Friday, December 21, 2012

சொல்வதெல்லாம் உண்மை- (தொகுதி-5)


மூங்கில் காட்டுக்குள்
நுழைந்த புயலை
ஒரே மூங்கில்

கீதமாக
வெளியேற்றியது:
அட,
புல்லாங்குழல்!
    
வண்-
                                                         கிருஷ்ணன்பாலா
                                                         21.12.2012


101

பெண்ணே,

நீ
அழகாகத் தெரிய வேண்டியது
பிறருக்கல்ல;
உன் கணவனுக்கு மட்டுமே.

அறிவோடு இருக்க வேண்டியது
உன் கணவனுக்கல்ல;
பிறருக்கு மட்டுமே.

இவை இடம் மாறும்போது

பிரச்சினைப் புயல்
மையம் கொள்ளும் இடம்
உனது மனம்தான்!

அங்கே
அறிவும் அழகும் இரண்டுமே
வலுவிழந்து
வாழ்விழந்து போய்விடுகின்றன!


102
அழகைத் தேடும் முயற்சி
அறிவற்றது;

அறிவைத் தேடும் முயற்சி
அழகானது!


103
எல்லா மதங்களும்
எல்லா சித்தாந்தங்களும்
மனித நேயத்துக்குக் கீழே
மண்டியிட்டிருக்கும்போதுதான்
மானுடத்தின் மகத்தான
சேவைக்கு
அருகதை பெறுகின்றன.


104
கற்றார் சபையில்-

முதுகைக் காட்டும்
ஆண்களும்;
முகத்தைக் காட்டும்
பெண்களும் 

ஆபத்தானவர்கள்.

105
பெண்களுக்கு-

நாணம் என்பது வேறு;
வெட்கம் என்பது வேறு.

தன்னை
மறைப்பதற்குப்
பயன் படும்
கவசம் நாணம்;

அது-

பெண்களின் நான்குவகைப் 
பொக்கிஷங்களில் ஒன்று.

வெட்கம் என்பது
தன்னை
மறைக்க முடியாதபோது
காட்டிக் கொள்ளும் கவர்ச்சி.

அது-

பலவீனமான ஆண்களை
வசப்படுத்தும்
அபாயகரமான
ஆயுதம்.

106
உலகில்
ஆணைப் படைத்தவளும்
பெண்ணைப் படைத்தவளும்
இயற்கையாகவே
தாய்தான்.

உலகில்
மானுடராக வாழ்வோர்
எல்லோருமே
பெண்ணை
மதித்து வாழும்
இயல்பான சூழ்நிலையில்-

பெண்ணின் பெருமையை
அறியாதோரே
ஆணுக்குப் பெண் சமம்என்று
பித்தலாட்டம்  பேசி,
பெண்ணியம் காப்பவர்களாய்க்
காட்டிக் கொள்கின்றனர்.

எனது
தாயையும் சகோதரிகளையும்
நானாக மதிக்கச்
சட்டம் போட்டுக்
கொட்டம் அடிக்
இவர்கள் யார்?


107
இன்றைய
பெண்ணியவாதிகளின்
எண்ணங்கள்
உண்மையான பெண்ணியத்தை
ஏற்றி வைப்பதாக இல்லை;

சொல்லப் போனால்-
இமயச் சிகரத்தில்
இருந்து வந்ததை
எட்டிப் பிடிக்கும்
உயரத்துக்கு வைத்து விட்டு
உற்சாகப்படும் கூத்துத்தான்
அரங்கேறியுள்ளது, இன்று.


108
தனக்கு
தெரியாததையே பேசுகிறவன்
நாத்திகன்;

தனக்குத்
தெரிந்ததையும் பேசாதிருப்பவன்
ஆத்திகன்!

நான்
இதில் விதிவிலக்கு!


109
தன் வழியில்
அமைதியாகச் சென்று
கொண்டிருப்பவன் மீது
கல்லை எறிகின்றவன்:
நாத்திகன்!

அந்தக் கல்லையே
கடவுளின் சின்னமாக்கி
வழி படுபவன்:
ஆத்திகன்.

110
அன்பே,

முதலில்
உனது
வெட்கத்தில்தான்
வீழ்ந்தது என் மனது;

பிறகுதான்
தெரிந்தது:

வீழ்ந்தது மனமல்ல;
வாழ்க்கையே என்பது!



111
முகநூல்
தொடர்புடைய
இரண்டு பேர்
சந்தித்துக் கொண்டாரர்கள்.

அதில் ஒருவன் முட்டாள்;
இன்னொருவன் விவரமானவன்!

முட்டாள் கேட்டான்:
ஸார் நீங்க எழுதினா
எத்தனை பேர்
உங்க பதிவுக்கு வர்ராங்க?’

விவரமானவன் சொன்னான்:
சராசரி 300 பேர்.

முட்டாள் வெடுக்கென்று
சொன்னான்:
அடப் போங்க ஸார்;
நான் தினசரி
400 பதிவுகளுக்குலைக்
போடறவனாக்கும்;

அதுசரி
உங்க பதிவை
நான் பார்ப்பதே இல்லையே?

விவரமானவன்
வெட்கத்துடன் தலைகுனிந்தான்


112
கீழே விழுந்தவன்
வலியை உணருகின்றான்;
மேலே எழுந்தவனோ
வலியை உணர்த்துகின்றான்!


113
 ‘சாதி இல்லை
என்று
சாதிப்பதும்
சாதீயாலேயே
சாதித்துக் கொள்வதும்
எங்கள்
தலைவர்களின் சாதிதான்!


114
செவிடர்கள் முன்னே
பேசிக் கொண்டிருப்பவனும்;

சிரித்துக் கொண்டு
கூத்தடிப்பவர்களின்
கூட்டத்தில்
கற்றறிந்ததைப்
பேசுபவனும்

ஊமை என்றே
உணரப்படுகின்றான்.


116
நேசிக்கத் தெரியாதவனின்
வாசிப்பும்

வாசிக்கத் தெரியாதவனின்
நேசிப்பும்

பயனற்றவை!


117
சொல்லிக் கொடுப்பதைக்
கற்றுக் கொள்பவன்:
மாணவன்;

மாணவனிடமிருந்தும்
கற்றுக் கொள்பவன்:
ஆசிரியன்.


118
நண்பனே,
நம்
முன்னோர் வகுத்த -

சாத்திரங்களையும்
சூத்திரங்களையும்

மீறுகின்ற
பாத்திரமாக

உன்னால்
நடிக்கத்தான் முடியுமே தவிர,
அவற்றைப் படிக்க முடியாது!

ஏனெனில் -

அவற்றை உணர
உனக்குத் தேவை:

ஆயுள் அல்ல;அறிவு!

119
இரண்டு ஜாதிகள்
சண்டையிட்டுக் கொண்டன.

நான்
அந்த சண்டையைக் கண்டித்தேன்.

விளைவு:

நான்
இரண்டு ஜாதிகளுக்கும்
வேண்டாத ஜாதி
ஆகிவிட்டேன்.

120
நீங்கள்
உங்கள் மத நம்பிக்கையில்
தீவிர நாட்டம்
கொண்டவர்
எனில்-

பிற மதத்தவர்
உங்களுக்குத் தரும்
மரியாதையை
அவர்களின் உணர்விலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள்;

அதுதான்
உங்களுக்குப் பெருமை!

பிற மதத்தவர்
தருவது
அவமரியாதை
எனில்
பொறுத்துக் கொள்ளுங்கள்;

அது -
உங்கள் சித்தாந்தங்களுக்குப் பெருமை!


121
கர்வம்
----------
இங்கே-
கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
என் எழுத்துக்கள்
விருந்து;

கவனிக்காதவர்கள்
என் எழுத்துக்கு விருந்து.



122
பழையன கழிதலும்
புதியன் புகுதலும்
வழுவல;
கால மரபினானே

என்கிறது
நன்னூல் சூத்திரம்;

அதற்காக-
கழிதல்களையெல்லாம்
புதியதெனப் புகுத்துவது
மூடர்களின் சாத்திரம்.

123
திடீரென்று
கிடைக்கின்ற அதிர்ஷ்டத்தை
வாழ்க்கையின் வெற்றி
என்று
விளம்பரப் படுத்தாதீர்!

ஏனெனில்-

வெற்றி என்பது
சுலபமானதல்ல;

சுலபமானது
வெற்றியும் அல்ல



124
மேப்பனில்லாத ஆடுகள்
-----------------------------------

நான் சுத்த சைவம்
என
ஆடுகளைக் கைவிட்டான்
மேல்சாதிக்காரன்;

மேய்ச்சலைத் தேடி
தோட்டம் தோட்டமாக
அலைந்து
தோட்டக்காரர்களால்
விரட்டி அடிக்கப்பட்ட
அந்த ஆடுகள்,
மேய்ச்சலை விடவும்
மேய்ப்பனுக்காக
ஏங்கின....

இதோ-
நான் இருக்கிறேன்,
உங்கள் மேய்ச்சலுக்கு
என்று
மார்தட்டிக் கொண்டு
கசாப்புக் கடைக்காரன்
ஒருவன் வந்தான்..

நல்ல மேய்ப்பன்
கிடைத்து விட்டதாய்
ஆடுகள்
மந்தை மந்தையாகப் பிரிந்து
தங்களுக்கு இஷ்டமான
மேய்ப்பனிடம்
அடைக்கலம் ஆகின.

இப்போது
அந்த மேய்ப்பன் சொன்னான்:

இனி
நானே உங்கள் மேய்ப்பன்;
உங்களுக்குச்
சுவர்க்கம் பக்கத்திலிருக்கிறது”



125
எழுதும்போது
எழும் சிந்தனைகள்;

சிந்திக்கச் சிந்திக்க
முந்தும் எழுத்துக்கள்!

எல்லாம் எழுத்து மயம்


 (சொற்கள் சுடரும்)

1 comment:

marsramdas said...

மிகவும் அருமை ஐயா!!!......

அறிவொடு அன்பும் அணைத்திடும் போழ்தில்
செறிவுடன் இன்பம் சிறக்கும் – நெறியுடன்
கொண்டீர் கணவர் கணிப்பில் களித்திடும்
பெண்டிர் அழகே புகழ்!