Monday, December 24, 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்து! -25.12.2012



எல்லா மதங்களும் நதிகளைப் போலே
இறைவன் என்னும் கடலில் கலக்கும்;
எல்லா மக்களும் தத்தம் வயல்களில்
ஏர்ப்பிடித்துழுது பயிர் செய்துயிர்க்க
எல்லா நெறிகளும் அவரவர் மொழிகளில்
இறைவனின் ஆட்சியை எடுத்துணர்விக்க
எல்லைகள் வகுத்து வாழும்வகையில்
இருக்கும் உலகில் நாமிருக்கின்றோம்!

மூஸா நபியும் ஈஸா மொழியும்
முழுமையாக்குமோர் இறைவழி என்றே
தேசங்கள் தோறும் அறிவோம் ஆயின்
தெளிவு இறைவன் ஒன்றே ஆகும்;
ஏசும் மாக்கள் ஏசட்டும் இங்கே
இறைப்பெயர் இங்கு பலப்பல;அவற்றைப்
பேசும் உரிமையும் பிசகா அறிவும்
பேணுவதைத்தான் மானுடம் என்போம்!

பரம்பொருள் கண்ணன் மாடுகள் மேய்த்தான்;
பரமன்ஏசு ஆடுகள் மேய்த்தான்;
கிருஷ்ணன் என்பதும் கிறிஸ்டியன் என்பதும்
கேட்டால் செவியில் ஒன்றாய் ஒலிக்கும்!
’பரமபிதாவின் மைந்தன் மண்ணின்
பாவத்தை ஏற்கப் பிறந்தான்’ என்ற
கருணையைக் கூறும் கிறிஸ்மஸ் நாளில்
கர்த்தர் ஏசுவை வணங்கி மகிழ்வோம்!
  
மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்திநமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;ஈசன்!
புனிதன் ஏசு அவன் தான் என்று
புரிந்து போற்றுதல் மானுடர் கடமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12 2012

1 comment:

Ramadhas Muthuswamy said...

//பரம்பொருள் கண்ணன் மாடுகள் மேய்த்தான்;
பரமன்ஏசு ஆடுகள் மேய்த்தான்;
கிருஷ்ணன் என்பதும் கிறிஸ்டியன் என்பதும்
கேட்டால் செவியில் ஒன்றாய் ஒலிக்கும்!
’பரமபிதாவின் மைந்தன் மண்ணின்
பாவத்தை ஏற்கப் பிறந்தான்’ என்ற
கருணையைக் கூறும் கிறிஸ்மஸ் நாளில்
கர்த்தர் ஏசுவை வணங்கி மகிழ்வோம்!// மிகவும் அருமையாகவே ஒலிக்கிறது!!நன்றி. தங்கட்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக.