ணிப் பார்த்ததைச் சொல்கின்றேன்:


புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல
தொகுப்பெனத் தோன்றும் படித்து பாரும்;
தூண்டும் உங்களைத் தாண்டும்!


எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்
தனிநிலை உணர்ந்து எழுதுகின்றேன்!


எழுதுதல் எனக்கு மிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில் எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம் புதிது!


பேனா, திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...


கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!


எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதை நான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!


விதையில்லாமல் முளைக்கின்றது;
வித்தில்லாமல் விளைகின்றது;
வதையில்லாமல் வதைக்கின்றது;
வரவேற்பின்றி நுழைகின்றது!'


சாதாரணமாய்க் கடிதம்' எனச்
சற்றே எழுத நினைத்தாலும்
தோதாய் எதுகை,மோனைகளைத்
துரத்தித் துரத்தித் தருகின்றது!


உரைநடை வேகம் எங்கெங்கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழிகின்றது!


இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுய மரியாதை என்பதெல்லாம்
சூக்கும அறிவாய் விரிகின்றது!


எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கே புரியும்இது?


எழுதும் போதொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக்கின்றேன்!


அடடா,இதுதான்: கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?


இவண்-
கிருஷ்ணன்பாலா

Sunday, August 21, 2011

இது கானல் அல்ல; அறிவாயுதம்! (எழுதுகிறேன் - தொடர் 9)

நண்பர்களே,
வணக்கம்.

”நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவாக உள்ளது அய்யா ... நெறைய பேருக்கு விரிவுபடுத்துங்கள்....”

என்று-

என்னை முகநூல் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
நான் அவருக்குச் சொன்னேன்:

“நண்பரே,

உங்கள் மனதைக் கவரும் அல்லது மனதில் பதியக்கூடிய பதிவுகளை எல்லாம் படித்து அதற்குரிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து அதன் மூலம் நண்பர்களைப் பெருக்கிக் கொள்வதுதான் சிறந்தது. ‘ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்க’ என்று பரிந்துரை செய்வதற்கு, ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். தவிர, முக நூல் என்பது பலருக்கும் ஒரு பொழுது போக்கு சாதனம். இதில் மீன் பிடிப்பதாக எண்ணி நட்பு வட்டத்தைப் பெரிதாக்கி கொள்வதால் என்ன பயன்? அது கானலில் மீன்பிடித்துக் கறி சமைத்து உண்கிற நிலைதான். நான் அந்த விளையாட்டில் எல்லாம் கலந்து கொள்வதில்லை“

அறிவார்ந்த நண்பர்களே,நாட்டு நலனைக் கருத்திற் கொள்வோரே,
நல்லோரே!


‘முகநூலில் ’ நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்வது’ என்பதை ஏதோ ஒரு மிகப் பெரிய கவுரவம் என்பதாகக் கற்பனை கொண்டு இதில் எந்த நேரமும் மனதைப் புதைத்துக் கொண்டு தங்கள் உண்மையான பாதையை மறந்து போகின்ற பலரையும் காண்கின்றேன்.


முக நூல் என்பது பலரும் தங்கள் கருத்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு ஒரு சமூக நல்லிணக்கத்தைக் கொள்ளப் பயன்படுவது; எனினும் அது அவ்வாறு ’இங்கே பயன் படுத்தப் படுகிறதா?’ என்றால் ’இல்லை’ என்றுதான் வருத்ததோடு நான் சொல்லுவேன்.


சமீபத்தில், “எகிப்தில் நடந்த ‘சரித்திரத்தை மாற்றிய சமூகப் புரட்சி’யின் பெருந் தீயானது, முகநூல் பயனாளர் ஒருவரின் துணிவு மிக்க பதிவின் மூலம்தான் பற்ற வைக்கப் பட்டது” என்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கவில்லை.


அசைக்க முடியாதிருந்த அந்த நாட்டுச் சர்வாதிகார ஆட்சியின் 32 ஆண்டுக்கால முகத்திரையை, முக நூலின் ஒரு ’சிறு நெருப்புப் பதிவு’ பெருந்தீயாய் மாறி, எரித்துச் சாம்பலாக்கி விட்டது.

அது போன்று நம் நாட்டிலும் இன்று உத்தர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஊழலின் முடை நாற்ற நிர்வாகச் சீர் கேடுகளை, கொஞ்சமும் வெட்கம் கெட்ட அரசியல்வாதிகளின் அக்கிரமச் செயல்களைக்,கண்டுகொள்ளாமல்,‘இராமன் ஆண்டால் என்ன?;இராவணன் ஆண்டால் என்ன?’ என்று இழிமாந்து கிடக்கும் நம் பாமர மக்களின் இருட்டு நெஞ்சங்களை எரிக்கும் நெருப்பை ‘எரிதழல் எடுத்து எரித்திட முடியாதா?’ என்று ஏங்குகின்ற நட்பை நாடும் உணர்வு கொள்ளுங்கள்.


ஒரு வகையில் நாம் ஆறுதல் கொள்கின்றவாறு, இன்று கூட,ஊழலுக்கு எதிராக ‘அன்ன ஹஸாரே’வின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து வருகிறது; அதற்கு இந்த முக நூல் போன்ற சாதனங்களும் முக்கியக் காரணியாகத் திகழ்கிறது என்பதில் நமக்கு மகிழ்ச்சியாக இருந்த போதும்,உலகமே வியக்கும் நமது பாரதத்தின் உண்மையான எழுச்சியும் வளர்ச்சியும் தகுதியும் அதன் முழுப் பரிமாணத்தை அடைவது எப்போது? என்ற கவலையும் வாட்டுகிறதே?

இதற்கு என்ன வழி?


நமக்கு எளிதாகக் கிடைத்துள்ள மிகப் பெரும் மீடியாவான இந்த முக நூலை நீங்கள் ஒவ்வொருவரும் புனிதமும் வலிமையும் மிக்க அறிவாயுதமாகப் பயன் படுத்துங்கள்;அது ஒன்றே போதும்.


ஒன்று பலவாகி, நூறு ஆயிரங்களாய்,லட்சங்களாய்,கோடிகளாய்ப் பெருகி கோடானு கோடி உள்ளங்களில் எழுச்சி ஒளியை ஏற்றி வைத்து விடும்.


அதுவே’அறிவுப் புரட்சி’. நிச்சயமாகக் கத்தியின்றி,ரத்தமின்றி,ஓர் மவுனப் புரட்சியை உருவாக்க வல்ல இத்தகைய அறிவு சாதனத்தை, இழிவானதாக்கி விடாதீர்கள்’ என்பதே எனது வேண்டுகோள்.

இங்கே,எழுத்தின் பலனை எடுத்துச் சொல்வதற்கு உதாரணம் ஒன்று உண்டு;அதைத் தற்பெருமை’என்று நீங்கள் கருதி விடலாகாது:


’மக்களுக்கு மலிவாக்குக!’ என்று 29.5.2011 அன்று இரவு 11:44 க்கு ஒருகட்டுரையை நமது தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு எழுதியிருந்தேன் இங்கு.


பல நூறு கோடிகளை,மக்கள் வரிப் பணத்தை வாரி இரைத்து அன்றைய முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் மிகப் பிரமாண்டமான கட்டிட வளாகத்தை அவசரம் அவசரமாகக் கட்டச்செய்து, அது முற்றாக முழுமை பெறும் முன்பே, ‘ பால் காய்ச்சி’சாத்திரத்துக்குக் குடி போய் விட்ட சாகசத்தைச் செய்து காட்டி, ‘.இனி,அதுதான் தமிழ் நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கின்ற தலைமைச் செயலகம்’ என்றும் அறிவித்து விட்டார்.
அவரது எண்ணத்தில் மக்கள் மண்ணைப் போட்டு விட்டனர். அவர் முற்றாகத் தேர்தலில் மூழ்கடிக்கப் பட்டுவிட்டார்.


மேடம் ஜெ. மிகப் பெரும் ஜெயத்தில் ஆட்சி பீடம் ஏறினார். முன்னாள் முதல்வர் கட்டிய அந்த மாபெரும் வளாகம் மாபெரும் குப்பை மேடாகப் போகிறது’என்று பெரும்பாலோர் எண்ணிப் பதறினர். அந்தப் பதற்றம் எனக்கும் வந்தது.


நான் என்ன, மேடம் ஜெ அவர்களின் அருகில் ஆலோசனை சொல்லும் அணுக்கத்தில் இருப்பவனா?


எடுத்தேன் எனது கணினியை;எழுதினேன் எனது மன நிலையை. பல நூறு கோடிகளை விழுங்கிய அந்தக் கோட்டம் ’உங்களுக்கு ஆட்சி செய்யும் அரண்மனையாய் இருக்க வேண்டாம்;ஆனால் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் பயன்படும் வகையில் உரிய முறையில் அதனை ‘மக்களுக்கு மலிவாக்குக’ என்று எழுதினேன். அதில் ‘அது, எந்த எந்த வகையில் பயன் பாட்டுக்கு உரியதாக இருக்க முடியும்’ என்பதற்கு ஒரு சிறு பட்டியலிட்டு, இறுதியில், ‘சிந்திப்பாரா மேடம் ஜெ.?’ என முடித்திருந்தேன்.


ஏறத்தாழ இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவ்வளாகத்தைத் தமிழகத்தின் ஒப்பற்ற மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையாக மாற்ற,சட்ட மன்றத்தில் ஆணையிட்டு அறிவித்து விட்டார்.


நான் எழுதிய யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதில் நான் கர்வம் கொள்ளவில்லை. ஏனெனில், அந்த யோசனை அவருக்கும் அவரைச் சார்ந்த ஆலோசகர்களுக்கும் இருந்திருக்கும்; இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய நிலையில் மேடம் ஜெ. அவர்களிடம், ‘இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்’என்று எடுத்துச் சொல்ல ‘எவருக்கேனும் துணிவு வந்திருக்குமா?’என்பதில் நிச்சயம் என்னால் ஐயம் கொள்ள முடியும்.


பொதுவில் ஒரு கருத்தைப் பலரும் அறியத் தரும்போது அது ஆட்சியாளருக்கு ஒரு வகையில் கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பலரும் அதை ‘ நல்ல யோசனை ஆயிற்றே’ எனச் சிந்திக்கத் தொடங்கி, அதனால் அது ஆட்சியாளருக்கு ஒரு வகையில் செயல்படத் தூண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை அல்லவா?


எனவே, நீங்களும் இங்கே எழுதுங்கள். இந்த நாட்டுக்கும் நமது வீட்டுக்கும் எது நன்மை பயக்குமோ அதை எழுதுங்கள்; உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு எது ஏற்புடையதோ அதை நாடி எழுதுங்கள். ஒருவருக்கொருவர் உயர்ந்த லட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு நட்பைப் பகிர்ந்து விரித்துக் கொள்ளுங்கள்.


உங்கள் கருத்துக்களுக்கு இங்கே எவராலும் தடை போட முடியாது;தடுமாறும் கருத்துக்களை நீங்கள் எழுத்தாதிருக்கும்வரை..


இதற்கு மாறாக,இங்கே பலர் .இம்முக நூலை வெறும் வேடிக்கைக்காகவும் வினோதக் கருத்துக்களுக்காகவும் பண்பாட்டுச் சீரழிவுக்காகவும் சிறு பிள்ளைத்தனமான சினிமாக் காட்சிகளின் சீர்கெட்ட கருத்துக்களைப் பரஸ்பரம் பாராட்டிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டாடி வருவதை என்ன சொல்ல?


அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது, ‘நீங்கள் முக நூலின் உண்மைப் பயன்பாடு கருதாமல்,வேடிக்கைச் சாதனமாய்ப் பயன் படுத்தும்வரையில் அது ஒரு கானல் நீராய்ப் போவதைத்தான் காண்பீர்கள்!


இது பற்றி முன்பே நான் ஒரு பதிவைக் கவிதையாக இங்கே பதித்திருக்கின்றேன்.அதை மீண்டும் இங்கே எடுத்துக் கூறுவது எனது கடமை என்றே கருதுகின்றேன். படியுங்கள்.


அனைவருடைய கருத்துக்களும் அங்கே இடம் உண்டு.


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
21.8.2011


இந்தக் கானல் நீரில்...

முகவரியின்றியும் முழுமையின்றியும்
முகத்தை மூடி எழுதிக் கொண்டிருக்கும்
முகநூல் நண்பர் அனைவரும் அறிய
முகமன் கூறி எழுதுவ தாவது:


பலருக்கும் இதுவோர் எழுத்துப் பலகை;
பலவிதம் எழுதிப் பழகிக் கொள்கிறார்;
சிலருக்கு இதுவே சிந்தனை மன்றம்;
சிறிது ஞானம் தேர்ந்து கொள்கிறார்!


அரைகுறையாகப் படித்தோர்;மற்றும்
அறிவிலியாக இருப்போ ரெல்லாம்
தரக் குறைவாக எழுதித் தள்ளித்
தறுதலைக் கூட்டம் வளர்க்கின் றார்கள்!


கவிதை என்ற பெயரில் கிறுக்கி
கண்டதைச் சிலபேர் எழுதிக் காட்ட
செவிடன் சபையில் சிரிப்பதைப் போல
சிலபேர் அதனை ரசிக்கின் றார்கள்;


பண்டிதம் மிகுந்த படைப்பைச் சிலபேர்
பக்குவமாக எழுதிடும் போது
கண்டு ரசித்த குருடர்கள் போல
கருத்தினைச் சொல்லிப் புளகாங் கிப்பதும்;


சமூக மாற்றம்; சரித்திர உண்மை
சாதிப்பதுபோல் சில பேர் எழுத
சமர்புரிவதுபோல் வெகுண்டு சிலபேர்
சங்கம் முழங்கி அடங்கி விடுவதும்;


அறிஞர் சிலபேர் அறிவியல் கருத்தை
அவையில் வைத்து அலங்கரிப் பதுவும்;
குறிக்கோள் இன்றிச் சிலபேர் எழுதி
குமைந்து நெஞ்சம் வருந்து கின்றதும்;


ஆண், பெண் பேதம்; அவை மரியாதை
அடக்கம் மீறி நட்பினை நாடி
நாணம் இழந்து எழுதிக் கொள்வதும்
நான் பார்க்கின்ற நாடகம் இங்கு:


சுய நலத்தோடு எழுதி இங்கு
சொல்லும் பொருளும் பேசிடுவோரும்
பயனுள வகையில் பதிவுகள் செய்து
பலருடன் நட்பைப் பகிர்ந் திடுவோரும்;


காலை, மாலை வணக்கம் சொல்லி
‘காமெடி’ பேசி மகிழ்ந் திடுவோரும்
‘வேலை’ முகநூல் எழுதுவ‘தென்றே
வெட்டிப் பொழுதைக் ‘களித்’திடுவோரும்


முக நூல் சந்தைக் கூட்டம்’ என்றே
முழுதாய் உணர்ந்தவன்; மனதின் பதிவில்
இகழ்வோர்;புகழ்வோர் யாரும் நிஜமாய்
இல்லாதிருப்பது உண்மையு மாகும்!

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பது ‘கானல் நீர்’தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!


எனினும்,படிப்போர் எவரும் இங்கு
என்னை உணர எழுதுதல் என் கடன்;
தனியொரு வழியில்;தமிழ் நெறிகாட்டித்
தவறுகள் களைந்திட எழுதுகிறேன்,நான்!


நேர்மையோ டிருத்தல்;நாளும்
நிமிர்வுடன் நடத்தல்;புத்திக்
கூர்மையோ டெழுதி உண்மை
கூறுவ தெனது கொள்கை!


யாரும் எனக்குப் பகைவர் இல்லை;
யாருக்கும் தீங்கு செய்திட இயலேன்!
காரணம் இன்றி என்பால்,இங்கு
காய்பவர் நண்பர் ஆவதும் இல்லை!

நிரந்தரம் என்று என்னை,நானே
நினைத்துக் கொள்வது இல்லை;எனினும்
நிரந் தரமான எழுத்தாய் இருக்க
நினைத்தே, எழுதிப் பதிவு செய்கிறேன்!

இந்தக்கானலில் எழுதுவ தென்பது
எழுத்து மீனை வளர்ப்பது போல!
முந்தி வருவோர் முயன்று பார்க்க;
முடிந்தால் அவர்களும் மீனை வளர்க்க!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
21.8.2011

Tuesday, August 16, 2011

இந்த சுதந்திரம் வேண்டி நின்றார்.?(எழுதுகிறேன் தொடர்:8)

நண்பர்களே,


வணக்கம்.

இந்தியா,தனது 64 ஆவது சுதந்திர தின ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

’உலகின் உன்னதமான திரு நாட்டின் மக்கள் நாம்’ என்ற பெருமையிலும் நம் தமிழர்கள் இன்று உலகெங்கிலும் ஓங்கிய நிலை பெற்றுப் பரவி வருகிறார்கள்.

இந்தியா, உலக அரங்கில் தலைசிறந்த நாடுகளில் முன் வரிசைக்கு முந்திக் கொண்டு செல்கிறது. பொருளாதாரத்திலும் மனித வள மேம்பாட்டிலும் அறிவுச் சிந்தனகளிலும் இந்தியர்கள் பிற நாடுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதியிலும் உழைப்பிலும் உயர்ந்து வருகிறார்கள்.
‘இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளில் (பிற கட்சிகளின் ஆட்சிக் காலம் நீங்கலாக) 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தும் இத்தகைய முன்னேற்றத்தை இந்தியர்களாகிய நாம் சாதித்துள்ளோம்’ என்பது சாதாரணம் அல்ல.


நமது ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனில் இந்திராகாந்தியும், தகவல் தொடர்புத் துறையில் ராஜிவ் காந்தியும், சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் அடல் பிகாரி வாஜ்பேயும் பிரதமர்களாக இருந்து இந்தியாவின் வளர்ச்சிக்குத் தூண்டுதல் செய்தனர் என்பதை நாம் சொல்லத்தான் வேண்டும்.


ஆயினும் ’இவர்கள் செய்யத் தவறிய முக்கியச் செயல் திட்டங்கள்தான் அதிகம் என்று சொல்லவும்’ வேண்டியிருக்கிறது.


இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி (Single Party Rule) போய் பல கட்சிகள் ஆட்சி நிர்வாகம் (Multi Party Rule)  வந்தும் கூட இந்திய சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட தீமைகளே அதிகம்.


ஊழல்,சுரண்டல்,ரவுடியிஸம் என்று வளர்க்கப்பட்ட கேடுகளுக்கு, அநேகமாக எல்லாக் கட்சிகளுமே காரணமாகி விட்டதால் இத்தகைய கேடுகளுக்கு நடுவிலும் இந்தியர்கள் சிறந்து முன்னேறி வந்திருப்பதற்கு எந்தக் கட்சியும் காரணமல்ல என்பதுதான் உண்மை.


அப்படியென்றால், ”இன்று உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள சிறப்புக்களுக்கு யாரைப் பாராட்ட வேண்டும்?” என்ற சிந்தனை நமக்குள் எழுகிறதல்லவா?


அதற்கு உண்மையான பதில்: ”இந்தியர்களாகிய நாம்தான்”


இதற்கு இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளும் நம் முன்னோர் விதைத்திருக்கும் வாழ்க்கை நெறிகளும்தான் காரணம் என்பதை அறிவுள்ள ஒவ்வொரு இந்தியனும் எண்ணிப் பார்க்க முடியும்.


நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் ’நம் வீடு இந்தியா’ என்கிற உணர்வும்; நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் :”நாம் இந்தியர்கள்” என்கிற செறுக்கும்தான் இன்று உலக அரங்கில் ‘இந்தியா’ “இந்தியர்” என்கிற தனிப் பார்வையை ஒளிரச் செய்து, நம்மைப் பிற நாடுகளை எல்லாம் நிமிர்ந்து பார்க்கும்படிச் செய்துள்ளது.


இதற்கு மாறாக,”இந்தியாவின் இன்றைய பெருமைகளுக்கு நாங்கள்தான் காரணம்’ என்று இன்று ஆட்சி செய்யும் காங்கிரஸ் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவலத்தை என்னென்று சொல்ல?


ஊழலுக்கும் கேடு கெட்ட மதம்,இனம்,மொழி வாதப் பிரிவினைகளுக்கும்தான் இன்றைய காங்கிரஸும் அதன் ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமே ஒழிய, உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்கல்ல.


இன்று அன்ன ஹஸாரேக்களையும் பாபா ராம்தேவ்களையும் உருவாக்கிய பெருமை இந்தக் காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு என்பதைத்தான் அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும்.


ஒரு நாட்டின் சுதந்திரத்தினத்தை அச்சத்துக்கும் அச்சுறுதலுக்கும் நடுவே ஆயிரக் கணக்கான ராணுவத்தினர்,போலீசார் பாதுகாக்க, குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடி இழைக் கூண்டுக்குள் நின்று கொண்டு நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்து நமது பிரதமர் சுதந்திர உரையைப் (?) படித்ததை ”வேடிக்கை வினோதக் காட்சியாகத்தான், இன்று நாம் பார்க்க முடிகிறது.


பாதுகாப்பான கண்ணாடிச் சிறைக்குள் நமது சுதந்திரப் பிரதமர்

வலிமைமிக்க கறுப்புப் படைப் பாதுகாப்புப் பூனைகளுக்கு நடுவே பூனையாய்க் குரல் கொடுக்கும் நமது பிரதமர்!


சுதந்திரமற்ற சூழ் நிலையில் பிரதமரே இருக்கின்ற நிலையை வெட்கமின்றி காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த இந்த வேடிக்கைக் காட்சி பற்றி எனது முக நூல் (Facebook) பக்கத்தில் எனது கருத்தை நேற்று (15.8.2011) இரவு பதிவு செய்தேன்.


அந்தப் பதிவு வருமாறு:


”குண்டுகள் துளைக்காத;மிகவும் பாதுகாப்பான கண்ணாடி இழைச் சிறைக்குள் இருந்து கொண்டு,பாரதப் பிரதமர் புது டில்லி செங்கோட்டையில் இன்று (15.8.2011) இந்தியாவின் 64 ஆவது சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்தார்” -இது இந்தியாவின் அனைத்துச் செய்தி ஊடகங்களிலும் வெளியான செய்தி”
ஆஹா! இந்த சுதந்திரம் வேண்டி நின்றார் பின் வேறொன்றை வேண்டுவரோ, என் பாரதி?


இந்திய சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியை என்னென்பது?


இந்தப் பதிவை நான் இட்டதும் என்மீது தனி அன்பும் நட்பும் காட்டி வரும் முக நூல் நண்பர் ஒருவர் உடனே கேள்வி ஒன்றைக் கேட்டார்.


அவர் கேட்டது நமது பொது ஜனங்கள் பலருக்கும் தோன்றக் கூடிய கேள்வி என்பதால்,’,இதையே ‘கமண்ட்’ பகுதியில் கேட்டால் நான் சொல்கிற பதில் முக நூல் நண்பர்களுக்கும் விளங்குமே? என்று கேட்டேன்.


ஏனோ மறுத்தவர் ‘இல்லை அண்ணா இங்கேயே கேட்கின்றேன்;எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார்.

சொன்னேன்.

இறுதியாக, அந்த நண்பர் சம்மதித்தவாறே அவருடைய பெயரைத் தவிர்த்து விட்டு எங்கள் உரையாடலை இங்கு அனைத்து வாசக நண்பர்களுக்கும் சொல்வது இன்று பலருக்கும் விளங்கியிராத ஒரு கருத்தை வெளிச்சம் இட்டுக் காட்டுவதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

முக நூல் நண்பர்:

அண்ணா! “ குண்டுகள் துளைக்காத;மிகவும் பாதுகாப்பான கண்ணாடி இழைச் சிறைக்குள் இருந்து கொண்டு,பாரதப் பிரதமர் புது டில்லி செங்கோட்டையில் இன்று (15.8.2011) இந்தியாவின் 64 ஆவது சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்தார்”.. Intha seithiyil, emakku oru karuththu undu.. kooralaamaa?!.. (இந்த செய்தியில் எமக்கு ஒரு கருத்து உண்டு..கூறலாமா?..).

Krishnan Balaa:
கூறுங்கள். ஆனால் முகநூல் பக்கத்தில் சொன்னால் அனைவருக்கும் புரியுமே;கமெண்டாகப் பதிவு செய்யலாமே..

முக நூல் நண்பர்:
ingeye koorugiren annaa.. (இங்கேயே கூறுகிறேன்,அண்ணா…) குண்டுகள் துளைக்காத சிறை தற்காப்பா? அல்லது சுதந்திரம் இன்மையா?

Krishnan Balaa:
அரசியல்வாதிகளுக்கு-குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சிறை; வசதி மிக்க சிறை.

முக நூல் நண்பர்:
பிரிவினை கருத்துக் கொண்ட அண்டையர் உள்ளவரை அது அவசியம் தானே! அவ்விதம் கருதினால், ராணுவமும் கூட அவசியம் தானே?!அண்ணா, சுதந்திரம் உள்ளது என்பதற்காக ராணுவம் தரும் பாதுகாப்பு வேண்டியதில்லையா?!தயவு செய்து விளக்கவும்!Kelviyil pilai aethum iruppin mannikkavum Annaa....(கேள்வியில் பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும்,அண்ணா…)

Krishnan Balaa:
இத்தகைய எதிரிகள் செயற்கையாகத்தான் உருவாக்கப் பட்டிருகிறார்கள். அதிகாரத்தை எப்படியெல்லாம் சகல மரியாதைகளுடன் அனுபவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தாங்கள் செய்யும் அயோக்கியத்தனமான ஊழல்களை, தெருவில் யாரும் கல்லெறிந்து காட்டிக் கொடுத்தும் காயப் படுத்தியும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தன் பிள்ளை, பேரன்களுக்கு போலீஸ்,ராணுவ மரியாதைகள் எல்லாம் தொடர்ந்து கிடைத்து வரவும் நமது அதிகார அரசியல்வாதிகள் செயற்கையாக ஏற்படுத்திய பகைவர்கள்.

நாளடைவில் அதைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதற்காக எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இதே மாதிரியான பாதுகாப்பு மரியாதைகள் கிடைக்கும்படிச் செய்து தங்களுடைய பாதுகாப்பை நிரந்தரப் படுத்திக் கொண்டார்கள் இந்த பதவி சுகம் கண்ட பாதகர்கள்.

முக நூல் நண்பர்:
.ஆமாம் அண்ணா...

Krishnan Balaa:
இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?..

முக நூல் நண்பர்:
தீர்ந்தது அண்ணா மிக்க நன்றி!..



Krishnan Balaa:
இதை இப்படியே உங்கள் பெயரைச் சொல்லாமல் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யப் போகிறேன்,தம்பி.சரியா?..

முக நூல் நண்பர்:
செய்யுங்கள் அண்ணா...

குறிப்பு:
இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பருக்கு, இந்தியா சுதந்திரத்தின் பெருமையை எந்த வகையிலும் குறை சொல்லக் கூடாது’ என்கிற தேசிய உணர்வு பொங்கி இருந்திருக்கிறது.

ஆனால் இன்றைய இந்தியாவின் பாதுகாப்பற்ற நிலைக்கு ”என்ன காரணம்;யார் காரணம்” என்பதை விளக்கிய பிறகு அவருக்கு உண்மை விளங்கி விட்டது’ என்பது அவருடைய சம்மதம் மூலம் தெரிந்து கொண்டேன்.

என்ன நண்பர்களே!
இதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
16.8.2011

Monday, August 8, 2011

தொடரும் எனது பயணம்.

நண்பர்களே,
வணக்கம்.

உலகளாவிய பார்வை கொண்ட ஊர்க்குருவி நான்.

பார்வைக்கு ஊர்க் குருவிதான்; ஆனால்,பார்ப்போரின் மனதை ஊடுருவி விடும் வல்லூறு என்பதை வரலாறு சொல்லும்.


உண்மையைச் சொல்வது;
உண்மையைப் பார்ப்பது;
உண்மையைக் கேட்பது...

இதில் உறுதி எடுத்துக் கொண்டு உலா வரும் கொள்கை எனது;


முகவரிகளில் வாழாமல் எழுத்துக்களில் வாழும் லட்சியம் கொண்டதென் மனது.


எண்ணிக்கையற்ற நண்பர்களைத் தேடிச் சேர்க்க விரும்பாமல்,
எண்ணிப் பார்க்கும் நண்பர்களை இணைப்பதற்காக எனது பயணத்தைத் தொடர்கிறேன்….

என்னோடு பயணத்தில் விருப்பம் கொண்டோருக்கு இது ஒரு இனிய நறுஞ் சோலைதான்.

இவண்-
கிருஷ்ணன் பாலா
8.8.2011