Monday, September 27, 2010

எழுதுகிறேன்….. (புதிய தொடர்-1)

அறிவார்ந்த நண்பர்களே,


வணக்கம்.
’முகநூல்’FACCE BOOK- எனக்கு நல்ல நண்பர்களை ஏராளமாகத் தந்து வருகிறது.


பத்திரிகைத் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள்.அவர்களில் எத்தனையோ பேர்,என்னைத் தங்கள் பத்திரிகையில் எழுத வற்புறுத்திய போதும் நான்,வனவாசம் கொண்டிருப்பதில் விருப்புள்ளவனாகவே தொடர்ந்தேன்.


மவுனம் கொண்டு பல ஆண்டுகள் இருந்த விரதம் இப்போது முடிந்து விட்டது போலும். ஏனெனில், நான் தொடர்ந்து மவுனத்தைக் கடைப்பிடிக்க விரும்பினாலும்,பேச வைக்கும் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போகும் மனோ நிலை கடந்த காலங்களில் இல்லாதிருந்தது; இப்போது அது,கழன்று விட்டது.


நீண்ட நாட்களாகப் பத்திரிகைகளில் எழுதுகின்ற வாய்ப்பைத் தவிர்த்துக் கொண்டு வந்த நான்,நண்பர்களின் நட்பு வேண்டலும்; நிறைய எழுத வேண்டும் என்ற ‘சமூகம் சார்ந்த அக்கறை’யின் தூண்டலும் சிலர் ’எழுத்து என்று சொல்லிக் கொண்டு’ எழுதுகின்ற பாங்கின் சீண்டலுமாகச் சேர,இப்போது நிறைய எழுத வேண்டும் என்பதைத் தீர்மானம்போட்டுக் கொண்டு, அதை’நிறைவேற்றுவது’என்று முடிவெடுத்து விட்டேன்.


நண்பர்கள் பலர் எப்போதோ இதை வழிமொழிந்தும் விட்டார்கள்.


தமிழன்னை,பாவம். நல்ல எழுத்துக்கள் பற்றாமல்,தாகத்தால் தவித்துக் கொண்டிருகின்றாள். என் கடன், அவள் பொருட்டு எழுதிப் பணி செய்து கிடப்பதே!


நண்பர்களே,
முகநூலில் நான் என்னை இணைத்துக் கொண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து விட்டன.ஆரம்பத்தில், இந்த முக நூலின் பயன்பாடு பற்றி எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது;உண்மை. காரணம், நவீன காலத்து இளைஞர், இளைஞிகளின் எழுத்துக்களும் அவர்களின் கருத்துப் பரிவர்த்தனையும் சற்றே என்னைத் திகைக்க வைத்தன.


“இது என்ன தமிழ்? என்ன மாதிரியான தகவல் தொடர்பு?” என்று மனம் கவலையுற்றது.அதே சமயம்,சிறந்த படைப்பாளிகளின் கருத்துப் படையல்களும் எண்ணப் பரிமாற்றங்களும் எழுத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலேயே நண்பர்களாகி அளவளாவிக் கொள்வதையும் புரிந்துகொண்ட பிறகே, ’ஓ….நல்லதைச் சொல்லவும் பரப்பவும் நாம் இதை ஓர் காரணியாகப் பயன் படுத்திட முடியும்;பயன் படுத்துவது’ என்ற முடிவுக்கு வந்தேன்.


அதன் பிறகே முக நூலில் (FacceBook) இணைந்ததுடன், இந்த ‘உலகத் தமிழர் மையம்’ என்ற வலைத் தளத்தைக் கணினித் தமிழ் வாசகர்களுக்காகவும் உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்காகவும் தொடங்கினேன். (காண்க:”இது உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்’ பதிவு நாள்;வியாழன்,8,ஜூலைத் திங்கள்,2010)


தொடங்கி, சில வாரங்களில் இவ் வலைத் தளத்தை வண்ண மயமாகவும் எண்ணமயமாகவும் மாற்றி அமைத்தேன்.


கடந்த 7,8 வாரங்களில் இதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,280-ஐத் தாண்டியிருப்பதுடன்,நாளொன்றுக்கு சராசரி 25 பார்வையாளர்கள் வீதம் விருந்தினர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிந்து கொள்வதிலும் பெருமைப் படுகின்றேன்.
இந்தியாவுக்கு வெளியே, இதே எண்ணிக்கையில் வாசகர்கள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.


யு.எஸ்.,கனடா,அர்ஜண்டினா,நெதர்லாந்து,நார்வே,பிரிட்டன்,ஃப்ரான்ஸ்,சவூதி அரேபியா,ஓமன்,அரபு எமிரேட்ஸ்,குவைத்,ஸ்ரீ லங்கா,மலேஷியா,சிங்கப்பூர் முதலான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து இந்த வலைத் தள விருந்தினர்களாக இருந்து வருவதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. இவர்களில் பெரும் பாலோர் முக நூல் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள்.


இந்த‘முகநூல்’ என்னும் அற்புதமான அறிவியல் காரணியை, நாம் நல்ல விஷயங்களுக்காகப் பயன் படுத்த வேண்டும்’ என்பதில் நான் உறுதியான கொள்கையுடையவன்.


இதை வலியுறுத்தி ‘இணைய தளம்: ஓர் எச்சரிக்கை’ என்று ஓர் கவிதை மடலை ‘முகநூல்’ வழியாக எழுதியிருந்ததுடன், இந்த வலைத் தளத்திலும்,படிக்கின்ற அனைவருக்குமாகப் பதிப்பித்து இருக்கிறேன்.


ஒரு கவிதை வடிவில்–குறிப்பாக,மரபுக் கவிதை வடிவில் அமைந்த மடல் இது. எளிய வார்த்தைகளால் அமைக்கப்பட்ட இதன் கருத்தையும், சந்தங்களையும் பலரும் விரும்பி வரவேற்றதுடன் நிறையப் புதிய நண்பர்களும் அறிமுகம் ஆகி வருகின்றனர்.


தமிழுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் உரிய வகையில் நாம், நமது கருத்துக்களை எழுதுவதும் பரப்புவதும்,வாதிப்பதுமே ஏற்ற மரபாகவும்,இலக்கண வரம்பாகவும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களோடு நட்புறவு கொள்கின்ற நாகரீகமாகவும் இருக்க முடியும்.இதற்கு மாறானவை எல்லாம் தமிழ் உணர்வோடு சிறிது சிறிதாய் நஞ்சு கலக்கின்ற வஞ்சகக் குணம் கொண்டவையே ஆகும்.


’கற்றாரும் கற்பிப்பாரும்;கற்றுக் கொள்ள ஆர்வம் உடையாரும் இதைக் கருத்தில் கொண்டு எழுதுவதும் படிப்பதுமாக இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்’அதுதான் நாம் ‘நற்றமிழர்’ என்பதற்கும் ‘நல்லொழுக்கச் சிந்தனையாளர்’ என்பதற்குமான சான்று.


சில நாட்களுக்கு முன்பு, நல்ல படைப்பு திறன் உள்ள ஒரு முக நூல்,நண்பர்,தனது முகநூல் பக்கத்தில்,ஒரு பாவையின் அரை நிர்வாணப் படத்தைப் பதிவு செய்து, அதைப் பற்றி ’கவிதையில் சொல்லுங்கள்’ என்று பலருக்கும் அனுப்பியிருந்தார்.


எனக்கு இது பெரிய வருத்ததையும் சற்றே சினத்தையும் உருவாக்கிற்று.
எத்தனையோ பேர்,எத்தனையோ அருவருப்பான விஷயங்களை எல்லாம் தங்கள் அறிவு(?)ப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக,எதை எதையோ எழுதி, கவிதை என்றும்,புதுமைக் கருத்து என்றும் பெருமை கொண்டாடி வருகிறார்கள்.


அவர்களோடு வாதாடவும்,தீதாடவும் எனக்கு விருப்பம் இல்லை;ஆனால்,இந்த நண்பர், நல்ல விஷயங்களை புதுமைத் தரத்தோடு எழுதக் கூடியவர்,திடீரென்று இப்படியொரு படத்தைப் பதிப்பித்து எனது முகநூல் பக்கத்துக்கும் அனுப்பி இருக்கிறாரே’என,என்னுள்ளே ஒரு கேள்வித் தாக்கம்.உடனே,அது பற்றிய விமர்சனத்தை அவருடைய‘முகநூல்’குறிப்புக்கு அனுப்பினேன்.


மேற்குறித்த ஆபாசமான அரை நிர்வாணப் படப் பதிவைக் கண்டித்து,
நான் எழுதிய கவிமடலை இங்கே இந்த ‘உலகத் தமிழர் மையத்தின் ’வாசகப் பெருமக்களுக்கும் அப்படியே பதிக்கின்றேன்,படியுங்கள்;


அந்த நண்பர்,அப்படியொரு அரை நிர்வாணப் பாவையின் படத்தைப் பதிவு செய்து அதன் கீழ் ஒரு கவிதை போன்ற வாசகத்தை எழுதிப் பார்ப்பவர்களை எழுதும்படித் தூண்டுகிறார் இப்படி:


ஓவிய மங்கைகளை
கவிதை மழையால்
நனையச் செய்யுங்கள்;
ஓவியம் நனையாமல்..…


நான் கேட்டது இப்படி:


தேவையா,இப் பா(ர்)வை?


கவிதைவரக் காரணங்கள்;இன்னதென்று
காட்டுவது சாத்தியமே இல்லை;ஆங்கு
கவிபடைக்கும் பேர்கள்எலாம் கவிஞர் என்று
கதைத்து விட்டால் பாரதியும் கவிஞனில்லை!


படுக்கைதனில் ஓர் பாவை உடுக்கை செய
பாவம்,அவள் உடுப்புக்களைப் போடுவதை
வெடுக்கெனவே வரைந்து அதைப் பதிவு செய்து
விளக்கங்கள் எழுதும்படிச் சொல்லுகின்ற-


பண்புதனை யார்,உமக்குக் கற்றுரைத்தார்?
பச்சை,மஞ்சள் நிறமெடுத்து எழுதி;இதைப்
புண்படுத்தும் பக்கமென ஆக்க வேண்டாம்;
புறையோடும் முகநூலாய் மாற்றவேண்டாம்!


’அன்பு (பெயர் குறிப்பிடல் தவிர்ப்பு);அறிஞன்‘என்று
அறிந்திருந்தோர் வெட்கும்படி மாறிடாதீர்
இன்னமுதச் சுவைபலவும் இருக்க; இங்கு
இல்லாத கசப்பெடுத்து எழுதலாமோ?


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா / 26.9.2010


நண்பர்களே,
இதில் வியப்பு என்னவென்றால், அந்தப் படத்தைப் பார்த்து மயங்கியும் புளகாங்கிதம் உற்றும் பாராட்டி எழுதினவர்களே அதிகம்; அதைக் கண்டித்து எழுதுவோர் ஒருவர்கூட இதுவரை இல்லை. (இனிமேல் எழுதுவார்களோ, அல்லது இதில் நமக்கு ஏன் வம்பு? என ஒதுங்கியிருப்பார்களோ அறியேன்)


ஆனால், எனது கெழுதகை நண்பரும்,முகநூல் ஆர்வலர்கள் பலருக்கும் தமிழ் இலக்கண ஆசானுமான தோழர் இராஜ.தியாகராஜன் மற்றும் சகோதரி நிர்மலா பொற்கொடி,நார்வே நாட்டுத் தமிழர் திரு.உதயன் ஆகியோர் எனது விமர்சனக் கவி மடலைப் பார்த்து ஆதரிப்பதாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்..


இதை ஏன் எழுதுகிறேன் என்றால், நல்லதைச் சொல்ல நாலு பேர் இருந்தால்.அதை நாலாயிரம் பேர் ஆதரித்தால்தானே,பொது வாழ்வில் நல்ல பண்புகளை நிலை நிறுத்த முயல்வோரின் முயற்சிக்குப் பக்க பலம் சேரும்?.


இம்மாதிரியான,தவறான,ஆபாசமான கருத்துக்களைப் பரப்புவதை வேடிக்கை மட்டும் பார்க்கின்ற நண்பர்களும் மறைமுகமாக அதை ஊக்குவிப்பர்களாகவே ஆகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த ‘முகநூலில்’ இந்த மாதிரியான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம்,தவறு செய்யாத,செய்யத்தெரியாத பல புதியவர்களுக்கும் இது ஓர் தூண்டதலாகி விடாதா?


இது போன்ற சிறுமைத் தனமான சிந்தனையையும்,பொது வாழ்வில் அநாகரீகத்தையும் பரப்பக் கூடியவற்றை எழுதுவோர்,தங்கள் தாய்,தந்தை, உடன் பிறந்த தமக்கை,தங்கை ஆகியோர்மட்டுமின்றி,படிப்பவர்களின்,அதை ஆதரித்து எழுதுவோரின் தாய்,தந்தை,உடன் பிறந்த தமக்கை,தங்கையரும் அவர்தம் மனைவிமார்களும் இத்தகைய நாகரீகமற்ற படங்களையும் செய்திகளையும் படிக்கிறார்கள் என்பதைக் கருதிற் கொள்ள வேண்டும்.


’சிறுமை கண்டு பொங்குவாய் வா,வா,வா…’
பாரதி எழுச்சியூட்டிப் பாடினானே?


பாரதி அன்பர்காள்,எத்தனை பேர் இதைக் கடைப் பிடிக்கிறீர்கள்? கேட்கிறேன்;சொல்லுங்கள்?


(ஏற்கனவே: இணைய தளம்: ஓர் எச்சரிக்கை’ என்று ஒரு கவி மடலைப் பதிப்பித்து இருப்பதால் இது எண்: ’2’ என்று குறிப்பிடப் படுகிறது. எண்:1-ஐப் படிக்காதவர்கள் இதே வலைத் தளத்தில் சென்று அதையும் படித்துக் கொள்ளலாம்)


இணைய தளம்: ஓர் எச்சரிக்கை-2

பொல்லாத காட்சிகளைப் பொறுக்கித் தந்து;

போய் அதிலே கருத்துரையும் எழுதச் சொல்லி,
இல்லாத கற்பனையைத் தூண்டுகின்றார்;சிலர்
இரையாகி,மெனக் கெட்டும் எழுது கின்றார்!


முக நூலைக் கருத்தோடு பயன் படுத்தி
முறையோடு மொழியறிவை வளர்ப்பதற்கும்;
தகவோடு பண்பாட்டைச் சொல்வதற்கும்
தயங்காமல்எழுதுங்கள்;அதுதான் மேன்மை!


அதை விட்டு அசிங்கத்தை எழுதுவதும்
அதில் தங்கள் திறமைகளைக் காட்டுவதும்
கதைவிட்டுக் களங்கத்தைப் பரப்புவதும்
’கறை’யாக்கும் உம் வாழ்வின் எதிர்காலத்தை!


இணையதளம் என்கின்ற கருவிதனை
எல்லோரும் பார்க்கின்றார்;அண்ணன்,தங்கை;
துணையோடு எழுதுவதாய் எண்ணங் கொண்டு
தூண்டுங்கள்,பிறர் படிக்கும் எழுத்துக்களை!


எழுதுகின்ற சுதந்திரத்தைக் கேடு செய்து
எழுதாதீர்;நண்பர்களே,திரும்பிப்பாரும்!
பழுதான சந்ததிதாம் உங்கள் பின்னே
பயிராக நின்றிடுவார்; எச்சரிக்கை!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
கவிதை எழுதிய நாள்:26.09.2010 / 4:41 மாலை
.......................................................................................................(எழுதுவேன்)

Thursday, September 23, 2010

இலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)

நண்பர்களே,


"நீரெலாஞ் சேற்று நாற்றம்;நிலமெலாங் கல்லு முள்ளும்;
ஊரெல்லாம் பட்டி தொட்டி;உண்பதோ கம்பஞ் சோறு;
பேரெல்லாம் பொம்மன் திம்மன்;பெண்களோ னாயும் பேயும்
காருலாங்கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொணாதே!"


-இது கம்பன் பாடியதாக தனிப்பாடல் திரட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.


இந்தபாடலை மேலோட்டமாகப் படித்தால்,கொங்கு நாட்டையும் அதன் மக்களையும் பற்றி மோசமாகச் சித்தரிப்பதாகத்தான் தெரிய வரும்.


நீரெலாஞ் சேற்று நாற்றம்
எங்கு பார்த்தாலும் குமட்டும் நாற்றம் வீசும் மண்ணும் சகதியும்;அதாவது மூக்கைத் துளைக்கும் நாற்றம் நிறைந்த சேற்று மண் எங்கு பார்த்தாலும் இந்த நாட்டில்.


நிலமெலாங் கல்லு முள்ளும்
கால் வைத்த இடமெல்லாம் காலை வெட்டும் கற்களும் பாதங்களைக் குத்தும் முட்களும் நிறைந்த பாதைகள்


ஊரெல்லாம் பட்டி தொட்டி:
எந்த ஊரின் பெயரைப் பார்த்தாலும் பட்டி என்றே அதிகம் முடியும் பெயர்கள் தான்.நயமான பெயர்களாக இல்லை; ஆடு மாடுகளை மேய்த்து அவற்றை மாலை நேரங்களுக்குப் பிறகு பட்டிகளில் அடைத்துக் காத்து, விடிந்ததும் மீண்டும் காடுகளுக்கு ஆநிரை மேய்க்கச் செல்லுவதையே தொழிலாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற ஊர்களின் பெயர்களில் பெரும்பாலும் பட்டி என்றே முடிவதை இன்றும் காணலாம்.’பட்டி’என்றால் நாய்’என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.


இப் பகுதி மக்கள் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர்கள்.அடிக்கடி மழை குன்றி, பட்டினியைச் சந்திப்பவர்கள். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட அரசர்கள், மக்கள் பட்டினியால் மாண்டுவிடக் கூடாது என்பதற்காகக் கஞ்சித் தொட்டிகளை ஊர் தோறும் வைத்து, தினமும் மக்கள் தஙகள் பசியைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு அத் தொட்டிகளில் கஞ்சியைக் காய்ச்சி ஊற்றி வைப்பது வழக்கம்.


இத்தகு செயல்கள் மூலம் மக்களின் பசிப் பிணியை போக்கி வருவதை அக் கால மன்னர்கள் தங்கள் அன்றாடக் கடமையாகக் கருதிச் செயல்பட்டு வந்தனர். இதன் அடையாளமாக இன்றும் பல ஊர்களில் கல்தொட்டிகள் இருப்பதைக் காணலாம்.


இந் நிலைமை, குறிப்பாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளில் நிலவி வந்திருந்தது. காரணம், இப் பகுதி பெரும்பாலும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளாகவே இருந்தது.


எனவே, எங்கு பார்த்தாலும் பட்டி என்ற பெயர்களைக் கொண்ட ஊர்களையும் அந்த ஊர்களில் கஞ்சித் தொட்டிகள் வைக்கப் பட்டதாகவும் தென்படும் நாடு,இந்தக் கொங்கு நாடு’எனக் கேலி செய்வது போல் இந்த வரிகள்.


இப் பாடலைக்ழ் கம்பன்தான் எழுதினானா அல்லது‘பாடலின் பொருளைப் பெருமைபட இவ்வுலகம் நினைவில் கொள்ள வேண்டும்’ என்பதற்காக எந்தப் பிற்காலப் புலவராவது கம்பன் பெயருக்கு இதைத் தத்தம் செய்து விட்டாரா? என்பதை இலக்கிய ஆய்வாளர்களால்கூட அறுதியிட்டு கூற முடியவில்லை.


உண்பதோ கம்பஞ்சோறு:
இந்தப் புகுதி மக்கள் வெறும் கம்பஞ் சோற்றையே உண்கிறவர்கள்’என்று வறுமையை சித்தரிக்கும் வரிகள். ஆம். இங்குதான் நெல் விளைவதில்லையே.வானம் பார்த்த பூமி விவசாயம்தானே. இம் மண்ணின் விளைபொருட்களான கம்பு,ராகி,சோளம்,வரகு இவைதானே முக்கிய உணவுப் பொருட்கள்.


உதாரணத்துக்கு-
எங்கள் தாராபுரம் பகுதியில் 1967 வரையில் கிராம மக்களின் பெரும் பகுதி உணவே ராகிக் களி,சோளத் தோசை,சோளக் கூழ்,கம்பஞ்சோறு,வரகுச் சாதம்... இவைதான். சிறுவயதில் நான் பெரும் பாலும் ராகிக் களி,கம்பஞ் சோறு மற்றும் அம்புலி எனப்படும் சோளக் கூழ் சாப்பிட்டு வளர்ந்தவன்தான். அரிசிச் சோறு சமைக்கப்படுவது என்பது வருடத்தில் வரும் முக்கியப் பண்டிகை நாட்களில் மட்டுமே.


எனவே,’கம்பஞ் சோறு;களி தின்கின்ற மக்கள்’ என்று இங்கே,அவர்களின் வறுமையைக் குறிப்பிடும் வார்த்தைகள் வெளிப்பட்டன.


பேரெல்லாம் பொம்மன் திம்மன்:
மக்களின் பெயர்கள் கூட நாகரீகமாக இல்லாமல் ‘பொம்மன்;திம்மன்’ என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெயர் ஒற்றுக்கள் பெரும்பாலும் தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் இன்று கூட சிலருக்கு இருப்பதைக் காண்கின்றோம்.


பெண்களோ னாயும் பேயும்
இப்பகுதிவாழ் பெண்கள் அழகற்றவர்களாக,பேய்களைப் போல் தலைவிரி கோலமாகத் திரிகிறவர்கள்.


காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலும் கருதொணாதே!


'இருட்டுக் கட்டிய (கார்= இருட்டு) கொங்கு நாட்டைக் கனவிலும் கூட கருதிப் பார்க்கக் கூடாது’ என்று இப் பகுதிக்கு வந்து,தான் பார்த்த,பட்ட அனுபவங்களை ஒரு பாடல் வாயிலாக வெளிப் படுத்தியதாக அந்தத்‘தனிப் பாடல் திரட்டு’நூலில் விவரிக்கப் பட்டுள்ளது.


நண்பர்களே,
குறிப்பாகக் கொங்கு மண்ணைச் சார்ந்த நண்பர்களே,இப்பாடலின் மெய்ப் பொருள் விளக்கத்தை உணர்வீர்களாயின்,மிக்க பெருமை கொள்வீர்கள்.


“ஓ..நான் இத்தைகைய மண்ணில் பிறந்து இங்கு வந்திருக்கிறேன்” என்று நீங்கள் செல்லும் ஊர்களின் நண்பர்களிடம் எல்லாம் சொல்லிப் பெருமைப் படும் வகையில் இதன் மெய்ப் பொருள் விளக்கம் இருக்கிறது.


இதோ இப் பாடலின் மெய்ப் பொருள் விளக்கம்:
ஏதோ ஒரு காரணத்துக்காக வழிப் பயணமாக கொங்கு நாட்டின் பகுதிக்கு வந்து சேர்கிறான் கம்பன்.அவன்,சோழ நாட்டில் அரசனுக்கு இணையான புகழ்,மரியாதை எல்லாம் பெற்றுத் திகழ்பவன்.ஏன்,அரசனே ஒடுங்கி மரியாதை செலுத்தும் அளவுக்கு அவனுடைய தமிழ்ப் புலமையும் சிந்தனைகளும் அந்த ராஜ சபையில் பேசப் பட்டு வந்திருந்தன.


அக் காலத்தில்,புலவர்கள் என்றாலே,ஊர் ஊராகப் பயணம் செய்து வருவதும்,அவர்கள் எங்கு சென்றாலும் அவ்வூர்ப் பெரியவர்கள் மூலம்‘புலவர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்’ என்ற செய்தி, ஊர்ச் செய்தியாக அறிவிக்கப்பட்டு,ஊர் மக்கள் எல்லோரும் கூடி அப் புலவர் பெருமானை வரவேற்பதும்,அந்த ஊரில் வாழும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பரிசுப் பொருட்களை வழங்கி,அப் புலவர் பெருமானிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்து பெருமைகொள்வதும் ஓர் மரபாகப் பின்பற்றப் பட்டு வந்தது.


புலவர் சென்று வரும் ஊர்களின் எண்ணிக்கை கூடக்கூடப் புலவரின் மதிப்பும் கூடி நிற்கும்.‘பொது அறிவும் உலக ஞானமும் பொருந்தியிருப்பவர் புலவர்’ என்பது இதனால் அன்றோ மெய்ப்பிக்கபடும்?


அவ்வாறு,இத்தகைய வழக்கத்தின் மாண்பாக, கொங்கு நாட்டுக்கு வந்த கம்பனுக்கு,இப்பகுதி மக்கள்,இவர் பெருமைகளைத் தெரிந்து கொண்டு உரிய வரவேற்போ,மரியாதையோ செலுத்தவில்லை.


பயணக் களைப்பும் பசியுமாக இருந்த கம்பன் பார்த்தான்,"ச்சே,என்ன நாடு இது..மரியாதை தெரியாத மக்கள்..இவர்கள் ஊரும் பேரும்...” என்ற எரிச்சலோடு ஒரு சத்திரத்தில் அமர்ந்தபடி தன் சிந்தனையை ஓட விட்டான்.


அச் சமயம், அங்கே வந்த அந்தப் பகுதி மன்னனின் பிரதிநிதிகள் புலவர் போல் தோற்றமளிக்கும் இவரிடம் பேச்சுக் கொடுத்தனர்.(அப்பொதெல்லாம் ஒரு ஊருக்கு யாராவது புதியவர்கள் வந்தால்,அவர்கள் யார்,எந்த நோக்கத்துக்காக அங்கு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் நயமாகப் பேச்சுக் கொடுத்து உண்மையைக் கரந்து கொள்ளும் திறன் உடையோர் மன்னரின் பிரதி நிதிகளாக
இருப்பது,அவர்கள் நாட்டு நடப்புக்களை உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டவர்கள் ஆதலால்,அதன்பொருட்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம். இவர்கள் விசுவாசம் மிகுந்த ஒற்றர்களாக அரசனால் நியமிக்கப்பட்டிருப்பது அக்காலத்திய நடைமுறை)


கம்பனின் எரிச்சல்,பாட்டாக வெளிப் பட்டது.அவர்களிடமே இந்தப் பாட்டைச் சொன்னான்.


வந்தவர்களுக்கு நிலைமை புரிந்து விட்டது!


“இவர் மிகப் பெரும் புலவர். இப்பேர்ப் பட்டவரிடம் நம் நாடு சாபம் அல்லவா பெற்று விட்டது? இவருடைய மன நிலையை மாற்றி மன்னரிடம் சொல்லி,அவர் வாயாலேயே பாராட்டுப் பத்திரம் வாங்கினால் ஒழிய அந்தச் சாபம், விமோசனம் அடையாதே;மன்னரிடம் சென்று,தெரிவித்து,இதற்கொரு தீர்வு கண்போம்” என்று தீர்மானித்து, இவர் கம்பர்தான் என்பதையும் தெரிந்து கொண்டு,அவரிடம் மிகப் பணிவோடு உரையாடி அவருக்கு உணவளித்துக் களைப்புத் தீரச் செய்து, பின் பெரிய புலவர் என்பதால் அன்று மாலையே தங்கள் மன்னரின் சபைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர்.


கம்பரும் வேண்டா வெறுப்பாக,’சரி’எனச் சம்மதம் தெரிவித்தார்.


திரும்பிச் சென்ற அரசப் பிரதிநிதிகள் மன்னரிடம் சென்று எல்லா விவரங்களையும் தெரிவித்தனர்.


விவரத்தைப் புரிந்து கொண்ட மன்னரும் முறைப்படி புலவரைப் பல்லக்குடன் எதிர் கொண்டு வணங்கி நேரில் சபைக்கு அழைத்தார். கம்பரும் சென்றார். சபை கூடிற்று.


ஆச்சர்யம்!
அன்று கம்பனின் ராமாயணம் பற்றிய விவாதம் புலவர் பெருமக்களால்
அமர்க்களமாக நடத்தப் பட்டது. கம்பனின் ராமகாதையை கம்பனை விடவும் மேலான பக்தி சிரத்தையோடு அந்தச் சபையில் பேசினர், அரசவைப் புலவர் பலரும்.


முடிவாக வாழ்த்துரை.விருந்தினாராக வந்திருந்த கம்பனே வாழ்த்தினான்.


எப்படி?


தான் அன்று பாடிய அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடி வாழ்த்தினான்.
மன்னரும் மற்ற புலவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்து பாடலின் பொருள் உணர்ந்து மகிழ்ந்து கர கோஷம் செய்தனர்:


”கம்ப நாட்டழ்வார் போற்றி; மாமன்னர் போற்றி;கொங்கு நாடு போற்றி, போற்றி!”என்ற கோஷம் சபையை அதிர வைத்தது!


சபித்து எழுதிய பாடல்,பதம் பிரித்தால்,வாழ்த்துப் பொருளாக மாறுகிறது பாருங்கள்:

நீரெலாஞ் சேற்று நாற்றம்

இந்த நாட்டில் உள்ள நிலம் எங்கும் பயிர்கள் நடப்பட்டு அவற்றைத் தழுவி வாசம் வீசும் காற்றினால் மண்ணின் வளம் மணமாக நம்மைச் சூழ்ந்து,‘ஆகா, இதுவல்லவோ பசுமையான விவசாய வளம் பெற்ற நாடு?’என்று மகிழும்படியான மண்வளம் மிகுந்த நாடு,கொங்கு நாடு.


நிலமெலாம் கல்லும் முள்ளும்
கல்லும் முள்ளும் என்பதைக் ’கல்லும் உள்ளும்’ என்று பதம் பிரித்தால் கல்லும் மின்னும் என்று பொருள் தரும்.‘உள்ளும்’ என்றால் மின்னும் எனப் பொருள்.


இந்தக்‘கொங்கு நாட்டின் நிலங்களில், பாறைகள்கூட ரத்தினங்களாக மின்னுகின்ற கற்களைக் கொண்டிருக்கின்றன;எங்கும் கற்கள் நிறைந்துள்ள பகுதிகள்’.


ஆம், நண்பர்களே,


தமிழ் நாட்டிலேயே இன்றுகூட, அதிக அளவில் க்ரானைட்ஸ் கற்கள் எனும் பாறைகள் அதிகம் வெட்டி எடுக்கப் பட்டு வருவதும்; அவை தொழிற் சாலைகளில் பாலீஷ் செய்யப்பட்டு, பல வண்ணங்கள் கொண்ட பளிங்கு கற்களாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதும் இந்த கொங்கு நாட்டிலிருந்துதான். கோயம்புத்தூர்,சேலம்,தருமபுரி மாவட்டங்கள்தாம் ‘கொங்கு நாடு’ என வழங்கப்படுகின்றது. இப்போது உள் நாட்டிலும் பெரிய கட்டிடங்களுக்கு அந்தப் பளிங்குக் கற்கள் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.


ஊரெல்லாம் பட்டி தொட்டி:
பட்டி என்றால் மிகப்பெரும் ஞானவானாகத் திகழ்ந்த ’பட்டி விக்கிரமாதித்தன்’ என்ற மன்னனையும் அவனுக்கு உயிர்த் துணையாகத் திகழ்ந்த அவனுடைய மந்திரியான தொட்டியையும் பொருள் படுத்தியது.


உண்பதோ கம்பஞ் சோறு:
இந்த ஊர் மக்கள் அனைவருக்கும் கம்பனுடைய தமிழ்தான் உணவு. அந்த அளவுக்கு ஞானம் பெற்ற இலக்கிய ரசனை மிகுந்த மக்கள்.அவர்கள் ராமகாதையை இவ்வளவு விரிவாகத் தெரிந்து வைத்துள்ளார்களே!


பேரெல்லாம் பொம்மன் திம்மன்:
இங்குள்ள ஆண்களின் பெயர்களில் பொன் மனமும் திண் மனமும் சேர்ந்து மிளிர்கின்றது. திண் என்றால் திண்மை,உறுதிப்பாடு.


பெண்களோ னாயும் பேயும்;
’பெண்களோன்’ என்று புராணங்கள் வருணிக்கும் மன்மதனே ஆய்ந்து மயங்கும் அழகுத் தேவதைகளாய்க் கொங்கு நாட்டுப் பெண்கள்.


இனி,‘பேயும்’என்பதை அடுத்து வரும் வார்த்தையான கார் உலாவும், என்பதனோடு இணைத்துப் படியுங்கள்:


‘பேயும் கார் உலாவும் கொங்கு நாடு’ என்று வரும்.


அதாவது மழையாகப் பொழியக்கூடிய கரு மேகஙகள் எப்பொழுதும் சூழ்ந்து மழையைத் தவறாமல் கொட்டுவதால்,நீர் வளம் குன்றாத நாடாய்,இந்தக் கொங்கு நாடு திகழ்கிறது.


’கொங்கு’ என்பதற்குத் தேன் என்றும் பொருள்.


கனவிலுங் கருதொணாதே:
‘கனவிலும் கருது; ஒணாதே’ என்பது கனவிலும் நினைவுகளாய்த் கூட மறக்க முடியாதது இந் நாடுபற்றிய சிந்தனை’ என்று பொருள் ஆகிறது.


அதாவது,


கனவில் கூட மறக்க முடியாத நாடு என்று வாழ்த்துப் பொருளாக முடிகிறது இவ்வரிகள்.


நண்பர்களே,
ஒரே பாடல்.இரண்டு முரண்பட்ட அர்த்தங்களைத் தரும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.கம்பனா? கொம்பனா?


பொதுவாக ‘கம்பனை ஒரு வம்பன்’ எனச் சொல்வாரும் உண்டு.ஆனால் தான் பாடிய அனல் வீசும் கோப வரிகளை அப்படியே புனல் சூழும் குளிர் வரிகளாய், வாழ்த்துப் பாடலாகப் பதம் பிரியச் செய்யும் வகையில்,பாட்டெழுதிய அவன்,’கலைமகளின்’தலை மகன் அல்லவோ?


தமிழுக்கு மட்டுமே உள்ள தனிப் பெருஞ்சிறப்புக்கு மகுடம் சூடியவை,அவனது பாடல்கள் என்பது பொய்யன்று.


என்ன நண்பர்களே?
உங்கள் மனம் அந்தக் கால நினைவுகளுக்குள் சென்று விட்டதா?
நமது பாட்டன்களான கம்பனைப் போன்றோரின் கவிதைப் படைப்புகளை மேலும் காணத் துடிக்கிறதா?....


காத்திருங்கள்;இந்தத் தடம் அதை உங்களுக்கு நிறையக் காட்டும்....
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
23.9.2010/ 3:00 அதிகாலை

நன்றி:
நண்பர்:திரு.உதயன் சத்தியானந்தன்,நார்வே.
(இப்பாடலின் முழுமையான வரிகளை அளித்தமைக்கு)

Saturday, September 18, 2010

இலக்கியத் தடங்கள்-1 (யார் பெரியர்?)

நண்பர்களே,


"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”.


நம் பழம் இலக்கியப் பெட்டகத்தில் இருந்து எடுத்து
நெஞ்சில் பதித்து வைத்துக் கொண்ட பாடல் இது.


வான் குருவிக்கூடு,அரக்கு எனப் படும் வலிமையான
இயற்கைப் பசை;வெறும் மண்ணினால் கறையான்கள் கட்டும்
மண்புற்று;தேனீக்கள் சேமித்துதரும் தேன்;சிந்தனைச் சிக்கலை
நம்முள்உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப்
பார்த்தால் அற்ப விஷயங்களாகத்தான் தோன்றும்.ஆனால்,இந்த
விஞ்ஞான யுகத்தில்,எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது;சாதாரண ஜீவனான
வான் குருவி கட்டுகின்ற (தூக்கனாங் குருவிக்) கூட்டை
இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு
அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா?


முடியவே முடியாது.


அதாவது “‘இந்த உலகத்தில் மனிதர்களால் சில சின்ன
விஷயங்களைச் செய்ய முடியாத நிலைகூட இருக்கிறது’
என்பதை இடித்துக் காட்டி,வாழ்வில் பிற மனிதர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க
வேண்டும்” என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம்.


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத்
தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’என்ற எச்சரிக்கையை
மிக அறிவார்ந்த உதாரணங்களுடன் சொல்கிறது இப்பாடல்.


உங்கள் மனம் இதைச் சிந்தித்து ஏற்கும் என நம்புகின்றேன்.


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
18.09.2010 / நண்பகல் 12:09


குறிப்பு:


இப்போது முதல் ‘இலக்கியத் தடங்கள்’ தொடங்குகிறது.
இது, அவ்வப்போது பல்வேறு எளிய பழம் பாடல்களைக் கொண்ட பாதையாகத் தொடரும்.


கலாச்சாரச் சீரழிவுகளை விதைக்கும் சினிமா போன்ற கேடு கெட்ட பொழுது போக்குகளில்ஈடுபடவேண்டிய அவல நிலை இம்மாதிரிய்யான இலக்கிய நயங்களில் தவிர்க்கப் படும்.


குறிப்பாக, வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் ரசனைக்கும் சிந்தனைக்கும் நல் விருந்தாகும் பகுதியாக இது திகழும்.எனக் கூற முடியும்.


நண்பர்களே,
உங்கள் குழந்தைகளுக்கு இதில் இடம் பெறும் இலக்கிய உவமைகளைப் படம் பிடித்துக் (உங்களால் இயன்ற அளவு விளக்கிக்)காட்டுவீர்களானால்,அவர்கள் மனதிலே அறிவும் தமிழ்ப் பண்பாட்டுணர்வுகளும் தானாக ஊற்றெடுக்கும் பாருங்கள்.
-கிருஷ்ணன் பாலா



நார்வேயில் வாழும் தமிழர்,நண்பர் திரு.உதயன் சத்தியானந்தன் இந்த ‘தமிழ் இலக்கியம் காட்டும் தடம்’பற்றி எழுதுகிறார் இப்படி;


#
ஞாயிறு வெளிவர நாணும் பார் மின்மினிகள்.
நாளும் பொழுதும்
நல்ல தண்ணீர் ஊற்றுக் கிணறு
தேடி வரும் உயிர்களெல்லாம் விரைந்து.
‘இலக்கியம் காட்டும் தடம்:நடமாடும் பள்ளி என்றே அறை!


#
நன்றி,நண்பரே,திரு.உதயன்.
எனது அன்பான பதிலை ஏற்பீர் இங்கே:



“ஒளி மிகுந்த படைப்புக்கள்;உலகு போற்றும்
ஒப்பற்ற ஞானமொழி;மெய்ம்மையான
களவற்ற இலக்கியங்கள்;காணுந்தோறும்
கள்ளூறும் கவிதை பல ஆயிரமாய்
அளவற்ற படைப்புக்களிருக்க,நாம் ஏன்
அடுத்தமொழி இலக்கியத்தை நாட வேண்டும்?
உளம் நினைத்த படிஇங்கு எழுதுதற்கு
உட்கார்ந்தேன்;வாழ்த்துகிறீர்;வாழ்க நீரே!
-கிருஷ்ணன் பாலா
19.8.2010 / பிற்பகல் 2:10


பொருத்தம் மிகும் திருத்தம்
----------------------------------------


நண்பர்களே,


மேலே எடுத்தாளப்பட்ட பழம் பாடல் இன்று காலையில்தான் பதிப்பிக்கப்பட்டது.இப்போது அதன் வரிகளில் சிறு திருத்தம் பதித்தாயிற்று. சொல்லப்பட்ட பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை.


முதலில் அதனைக் கீழே உள்ளவாறுதான் பதிப்பித்திருந்தேன்.அது வருமாறு:


"வான் குருவிக்கூடு;வல்லரக்கு;தொல்கறையான்;
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால்-யான்பெரிதும்
வல்லோமே’எனத் திரிய வேண்டாம்;உலகில்
எல்லார்க்கும் ஒவ்வொன் றரிது."


எனது முக நூல் நண்பரும் மொழி இலக்கணத்தின் முதல் நிலைத் தூதுவரும் புதுவை அரசில் பதவி வகிப்பவரும் பயன் கருதாத் தமிழ்த் தொண்டாளருமான
தோழர் இராஜ.தியகராஜன் அவர்கள் மேற்குறித்த பாடலில் உள்ள பாட பேதத்தைச் சுட்டிக் காட்டியதுடன்,‘இப் பாடலை அவ்வைப் பெருமாட்டி,கம்பன் மீது சோழ மன்னன் கொண்டிருந்த அளவு மீறிய மதிப்பபீட்டைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதற்காகப் பாடியதாகச் கருதப்படும்’ நிகழ்வு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார்.


முதலில்,இப்பாடல் அவ்வைதான் எழுதியுள்ளார் என்பதற்கும் அவ்வை-கம்பன் வாழ்ந்த கால கட்டங்கள் ஒன்றுதானா என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் இது பற்றி நான் விரிவாக எழுதுவதைத் தவிர்த்தேன்.


ஆனால்,கம்பனுக்கும்-அவ்வைக்கும் நடந்த கருத்துப் போர்கள் நமக்குச் சுவையான கருத்தாழம் நிறைந்த இலக்கியப் பேழையாய் படைக்கப் பட்டிருக்கின்றன.


இது போன்ற இலக்கியப் பேழைகளைத் திறந்து அதன் நுண்மான் நுழைபுலத்து நொய்யல்களைத் திரட்டித் தருகின்ற ‘என் நோக்கில் ஆதாரப் பூர்வமான சான்றுகளைக் கூறுதற்கு வாய்ப்பில்லை’ என்பதை வருத்தத்தோடு வழி மொழிகிறேன்.


ஆனால்,அவற்றின் சுவைமிகு திரட்டுப் பாலில் தீஞ் சுவைக்கும் தேன் சுவைக்கும் பஞ்சமிராது என்பது மட்டும் உறுதி.


இந்தத் தடத்தில்,முதல் தோரணமாகத் தோழர் இராஜ.தியாகராஜன் அவர்களின்
துணை அமைந்துள்ளதற்கு நாம் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
சரியான இலக்கியப் பார்வையும்,பிழையற்ற தமிழைக் காப்பதில் கொண்ட கூர்மையும்,கொள்கையில் நேர்மையும் கொண்ட தோழரின் சுட்டிக்காட்டலில் எவ்வளவு பெரிய உழைப்பு பொதிந்துள்ளது! நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.அவர் சுட்டிக் காட்டியதும் நான் அதைக் கட்டிக் காத்ததும் இதோ:


இராஜ. தியாகராஜன்
வணக்கம் கவிஞரே. நீங்கள் பதிப்பித்த பாடல் வெண்பா வகையிலானது, ஆதலால் நிறைய இடங்களில் தளைதட்டுதலை உணர்ந்தேன். பாட பேதங்கள் இருக்கக் கூடுமென்று முதலில் அனைத்து நூல்களிலும் விவரங்கள் தேடிய போதில் எதுவுமே சிக்கவில்லை. சோர்ந்தேன். பின்னர் எனதருமை இலக்கிய வித்தகர் திரு ஹரிகிருஷ்ணன் தயவால், விவரங்கள் கிடைத்தது.


ஒரு சமயம் சோழன், கம்பனைப் புகழந்து, கம்பனைப் போலக் காப்பியம் படைக்க எவருமில்லை என்று புகழும் போதில், ஔவை எழுந்து வெட்டிப் பேசியதான தனிப்பாடல் வெண்பா இது.


திரு ஹரிகிருஷ்ணன் அனுப்பித் தந்த வரிகளின் படி, நீங்கள் பதிப்பித்த சிலவரிகளில் தவறுகளைத் திருத்தி கீழே:


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


முதல் எதுகை விகற்பத்தான் இதிலும் யாம்பெரிதும் என்ற சீருக்கு பதிலாக யான்பெரிதும் என்றே வரலாமென்று தோன்றுகிறது. எல்லொரிடமும் கலந்து உசாவிக் கொண்டிருக்கிறேன்.


ஆனால் பாடலின் பொருளென்னவோ மிகவும் அருமையானது.
“தூக்கணாங்குருவியின் கூடும், வலிமையான அரக்கும், கரையான்பூச்சி கட்டுகின்ற புற்றும், தேனீயின் கூடும், சிலந்தி பின்னும் வலையும், எல்லோருக்கும் எளிமையான செயல்கள் அல்ல. ஆதலால், யாம் மிகவும் திறமையானவர் என்று எவரும் தம் பெருமை பேசுதல் கூடாது. ஒவ்வொருவருக்கும் தம்தம் திறமையால் ஒவ்வொருவகைச் செயலைச் செய்தல் எளிதாம்.”


தோழருக்கு எனது பதில்:
----------------------------------------


தங்கள் கூற்று முற்றிலும் சரியே.சில தனிப் பாடல் தொகுப்புக்களில் இவ்வாறு பாட பேதங்கள் இருப்பதைக் காண்கின்றேன். ஒரே பாடலை பலரும் பலவிதமாய்ப் பதிப்பித்து உள்ளதானது,என் போன்ற அவசரக்காரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.


தங்களைப் போன்ற இலக்கண மேலோர்இருப்பது,என் போன்ற காட்டாறுகளை வழிப்படுத்தத் தானே?


எளிய மொழியில் வெளி நாடுவாழ் தமிழ் அன்பர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக மிகச் சரியான இலக்கணச் சொல்லாடலைத் தவிர்க்க வேண்டும் என்கிற ஒர் எண்ணமும் இம் மாதிரியான பிழைகளுக்கு பின்புலமாகவும் தூண்டுகின்றன.


உங்கள் குட்டுதலும்கூட ஒர் பாடமாகவும் படமாகவும் இருக்கட்டும் என்பதற்காக,உங்கள் கருத்துக்களை எவ்வித மாறுதலும் இன்றி எனது தளத்தில் பதித்துள்ளேன்.


தொடர்ந்து துணை நின்று உதவ வேண்டுகின்றேன். நன்றி.
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
18.09.2010 / நேரம் 11:48 இரவு

Friday, September 17, 2010

கண்டவை;உண்டவை-1

அறிவார்ந்த நண்பர்களே,


தமிழாசான்’என்றொரு இணைப் புலம்.(சரிதானே திரு.உதயன் சத்தியானந்தன் அவர்களே)


நார்வே நாட்டில் வாழும் தமிழர் திரு.உதயன் சத்தியானந்தன் அவர்கள் பதிப்பித்து நடத்தி வருகிறார்.


அதன் உட்பக்கம் சென்று படித்தேன்.


ஆகா... என்ன சொல்வது?


நாமெல்லாம் நமது எழுத்துப் பணி குறித்து வெட்கப்படும்படிச் செய்து விட்டார்.
அவ்வளவும் அளவற்ற தமிழ் ஈடுபாட்டில் அவர் பதிப்பித்து வரும் படைப்புக்கள்.


தமிழ்ச் சான்றோர்களில் தலை சிறந்த தோன்றலாகிய மறைமலை அடிகளாரின் உயிர்ப் பற்றாளர் இவர்.சொல்லவேண்டுமா? இவர் தமிழின்பால் கொண்டுள்ள மெய்ம்மைப் பற்றும் தமிழ்ப் பண்பாட்டின் ஒற்றும்.


மூச்சும் பேச்சும் தமிழாய் வடிக்கும் திரு.உதயன் சத்தியானந்தன் அவர்கள் பதிப்பித்த கட்டுரை என்னை மிக ஆழமாகப் படித்து,எடுத்து இங்கே படைப்பவர்க்கும் பகிர்ந்தளிக்கச் செய்துள்ளது.அத்தனை பெருமைக்குரிய தமிழ்ப் பணியை அவர் செய்து வருபோது,‘அதைக் காணாத கண் என்ன கண்ணொ?’ என்று என்னை இங்கே ‘கண்டேன்;உண்டேன்’ என்று எழுதத் தூண்டிற்று.


இதோ-


நான் கண்டு உண்டதை அப்படியே பதிப்பிக்கிறேன்;
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”- குறள் காட்டிய வழிதானே!


அவருடைய ‘தமிழாசான்’ எடுத்துக் காட்டியுள்ள,நம் தமிழ் மொழியின் மாண்பு, செம்மொழியாளர்கள்கூட எடுத்துச் சொல்லாத நோன்பு.படியுங்கள்:


"மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி"
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது உண்மைதான்.தமிழனுக்குப் பெருமைதான்.ஆனால் தமிழ் தொலைந்ததே.
_காசியானந்தன்_


சிந்திய,மங்கோலிய,சீன மொழிகளுக்கும் தமிழுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்.


இந்தோ - அய்ரோப்பிய மொழிகளும் தமிழும் நெருங்கியவை என்கிறார் போப்.
அங்கேரி துருக்கி பின்னிசு போன்ற பதினொரு பின்னே - உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன.என்கிறார் கபோர் சென்(த்) கொதல்நய்.


சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டுகிறார் லோகநாத முத்தரையர்.


எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு என்கிறார் மக் ஆல்பின்.
கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ஆல்பர்ட்.


சப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் ஓனோ.


ஆபிரிக்க மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை ஆய்ந்து நிறுவுகிறார் செங்கோர்.


பாசுக்கு மொழி உலகளாவப் பரவிய பண்டைத் தமிழ் மொழியின் ஒரு கூறே என்கிறார் இலாகோவாரி.


ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழிகளும் தமிழும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்கிறார் பிரிச்சார்டு.


அமெரிக்கப் பழங்குடிகள் பேசிய மொழிகள் தமிழோடு கொண்டுள்ள உறவினை அறியத்தருகிறார் சமன்லால்.


தொல்தமிழர் காலத்திலேயே தமிழன் போன போன இடங்களில் எல்லாம் தமிழைத் தொலைத்தான் என்றுதான் இதற்குப் பொருள்._ காசியானந்தன்_


வெளியிட்டவர் Tamilnorsk நேரம் 6:35 AM தேதி Oct 31, 2009

கனவென்னும் நிஜம்!

வாழ்க்கை அதன் வசதிகள் அனைத்தையும் பெற்றிருந்தால்,தனது வலிமையை இழந்து நோஞ்சான் பிள்ளை போலாகிவிடும். எந்த வைத்தியத்தாலும் அதைச் சரிப்படுத்தி விட முடியாது.

பற்றாக்குறையான வாழ்வில் மட்டுமே வாழ்க்கையின் நீரோட்டம் தெளிவாக அமையும். அதில்தான்,மனிதன் தன் முயற்சியாலும்,சிந்தனை திறனாலும் அங்கும் இங்கும் மனதை அலைய விட்டு,அந்த அனுபவங்களின் வழியாக பரமாத்மாவை நோக்கிச் செல்லும் பக்குவத்தை,அதற்கான பாதை இதுவென்பதை அறிகிறான்.

அந்தப் பக்குவத்தைப் பெறும்வரை,‘தான் எல்லாம் தெரிந்து கொண்டவன்’ போல் தன்வயப்பட்டு, பிறருக்கும் அதையே போதிக்கிறான்; தன்னைச் சுற்றி ஒரு வட்டம் எழுந்ததும்,தானே எல்லாம்’ என்பதாய் ஓர் எண்ணம் அவனுள் தோன்றி, அவன் ஒரு ‘தான்தோன்றியாய்’ மாறி விடுகிறான்.

அப்படிபட்ட நிலையில் ‘அவன், தன்னை ஒரு பெரிய அறிவாளி’ எனக் கற்பனை கொண்டு தன் ப்ரலாபங்களை வெளியில் சொல்லத் தலைப் படுகிறான். அவனுடைய அரைவேக்காட்டுச் சிந்தனைகளையே தங்களுக்கு வழிகாட்டும் ஒளியெனப் போற்றி, மாந்தர் பலரும் அணி திரண்டு, அவனது சீடர்களாய்,சிந்தை நிறைந்த பித்துக் கொண்டு அவன் பின்னால் திரிகிறார்கள்.

திடீரெனெ ஒருநாள்,எல்லோருக்கும் வரும் ஓலை, அவனுக்கும் வந்து, அவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாது கண்ணை மூடி விடுகிறான்.

பின் அவன் விதைத்த தப்புத் தாளங்கள், அவனுக்கு அடுத்த சீட கோடி ஒருவனால் தொடர்ந்து வாசிக்கப் படுகின்றது. அதே பஜனைக் கூட்டம்;அதே பாடுகள்.

இப்போது எண்ணுங்கள்:பக்குவம் என்பது என்ன?

அது மரணத்தின் முத்திரை யல்லாது வேறு என்னவாக இருக்க முடியும்?

உயிருள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும்,மரணம் ஒன்றுதான் நிலையானது; பொதுவானது.இதில் மனிதனால் மட்டுமே தன் விருப்பு,வெறுப்புக்களை வெளியிடவும் அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.

பக்குவம் குறித்த சிந்தனைகளில் அபக்குவமற்ற நிலையில் சிந்தித்த மனது,பரந்தாமன் கண்ணனுக்கு எழுதுகிறது இப்படி:

கனவென்னும் நிஜம்!

பரம் பொருள் கண்ணன்;பரந்தாமன்;என்
பரம நினைவில் எழும் தந்தை;
கரம் தொழுகின்றேன் அவன் முன்னே;
கண்கள் பணித்தன கேள்விகளில்!

‘எந்தை உன்முன் எழுதுதல் என்பது
இன்பத்துள் இன்பம் பேரின்பம்;
சிந்தையுள் சிதறும் கேள்வி எலாம்
சிறகடித்திடுவது,இதில் தானே?

கேட்கின்றேன்,என் பரந்தாமா;நீ
கீதையைக் காட்டிச் சிரிக்காதே!
வாட்டம் நீக்குவ தல்லாது;
வஞ்சனை நாடகம் நடத்தாதே!

எண்ணம் யாவும் உனதடி வைத்து
எழுத்தில் உனையே அணிகின்றேன்;
‘பண்ணும் செயலில் புண்ணியம் சேரப்
பண்ணும்’என்றே பணிகின்றேன்!

‘நன்றாய் என்னை ஆக்கிடத்தானே,
நன்மையும் தீமையும் வகுக்கின்றாய்?’
என்றே எண்ணி இயங்கும் என்னுள்
எத்தனை மாற்றம் கொடுக்கின்றாய்?

உன்முன் எழுத்தில் பணியும் என்றன்
உளமே புகுந்து நிறைவோனே;
என்முன் தோன்றும் காட்சிகள் தோறும்
இருந்தே விரிந்து மறைவோனே!

”ஜனனம் என்பது உயிரின் நுகர்வு;
ஜனித்த பின்னால்தான் காணும் உறவு:
மரணம் வரையினில் தொடரும் உலகு;
மரித்த பின்னாலோ அனைத்தும் கனவு!

எண்ணிப் பார்த்தேன்,இறைவா ”என்னுள்
எத்தனை ஜனனம்;எத்தனை மரணம்?”
மண்ணில்,‘நான்’,‘நீ’, ‘எனதுன’தென்னும்
மாயை எதற்கு? விடை சொல்வாயா?

மாயை இதுவென அறியும் மனதுள்
மயங்கும் மதியைப் படைத்தவன் நீயே;
சேயைப் போல்நான்,தேம்பிடும்பொழுது
சேய் போல் சிரித்து மழுப்புகின்றாயே?

என் விருப்பத்தில் நான்வர வில்லை;
இங்கென் விருப்பம் நீதடுக் கின்றாய்;
உன் விருப்பத்தில் பிறந்தவன் தன்னை
உலகியல்தனில் ஏன்புதைக் கின்றாய்?

பொருள்வழி உலகில் பிறந்தேன்;இங்கே
பொருளை,அருள்வழி இறைக் கின்றேன்;
அருள் வழி பொருளா? பொருள் வழி அருளா?
அதை நான் புரிந்திடத் துடிக்கின்றேன்!

பொருள்வழி மட்டும் வாழ்வென்றிருந்தோர்
போன பாதையைப் பார்க்கின்றேன்;
அருள் வழி நின்றோர் அருளிய பொருள்வழி
அடைந்திடும் பொருளைச் சேர்க்கின்றேன்!

உயிர்வழிப் பயணம் உணர்ந்திடும் அறிவில்
உண்மையும் ஒளியும் தடுமாற்றம்;
பயன் தரும் பயணம் எனப் புகுந்தால்
பாதையில் எத்தனை ஏமாற்றம்?

பொய்யை மெய்யாய்ப் பேசியவாறே
பொழுதைக் கழிக்கும் புல்லருடன்;
வையம் வாழ்ந்திட வருந்துகின்றேன்;
வருந்திடத்தானா வாழ்வ ளித்தாய்?

பொய்யைச் சுடுமோர் பொல்லாச் சினமும்
புல்லரின் உறவைஅறுத்திடும் மனமும்
மெய்காண்பதற்குத் துடித்திடும் குணமும்
மேன்மை இலையேல்,ஏன்இவ் வாழ்க்கை?

தர்மா,தர்மம் குனிந் திருக்க;
தத்துவப் பொய்கள் தலை நிமிர;
‘கர்மா’என்றே இதைச் சொல்லிக்
கைதொழுதற்கா எனைப் படைத்தாய்?

குறிப்பு: 1996 களில் அனுபவத்தால் இச் சிந்தனை எழுந்து கவிதை எனத்
திரண்டது.இப்போது இங்கே பதிவில் (17.9.2010-வியாழக் கிழமை)

Tuesday, September 7, 2010

படித்தோரும் பிடித்தோரும்-3

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
எனக்குத் தனிப் பட்ட முறையில் நண்பர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களில் மின்னஞ்சல் முகவரி கொண்டோர் மிகவும் சொற்பம்.மின்னஞ்சல் முகவரி கொண்டிருந்தும் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்)என்னோடு அடிக்கடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோர் அதிலும் குறைவு.


என்னுடைய நீண்ட கால நண்பர்களுக்கும் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் கூட,நான் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவன் என்பதும் மக்கள் தொடர்புப் பணியில நிறைவான செயல்பாடுகளில் தெளிவாக இருந்தவன் என்பதும்;எழுதுவதில் தனிக் கொள்கை கொண்டிருப்பவன் என்பதும் தெரியுமே தவிர, நான் எவ்வாறு,எத்தகைய கருத்துக்களை,எந்தஉணர்விலிருந்து எப்படி எழுதுகிறேன் என்பதெல்லாம் தெரியாது.


கடந்த ஆறு ஆண்டுக் காலம் என் சிந்தனைக் கடலோரங்களில் சுனாமிப் பேரலைகள்....என் உறுதி மிக்க உணர்வுக் கூடங்கள் பலவும் சீரழிந்து போயின; சீர்படுத்திட எவராலும் இயலாது என்ற அளவில் பாதிப்புக்கள்...


எடுத்துச் சொல்லவும்,இடித்துச்சொல்லவும் அதை எழுத்தில் கொள்ளவும் முடியாத அளவுக்குநம்பிக்கைத் துரோகம்,மோசடி,பித்தலாட்டமான நாடகங்கள்.... வெளி உலகில் அல்ல;எனது உள்ளரங்கத்தில்....


யாரும் எனக்கு ஆறுதல் சொல்லும் வல்லமை கொண்டிருக்கவில்லை;நானும்
ஆறுதல் கொள்ளும் நிலையில் இல்லை.


இந்த நிலையில் இந்த முக நூல் (face Book)எனக்கு உற்ற தோழமையைத் தந்தது. கடல் போல் ஆழம் நிறைந்த இதில் தலை கீழாகக் குதித்தேன்,நண்பர்கள் எனும் முத்துக்களை எடுக்க.


இதோ:


எனது எழுத்துக்களின் தரத்தை மட்டும் அல்லாது,இதயத்தின் ஆழத்தையும் பண்பின் செழுமையையும் கோடிட்டுக் காட்டும் அவரது நட்பின் எழுத்துக்கள்.


‘என்னைப் பற்றி..’என்று இந்த வலைத் தளத்தில் ‘முகமன்’ஒன்று எழுதியிருந்ததைப் படித்து விட்டு என் முக நூல் பக்கத்தில் ஒரு கவிதை மூலம் ஆறுதல் கூறியிருந்தார். அதன் வரிகளில் இருந்த தாக்கம் எனது வாழ்க்கைப் பின்னணியைச் சொல்ல உடனே'எனது வாழ்க்கைப் பாதை’என்ற கவிதை மடலை எழுதிப் பதித்தேன்.


முன் அறிமுகம் இல்லை;உண்மை உணர்வின் ஒரே படைப்பில் எங்கோ தொலை தூரத்தில்,கடல் கடந்து நோர்வே நாட்டில் வாழும் இவர்,'எனது வாழ்க்கைப் பாதை’யின் தாக்கத்தை உணர்ந்து அவர் எனக்கு எழுதியது என் உணர்வுகளுக்குப் பெருமை சேர்த்தது.


இவரது பார்வை பண்பாட்டின் செழுமை எனச் சிந்திக்கின்றேன்.


வாசக நண்பர்கள் இதைச் சிந்திப்பதற்காக அதை இங்கே அப்படியே பதிக்கின்றேன்:


‘உதயன் சத்தியானந்தன்!
(Uthayan Sathiyananthan as in "Face Book")
எங்கிருந்து வந்தார்,இவர்?
எனது வாழ்க்கை பற்றி
“என்னைப் பற்றி....” என்ற குறிப்பில்
சிலவரிகளில்,சிறுகுறிப்பாகத்தான் எழுதியிருந்தேன்.
(காண்க:முக நூல்:Krishnan Balaa on Sunday, 05 September 2010 at 16:29)


ஆயிரக்கணக்கானோர் கண்களில்
அகப் படும் அந்தக் குறிபபு-
இவரின் ‘அகக்’ குறிப்பாய்...
இவர் கருத்தில் பட்டு விட்டது.


என் வாழ்க்கை நிலையை,
‘குறிப்பால் உணர்ந்து’ துணை நின்றார்ப் போன்று,
எனது-உள் மனக் காயங்களுகக்கு மருந்திடும்
உத்தம நண்பராய்க் கருத்தைக்
கவிதை எழுத்தில் எழுதி இருந்தார்.


அவர் எழுதினார் இப்படி:
Uthayan Sathiyananthan தோழர்களே!
பெற்றோர் உறவு பிரிந்து போனாலும்
உற்றார் உறவினர் உனைவிட் டகன்றாலும்
கற்றாயே நற்றமிழ் காவலாய் நின்று
காக்கும் தோழா என்றென் றும்மே!


...நன்றியுடன்
ச.உதயன்
(காண்க :Faccebook,நாள்;5.9.2010,ஞாயிற்று கிழமை)


இதுவரை-
எனது எழுதுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்
தெரிந்திராத உண்மைகளைச் சுருங்க விரித்துக் கூறும்
வாய்ப்போ,மன நிலையோ எனக்கு இல்லாதிருந்தது.


நண்பர் உதயன் சத்தியானந்தன் அதை இன்று,
இப்போது உணர்வெனும் ’கட்டளை’யால்
எழுதிடப் பணித்து விட்டார்.


இதோ-
எனது வாக்கு மூலம்:


எனது வாழ்க்கைப் பாதை!


பெற்றோர் பிரிவு இயற்கையானது;
பிழையில்லாத பாசம்கொண்டது;
உற்ற உறவாம் உடன்பிறந்தோரும்
ஊரார் மற்றும் உறவினர் யாரும்-


உலக வழக்கில் உள்ளதுபோன்றே
உணர்வொடு கலந்த உறவில் உள்ளனர்;
நலங்கெட வாழ்ந்தாள் ’நாறி’ என் மனையாள்;
நல்லறம் அற்றது:இல்லறம் கெட்டது!


வறுமையிற் செம்மை;வாழ்ந்து காட்டினேன்;
வந்தவர் மனதில் அன்பை நாட்டினேன்;
அறிவோடிருக்க அகத்திருந்தோர்க்கு
அடிக்கடி, பாடம் கடிந்து நடத்தினேன்!


பெற்ற பிள்ளைகள் மூவர்;அவரைப்
பெரிதாய் வளர்த்திடக் குறியாய் இருந்தேன்;
கற்றனர்,தாயின்வழியில் நின்றனர்;
கயமையை நெஞ்சம் ஏற்க மறுத்தது!


‘அருள் வழி நின்று பொருள் வழி தேடல்’;
அதுதான் எனது உடல் பொருள் ஆவி;
‘பொருள்’வழி நின்று அருள் வழி மறந்து
புண்படச் செய்தனள்;‘பெண்’டெனும் பாவி!


மனத்தால் வெறுத்தேன்;பணத்தால் பிரிந்தனர்;
‘மானம் ஒன்றே மலை’யென நிமிர
இனத்தால் இருக்கும் ‘வெறியையும்’ வென்று
எண்ணம் செழித்தே தனித்து வாழ்கிறேன்!


இதுதான் எனது வாழ்க்கையின் காதை;
இதை இன்றெழுதிட, வகுத்தனை பாதை;
உதயன்,உனக்கென் உளமார்,நன்றி!
உணர்வுகள் கொதித்து அடங்கின,இன்று!


-கிருஷ்ணன் பாலா
05-09-2010,ஞாயிறு,பகல்:12:30


குறிப்பு:
என்னுடைய இந்தக் கவிதைக்கு நண்பர் உதயன் சத்தியானந்தன்,இந்த
எழுதிய கடித வரிகள்,தமிழ்ப் பண்பின் சிகரத்தை நோக்கி நடக்கச் செய்பவை.


அந்த வரிகள்:


Uthayan Sathiyananthan
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஐயா உங்கள் முகத்தில் ஏக்கம் தெரிந்தது உங்கள் கவிதையில் எல்லோருக்குமான விடியல் வெளிப்பட்டது. எல்லாத் துறைக்கும் பணம் கிடைக்கும் தமிழ்துறைக்கும் தமிழிசைத் துறைக்கும் பயன் தான் கிடைக்கும் அதுவும் நம் பிறங்கடைக...ளுக்குத். பாரதியை வெறுத்தவர் பலர் விரும்பியவர் சிலர். இன்று பலர் 'பாரதி' யென்று தங்களுக்கு பெயர் சூட்டவிரும்புகின்றனர். இது தான் உலகம். இலக்கை கைவிடாததால் உறவுகள் கைவிட்டனர். பேதைமனம் பலருக்குண்டு. மேதைமனம் எத்தனைபேருக்குண்டு. என்வேண்டுகோள் ஐயா திருந்திவந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைமனம் தெய்வ மனம் கடந்ததை மறந்துவிடும். கைவிட்டவர்களே உங்கள் காலடிக்கு வருவார்கள். தமிழ் அதைச்செய்துவைக்கும்.
நன்றியுடன்.
ச.உதயன்.


இதற்கு எனது பதில்:


உதயனே எந்தன் இதயனே
உளம் நிறை நட்பின் புதையலே!
சிதைவில்லாமல்தமிழ்ப் பண்பை
செலுத்துகின்றாய்,நீ என் நண்பன்!


...வாராக் கடனாய் எழுதப்பட்டிருக்கின்றது
வரும் என்று நம்புதல் நம் கடன் அன்று...


எனினும்-


’‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?’’


‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்...;
அல்லவா?

மானம் கெட்ட ஞானம்!

இது-
திட்டும் தலைப்பன்று;தீட்டும் தலைப்பு.
எதிர் மறையானதொரு ஞானானுபவ ஞானத்தைக் கேள்வியாக வைக்கும் கவிதை இது! ஞான நிலையைக் கேலி செய்வதாய் யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு என் அனுதாபம்.


“மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?”


-இந்த உலகத்தோரின் அஞ்ஞான நிலை தொடர்ந்திருக்க,
“ஞானம் எய்தியோர்,இந்த உலகத்தை அனாதையாகவே விட்டுச் சென்று விடுகிறார்கள்,பாவம்,இந்தப் பரந்த உலகம்!” என்று பரிதாபம் காட்டுகின்ற மறை பொருளை இடித்து காட்டுகின்றது மனம்.மதியுடையோர் மகிழவும் நெகிழவும் ஆன கவிதை இது:படியுங்கள்:

மானம் கெட்ட ஞானம்!

‘சட்’டென்று காரியத்தைச்
சந்தியிலே விட்டெறிந்து
‘பட்’டென்று போக உயிர் விழையும்;அந்தப்
பக்குவத்தில் ஞானம் ஒன்று விளையும்!


கட்டளையை இட்டு,எனைக்
கட்டிவிடும் ஆசைகளில்
கெட்டமனம் பாடம் ஒன்று தேடும்-அதைக்
கிண்டிவிட்டு ஞானம் வந்து சேரும்!


பெண்மயக்கம் என்பதொரு
புண்மயக்கம் என்றபின்னும்
கண்மயக்கம் கொண்டதிந்த நெஞ்சு-ஞானம்
கண்டபின்னர் அத்தனையும் நஞ்சு!


’பாவம் அறியா தவர்கள்;
பாரில் இல்லை’ என்றறிந்தும்
’தேவன்’ என்று மானிடனைப் பாடி-மனம்
தேடியது ஞானம் ஒரு கோடி!


’குற்றமிகும் மானிடந்தான்
கூட்டு’எனக் கண்டு கொண்டு
மற்றும் ஒரு தூயவனைத் தேடும்-அந்த
மாயைஒரு ஞான வடிவாகும்!


ஞானகுரு நாதன் அவன்
நல்லவற்றைச் சொன்னபின்னும்
போனதிந்தப் புத்தி கெட்டு, மானம்-அதில்
பொத்துக் கொண்டு வந்ததொரு ஞானம்!


ஞான நிலை என்பதெல்லாம்
நல்லபடி சேர்ந்ததென்று
நானறிந்த தில்லை;இங்கு பாரீர்-இதை
நம்ப மறுக்கின்ற வர்கள்,வாரீர்!


மானம் கெட்டுப் போன பின்பு;
மவுன நிலை ஆனபின்பு
ஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த
ஞாலத்துக்கு,எந்த வகை,லாபம்?


-கிருஷ்ணன் பாலா–


1988-ல் சென்னை,திருவல்லிக்கேணி கார்டியன் மேன்சனில் வாழ்ந்த போது எழுதிய கவிதை.

Sunday, September 5, 2010

கொத்தான முத்துக்கள்

1984-களில் ‘வாழும் தமிழ் உலகம்’ என்ற திங்கள் இதழின் பொறுப்பாசிரியனாக நான் இருந்தபோது எழுதி,அந்த இதழில் கோர்த்த முத்துக்களில் பல இதிலுள்ளவை. இந்த இதழ் அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக ’முனைவர் பழனி ஜி.பெரியசாமி’ அவர்களால் நடத்தப் பட்டு,பின்னர் நின்று விட்டது.மீதி முத்துக்கள் 1988-ல் வெளியான ‘எனது இராஜ பாட்டையில்,,,,’ என்ற நூலில் இடம் பெற்றவை.


முதிர்ச்சி
அனுபவங்களுக்காகக்
காத்திருந்தது அறிவு;
பிறகுதான் தெரிந்தது:
’காத்திருப்பதே,
நல்ல அனுபவம்’
என்பது.

அடையாளம் 
“யாரது...
‘தொழிலாளர் நலனுக்காக
உயிரைக் கொடுப்பேன்’
என்று
லட்சியக் குரல் கொடுப்பது,
யார் அது?”


வந்தது பதில்:
‘வருங் கால முதலாளி’

மீன் குஞ்சு
“தொழில் முன்னேற்றத்துக்காக
சிறு தொழில் செய்யாமல்
பெருந்தொழில் செய்வேன்’
என்று-
உன் கல்லூரி
இலக்கிய விழாவில் பேசி
கலக்கி விட்டாயாமே?
மகனே,
என்ன செய்யப் போகிறாய்?”


பீடித் தொழில் நடத்தும்
பெரிய அரசியல்வாதி,
தன் பிள்ளையை
இப்படித் தயவாய்க் கேட்டார்.


பாச மைந்தன்
’பளிச்’செனச சொன்னான்:
‘சுருட்டுத் தொழில்!’

நாணம்!
ஆச்சர்யம்!
நேர்க் கோடு.
கேள்விக் குறியானது!


ஓ…!
பதினாறு வயதுப்
பாவை!


கவிஞன்
ஒரு
பெண்ணைப் பார்த்துக்
கற்பனை செய்யும்
காமுகர்களுக்கு


நடுவே-


கற்பனையில்
பெண்ணைப் படைப்பவன்!

அழைப்பிதழ்கள்
பெண்ணின்
தோளை விட்டு
விலகியிருக்கும் முந்தானை;


உண்மையை
மறைக்கத் தெரியாத உதடு;


தாழிடப் படாத கதவு;


பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் ‘பர்ஸ்’


இவை-
குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!

•லாபம்
வாழ்க்கைக் குளத்தில்
செல்வக் கற்களை
எறிந்ததில்
அனுபவ வளையங்கள்..
எத்தனை மகிழ்ச்சி?


ஓ….
நஷ்டம் என்பது.
அனுபவத்தின் லாபம்!


•ஞானம்
என்னைத்
தெரிந்து கொள்வதற்காகச்
சிந்தித்தேன்…


விளைவு,
அதில்-
நான் மறைந்து போனேன்.


பிறகுதான் தெரிந்தது:
சிந்தித்ததே
என்னைத் தெரிந்ததால்தான்!


•அர்த்தம்
ஆர்ப்பாட்ட வாழ்க்கையை
அமைதியாகச்
சிந்தித்து மனம்.
மெளனம் சப்தித்தது.


ஓ…..
நான் பேசுவதற்காக
வரவில்லை;
பேசப் படுவதற்காக!


•பேனா
ச்சே!
ஐந்து விரல்களால்
என்ன பயன்?
தின்னத்தானே முடிகிறது.


இதோ-
இந்த ஒரு விரலே போதும்;
உலகம் தின்ன!


•’புள்ளி’ விவரம்!
உண்மையில்-
சிறு புள்ளி;
ஊருக்குப் பெரும்புள்ளி;


உரசிப் பார்த்தால்-
‘கரும்புள்ளி’


•எடை
ஏந்திக் கிடந்ததை
எடுத்து வைத்தேன்;


இருந்த பொருளும்
எங்கோ தொலைந்தது;
இருப்பதை எடுத்து
அன்புடன் ஈந்தேன்;
இரட்டிப்பாகத்
திரும்பி வந்தது!


ஓ…
செல்வம் என்பது-
சேர்வதில் அல்ல;
அது,
எப்படிச் செலவிடப்படுகிறது
என்பதில்!


•ஒரு முன் குறிப்பு
நீங்கள்
உண்மையை
அறிய வேண்டுமாயின்
இதோ-
என்னைப் பற்றிச் சொல்கிறேன்;


என்னை
அறிய வேண்டுமா?


அப்படியானால்
உங்களைப் பற்றியே
சொல்கிறேன்!


•எழுத்து
நண்பனே!
நான்
எழுதுவது-
என்னை அறிமுகம்
செய்வதற்கு அல்ல;
உன்னை
நான் அறிவதற்கே!

(இன்னும் ஜொலிக்கும் ஏராளம்;
எடுத்துக் கொள்வீர் தாராளம்)
கிருஷ்ணன் பாலா