Tuesday, December 11, 2012

பாரதி பாடல்: சிறு பாடபேதம்

அருமை நண்பர்களே,
பாரதியின் பக்தர்களே
வணக்கம்.

இன்று மகாகவி பிறந்த நாள்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று
அவன் பாடியதற்கேற்ப,
அவனைப் பற்றுவதிலும் பின்பற்றுவதிலும்
நமக்குள் எவ்விதப் பேதமும் கிடையாது.

அது போலவே-
அவன் பாடலில் உள்ள சிறு  பாட பேதத்தையும்
நாம் பேதமின்றி உணர்ந்து ஒரே மாதிரியாகவே
படித்தும் புரிந்தும் வர வேண்டும் என்ற சிந்தனையை
அவன் பிறந்த இந் நாளில் வைப்பது
மிகச் சரியானது என நம்புகிறேன்.

பாரதி எழுதிய அத்தனை பாடல்களும் இன்று முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.  கிடைத்தவற்றுள் சில பாடல்களில் கூட சில வரிகள் நிரப்பப் படாமல் உள்ளன.

அந்த சில வரிகளில் பாடபேதமும் இருப்பதாகக் காண்கின்றேன்.

‘கவிச் சூரியனான பாரதியின் படைப்புக்கள் எதுவும் எள்ளளவும் குற்றம் குறை இல்லாதவை’ என்று நம்புகிறவன் நான்.

அவ்விதம் குறைகள் இருப்பின் அது, பாரதியின் கைப் பிரதிகளைத் தேடி எடுத்தோ, மறு பிரதி எழுதியோ ( மக்கிப் போன பழைய தாள்களிலிருந்து
Re-Write செய்தோ) தந்தவர்களின் கவனக் குறைவால் அல்லது பாரதியின் சிந்தனயை அப்படியே தாங்கிச் சொல்லும் கவித் திறன் இல்லாதவர்களால்  வந்ததாகத்தான் இருக்க முடியும்;பாரதியால் அல்ல.

பாரதி கவிதைகளின் முழுப்பரிமாணத்தையும் அறிந்தோர் அவற்றை
மறுசீர் செய்து இப்போது வெளியிடப் பட்டுள்ள நூல்களில் உள்ள கவிதைகள் சிலவற்றின் – அச்சுப் பதிவுகளில்- பாடபேதங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

உதரணமாக:

“தேடிச் சோறு நிதந் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி; கொடும்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? ”

எப்போதும் என் சிந்தனைக்குள் ஊடுருவி நிற்கும் பாரதியின் இக்கவிதையின் பிரசுரத்தைக் கவனியுங்கள்.

இதன் அச்சில், வடிவில் ஏதேனும் எதுகை,மோனை,இயைபு,ஓசை மற்றும் அசைகளில் தடுமாற்றம் தட்டுகிறதா?

நான் சுதேசமித்திரன் நாளிதழில் - 1976-77 களில் உதவி ஆசிரியனாகப் பணியாற்றியபோது, பாரதியின் இக்கவிதையை நானே எழுதிக் கொண்டது போல் எண்ணி அடிக்கடி எனக்குள் பாடியும் எனது இயல்புகளைப் பிறருக்குத் தெரிவிக்கும்போது எடுத்துச் சொல்லியும் இறும்பூதெய்துவதும் வழக்கமாக இருந்தது.

ஆனால்-
முகநூலுக்கு வந்த பிறகு பாரதியின் நேசர்கள் பலர் இப்பாடலை இங்கு எடுத்துக் காட்டும் போதெல்லாம் சிறிது பாடபேதமாகவே எழுதி வந்தனர்.

அது:

//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’//


அதாவது இக்கவிதைப் பிரசுரத்தில்
எதுகைகள் இடறி இருப்பதும் மோனைகள்
முறைத்துக் கொள்வதும் இயைபும் ஓசைகளும்
தட்டிக் கொள்வதுமாக இருக்கின்றன.

இதையே பிரசுரிக்கப்பட்ட எல்லா “பாரதியார் கவிதை’ நூல்களிலும்
இருக்கக் காண்கிறேன்.

விக்கிப் பீடியாவிலும் இதுவே உள்ளது.

இந்த கவிதையின் முதல்,இரண்டு வரிகளை

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்....”

என்று-

சரிசெய்து கொண்டால் மற்ற வரிகள் அனைத்தும் கவிதைக்கே உரிய கட்டுக் கோப்புக்குள்ளும் பாரதியின் கருத்துக்குள்ளும் கம்பீரமாய் வந்து நின்று கொண்டிருப்பதைக் காணலாம்;உணரலாம்.

பாரதியின் மீது எனக்கு ஈர்ப்புத் தோன்றிய நாள்
முதலே – எனது இளம்வயது முதலே,
இப்பாடலை என்னை அறியாமல்-

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றுதான் பாடி வந்திருக்கின்றேன்.

நான் அவ்வாறு செய்து வருவதால் ‘அனைவரும் இதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வாதிக்க விரும்பவில்லை.

ஆயினும்-


எனது உள்ளத்தின் இயல்பான படிமத்தில் இப்பாடலின் ஆரம்பத்திலிருந்து-

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று;....”

என்று இருப்பது, அதன் கருத்தின் கம்பீரத்தைச் சுட்டிக் காட்டி, இந்த பாட பேதம் புரியப்பட்டால், அதில் உள்ள எதுகை மோனைகளும் இயைபுத் தொடரும் பாரதியின் எழுச்சிமிகும் தோற்றத்தையும் முழுமையாக் காட்டிகிறதே தவிர எவ்வகையிலும் குறைக்கவில்லை’ என்பதை எடுத்து கூறவே இதை எழுதுகின்றேன்.


பாரதியின் உணர்வுகளில் பலமுறை தோய்ந்து அவனுடைய கவிதைப் பெருவெள்ளத்தில் நீந்தி வரும் எனக்கு பாரதியின் கவிதைகளில் வரும் எதுகை,மோனை,இயைபு, கருத்து முதலான அனைத்திலும் பொங்கி நிற்கும் புலமையில் அளப்பறிய பெருமையும் ஈடுபாடும் உண்டு.

பழைய பிரதியை சரிவரக் கவனிக்காது யாரோ செய்த பிழையை,பின் வந்த கவிஞர் பெருமக்களும் பாரதியின் பக்தர்களும் கூர்ந்து கவனிக்கவில்லையோ என்பதும் இது ஒரு சிறு பாடபேதமே ஆகும் என்பதும் எனது மனம் எண்ணி, முதலில் நான் நெஞ்சில் பதித்திருந்த வரிகளின் கட்டமைப்பே சரியான கவிதை வடிவம் என்பதும் அதைத்தான் பாரதி எழுதியிருக்க முடியும் என்றும் எனது மனம் நம்புகிறது..

சிறு சொற்கள் இட மற்றம்தான்.

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றிருப்பதில் பாரதியின் கம்பீரமும் அவன் கவிதையின் பொருளும் சிறந்து நிற்கின்றதே தவிர,சிதைக்கப் படவில்லை.

எனவே-
இன்று பாரதியின் பிறந்த நாளில் இதுபற்றி, ஓர் பார்வையை உங்கள் எல்லோருக்கும் வைத்து,அது பற்றிய உங்கள் எண்ணத்தை அறியவும்  பாரதி பாட்டின்  கம்பீரத்தையும்  கட்டுக் கோப்பினையும் காக்கவும் வேண்டி இதனைப் பதிக்கின்றேன்.

வாழ்க பாரதி; வாழ்க அவன் புகழ்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.12.2012

No comments: