Monday, June 30, 2014

மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி!



றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான்.

பிரிட்டிஷ் ராஜ்யம் உலகின் பரந்த பகுதிகளை எல்லாம் கைப்பற்றிய பின்னர்தான் அந்தந்த நாடுகளின் பழமையும் பூர்வ வரலாறுகளும் ஆராயப்பட்டன.

மேலை நாட்டு அறிவியலாளர்கள் ஒருங்கிணைத்த நவீன கல்வி முறையும் அறிவியல் சாதனங்களும் பண்டைய உலகின் மானுடவியலையும் பூர்வீக வரலாற்று உண்மைகளையும் ஆராய்ந்து வெளிக் கொணர வழி வகுத்தன.

பிரிட்டிஷ் பேரரசு உலகெங்கும் விரிவடைந்த போதே அந்தப் பேரரசின் மதக் கோட்பாடான கிறிஸ்துவமும் தனது ஆதிக்கத்தை அந்தந்த நாடுகளில் வேரூன்றத் தொடங்கி விட்டது.

‘கிறிஸ்துவ மார்க்கம் வலிமையாகப் பரவ வேண்டும்’ என்றால்  ’அந்தந்த நாடுகளில் உள்ள  கலாச்சாரப்பெருமைகள் மழுங்கடிக்கப்பட வேண்டும்’ என்ற சூத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர் பிரிட்டீஷ் ஆட்சியினர்.

அதன் மூலம் மக்கள் தங்களுடைய  கலாச்சாரச் சுதந்திரத்துக்காகப் பிரிட்டீஷ் அரசை எதிர்க்காமல் இருக்கவும் தங்கள் மதச் சின்னங்களைக் காட்டிப் புரட்சி செய்யாதிருக்கவும் பார்த்துக் கொண்டனர்.

மாறாக, பிரமாண்டமான சர்ச்சுகளையும் கல்விச் சாலைகளையும் எழுப்பினர்.

இதன் மூலம் பர்மா,சயாம் என்கின்ற தாய்லாந்து, கம்போடியா மற்றும் கொரியப் பகுதிகள்  தனித்தனி நாடுகளாகப் பாவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்குரிய மொழியும் வழிபாட்டு முறையும் அரசின் ஆதரவின்றி அனாதைகளாக்கப் பட்டன.

இப்படித்தான் காலப்போக்கில் இந்தியப் பரந்த கண்டத்தின் செழுமையும் கலாசாரப் பழமையும் சிதைந்து போய் முழுக்க முழுக்க பிரிட்டீஷாரின் சட்டமும் சம்பிரதாயங்களும்  ஆளுமை பெற்றன.

நமது சொந்தப் பூமியின் சொத்துக்கள் சுரண்டப்பட்டு வறுமையும் வாழ்வியல் தேவைகளும் மிஞ்சிப்போய்ப் பாழ்பட்டு நின்ற பாரத தேசத்தின் பரந்து பட்ட பெருமைகளும்  வரலாற்று உண்மைகளும் சிறுத்துப்போயின.

அப்படிச் சிறுத்து போன உண்மைகளின் சின்னமாக, மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக இருப்பதுதான் இன்றைய கம்போடியாவில்  உள்ள ‘அங்கோர்வாட்’ ஆலயம்.

அதன் பிரமாண்டத் தோற்றத்தைத்தான் இங்கே மேலே புகைப்படமாகக் காண்கிறீர்கள்.

முழுக்க முழுக்க இந்திய வழிபாட்டு முறையின் இறைமைச் சின்னமாகப் பண்டைய நாளில் அமைக்கப்பட்டதுதான் இந்த ’அங்கோர் வாட்’ ஆலயம்.

முன்பொருகாலத்தில் ’ஆசியா முழுமைக்கும் இந்தியப் பண்பாடும் கலாசாரமும்தான் பரவி இருந்தன’ என்பதற்குச் சான்று:  இந்த அங்கோர்வாட் ஆலயம்.

‘தொடர்பே இல்லாத ஒரு தேசத்தில் இந்தியப் பாரம்பரியத்தின் பிரமாண்டக் கோவில் பிரசித்தி பெற்றிருந்தது என்பது சரித்திரத்தின் சங்கிலித் தொடர்களை எல்லாம் நாம் அறுத்தெறிந்து வாழ்கின்றோம்’ என்பதற்கு மிகப்பெரும் சான்றல்லவா?

யுனெஸ்கோ ( UNESCO) வின் பார்வை பட்டு உலகத்தாரின் உணர்வுகளை ஈர்க்கின்ற இப்பழம் பெரும் ஆலயத்தைப் பற்றிய உண்மைகள் 90 சதம்கூட வெளித் தெரியவில்லை.

வெறும் பழமையின் பொக்கிஷமாக மட்டுமே இக்கோவில் யுனெஸ்கோவுக்குத் தெரிந்திருக்கிறதே தவிர, அதன் முழு ஆராய்ச்சியும் அதுபற்றிய அறிவும் அவர்களுக்குத் தெரியவே இல்லை.

இந்த அங்கோர்வாட் கோவிலைப்பற்றி வெளியான தகவல்களின் சுருக்கம் இது:

// உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் ’‎கம்போடியா‬’ நாட்டில் உள்ள “‪‎அங்கோர்‬ ‪‎வாட்‬” ஆகும்.  உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். 

இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. 


ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன், இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்தப் பிரம்மாண்ட கோயிலை இங்கு  எழுப்பினான். 

இந்த கோயிலிலை உருவாக்கும்  ஆரம்பக்கட்டப் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின.  இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தன.

சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள  இந்தக் கோவில் சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது.  இதை ஒரு கலைப் பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடிக்கபட்டுள்ளன. இந்த கோயிலின் ஒரு பக்கச் சுற்று சுவரே  ‘3.6 கிலோமீட்டர்கள் ‘என்றால் அதன் பிரமாண்டத்தை  யூகித்துக் கொள்ளலாம்.

சூரியவர்மன் இறந்தபின், ஆட்சிக்கு வந்த ஆறாம் ஜெயவர்மன் காலத்தில்   “புத்த” கோயிலாக மாறிய, இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐப் பொறித்துள்ளது. 

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால்  மக்களால் புறக்கணிக்கப்பட்டுச் சிதிலமடைந்த நிலையில்  ,1586 ஆம் ஆண்டுAntónio da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, 

அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து இக்கோவிலைப் பற்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பேசவும் எழுதவும் தொடங்கினர்.


Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 25 ஆண்டுகளில்  இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.. 


இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. //

இத் தகவல்கள் ’உலக தமிழர்கள் ஒன்று சேருவோம்’ என்ற முகநூல் பக்கத்தை ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.

நண்பர்களே,

‘இந்தியாவில் உள்ள ஆலயங்களை விட மிகப்பெரியது இது’ எனது உண்மையல்ல;  நமது திருவரங்கம்  கோவிலின் பரப்பளவைப் போன்றது எனக் கூறலாம்.

இன்றைய கம்போடியாதான் புராண காலத்து காம்போஜம்’ என்று கருதப்படுகிறது.

நமது புராண காலத்து தேசங்கள் 56 ல் இக்கோவில்  காம்போஜம் என்ற தேசத்துக்கு உரியதா அல்லது அங்கம் என்ற தேசத்துக்கு உரியதா?  என்பதை வரலாற்று ஆசிரியர்கள் கணிக்க முடியாது. யுக வரலாறுகள் மாறிப்போனபின், சரித்திரத்துக்குச் சான்று பகர யாரால்  முடியும்?

கால,வர்த்தமான உண்மைகளை ஒப்பிட்டு உணர்ந்து சொல்ல மகான்களால்தான் முடியும்.

எப்படி இருந்தாலும் அன்றைய அங்க தேசத்தின் கோவில் இது’ என்பதும் இங்குதான் கர்ணன் வழிபாடு செய்தான்   என்பதும் நமது  யூகத்தால் உணர முடியும்.(கர்ணனை த் துரியோதனன் அங்க தேசத்தின் மன்னனாக முடி சூட்டினான் என்கிறது மகாபாரதக் கதை) இப்போது கம்போடியா தேசத்தின் சொத்தாக இது மாறி இருக்கலாம்.

இந்த அங்கோர்வாட் ஆலயத்தைப் பற்றிய அரைகுறைத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு அரசன் சூர்ய வர்மன் கட்டியதாகவும் 25 ஆண்டுகள் தொடர்ந்து இதன் கட்டிடப் பணிகள் நடந்து முடிந்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.

உண்மையில் மேலே உள்ள தகவலின்படி,சூர்ய வர்மன்,ஜெய வர்மன் என்ற பெயர்கள் எல்லாம் இங்கு தமிழ் நாட்டு சேர சோழ,பாண்டிய அரசர்களின் பெயர்களாக இல்லை; குறிப்பாகப் புகழ் பெற்ற மன்னர்களின் வரிசையில் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை விடவும் பெரிதான அங்கோர்வாட் கோவில் இந்து கலாசாரத்தின் சின்னமான போதிலும் இந்துக் கலாசாரமே அற்றுப்போன இன்றைய கம்போடியாவில் இருப்பது, உலகின் எந்த
ஆராச்சியாளர்களுக்கும் ஓர் புதிர்தான்.

வரலாறுகள் மறைக்கப்பட்டதற்கும் தவறான வரலாறுகள் புகுத்தப்பட்டதற்கும் வரலாற்றையே உணராதிருப்பதற்கும் இந்த அங்கோர்வாட் உதாரணம்.

புராண காலத்தில் குறிப்பிட்டப்பட்ட அங்கம்,அவந்தி,கூர்ஜரம்,
காந்தாரம் முதலான 56 தேசங்கள் பற்றிய ஆய்வுகளை யாரும் எந்த மானுடவியலாரும் அக்கறையோடு செய்து  உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்து உலக வரைபடத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. ஆனால் பண்டைய உலகின் மொழியியலையும் கலாசாரம் மற்றும் சமூகவியலையும் அது முழுமையாகப் பிரசுரிக்கவில்லை. காரணம்,கிறித்துவத்தைப் பரப்பவும் அதன் பெருமைகளைப் போற்றவுமான  உத்திகளை  மட்டுமே இலக்காகக் கொண்டு  பிரிட்டீஷ் அரசு தன், குறுகிய ஆய்வுகள் மூலம் உண்மைகளைச் சொல்லாமல் இருப்பதுதான்.

மகாபாரத காலம் என்பது இன்றைய  சரித்திர காலத்துக்குச் சற்றே முந்தியது என்பதை வரலாறும் மானுடவியலும் அறிந்தோர்   புரிவார்கள்.

யுனெஸ்கோ இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வுகள் நடத்தி,
இந்திய இதிகாசச்  செய்திகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்தால்
அங்கோர்வாட் போன்ற வேறு தேசங்களிலும் இந்திய வழிப்பாட்டு முறைகள் எப்படி ஆட்சி கொண்டிருந்தன?’ என்ற உண்மைகளை உலகம் அறியும்.

அதற்கு அடிப்படையாகப் புராணம் கூறும் பழைய 56 தேசங்கள் எவை? அவற்றின் இன்றைய தேசப் பெயர்கள் எவை? என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இதை நமது இன்றைய நவீன உலகம் கண்டு பிடிக்குமானால்,நிச்சயம்”
உலகின் மூத்த கலாச்சாரமும் இந்தியாவினுடையதுதான். மூத்த பண்பட்ட குடிகளும் இந்தியர்தாம்” என்பதை உலகம் உணரும்.

உணர்ந்தால் இந்தியா மிகப்பெரும் போற்றுதலுக்குரிய நாடாக மதிக்கப்படும்.

உலகோர் தங்கள் பூர்வ குடிப் பெருமையில் பூரித்துப் போவார்கள்!

அதற்கு உத்தரவாதம் தரும்  சாட்சியாகத்தான்  இந்த மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக  இந்த ’அங்கோர்வாட்’ ஆலயம் திகழ்கிறது!


இவண்-
கிருஷ்ணன்பாலா
30.6.2014


Thursday, June 26, 2014

கவிதையின் கண்கள்!



ண்பர்களே,

கருத்து ஒன்றை மையமாக வைத்து அதை உரைநடையில் நேராகச் சொல்லாமல் வரிகளை  ஒடித்தும் மடித்தும் எழுதி கவிதை என்று அதற்குப் பட்டம் கட்டிப் பறக்க விடும் உத்தியை இன்றைய அச்சு ஊடகங்கள் கையாண்டு வருகின்றன.

இன்று ஊடகங்களில் அரைகுறைகளே  ஆசிரியர் குழாமில் அங்கம் வகிக்கும் அவலம் மிகுந்துள்ளதே அதற்குக் காரணம். ஊடகத்துக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் உட்பட அவர்களின் கீழ் பணிபுரியும் எவருக்கும் மொழி ஆற்றல் என்பதும் மொழியின் இலக்கணம் என்ன என்பதும் அறவே தெரிந்திருக்கவில்லை. இத்தகையோரால்தான் எழுதப்படும் கவிதைகள் தரச் சான்று பெற்றுப் பிரசுரம் அடைகின்ற துர்ப்பாக்கிய நிலை வளர்ந்து வருகிறது.

இதன் மூலம் கவிதை என்பதன் அடிப்படைக் கட்டுப்பாடுகளும் அவற்றின் ஆளுமையும் தகர்க்கப்பட்டு  இன்றைய தலை முறையினருக்குக் கவிதை என்றால் என்ன?’ என்பதே தெரியாமல் போய் விட்டது.

எதுகை மோனைகளோடும் இலக்கணச் சுத்திகளோடும் ஓசை நயங்களோடும் தட்டித்தட்டி,சிற்பிகள் வடிமைக்கும் சந்தங்களோடும் கவிதை படைக்கின்றவர்களை அந்நிய தேசத்து  ஆட்களைப்போல்  இந்தக் கத்துக்குட்டிகள் பார்க்கின்ற வினோதத்தை, வளர்த்து விட்ட அறியாமைதான் இன்றைய ஊடகங்களின் அறிவுச் சொத்துக்களாக சந்தையில் விலை போகின்றன.

இதைச்சுட்டிக் காட்டி எழுதினால்எழுத முயற்சிக்கின்றவர்களின் எண்ணச் சிறகை ஒடிக்க முயலாதீர்கள்என்று  ஒப்பாரிக் குரல்கள்தான் ஒலிக்கின்றன.

ஞானச் செருக்கும் நவில் மொழிச் சிறப்பும் கவிதையின் கண்கள்; அதைக் குருடாக்கிக் கொண்டு கவிதையை விதைக்கின்றோம்என்று  கச்சேரி நடத்தும் கூட்டத்திலிருந்து தமிழ் அன்னை கண் காணாத தூரத்தில் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இன்றைய தமிழ் அறிஞர்கள் இதைப்பற்றி வாயே திறக்காமல் வடைக்கும் பாயாசத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டு பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
26.06.2014


Thursday, June 12, 2014

பேசியது, நாக்கல்ல;இதயம்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான இந்தியப் பாராளுமன்றத்தின் குடியரசுத் தலைவரின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் இறுதியில் இன்று (11.6.2014) பிரதமர் மோதி ஆற்றிய உரை, இந்தியாவுக்குப் பொற்காலம் படைக்கும் போர்க் குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மாற்றாரும் தோற்றாரும்  மூக்கின்மீது விரல் வைத்துப் போற்றும்படியான உரை அது.

‘மோதியின் அரசு எந்த மாதிரியான செயல் திட்டங்களை அமலாக்கப்போகிறது’ என்பதை தெள்ளத் தெளிவாக அந்த உரையில் அறிவித்திருக்கிறார்.

முந்தையை காங்கிரஸ் அரசின்  முக்கியப்புள்ளிகள் மட்டுமல்ல மோதியைக் கடுமையாக எதிர்த்த முலயாம்,மம்தா, லாலுபிரசாத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் என்று ஒருவர்கூட  மூச்சு விடமுடியாதபடிச் செய்த, பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அந்த உரையிலிருந்து தொகுக்கப்பட்ட ரத்தினச் சுருக்கமான கருத்துக்கள் இவை:
  • நமது நாட்டின் அடையாளமாகிவிட்ட  ஊழலை மாற்றி         தொழில்நுட்பத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும்  முன்னுரிமை அளிக்க வேண்டும்; சர்வதேச அரங்கில் நமது தேசம் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • ஏழ்மையிலிருந்து ஏழை மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.  அதை நாம் செய்யத் தவறினால் அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
  • கிராமங்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க        வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.எனவே,கிராமங்களிலும் விவசாயத்திலும் மாற்றத்தை உண்டாக்க உறுதியாக முடிவுகள் எடுப்பேன்.
  • இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப்பாதையில்          ஒன்றுக்கொன்று போட்டியிட வேண்டும்.அதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைத்து உழைக்கவும் சிந்திக்கவும் முன் வரவேண்டும்.
  • அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்புள்ளது. எனவே அரசியலுக்காக எதிர்ப்பது என்ற கொள்கையை விட்டு விட்டு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டவும் உரிய முறையில் மக்களுக்குப் பயன் சென்றடையவும் குரல் கொடுக்கவும் முன் வர வேண்டும்.    
  • இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதன் மூலம் மற்ற நாடுகளைவிட,  இந்தியா சிறந்து விளங்க முடியும்; நாம்  செயல்படுத்தும் ஒவ்வொரு  திட்டமும் ஒவ்வொருவரின் பணியும் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • நாட்டின் விடுதலைப் போரை மக்கள் இயக்கமாக,காந்திஜி         மாற்றினார். அதேபோல் நாம், நம் நாட்டின் வளர்ச்சியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
  • ஆண்டுகளுக்குப் பிறகு காந்திஜியின் 150 ஆவது நினைவு தினத்தில் சுத்தமான சுகாதாரமான இந்தியாவை காந்திஜிக்கு நாம் அர்ப்பணிக்க நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
  •  நாட்டிற்காக உயிரைவிட இயலாவிட்டாலும் நாட்டிற்காக,          அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதை நாம் நழுவ விட்டு விடக்கூடாது.

நண்பர்களே,

பேசியிருப்பது பிரதமர் நரேந்திர மோதியின் நாக்கல்ல;இதயம்!

உண்மையான தேசப்பற்றும் மக்கள்மீது மதிப்பும் கொண்ட மாபெரும் மனிதர் இந்த தேசத்துக்குக் கிடைத்திருக்கின்றார் என்பதை பிரதமர் மோதி இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து அறிந்து கொண்டு நெகிழ்கிறோம்;மகிழ்கிறோம்!

இவை வெற்று வார்த்தைகள் அல்ல; வெற்றி வார்த்தைகள். அவை வெற்றிகரமாக மாற வேண்டும்.

மாறும் என்ற நம்பிக்கை என் போன்றோருக்கு உண்டு; மோதி அப்படி மாற்றுவார்.மாற்றிக் காட்டும் துணிவும் தைரியமும் கொண்ட தனி ஒரு தலைவன்தான் மோதி.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அவரது எண்ணங்கள் இடையூறின்றி வெற்றி பெற வேண்டும்.

அதற்கு நல்லோரும் நடுநிலையாளர்களும் நெஞ்சார வாழ்த்த வேண்டும்.

கட்சி  வேறுபாடுகளைக் கடந்து இந்த தேசத்தின் நன்மையைக் கருதுவோரெல்லாம் கைதட்டுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.6.2014

Tuesday, June 10, 2014

மதியோடு ‘மோதி’ விளையாடு!

நிருபேந்திர மிஸ்ரா
அறிவார்ந்த நண்பர்களே,

மோதியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசை எப்படியாவது விமர்சித்து,அம்மாவின் கவனத்தை அல்லது அம்மாவின் தொண்டர்கள் ஆதரவைப் பெற்று விடவேண்டும்' என்று சிலருக்குப் பிரத்தியேக ஆசை இருப்பதில் தவறில்லை.

ஆனால்-
எதற்கெடுத்தாலும் புத்திசாலித்தனமாக நுணுகி ஆராய்ந்து மோதியின்  செயல்பாட்டைக் கேலி செய்யவோ குற்றம் சுமத்தவோ முனையும் இவர்களின் முதிர்ச்சி இன்மைக்கு முகவரி தருவதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

உதாரணமாக-

நிருபேந்திர மிஸ்ரா பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி அ.தி.மு.க  தீவிரவாதப் பதிவர்கள் குட்டிக் காட்டும்  குமுறல் இது:

//நிருபேந்திர மிஸ்ரா, 2G விவகாரத்தின் முக்கிய கதாபாத்திரம்....தயாநிதி தொலை தொடர்பு மந்திரியாக இருந்தபோது இவர் தான் அவருடைய செயலராக இருந்து 2G ஊழலை ஆரம்பித்தவர்... .
பின்னர் ராசா மந்திரியாக இருந்த போது ’டிராய்’ தலைவராக இருந்தவர்... 
டிராய் பதவியில் இருந்து ஓய்வுபெற்றதோடு அவருக்குத்  திரும்பவும் மத்திய அரசு பதவியில் இடம் தரக் கூடாது என்ற சட்ட ஆணையை பிஜேபி திருத்தி இவரைப் பிரதமரின் செயலாளராக நியமித்துள்ளது ....//

என்று குறிப்பிட்டு ‘இது நல்ல ஆரம்பமாக இருக்கிறதே’ என்ற கிண்டலைப் பதிப்பித்துக் ’காலரைத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

அதுசரி.
இதில் புதைந்துள்ள அரசியல் சாதுர்யத்தை இவர்கள் புரிந்து கொண்டால் அவர்களுடைய கிண்டல் அவர்களுக்கே சுவையான சுண்டலாக மாறிவிடும்.

எப்படி?நேர்மை மிக்க அதிகாரி என்று ’நிருபேந்திர மிஸ்ராவுக்கு டெல்லி அதிகார வட்டத்தில் மதிப்புண்டு. இதன் அடிப்படையில் இந்த ஊழல்களின் மூலாதாரத்தை அறிந்தவர் இவர் என்பதால் அந்த ஊழல்களை எளிதில் அலசுகின்ற வாய்ப்புக்காக இவரை ஏன் தனது ஆலோசகராக பிரதமர் மோதி
வைத்துக் கொள்ளக் கூடாது? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

சாணக்கியத்தனம் என்பது எதிரியுடன்  குலாவுவதோடு நின்று விடுவதில்லையே!

எதற்கும் மோதியின் விமர்சகர்கள்,மதியோடு ’மோதி’ விளையாடக் கற்றுக் கொள்வது நல்லது!

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.6.2014

Friday, June 6, 2014

ஆண்டவன் பிரதிநிதி,மோதி!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ஒரு தேசத்தை ஆளுகின்றவர்களின் கடமை என்ன? என்பதை நம் தேசத்தின் இளைய தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது; மூத்த குடிமக்களுக்கோ மரத்துப்போயிருந்தது.

ஆளுகின்றவர்களுக்கோ ’தாங்கள் எப்படி வேண்டுமானாலும் அதிகாரம்  செய்யத்தான் மக்கள்  வாக்களித்திருக்கிறார்கள்’என்ற மமதை.

அவர்கள் இந்த  நாட்டைச் சுரண்டி ஊழல் மலிந்த தேசமாய், குட்டிச் சுவராய் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இதை எதிர்த்து-
’மக்களுக்கான நல்லாட்சியும் நாட்டுக்கு மரியாதையும் ஏற்படுத்துவேன்’ என்று முழங்கியவரைக் கேலியும் கிண்டலும் செய்தனர்.

தனி ஒரு மனிதனாக வீறு கொண்டெழுந்த அவர், ஆட்சியின் தலைவனாக வந்து விடக்  கூடாது’ என்பதில் அவர்கள் அனைவருமே ஒத்தக் கருத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் ஒவ்வொருவரும் பேராசைக் கொண்ட பேயாய்த் திரிந்தனர்.

’அந்தத் தனிமனிதன் கடவுளின் பிரதிநிதி’ என்பதறியாது, பதவிப் பித்துக் கொண்டு அவர்மீது பல்முனைத்தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

“பரித்ரா னாய ஸாது நாம்:
விநா ஸாய ச துஷ்க்ருதாம்;
தர்ம ஸம் ஸ்தாப னார்த்தாய:
ஸம்ப வாமி யுகே யுகே”

என்று  கீதையில் சொன்ன கண்ணனின் வார்த்தைகள் இவர்களுக்கு மறந்து போயிருந்ததால் அவர்களால் நாட்டில்  அக்கிரமங்களும் அநியாயங்களும் மலிந்து துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் தோள்தட்டிக் கொண்டிருந்தார்கள்.

’பரமாத்மா,  நரேந்திர மோதியின் வடிவிலும் வருவான்’ என்பதை ஏனோ இவர்கள் நம்பாதிருந்தனர்.

நல்லவர்களைக் காக்கவும்
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும்
உரிய நேரத்தில் நான் அவதரிக்கின்றேன்’என்று சொன்னவன்
மோதியாக முன்னெழுந்து நின்றான்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுப் பின் ஆஷாடபூதிகளிடம் குற்றுயிரும் கொலை உயிருமாய்ப் போய்க் கொண்டிருந்த இந்த தேசம், இப்போதுதான் மோதியால்  மீட்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு விளங்கத் தொடங்கி, ‘நாட்டை ஆள்பவனின் நேர்மையும் கட்டுப்பாடும் முன்னுதாரணச் செயல்பாடுகளும் இதுவல்லவோ? என்று இறும்பூதெய்தவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

’நாட்டை ஆள்பவன் அரசன்;அந்த அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்கிறது நீதி நெறி சாத்திரம்.

இதுவரை சாத்தான்கள் ஆண்ட தேசமாய் இருந்த இந்தியா,இனி ஆண்டவனின் பிரதிநிதி ஆளுகின்ற நாடாய் அவதானித்துள்ளது.

சண்டாளர்களுக்கும் சண்டாளத் தனங்களுக்கும் இனி இந்தியாவில்  இடம்  இருக்கக்கூடாது. இதற்காகச் சாதுவாய் இராமல் சண்ட மாருதமாய் மாறவும்  மோதி தயங்க மாட்டார்’ என்பதன் அறிகுறிகள் தோன்றியுள்ளன.

கடந்த ஒருவார காலத்தில் ஒவ்வொரு நாளும் மோதி எடுத்து வரும் நடவடிக்கைகளும் அவரது அறிவிப்புக்களும் இதைத்தான் அடையாளப்படுகின்றன.

”வலிமை கொண்ட தோளினாய் வா, வா, வா!’
என்று
அமரகவி பாரதி பாடிய புதிய பாரதத்தவனை
வாழ்த்துவதோடல்லாமல், தோள் கொடுக்கவும்
நாம் ஒன்றுபடுவோம், நண்பர்களே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.6.2014