Tuesday, June 19, 2012

‘நான்’ இனி,நீங்கள்’!


நான்எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி யாவும்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!

‘ஆணவம்’ என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?


நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோ ருடைய
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
'சொல்எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும்போது
வாய்பொத்தி நிற்க லாமோ?

ஓய்விலாக் கவலை; நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!

தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்: ‘நான்,’இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012

Monday, June 18, 2012

நட்டம் அவருக்கில்லை;நாட்டுக்குத்தான்!


நண்பர்களே,

“இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மறுபடியும் நான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் அமர விரும்பவில்லை” என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியரால்
விரும்பப்பட்டவருமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அறிவித்து விட்டார் என்ற செய்தி
நம் அனைவரையும் வாடச் செய்துள்ளது.

சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் நாம் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் காண விழைந்தோம்.

ஒரு உண்மையான தமிழனைத் தங்கள் தலைக்குமேல் வைத்து அழகு பார்க்க கலைஞரும் விரும்பவில்லை; மேடம் ஜெ,அவர்களும் விரும்பவில்லை.

ஊழலின் ஒட்டு மொத்தக் குத்தகைதாரர்களாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை,முறைமாற்றிக் கொள்ளும் இவர்களுக்கு அந்தக் குத்தகைச் சட்டத்தையே ரத்து செய்யத் துடிக்கும் ‘லோக்பால் மசோதாவும் இந்த டாக்டர் கலாம் அவர்களும் ஒன்றுதானே?

எப்போதும் எங்கும் கலைஞர் அவர்களுக்கு எதிரான முடிவுகளையே
எடுக்கும் மேடம் ஜெ.அவர்கள், நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வரும் விஷயத்தில் திரைமறைவில் ஒன்று கூடி, கூட்டணி வைத்து, கலாம் அவர்களுக்கு ஆதரவான தனிக் கட்சியைத் தோற்கடித்து விட்டனர்.

இதனால், கலாம் அவர்களுக்கு நட்டம் இல்லை;நமக்குத்தான்;இந்த நாட்டுக்குத்தான்.

கலாம் அவர்களின் அறிக்கையின் நுட்பமான வரிகளைக் கவனியுங்கள்;
நல்லோருக்குக் கண்ணீர் வரும்.

அதில் நீந்தித்தான் நாம் கரை ஏறமுடியும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2012
---------------------------------------------------------------------------------------




APJ Abdul Kalam
OFFICIAL STATEMENT
--------------------------------

My dear friends,

You are aware of the developments in the run up to the Presidential election. 
Though I have never aspired to serve another term or shown interest in contesting 
the election, TMC Chief Mamata Banerjee, other political parties wanted me to be their
candidate. Many, many citizens have also expressed the same wish. It only reflects their
 love and affection for me and the aspiration of the people. I am really overwhelmed by 
this support. This being their wish, I respect it. I want to thank them for the trust they 
have in me.

I have considered the totality of the matter and the present political situation, and decided not to contest the presidential election 2012.

APJ Abdul Kalam
18th June, 2012


Sunday, June 17, 2012

நீதி கெட்ட அரசும் நெறிகெட்ட ஆதீனமும்


நண்பர்களே,

மதுரை ஆதீன நிகழ்வுகள் நீதி கெட்ட அரசையும் நெறிகெட்ட ஆதீனகர்த்தரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மதுரை ஆதீனம் இப்போதுள்ள 292 அருணகிரியின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; இந்த அருணகிரியும் நம் அப்பனின் ஒரிஜினல் பரம்பரையில்
பிறந்திருக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

முறையற்ற வழியில் 291 ஆவது ஆதீனத்தைக் கவர்ந்து,பதவி பெற்று நெறிகெட்ட முறையில் ஆட்டங்கள் போட்டவர்; அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசி போட்டு வம்புகள் அளந்தவர்;அரசியல்வாதிகளை விடவும்  அதிகம் வளர்ந்தவர் இவர்.

இப்போது வாய் மூடி, வாடித் தலை குனிந்து போய் நோய் கொண்டு உழலும் நிலைக்கு,நிலை மீறிப் போய் விட்டார்.

தெய்வத்திரு ஞானசம்பந்தரின் பெயரால் இவர் செய்த ஆன்மீக அத்துமீறல்களின் பாவங்கள்தான் இவரை நித்தியின்பால் சேர்த்தன என்பேன்.

’பாம்பறியும் பாம்பின் கால்’ ’பாவத்தை பாவம்தான் தண்டிக்கும்;’
முள்ளை முள்ளால் எடுப்பதுதான் தெய்வ நீதி.’

“அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்;அஃதறிவீர்;
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்;நாமடியோம்;
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்”
                   (தேவாரப் பண்:1249; பதிகம்:திருநீலகண்டம்)

என்றொரு பதிகத்தைப் பாடிய திருஞான சம்பந்தப் பெருமான்,’உய்யும் வினையை நாடாதிருப்பது வாழும் நெறிகளுக்கு ஊனம்’ என்று
எச்சரித்து,கரம் கூப்பிப் பணிந்து இறைவன் பாதமலர் போற்றி வாழும் செய்வினை ஒன்றே அந்த ஊனம் நம்மைத் தீண்டாதிருக்கச் செய்யும் நல்வினையாகும்’ என்று நமக்கு உணர்த்துகிறார்.

தேவாரத்தில் தெளிந்த அறிவோடும் தீவிரப் பற்றோடும் இருக்க வேண்டிய 292 அருணகிரிக்கு இது தெரியவில்லை.தெரிந்திருந்தால் இத்தகைய கேடுகள் சூழ்ந்திருக்காது.

புலன்களை ஒடுக்கித் தவநெறி நின்று தேவாரப் பண்ணிசையை முழக்க வேண்டிய பதவியைப் பெற்றவர்;’நித்தியின் ஆட்டமும் பாட்டும் அருமை’ என்கிறார்;அதில்தான் இறையின்பம் பிறக்கிறது’ என்று தள்ளாடுகிறார்.

வெட்கக் கேடு.

இதை எதிர்க்கவும் காறித் துப்பவும் வெகுண்டெழுந்து அவரை விரட்டவும் போராடவும் இங்குள்ளோருக்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை.

ஆனால் கர்நாடகச் சைவர்களுக்கு பிறந்து விட்டது. அவர்கள்தான் 
வீர சைவர்கள்.

வைகறைப் பொழுதுக்கு முன் கண் விழித்து,’சிவாய நம;’ எனச் சிந்தித்துக் கங்கை நீராடி, திருநீறும் ருத்ராட்சமும் தூய காவியும் உடுத்தி, தேவாரப் பண்ணிசை பரவ, தெய்வ நிலை கொண்டிருக்க வேண்டியவர்,வைகறைப் பொழுதுவரை, பழுது வளர்க்கும் சிந்தனைகளில் மூழ்கித் திளைத்து, ‘நம்மைக் கேட்பாரும் இல்லை; மீட்பாரும் இல்லை’ என்ற நிலையில் கிடந்து, தன்னை ஒரு ’உலகக் குரு’ என்று பிதற்றிப் பறைசாற்றிக் கொண்டு,அரசியல் சாக்கடையில் எந்நேரமும் உழன்ற ஒரு அற்ப மனிதர்தானே இந்த 292 மதுரை ஆதீனம்?

இதை இப்போதேனும் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

நித்தியைத் தன் வாரிசென இவர் தன்னிச்சையாக 293 ஆவது ஆதீனம் என்று பட்டம் சூட்டி அவனை,’போற்றியோ போற்றி’ என்று புகழ்ந்தார்.

நாடே அதிர்ந்தது; நாமெல்லாம் அவமானத்தால் குனிந்தோம்.
‘மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல் இது’ என நாம் அப்போதே வெகுண்டெழுந்து எழுதினோம்.

‘அருணகிரியின் ஈனச் செயல்’ என்று எழுதியதை, சமய நெறி போற்றும் நல்உள்ளங்கள் சில ரசிக்கவில்லை;

‘அய்யோ.என்ன இருந்தாலும் ஞான சம்பந்தப் பெருமான் பீடத்தில் காவியும் அவரது பாத ரட்சையும் உத்திராட்சமும் அணிந்துகொண்டு இருக்கும் சமய குரு வேடம் தரித்த ஆதீனம் அல்லவா? அவரை ஒருமையில் விளித்துச் சாடலாமா? அய்யா.உங்கள் கோபம் விளங்குகிறது.கொஞ்சம் பொறுங்கள்; நாங்கள் அவரை மீட்டு நித்தியைத் துரத்துவோம்; அய்யா,கடும் வார்த்தைகள் அவரைச் சுடும்;அதன் வடுக்களை அவர் தாங்க மாட்டார்” என்று 292 அருணகிரியார் மீது அளப்பரிய பக்தி கொண்ட கோவை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அந்த நண்பர்,மதுரை ஆதீனம் அருணகிரி மீது கொண்டிருக்கும் பகுத்தறிவில்லாப் பக்தி கண்டு வியந்தாலும் எனது மனம் மேலும் கொதிப்புற்றதே தவிர, குளிரவில்லை.

காரணம்:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
 
கொள்வர் பழிநாணு வார்.

என்பதைக் கடைப்பிடிக்கின்றவன் நான்.

மதுரை ஆதீனத்தின் இன்றைய நிகழ்வுகளிலோ பனைத்துணை அளவுக்குக் குற்றங்கள் மிகுந்துள்ளபோது எப்படி மென்மை காக்க முடியும்?

எனவேதான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற குறளுக்கேற்ப, மதுரை ஆதீனத்தின் குற்றத்தின் மூலம் எங்கே என்பதைத் தெரிந்து கொண்டு அதை அறவே நீக்கும் வழி யாதென அலசி ஆய்ந்து எனது எழுத்தாயுத்தை ஏவுகின்றேன்.

நண்பர்களே,

எனது சொந்த ஊர்:தாராபுரம். அங்கே கொளிஞ்சிவாடி என்று ஒரு பழம் பெரும் அக்ரஹாரம் இருக்கின்றது. அமராவதி ஆற்றுக்குக் கிழக்கே அமைந்துள்ள அருமையான அக்ரஹாரம் அது.

”அங்கே, ஒரு பெரிய வீட்டை விலைக்கு வாங்கி, அதை ஒரு ’கார்பொரேட் விருந்தினர் மாளிகைபோல் மாற்றி’ குளிர்சாதன அறைகளைக் கட்டி,அங்கே வந்து அடிக்கடி தங்குகிற கார்பொரேட் ஆதீனம்தானே இந்த ஆள்?” என்றும் ”அங்கே இவர் பெண்களுடன் அடிக்கும் கூத்தெல்லாம் இங்குள்ள பலருக்கும் தெரியும் அவரோடு ஒரு அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் ஒருவரும் வந்து தங்கிச் செல்வது வழக்கம்தானே? இப்படிப்பட்ட ஆளைப் பற்றி.இதே ஊரைச் சேர்ந்த நீங்கள் முழு விவரம் தெரியாமல் எழுதி வருகிறீர்கள்” என்றும் என் தாராபுரத்து நண்பர்கள் சொல்லி அதிர வைக்கின்றார்கள்.

நான் தாராபுரத்துக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை ஓரிரு நாட்கள் சென்று திரும்புவது வழக்கம். அதனால் தாராபுரத்து உறவுமுறையினருடன்  நேரத்தைப் போக்கி விட்டு வேறு வெளி விவகாரங்களைப் பற்றிப் பேச நேரமில்லாது திரும்பி விடுவது வழக்கம்

ஆகையால் மதுரை ஆதீனத்தின் தாராபுரம் தொடர்பு பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது சில விஷயங்கள் தெரியத் தெரிய தலை சுற்றும் அளவுக்கு அவை விரசமாக இருக்கின்றன.

’சிவன் சொத்துக்களைத் தன் சொத்துக்களாய் எண்ணி, தெருவுக்கு ஒரு தேவடியாளை வைத்திருக்கிறவர் என்ற விமர்சனத்தை இப்போது விவரம் தெரிந்தவர்கள் கூறி,காறி உமிழ்கின்றார்கள்:கடுஞ்சொல் பொழிகின்றார்கள்.

‘நித்தியால்தானே இந்த ஆதீன கர்த்தரின்.களவு மெய்ப்பட்டிருகிறது?’ என்று கேட்டு விட்டு,’இது மற்ற ஆதீனங்களின் செயல் பாட்டுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது’ என்று சிரிக்கின்றார் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.;அவர் ஆடிட்டர்;அறிவு நுட்பம் மிகுந்த மனிதர்.

மதுரை ஆதீனமான மதிகெட்ட அருணகிரிதனக்குத்தானே குழி வெட்டிக் கொண்டிருக்கிறார். துறவிக்கே உரிய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் அத்து மீறி ஆணவத்துக்கும் ஆசைக்கும் அடிமையாகிப் போனவர், இன்று மூச்சுத் திணறுகிறாராம். பத்திரிகைகள் இப்போது இவரைப் பரிகாசம் செய்கின்றன.

இவருக்கு நேரும் கதிதான் நாளை நம் அரசுக்கும் நேரும்.

நம் தமிழர்களுக்கே உரிய சகிப்புத்தன்மை காரணமாக, ‘நரி இடம் போனால் என்ன?வலம் போனால் என்ன? நம்மை அது கடிக்காமல் போனால் சரி’ என்கிற மனப்பான்மை மிகுந்து விட்ட காரணத்தால்
இந்த 292ன் ஆரம்பம் எது? செயல்பாடுகள் எந்த அளவுக்கு ஒரு ஆதீனகர்த்தர் என்பவரின் அந்தஸ்தை மீறி இருக்கின்றன?
இவரது செயலால் நமது மரபுவழிச் சொத்தும் சமய நெறிக் கட்டுப் பாடும் எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டுள்ளன? மேடை கிடைத்துவிட்டால் அதில் அரசியல்வாதிகளுடனும் சமய நெறிகளைத் தாக்கும் சண்டாளர்களுடனும் இந்த அருணகிரரி கைகோர்த்து கொண்டு குத்தாட்டம் போட்டு வருவது எல்லாம் ஆதீனகர்த்தரின் செயல்பாடுகளா? என்பதைக் கண்கொண்டு பார்த்து இவரைத் தட்டி வைக்க வேண்டிய அரசு, இவரது ஆட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தமிழர்கள் தாங்கிக் கொண்டிருந்தனர்.

இதன் எதிர்விளைவாய், இந்த உளறுவாயர், ’நம்மைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை.தன்னை ‘சுவாமீ’ என்றும் ’ஆதீனம்’ என்றும் சிரம் தாழ்ந்து வணங்கும் கூட்டம் ஞானசம்பந்தர் பெருமானைத்தான் எண்ணி வணங்குகின்றதே தவிர தன்னை அல்ல’ என்ற தெளிவு இல்லாமல், ”தானே உலகக் குரு;தனக்கு நிகர் எவரும் இல்லை” என்கிற திமிர் முளைத்துப் போய், ஆடிய தப்பாட்டங்களின் பலன் இப்போது இவரது தலையைக் காவு கொள்ளப் போகிறது.

இவர் செய்த மன்னிக்க முடியாத செயல்கள்,”சிவன் சொத்தை எவன் சொத்து? என்று கேட்டுக் கொண்டு ”நாம் யார்க்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை; ஈசனே என் கனவில் வந்து நித்தியைக் காட்டினார்; நான் அவருக்கு மகுடத்தை பூட்டினேன்’ என்று வெட்கமின்றி விளம்புகிறார் இந்த வீணர்.

நித்தி எனும் பரம சண்டாளனின் பாச வலைக்குள் இந்த 292ஐ விழ வைத்தது இவரது கிழட்டுப் பருவத்தின் கேடு கெட்ட ஆசைகளும் இச்சைகளும்தாம்.

‘காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.”.

என்ற வள்ளுவனின் வார்த்தைகளுக்கு உதாரணபுருஷனாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்நெறி கெட்ட செயல்களால். இப்போது இவரது நாமம் கெட்டுவிட்டதா,இல்லையா?

இந்த 292ஐ அந்த 293, ‘குரு’ என்ற ஸ்தானத்தில் வைத்துக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. இதை ’இல்லை’ என்று எவரேனும் விளக்கம் சொல்ல முடியுமா?

நித்தம் நித்தம் பேட்டிகள்;சவால்கள்;சந்தி சிரிக்கும் பேச்சுக்கள்...

ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இரண்டுங் கெட்டான்களுக்கு எப்படி வெட்கம் என்ற பதமே இருக்காதோ,அப்படி, அதை உறுதிப்படுத்தி, நிரூபித்துக் காட்டிக் கொண்ட பித்தனாகக் கொக்கரித்தவனை கர்நாடகம் காவு கொண்டு விட்டது பார்த்தீர்களா?.

இன்று நித்தியின் திரைமறைவுக் கிரிமினல் நடத்தைகள் ஆர்த்தி என்ற அமெரிக்கப் பெண்ணால் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நவீன இளைஞனாக வேடம் தரித்துக் கொண்டு அங்குள்ள மதுபானக் கூடங்களில் கூத்து நடத்தியிருப்பதை அமெரிக்கவாழ் இவரது நிர்வாகி ஒருவரே இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஆழ நீரில் மூழ்கிக் கொண்டு காற்று விட்டவனை, அது பொட்லியாக நீரின் மேல் தோன்றி வெடித்துக் காட்டிக் கொடுக்காமல் இருக்காதே?

எத்தனையோ இளைஞர்களும் இளம்பெண்களும்,கணவன்மார்களிடம் கசப்புக் கொண்டவர்களும் இந்த நித்தி தரும் தீர்த்தத்தால் தெளிவு(?) பெற்று இவனுக்குச் சேவகர்களாகி விட்டார்கள்.

பாவம், அதே தீர்த்தம் இந்த அருணகிரியையும் பாடாய்ப் படுத்தி நித்தியின் புகழைப் பாட வைத்துக் கொண்டிருக்கிறது.

’நித்தியின் நிழல்களுக்குக்கே நிஜமான சக்தி இருப்பதாக அரற்றிக் கொண்டு அவர்களுடைய பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்  அருணகிரி’ என்பது எல்லோருக்கும் தெரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசுக்கு மட்டும் தெரியவில்லை.

ஒருவேளை இவனது தீர்த்தம் அரசையும் அடிமைப் படுத்தி விட்டது போலும்.

இல்லையென்றால் கர்நாடக அரசால் நித்தியின் நடத்தைகள் கிமினல் குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டு அவன் மீது வழக்குத் தொடுத்த பின்னரும் நம் மாநில அரசு - நமது தமிழ்ப் பண்பாட்டையும் சமய நெறி மரபுகளையும் காக்க வேண்டிய இந்த அரசு, மவுனம் காக்குமா?

நண்பர்களே

நித்தி, நமது சமயத்துக்கு மட்டுமல்ல;அத்தனை சமயங்களுக்கும்
சைத்தான்;கடுகளவும் கருணையற்றவன்; காமப் பேய் பிடித்துக் காவி கட்டிக் கொண்டு இளிச்சவாயர்களையும் ஏமாந்த பணக்காரர்களையும்
தன் பாதங்களில் விழ வைத்து பல்லிளித்துக் கொண்டிருக்கும் மாய்மாலக்காரன்;மாபாவி.

பாவத்தில் முளைத்த பணத்தாலும் கேடு கெட்ட குணத்தாலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களை உறவாக்கிக் கொண்டு,உல்லாசம் காணும் உளுத்தன்.
.
’இந்தக் கேடு கெட்டகிரிமினலைச் சரண் அடைந்து எனது வாரிசே நீதான்’ என்று வணங்கியவர் நம் வணக்கத்துக்குரியவரா?

கூடா நட்பு கேடாய் முடியும்;இது 292மற்றும் 293 ஆகிய 420களுக்கு மட்டுமல்ல அரசுக்கும்தான்.

அவனை, ஆட்சியாளர்களும், ஏன் நீதி மன்றங்களும்கூட கண்டு கொள்ளாமல் இருக்கலாம்;ஆனால். திருஞானசம்பந்தரின் திருவுளம் விடாது.

ஞானசம்பந்தரின் பெயரால் பெற்ற அந்தஸ்தை அற்பத் தேவைகளில் செலுத்தி ஆசைகளில் உழன்ற பாவச் செயல்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை, பிடதிப் பித்தன் நித்தியால் நேர்ந்துள்ளது’ என்பதே எனக்குள் உணர்த்தப்படும் செய்திகள்.

இந்த அருணகிரியையும் அந்தச் சண்டாளன் நித்தியையும் இரக்கமின்றித் தண்டிக்கும்; இவர்களுக்குத் துணை நிற்கும் எவரையும் நரகத்தில் இடர்படுத்தும்; எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இதோ-
நம் மக்களுக்கு இருக்க வேண்டிய வீரமும் விவேகமும் கர்நாடக மக்களுக்குத் தோன்றி, நித்தியைத் துரத்தத் தொடங்கி விட்டது.

நம் தமிழர்களுக்கு இனி மேலும் வீரம் பிறந்து விழித்தெழுந்து கொள்ளாமல் போனாலும் இறைவன் சபையில் கடும் தண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.

திருஞான சம்பந்தர் பெருமானின் அற்புத வாழ்வை அறியாத அற்ப மானிடர்க்கு இப்போது இது புரியாது.

’மதுரை ஆதீனத்தின் கோவில் சொத்துக்களை எல்லாம் கூத்துக்
கெட்ட குமரிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்ற குற்றச் சாட்டை இந்த அரசு
ஏன் கடுமையாகக் கண் கொண்டு பார்க்கவில்லை?

அரசின் புலனாய்வுத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது அதன் கைகள் கட்டப்பட்டுள்ளதா?

இந்து அறநிலைத்துறை என்பது இந்து சமயத்தின் நெறிகளைக் குழி தோண்டிப் புதைக்கும் ஆதீனச் செயல்களுக்கு ஆலாபனை பாடும் நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றதா?

ஒரு கிரிமினலைக் காப்பாற்றி தமிழர்களின் சமய நெறிகளைச் சாகடிக்கும் இந்த அரசை மக்கள் விரைவில் கைவிட்டு விடும் சூழ்நிலை தெய்வக் கட்டளையால் நிச்சயம் ஏற்படும்..

கர்நாடகத்தில் கிரிமினல் என்று அறியப் பட்ட ஒருவன் இங்கு சிவில் குற்றவாளியாகக் கூட இந்த அரசுக்குத் தெரியாமல் இருக்கின்றதே!; கர்நாடக மக்களுக்கு உள்ள சமய நோக்கமும் வீரமும் இந்தத் தமிழர்களுக்கு இல்லாது இருக்கிறதே?.

இந்த நிலை கண்டு எனதுள்ளம் கொதிக்கின்றது.

நண்பர்களே,

நான் ஆரம்பம் முதலே மதுரை ஆதீனச் செயல்பாட்டில் உறுதி கொண்டு எதிர்க்கின்றேன்,

சூடாக இருப்பினும் என் எழுத்துக்கள் எப்போதும் அநீதியைத்தான் சுட்டும்; அறம் சார்ந்துதான் முட்டும்..

எதன் பொருட்டும் தடுமாறாது.

‘நாமார்க்கும் பகை அல்லோம்;பயமும் கொள்ளோம்;
நல்லோர்க்குத் துணை செல்வோம்;நியாயம் வெல்வோம்:
ஏமாற்றோம்;ஏமாறோம்; துணிந்து நிற்போம்;
எதுவரினும் அறம் மாறிச் செல்லோம் நாமே”

என்பதே எனது எழுத்துக்களின் தார்மீகப் பலம்;கொள்கை.

எனவேதான், இந்தக் கபடக் காவியின் கைங்கரியத்தை எல்லாம் கடுமையாகச் சாடும் கடமை எனது எழுத்துக்களுக்கு இயல்பாகிப் போனது.

ஆனால்,தமிழும் சமய நெறிகளும் தவழ்ந்து வளர்ந்த மதுரை ஆதீனத்தில் நடக்கும் இழிசெயல்களின் எதிர் விளைவுகளைத் தமிழன் உணராது இருக்கின்றானே?

தமிழை நினைத்தால் தலை நிமிர்கின்றேன்;தமிழனை நினைத்தால் தலை குனிகின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.06.2012

Saturday, June 9, 2012

மதுரை ஆதீனம்:அவ்வினைக்கு இவ்வினை!




றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

’அவ்வினைக்கு இவ்வினை’ என்று ஒரு தேவாரப் பதிகத்தை பாடி அருளினார் தெய்வத்திரு ஞானசம்பந்தர் பெருமான்.

அவரது தெய்வீக வார்த்தைகள் எப்படிப் பொய்யாகும்?

இதோ:


'அவ்வினைக்கு இவ்வினை’ என்பது அரங்கேறத் தொடங்கி விட்டது.


மாற்று சமயத்தார் முன்பு, நமது மாசில்லா சமயநெறியை மண்டியிட வைத்து விட்டாரே, இந்த மதி கெட்ட மதுரை ஆதீனம்” என்று மனம் குமைந்துபோய் இருந்த சான்றோர் யாவரும் ’அவ்வினைக்கு இவ்வினை’ என்றால் யாதென?’ இப்போது உணர்ந்து ஞானசம்பந்தரின் அருளாற்றலில் நெகிழ்கின்றார்கள்.

நண்பர்களே,
மதுரை ஆதீனம் என்பது சிவன் சொத்து. திருஞான சம்பந்தர் பெருமானின் சமயநெறி போற்றி வாழ்ந்த, சிவனடியார்களும் 
சிவநேயச் சிந்தனையாளர்களும் ஆன்மநேயப் பெரியோர்களும் அருளார்களும் சான்றோர்களும் தமிழ் மரபு காக்கும் ஆன்றோர்களும் மனம் குமைந்து வெகுண்டெழுந்த கேடு கெட்ட நிகழ்வுகள் இங்கே அரங்கேற்றப் பட்டது.

குடிமக்களின் உணர்வுகளை மட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையையும் காக்க வேண்டிய இந்த அரசு, கைகட்டி,வாய் பொத்தி மௌனம் காத்து வருகிறது.

“ஜெயலலிதா அவர்களின் ஆதரவுடன்தான் நான் மதுரை ஆதீனத்தின் பொறுப்பை ஏற்றேன்” என்று, ஆன்மஞான மூடன் நித்தி வெளிப்படையாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பின்னரும் மேடம் ஜெ. மௌனம் காத்தார்” என்பது இறைவனின் சபையில் எடுத்து வைக்கப்பட்ட விண்ணப்பம்.

மேடம் அவர்களுக்குத் தனது அரசின் சாதனைகளைச் சொல்லி முழக்கமிடத்தான் நேரம் இருந்ததே தவிர, ‘ஒரு கேடு கெட்ட கிரிமனல் தன் பெயரை ‘பப்ளிக்காக’ சொல்லி விட்டானே?’ என்ற பதைபதப்புக் கொஞசம்கூட எழவில்லை.

இறைவனின் ஏட்டில் இதுவும் குறிக்கப்பட்டதுதான்.

‘ஆதீனங்களின் ஆட்சி முறைமையில் அரசு தலையிடக் கூடாது’ என்பது எழுதப் படாத சட்டப் பண்புதான். ஆனால் அக்கிரமம் நடந்த பின்னரும் அதை ஆன்றோரும் சான்றோரும் எடுத்துச் சொன்ன பின்னரும் அதில் தலை இடாதிருப்பது, நெறி காக்கும் அரசின் நீதியல்ல!

அது, அநீதிக்குத் துணை போவதாகவும் திரைமறைவில் அக்கிரமத்தைத் தூண்டுவதாகவும்தான் அர்த்தம்’ என்றே தெய்வ நீதி தீர்ப்பளிக்கும்.

ஆம்.நீதியை நிலை நாட்டாது,முடிவு எடுக்கவேண்டிய நேரத்தில் ஒதுங்கி விடுவதுகூட அநீதிதான்.

இமாலய யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்து, ஆன்ம நேயர்களை எல்லாம் மகிழச் செய்த மேடம் ஜெ., இமாலயக் குற்றங்கள் நடக்கும் மதுரை ஆதீனத்தில் ஏன் தலையிடவில்லை?.

மக்கள் நீதிக்குச் சகாயமாக நடந்து வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் நடு நிலையோடு மதுரை ஆதீனத்தின் மக்கள் விரோத நடத்தைகளைக் கண்கொண்டு பார்த்தபோது, அவரை மாற்றிவிட்டு, நித்தியின் விசுவாசியாக நடந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை இந்த அரசு,மதுரைக்குக் கொண்டு வந்ததேன்?

மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் 13.5.2012 அன்று நிகழ்த்திய அறவழி எதிர்ப்பின்போது அவர்கள் மீது செருப்புக்களை வீசிய காவிகட்டிய நித்தியின் ரவுடிகளை மேடம் ஜெ.அவர்களின் காவல்துறை கைது செய்யாதது ஏன்?

அவர்கள் வீசிய செருப்புக்கள் காவல்துறையினர் மீதுதான் விழுந்தன; அதுவும் ஒரு பெண் காவலர் மீதுதான் விழுந்தது.அப்பெண் காவலர்,கண் கலங்கி அழுததற்குப் பொதுமக்கள் சாட்சி.

அந்தச் செருப்புக்கள் சரியாகவோ,தவறாகவோ,இந்த அரசின் நீதி காக்கத் தவறிய குற்றத்துக்காகவும் அதன் மெத்தனப் போக்குக்காகவும், தெய்வக் கோபத்தால் அரசின் காவல்துறையினர் மீது தெரித்து விழுந்த அடியாக நடு நிலையாளர்கள் வருந்திச் சொல்கின்றனர்.

நானும் மிக மிக வருந்துகின்றேன்.
”நமது பாரம்பரியத்தின் பழமையும் பெருமையும் மிக்க மதுரை ஆதீனம் ஏதோ அருணகிரிக்கும் நித்திக்கும் பொதுவானது’ என்று ஒதுங்கி இருக்கிறதே இந்த அரசு” என்பதில்.

நண்பர்களே,
’அரசு அன்று கொல்லும்;தெய்வம் நின்று கொல்லும்’ என்பது முன்னோர் சொல்லி வந்த முதுமொழி.
  
மதுரை ஆதீனப் பட்டாபிஷேகம் நடந்த அன்றே, தமிழ்கூறும் நல்லுலகே அதிர்ந்தது;அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் பொங்கின. ஆனால் அசையாமல்,அதை வேடிக்கை பார்த்தன் மூலம் இந்த அரசு,நீதியை அன்றே கொன்று விட்டது.

”மதுரை ஆதீனமும் நித்தியும் மாறி,மாறி தன்னைப் புகழ்ந்ததை மேடம் ஜெ.அவர்கள் அனுமதித்தன் மூலம் இந்த இரட்டைக் கோமாளிகளின் கூத்துக்கு ஆதரவாக நின்று விட்டார்” என்று தேவாரம் பாடி,கண்ணீர் மல்கிக் கசந்து வருந்தினர் திருஞான சம்பந்தரின் திரு அடியாரக்ள்.
  
ஆனால்,அரசே கைவிட்ட போதும் தெய்வம் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கி விட்டது இப்போது.

’தெய்வம் நின்று கொல்லும்’ என்றால் ‘தாமதமாக முடிவு எடுக்கும்’ என்று எவரேனும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

தெய்வம் தான் எடுத்த தீர்ப்பை ஒரே நாளில் காட்டாமல்,நின்று நிதானமாகக் காட்டும். அதாவது அனலிடைப் பட்ட புழுப்போல், துடிக்கத் துடிக்கத் தண்டிக்கும் என்று பொருள்.

நண்பர்களே,
உங்கள் உணர்வுகளைக் கூர்மையாக்கிப் பாருங்கள்,புரியும்:
‘தெய்வம் என்ன செய்யத்தொடங்கி இருக்கிறது?’என்பது.

மதுரை ஆதீனத்துக்கும் பிடதி ஆதீனத்துக்கும் என்ன சம்பந்தம்?

காவிக் கோவணத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு நாக்கையும் வாக்கையும் நறுக்கென்று சுருக்கி, தேவார இசையும் தெளிந்த சமய நெறிகளும் தினமும் விரிந்திருக்க வேண்டிய இடத்தில், கோவணத்தையே அறியாது காம நெறி பரப்பும் கழிசடைப் பாவி நாக்கையும் நச்சு வாயையும் பரப்பி ஆட்சி செய்ய யத்தனித்தால், தெய்வத்திரு ஞான சம்பந்தரின் அருள் வீச்சு அமைதி காக்குமா,என்ன?

மூடர்களும் முட்டாள்களும் தினமும் ஆலாபணை செய்ய. பிடதியில் வீற்றிருந்த வாழ்வு போதாது என்று, மதுரை ஆதீனத்தைக் கபளீகரம் செய்ய வந்த போலிப் பீடாதிபதியான நித்தி, இப்போது சொந்த இடத்திலும் இருக்க முடியாது; சுரண்ட வந்த இடத்திலும் இருக்க முடியாது தலை மறைவாக ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,
பார்த்தீர்களா?.

’அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்ட’கதியில் இந்தப் போலி சமயவாதிகள் தங்கள் சொந்த இடத்திலும் இனி தலை காட்ட முடியாமல் இன்று நட்டாற்றில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லி மூழ்கித்தான் ஆக வேண்டும்.

’மதுரையையே மாற்றுவேன்’ என்று வாய்ச் சவடால் விட்டு, பழம் பெருமை வாய்ந்த திருஞான சம்பந்தர் பீடத்தை ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக ஒரு மாதத்துக்குள் மாற்றி, தெய்வீக நெறிகளைத் தெருவில் எறிந்த நித்தி, அங்கே அசிங்கங்களை அரங்கேற்றத் தொடங்கியதை நாடு பார்த்தது, நல்லோர் நெஞ்சமெல்லாம் வேர்த்தது.

திடீரெனத் தன் பூர்வாசிரமப் பிடதிக்குச் சென்றாக வேண்டிய தேவை இந்த 292க்கு. ஆர்த்தியின் ரூபத்தில் அழைத்தது.

’அவ்வினைக்கு இவ்வினை’ என்றொரு பதிகத்தைப் பாடி அருளிய
பரமனின் பிள்ளை ஞானசம்பந்தரின் திருவுளம் இந்த 292க்கும் 293க்கும் சேர்த்து அவ்வினைக்கு இவ்வினையைத் தந்தது.

பிடதிக்குச் சென்ற இரு கூத்தர்களும் கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்தில், இந்தப் பிடதிப் பித்துக்குளி நித்தி தன் வாயை கட்டிக் கொள்ளாது வம்பளக்க, தெய்வம் பத்திரிகையாளர் வடித்தில் வாய்க்கரிசி போட்டிருக்கிறது.

தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர்கள் தட்டிக் கேட்காத கேள்வியை, தமிழக அரசு தட்டி எழுப்பாத தூசியை கர்நாடகப் பத்திரிகையாளர்கள் தட்டி எழுப்பி விட்டனர்.

விளைவு,களேபரம் ஆகி விட்டது.

“தலை தப்பினால் போதும்,இனி பிடதியும் வேண்டாம்; பேராசைப் பட்ட மதுரையும் வேண்டாம்” என எங்கோ ஓடிப் போய் விட்டார் 293. நித்தியின் அடியாட்கள் பலர் இப்போது கர்நாடகக் காவல் துறையின் பிடியில்.

மதுரையை ஆக்கிரமிக்க இங்கேயுள்ள ஆளுவோரின் பின் பலத்தால் வந்தவன்பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிகின்றான்;அவனது பிடதி ஆசிரமம் இப்போது கர்நாடக அரசால் பிடுங்கப்படுகிறது.

இங்கோ அவனை அரவணைத்து அவனது ஆட்டங்களுக்கெல்லாம் காவல் துறை காவல் தருகிறது.  

கர்நாடக  அரசின் கண் விழிப்பு ;நமது அரசுக்கு இல்லை. 
தமிழர்கள் விழித்துக் கொண்டார்களா என்பது இப்போது தெரியாது.

தெய்வ நீதியை உணராமல் போன அரசும் அதில் சம்பந்தப்பட்டோரும் அதன் எதிர் விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.

இதை நாம் சொல்லவில்லை;

“இறைவனின் சித்தம் திரும்பி விட்டால் பொய் வைத்தமாடங்கள் எங்கே? மாமன்னர் ஆட்சி எங்கே? இது காணாது காண் கண் மயக்கேஎன்கிறார் பட்டினத்து அடிகளார்.

293 நித்தி தலை மறைவான சூழ்நிலையில் தலையில் அடித்துக் கொண்டு அரற்றுகின்றார் 292 இப்போது.

மறுபடியும் தலை மறைவாகி விட்ட இந்த மாய்மாலப் போக வியாபாரி நித்தியின் கர்ம வினைகளின் கடுமையை இப்போதாவது உணர்ந்து கொண்டு ”அவர் என்னுடைய வாரிசுப் பதவிக்குத் தகுதியற்றவர்” என்று நான்காவது முறையாக வாய் கூசாமல் அறிக்கை விடுவது எப்படி?” என்று 292 மதுரை ஆதீனம் ஆலோசிக்கின்ற நேரம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,
’மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்’ என்றும் அதில் ‘நீதி நிச்சயம் வெல்லும்’ என்றும் ஆரம்பத்திலேயே எழுதினேன்.

என் எழுத்து பழுதாகவில்லை.

அடிக்கடிச் சொல்லிக் கொள்வேன்:
”நான் பொய்யைப் புகல்வதில்லை;புகல்வது பொய்யாவதுமில்லை”என்று.

மதுரை ஆதீனம் என்பது சிவன் சொத்துத்தான்;

அதை நாசம் செய்பவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும்
குல நாசம் ஆகிப் போவார்கள்.

ஆம்.
மதுரை ஆதீனத்தை மீட்கத் தமிழர்கள் ஒன்றும் மெனக் கெட வேண்டாம்!

அதை கன்னடத்துச் சகோதர்களே மீட்டுத் தருவார்கள்.

இவண்,
கிருஷ்ணன்பாலா
9.6.2012

Tuesday, June 5, 2012

செப்புப் பட்டயம்


ன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.                       
                
எனது வலைப் பதிவுகளின்
வாசகர்களாகப்
பல்லாயிரக் கணக்கானவர்கள்
உலகெங்கும் பரவி இருப்பதில்
எனதுள்ளம் மகிழ்கின்றது.

எனது எழுத்துக்கள்
பயன் கருதாப் படைப்புக்கள்.

ஆயினும்
அதன் பயன்
படிப்பவர்களிடையே
பரவ வேண்டும் என்னும்
ஏக்கம் கொண்டவை.

அந்த ஏக்கத்தின் தாக்கம் போல்
ஒரு மின்னஞ்சல்.

கடல்சார் ஆபரணப் பொருட்கள் ஆய்வில்
முனைவர் பட்டத்துக்கு முனைந்துள்ள
சகோதரி ஒருவர்
அனுப்பியிருந்த அஞ்சல் அது.

என்னுடைய படைப்புக்கள்
அவருக்கும் அவரது நண்பர்களுக்கும்
சிந்தனைத் தூண்டல் செய்யும்
காரணியாய் இருக்கின்றதென்று
கரம் குவிக்கின்றார் அதில்.

நான்
சிரம் நிமிர்கின்றேன்:
செம்மாந்த தமிழுக்கு
சிறப்பான வாசகர்களிடமிருந்து
கிடைத்த ‘செப்புப் பட்டயம்என.

தமிழ் எனும் பெருங்கடலில்
நான் ஓர் திமிங்கலமாய்த்
திரிகின்றவன்.;

இவர்
கடல்சார் ஆபரணப் பொருட்கள் குறித்துச்
செய்து வரும் ஆய்வுகளில்
சிக்கி இருக்கும் பொருள்;
இந்தத் திமிங்கலத்தின்
மூச்சுக் காற்று போலும்!

எனக்கு மின்னஞ்சல்
செய்தவருக்கு
நான் பதில் அஞ்சல் செய்தேன்.

எனது நண்பர்கள்
அனைவருக்கும்
அதைப் பகிர்ந்து
இங்கே
பதிவு அஞ்சலும் செய்கின்றேன்
அது இது:
-------------
அன்புக்குரிய சகோதரி,
வணக்கம்.

நாம்,
நம் தமிழை நேசித்தலும் வாசித்தலும்
நம்மை ஈன்று இவ்வுலகிற்குத் தந்த 
அன்னையை ஆராதிப்பது போல.

நமது 
சாதனைகளுக்கும்
போதனைகளுக்கும்
வித்தே தாய் மொழிதான்.

சொல்லப் போனால்,
உலகில் உள்ள மொழிகளில் 
அநேக மொழிகளுக்குத்
தமிழே தாய்.

தமிழுக்கென்று தனித் தன்மை மிக்க
தெய்வீக ஆற்றல் உண்டு.

தமிழில் படைக்கப்பட்டுள்ள
இலக்கிய- இலக்கணங்கள் போன்று
உலகில் 
வேறு எந்த மொழியிலும் 
உரைக்கப் பட்டிருக்கவில்லை;
அப்படி உரைக்கப் பட்டிருந்தால்
தமிழ் மொழியிலிருந்து 
எடுத்தாளப் பட்டவையாக 
இருக்குமே அன்றி
தனிச் சிறப்புள்ள 
ஆளுமைக் கருத்தாக இருக்க முடியாது..

ஏனெனில் 
கால வரலாறுகளைக்
கடந்து நிற்கும்,
உலகின் மூத்த குடிமக்களால்
புழங்கப்பட்டு வந்த மொழி இது..

பல லட்சம் ஆண்டுகளுக்கு 
அகத்தியனைத்
தென் பகுதிக்கு அனுப்பி
இங்கு 
பேசப்பட்டும் பாடப் பட்டும் 
வந்த மொழிக்கு
இலக்கண ஆராதனை செய்ய
ஈசன் ஆணையிட்டதாக
இயம்பப்படும் செய்திகளை
எவரும் மறுக்க முடியாது.

அத்தகைய-
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய  மூத்த குடிகள்
முழங்கிய தமிழை,

நான் 
உயிரும் உணர்வுமாய்க் கொண்டு
சொல் தோன்றச்
சுவை அமுது படைக்க 
எத்தனிக்கின்றேன்.

எனது படைப்புக்கள்
கற்றோருக்கும் கனிந்தோருக்கும்
களிப்புத் தரவும்

மற்றோருக்கு
மலர்ச்சியும் எழுச்சியும் தரவுமே
அன்னைத் தமிழின்
அடிமலர்ப் பாதம் பணிகின்றவன் நான்.

உங்களைப் போன்றோருக்கு
அது
உற்சாகம் தருகிறது
என்பதில் மகிழ்கிறேன்.

மகிழ்கிறேன் என்பதை விட-

எனது எழுத்துக்களை
எவரும் விஷய ஞானத்தோடு
விமர்சிப்பதை வரவேற்கிறேன்.

தங்கள் அன்புக்கு நன்றி.

வாழ்க.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
5.6.2012

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி இது:
--------------------------------------------------------------------

From: A. V. GUNA <.................>
Date: 2012/6/5
Subject:
To: krishnanbalaa@gmail.com

ஐயா மரியாதைக்குரியவரே !

KVG யில் இருந்து ஒரு சிறு பெண் எழுதுகிறேன் , வணக்கம் !
தவறுகள் இருப்பின், தயை செய்து மன்னியுங்கள் !

எனது பெயர் குணசுந்தரி ...
பிறந்த ஊர் நாமக்கல் / தம்மம்பட்டி
புரியும் செயல் ஆராய்ச்சி

தங்களின் 'உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்'
எங்களின்  (எமக்கும் என் தோழிக்கும்) மிக பிடித்த வலைத்தலம்!

நன்றி நவில்கிறேன் ஐயா !

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் !
கரம் உயர்த்தி ஆசிர்வதியுங்கள் அய்யா . . .

தங்களின் தமிழ் ஆர்வம்
எங்களுக்கு வழிகாட்டி . . .

உங்களின் பதில் உரைக்காக
உள்ளன்போடு காத்திருக்கிறேன் . . .

உங்கள் ஆசியுடன்

குணா . . .
-- 
With Warm Regards
V. GUNASUNDARI
Doctoral Research Scholar
Marine Ornamental Culture Unit
CASMB, Faculty of Marine Sciences
PortoNovo – 608 502
Tamil Nadu,INDIA