Thursday, October 25, 2012

நானும் அவளும்! (நினைவுக் குறிப்புக்கள்:3)



வளுக்கும் எனக்கும் 17 வருடப் பந்தம்.

இந்த 17 வருடங்களில் அவள் என்னை ஒட்டிக் கொண்டும் 
நான் அவளைக்  கட்டிகொண்டும் திரிந்த காலங்கள்......

ம்ம்ம் ....அது ஒரு கனாவில் உலா வந்தது போல்....

நான் இயல்பாகவே நமது சமூகக் கலாச்சாரக் கொள்கைகளில் பற்றுள்ளவன்.அவற்றில் வழுவாதிருக்கும் குடும்பத்தை நடத்தி வர முயன்றவன்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இக் கொள்கைகளில் நான் கொண்டுள்ள  கடுமையான அணுகுமுறைகள்  ’அவள் பாதை வேறு’: எனது பாதை வேறு’ என்றாகி எனது பாதையிலிருந்து அவளை .’ஒவ்வாமை’ என்னும் பிடிவாதம் பிரித்து  விட்டது.

ஆம்!

நவீனகால நடைமுறையில் நாட்டம் செலுத்தத் தொடங்கிய அவளுக்கு
நான் வேப்பங்காயாகத் தெரியத் தொடங்கியதால், நான் அவளுக்கும்;
அவள் எனக்குமாக ஒவ்வாதவர்களாக மாறி விட்டோம்.

அதன் விளைவாக ‘17 ஆண்டுகளாக என் உணர்விலும் உள்ளத்திலும் 
இரண்டறக் கலந்து உதிரப் பாசம் கொண்டிருந்த அவளை,மறந்து விடுவது’ 
என்ற வைராக்கியத்துக்கு நானும் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.

அதன்படி நாங்கள் பிரிந்து  7 ஆண்டுகள் சென்றுவிட்டன.
என்றாலும் 

அவ்வப்போது, என் உள்ளத்தில்
அவளைப் பற்றிய உணர்வுகளும்
எண்ணங்களும் தனிமையில்
தோன்றும்;அப்போது, எனது
கட்டுப்பாட்டையும் மீறி,
நீர்த்திவலைகள் தோன்றி
கண்ணையும் நெஞ்சையும்
அடைக்கும்.

அந்த நிலையில் ’எங்கேயாவது.,அவளை, வழியிலாவது பார்க்க வேண்டும்” 
என்கிற தடுமாற்றமும் தான்தோன்றித் தனமாகத் தோன்றும்.

என்னை நெருங்கிப் பழகிய நண்பர்கள்,என்மீது கழிவிரக்கம் கொண்டு
அவள் இருக்கும் இடம் தெரிந்து என்னை அழைத்துப் போகவோ
அல்லது அவளை அவளைக் காண்பதற்கோ விரும்பி என்னை வற்புறுத்திய போதும் ‘ஞானவைராக்கியத்தோடு’ மறுத்து விடுவேன்.

‘நான் அவளை பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்று எதிர்வாதம் செய்து
அவர்களையும் பேசாதிருக்கச் செய்து விடும் எனது கோபம்.

இருந்தபோதும்,
எனது புகைப்பட ஆல்பத்தில் அவள் என் தோள்மீது தவ்வித் தொற்றிக்
கொண்டிருப்பதும், எனது பேனாவைப் பிடுங்கி அவள் கர்ம சிரத்தையோடு
எழுதிக் கொண்டிருப்பதும், அவளுடைய பிறந்த நாள் காலப் புகைப் படங்களில் ஒரு தேவதைபோல்  அவள் குதூகலித்துக் கொண்டிருப்பதுமான காட்சிகள் என் கண்ணில் படும்போதெல்லாம் நெஞ்சில் ஓர் ஈரம் இளகி, விழித்திரையை மறைத்துக் கொண்டு,சற்று தடுமாற வைத்து விடும்.

அப்போதெல்லாம்,’வீரன் நீ, விழிநீர் சிந்தலாமா?’ என்று மனச்சாட்சி கேட்கும்; உணர்ச்சிகளிலிருந்து என்னை விடுவிப்பது அதுதான்.

நேர்மைக்கும் நிஜமான உறவுக்கும் பகையாகிவிட்ட குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற சூழ்நிலை ஏற்பட்டபிறகு தனிமைதான் எனக்கு உறவானது.

அதன் கொடுமை சற்று வித்தியாசமான சூழலை ஏற்படுத்தியபோது அதைத் தவிர்க்கும் காரணியாக முகநூல் எனக்கு வாய்த்தது.

எழுதினேன்;எழுதினேன்...
ஏராளமான விஷயங்களைக் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும். கருத்துக்களாகவும் எழுதினேன்;

ஏராளமான நண்பர்கள் எனக்கு நண்பர்களாக முகநூலிலும் வலைத்தளத்திலும் எனக்குக் கிடைத்தனர்.ஆனாலும் அவள் எனக்குக் கிடைக்கவில்லை;குறைந்த பட்சம் முகநூல் நட்பாகக் கூட.

’இந்தக் கானலிலாவது அவள் தோன்றி தொலைதூர நட்பில்  இருக்கட்டுமே’ என்று மனம் விரும்பியபோது, அவள் பெயரை இணையதளத்தில் – கூகுளில் தேடினேன்.

அதோ-
நன்றி கெட்டவளாக அவள் மாறிப் போயிருந்தாலும் நன்றிமிக்க நாய்களுடன் புகைப்பட ஆல்பத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

’நானே உலகம்; என்ற உயிர்த்துடிப்போடு அவள் என்னுடன் இருந்த காலச் சூழலில் எனது சிந்தனைகள் சுழலத் தொடங்கின....

‘ஏய்...சபா,அதோ ‘சுமதி” (அவள் பெயர் இங்கு மாற்றப்பட்டுள்ளது) என்று அவளுடைய பெயரைச் சொன்னால்போதும்,அந்த நாய் இங்கும் அங்கும் தாவிக் குதித்து, வாசல் கேட்வரை தவ்வி ஓடிப் பார்த்து விட்டு,திரும்பவும் நம்மிடம் வந்து குரைக்கும்.

அந்தக் குரைப்பில் ‘எங்கே தன் எஜமானியை காணவில்லை?’ என்ற அர்த்தம் அவதானித்திருக்கும்..

வீட்டில் இரண்டுகால் நாய்களோடு அந்த நான்குகால் ஜீவன் வளர்ந்து,எல்லோர் மனதிலும் எல்லைமீறிய விசுவாத்தைக் காட்டி பாசம் கொண்டிருந்தது. அதன் அறிவுத்தனத்தைப் பற்றி இன்னொரு தனிப்பதிவுதான் தர வேண்டும்..

சபாபதி’ என்று அதற்குப் பெயரிட்டுக் கொண்டனர் அவளும் அவள் உடன் பிறந்தாரும்.

’வாய் இல்லா ஜீவன்களை வளர்த்தால் நம்மைப் போலவே அவற்றின் தேவைகளை அறிந்து வளர்க்க வேண்டும்’ என்பதில் கண்டிப்புக் காட்டுவேன்.

என்னுடைய Uncompromised Policyகளில் இதுவும் ஒன்று.

பல சமயங்களில் சபாவைக் கட்டிவைத்து விட்டு’அதற்கு என்ன தேவை? என்பதை மறந்து –தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மெய்ம்மறந்து போய்,அந்த இரண்டுகால் ஜீவன்கள் பொழுது போக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து,பொறுக்காமல் கடுமையாகக் கோபித்து கொண்டு அந்த ‘சபா’வை நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்து விட்டேன்.

இதனால் சில நாட்கள் அழுது விரக்தியில் பட்டினி கிடந்து உள்ளிருப்பு ஒத்துழையாமையைக் காட்டி,எனது இறுகிய மனதை இளக வைத்து
சபாவை மீட்டுக் கொண்டவளை அந்த இணைய தளத்தில் பார்த்தபோது,
’அதே சபாவையும் என்னை விட்டுப் பிரிந்த காலத்தில் ’அதுவும் நானும்
ஒன்றுதான்’ என்ற கணக்கில் எனது சொந்த ஊரில் நடு ரோட்டில் விட்டுப்போன அவளுடைய அரக்க மனமும் என்முன் தோன்றிற்று.

‘இப்பொழுது எனது கண்டிப்புக்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு,
தன் போக்குக்கு ஏற்ப, நவநாகரீகமாக வாழ்கிறாள்’என்பதை அந்த இணையதளப் படங்கள் எடுத்துக் காட்டின.

திடீரென்று ஒரு ஞானம் பிறந்தது.

‘இப்பொழுது,தனக்கென்று ஒரு வலைத்தளம்- அதுவும் நாய்களின் பெருமைகளைப் பேசுவதற்கென்று வைத்துக் கொண்டிருக்கும் அவள்,
இந்த முகநூலிலும் இருப்பாளே!; தேடிப் பார்’ என்றது மனம்.

மனம் கட்டளையிட்டவாறே,அவள் பெயரை ‘கிளிக்’ செய்தேன்.

அட... அவள்தான்!

தனது பெயரை மற்றிக் கொள்ளாமல் எனது பெயரின் ‘இனிஷியலுடன்’ அப்ப்டியே முகநூலில் இருந்தாள்.

‘நாம் நமக்குள் அற்றுப்போன பந்தபாச உறவுகளைப் புத்துப்பித்துக் கொள்ள வேண்டாம்;குறைந்த பட்சம் முகநூல் நண்பர்களாகத் தொடர்ந்தால் என்ன?’
என்று ஒரு தகவல் அனுப்பி அவளது நட்பைக் கோரினால் என்ன?

என்று எண்ணிய மனது –
ஒருவகைக் கடமை உணர்வு உறவின் கோடு போட, அவளை எனது முகநூல் நண்பராக்கிக் கொள்ள Friend’s request சொடுக்கியை ‘கிளிக்’ செய்தேன்.

முகநூல் தளத்தின் தானியங்கிச் சொடுக்கி சொல்லிற்று:

‘You can’t contact a stranger’

’அறிமுகமற்ற- அந்நியருடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது’

ஓ...!
அவள் எனக்கு ஒரு Stranger (அந்நியமானவள்) என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிற இந்த கணினிக்கு ’நானும் அவளும் கடந்த 17 வருடங்களாக உதிரத்தாலும் உயிரிப்பிணைப்பாலும்  வாழ்ந்து கொண்டிருந்த ’தந்தை-மகள் உறவு என்ன?’ என்பதுதான் தெரியவில்லை.

தெரியவில்லை என்பது இந்தக் கணினிக்கு மட்டுமா?
அவள் கற்றுக் கொண்ட இந்த நவீனமயக் கல்வி அறிவுக்கும்தான்!

மனம் இறுக்கமானாலும் அதன் நினைவுகள் இளகத்தான் செய்கின்றன!

இவண்.
கிருஷ்ணன்பாலா

Monday, October 22, 2012

அறிவுச் செல்வம் அளித்த அன்னை



என்னைப் படைத் துலகை எந்நாளும் காத்துவரும்
அன்னைகலை வாணியவள்;அடிமலரைப் போற்றுகின்றேன்!

முன்னை வினை யாவும் முற்றாக அழித்தவளின்
பின்னை யான்தொடர்ந்து பெருமைகளைப் பூட்டுகின்றேன்!

‘ஏதிலான்போல்’ என்னை இருக்க வைத்திவ் வுலகில்
‘ஏது இலான்இவன்?’ என்று இராஜனையும் அஞ்ச வைத்தாள்!

கற்றோர் சபை நிறுத்தி கல்லாத என்உளத்தில்
மற்றோர் மயங்குகின்ற மாத்தமிழை மிஞ்ச வைத்தாள்!

பொற்றா மரைக்குளத்தில் புலவரெலாம் ஏங்குகின்ற
நற்றாள் சுவடி எலாம் நாடிவந்து எனக் கீன்றாள்!

அறிவென்னும் ஆயுதத்தை அடையாளம் காட்டி,அதில்
செறிவோடு சிந்திக்கும் சிந்தனைக்குள் எனை ஆண்டாள்!

‘பொன்னும் பொருளும்தினம் பொய்நின்ற வாழ்வோடு
மின்னும் சுகங்கள்’ என மேதைமையில் சிரிக்கின்றாள்!

‘திருமகளின் திருவடியும் தீரத்தின் மலைமகளும்
பெருமைக்கு உரிய தென’ப் பேசுவதை ரசிக்கின்றாள்!

மதியிழந்து போனபின்னர் மாளாத செல்வத்தின்
கதி என்ன ஆகும்? எனக் கண் சிமிட்டிக் கேட்கின்றாள்?

வீரமெனும் ஆற்றல்கள் விளைவிக்கும் பெருமை எலாம்
கூர்மைமிகும் புத்திமுன் குனிய வைத்துப் பார்க்கின்றாள்!

சிந்திக்கும் அறிவோடும் சீரான தெளிவோடும்
வந்திக்கும் விதியளித்து வாழ்வளித்தாள் என் அன்னை!

உண்மை,உயர் நோக்கம் ஒரு நாளும் தளராத
திண்மை மிகும் நெஞ்சம்; தெளிவான தமிழ்த் தேடல்!

நேர்கொண்ட எழுத்துக்கள் நிஜமான கருத் துக்கள்;
‘யார் என்னை எதிர்த்தாலும் எதிர் நிற்க முடியாது!
 
பார்” என்று பறை சாற்றும் பைந்தமிழின் வல்லோனாய்
வார்த்தென்னை வைத்தாளை  வணங்கு கின்றேன்;இந்நாளில்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2012

Wednesday, October 17, 2012

கவியரசருக்கு அஞ்சலி!





இன்று (17.10.2012)
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்!
---------------------------------------------------------------------------------
ம்பனையும் கவிகாளி தாசனையும்
கண்டதில்லை என்றாலும்நாமெல்லோரும்
நம்பும்படி நாவளமும் பாவளமும்
நலமார்ந்த சொல்வளத்தால் கூட்டியிங்கு
செம்மார்ந்த சிந்தனைகள் படைக்க ஒரு
செட்டிமகனாக வந்த கண்ணதாசன்!
நம்மை விட்டகன்றாலும்;அவனை இன்று
நினைக்கின்றோம்;நிகரில்லாக் கவியரசாய்!

சித்தர்களும் முத்தர்களும் அன்று சொன்ன
செந்தமிழின் பாடல்களை நம்எல்லோர்க்கும்
தத்துவமாய்,எளிய தமிழ்ப் பாட்டுக்களாய்
தந்ததொரு தனிக் கவிதைப் பேராசான்;
இத்தரையில் ஒருவன் என வாழுகின்றான்;
இவன்நிகர்த்த கவிஞனை நான் கண்டதில்லை!
அத்தகைய வித்தகனை;அறிஞர் போற்றும்
அமரகவி ஆனவனை நினைக் கின்றேனே!

போதையில் கீதையைச் சொன்னவன்;
கீதையின் போதையைத் தந்தவன்;
மேதையர் போற்றுமோர் மேதையாய்
மேன்மைத் தமிழ்க் கவி ஆனவன்!
போதையில் வாழ்ந்தவன் ஆயினும்;
புத்தியை நேர்மையில் வைத்தவன்;
காதலில் தனித் திறம் மிக்கதோர்
காவியப் பாடல்கள் புனைந்தவன்!

அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நூலை
அறிஞரையும் வறிஞரையும் மயங்கவைத்து
அர்த்தம் உள்ள நீதிகளைச் சாற்றினான்;
அறத் தமிழை வடித்தப் புகழ் ஏற்றினான்!
கர்த்தரைப் போற்றிடும் மேன்மையில்
கவிதையில் ஏசுவின் காவியம் 
சித்தனாய்ச் செதுக்கிய வித்தகன்;
சாவிலாச் சரித்திரம் ஆனவன்!

இவன்போன்று உண்மைகளைச் சொல்லியிங்கு
ஏடெடுத்து எழுதியவர் எவருமில்லை!
அவன்போல எளியதமிழ்ச் சொல்லெடுத்து
அற்புதங்கள் நிகழ்த்தியவர்  நிகருமில்லை!
தவறுகளை எதிர்த்தெழுதும் தைரியத்தை
தனக்குரிமை கொண்டானை இந்த நாளில்
கவலையுடன் நினைக்கின்றோம்;கவியரசைக்
கண்கலங்கி எண்ணுகிறோம்;நண்பர்களே!

கண்டபடி பாட்டெழுதி,காசு பண்ணிக்
காவியத்தின் நாயகனாய்க் காட்டிக் கொண்டு
மண்டியிட்டு,ஆள்வோர்க்குலாலிபாடி
மானமின்றிக் ‘கவியரசுஎன்று சொல்லி
முண்டமெனப் பலர் வாழும் நிலையில்;ஒரு
முழு ஞானக் கவித் திறனைக் கொண்டு புகழ்
கண்டவர்தான் கவியரசு கண்ணதாசன்!
கண்களில் நீர்பெருக நினைக்கின்றேனே!

சொல்லழகு,பொருளழகு,படைப்புத் தோறும்
சுவைமிகுந்த எழுத்துக்கள்,கவிதை என்று
எல்லையறு தத்துவத்தை எடுத்துரைத்து
எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்
வல்லமையைப் பெற்றிருந்த,கவியரசே!
வணங்குகின்றேன்,உனை இந்த  நாளில்;
இல்லை;உனை நிகர்த் தெவரும் இல்லை;
இருப்பவர்கள் எல்லோரும் சிறுவரன்றோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா

Sunday, October 14, 2012

ஈனருக்குரைக்கும் பாடம்

நண்பர்களே,

வானரம் மழைதனில் நனைந்திடத்  தூக்கனம்
தானொரு நெறிசொலத் தாண்டியே பிய்த்திடும்;
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்குரைத்திடல் இடறுத லாகுமே!


என்று ஒரு பழம் பாடல்.

தமிழில் கிடைத்திருக்கும் பொக்கிஷம் இது.

இதன் விளக்கம்: 

குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது.
அருகில் தொங்கிக் கொண்டிருந்த கிளையில் கூடுகட்டி அதன் உள்ளே பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்த தூக்கனாங்குருவிநீயும் உனக்கேற்றபடி ஒரு கூட்டைக் கட்டி இருப்பாயானால் மழையில் நனையாமல் இருக்கலாமே!’ என்று குரங்குக்கு ஆலோசனை கூறிற்று.

குரங்குக்கு வந்தது கோபம்.

”எனக்கா புத்தி சொல்கிறாய்? நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?”என்றபடி அந்தக் கிளையில் தாவிக் குதித்து அங்கே தொங்கிக் கொண்டிருந்த கூட்டைப் பிய்த்தெறிந்து விட்டுப் பழையபடி மழையில் நனைந்து நடுங்கத் தொடங்கிற்று.

பண்போடும் பக்குவத்தோடும் வாழ விரும்பாதவர்கள் எவ்வளவுதான் படித்திருந்த போதிலும் ஞானமும் கல்வியும் இல்லாத மூடர்கள்அவர்கள் இந்தக் குரங்கை ஒத்தவர்கள்.


மூடருக்கு நன்னெறியைப் போதித்தால் அவர்கள் நம் மீதே பாய்ந்து பிராண்டிக் காயப்படுத்தி இன்புறும் இயல்புள்ளவர்களாக இருப்பர்களே அன்றி, எண்ணிப்பார்த்துத் தங்களைச் செம்மைப்படுத்தும் சிந்தனை சிறிதும் கொள்ளாதவர்கள் என்பதை அனுபவத்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.10.2012

Thursday, October 11, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை! (தொகுதி:3)






கண்ணுடையோர் காணுங்கள்;
காதுடையோர் கேளுங்கள்;
எண்ணமுடையோர் எழுதுங்கள்;
இதயம் உடையோர் திறவுங்கள்.


நல்ல கருத்துக்கள்
நாலா திசைகளிலும் பரவட்டும்

இவண்-
கிருஷ்ணன்பாலா






51
நான்-
விதைகளைத் தூவினேன்:

அவற்றில் பல
களிமண்னில் வீழ்ந்து
வீணாய்ப் போயின

இன்னும் பல
பாறைகளில் வீழ்ந்து
பட்டுப் போயின

மேலும் சில
களர்நிலத்தில் வீழ்ந்து
கருகிப் போயின

சில
நல்ல நிலத்தில் வீழ்ந்து
கவிதைகளாய்
நிறைந்த
விளச்சலைத் தந்தன!


52
நான்-
வைரத்தை
வாரிக் கொண்டு
வந்தபோதெல்லாம்
‘கண்ணாடி’என்றே
சாட்சி சொன்னவர்கள்தான்

இப்போது-
கண்ணாடித் துண்டுகளைக்கூட
’வைரம்’ என்றே
வாழ்த்தத் துடிக்கின்றார்கள்!

53
அழகு
கர்வத்தை தருகிறது;
கர்வத்தால்
அறிவு மழுங்குகிறது.

அழகு என்பது
மறையக் கூடியதுதான்;
அறிவு என்பது
வளரக் கூடியது.

அழகு குறையக் குறைய,
அறிவு
அதிகம் அழகு பெறுகிறது.


54
காதலில் மூழ்கியோர்
கரை சேருவதில்லை;
ஏன்
அது ஓர்
சுழல் நீரோட்டம்;
அதில் சிக்கியவர்கள்
அதன் சுழலில்
அடித்துச்
செல்லப்பட்டு விடுகிறார்கள்.



55
அக்ஷய திருதியை 
நல்ல நாள்தான்.

அதைவிட-
அதன் பெயரால்
ஏமாற்று விளம்பரங்கள்
மூலம்
பெரும்பாலான மக்களின்
பணத்தைச் சுரண்டி
கோடிக்கணத்தில்
கொள்ளை லாபம்
சம்பாதிக்கும்
நகைக்கடை அதிபர்களுக்கு
நல்லநாள்தான்
என்பதில் 
சந்தேகமே இல்லை.


56
ரம்ஜான் வாழ்த்துக்களை
இந்து சகோதரனிடமிருந்து
பெருமையாக
ஏற்றுக் கொள்ளும்
இஸ்லாமியச் சகோதரன்
என்றைக்கு
விநாயகர் சதுர்த்தியிலும்
தீபாவளிக் கொண்டாட்டத்திலும்
இந்து சகோதரனுக்கு
வாழ்த்துச் சொல்கிறானோ
அன்றைக்கு
இந்தியாவில்
இஸ்லாம்
உயர்ந்த நிலையை
அடைந்துள்ளது
என்பதை
ஒப்புக் கொள்கிறேன்.


57
வேல் உள்ளவன்
வேலன்

அதேபோல்-
வில்லை வைத்திருப்பவன்
வில்லன் ஆகிறான்;

அப்படியென்றால்-
மூடு உள்ளவன்:
மூடன் தானே?



58
இந்தியப் பாராளுமன்றம்
என்பது என்ன?

ஊழல் எதிர்ப்பு
என்ற பந்தை
எல்லாக் கட்சிகளும்
ஒரே அணியில் திரண்டு,
உதைத்து
வெளியே எறிவதில்
போட்டி போட்டுக் கொண்டு
விளையாடும்
புகழ்பெற்ற
கால் பந்து மைதானம்.


59
பூகோள ரீதியில் -
இமய மலைதான்
உயர்ந்தது
என்ற
உண்மையை –

எங்கள் நாட்டுச்
சமய மலைகள்
சாய்த்து விட்டன.


60
மூடர்களின் சபையில்
முதல்வனாய்
இருப்பதை விடவும்-

அறிஞர்களின் சபையில்
அடிமையாய்
இருப்பதில்
பெருமைப் படுகிறேன்!



61
அன்பை விதைத்தவன்,
ஆனந்தத்தை
அறுவடை செய்கிறான்;

வம்பை வளர்த்தவன்
வழக்கை
அறுவடை செய்கிறான்;

பணத்தைப் புதைத்தவன்
பாவத்தை
அறுவடை செய்கிறான்.


62
உண்மையற்ற புகழ்ச்சியில்
மயங்குவதும்;
நேர்மையற்ற நடத்தைகளில்
நீந்துவதும்
தற்கொலைக்கு நிகரானது.
அதில்
உங்கள் மனசாட்சி
தூக்கிட்டுக் கொள்கிறது

63
தோல்விகளைப் பற்றிக்
கவலைப்படுபவன் கோழை;
வெற்றிகளில்
மூழ்கி விடாதவனே வீரன்





64

செல்வத்தின் சிறப்பு
‘அது
சேர்வதில் அல்ல;
எப்படிச்
செலவிடப் படுகிறது?’
என்பதில்.


65
சிரிக்கத் தெரிந்தவன்,மனிதன்;
சிந்திக்கத் தெரிந்தவன் அறிஞன்;
சிந்தித்ததை எண்ணிச் சிரிப்பவன்:ஞானி



66
எண்ணற்ற நண்பர்கள் எனக்கு
என்பது பெருமையன்று;
எண்ணிப் பார்க்கும் நண்பர்கள்
வட்டமே பெருமைக்குரியது!


67
என்னோடு 
ஒத்துப் போவதற்கு
நீங்கள்
நண்பர்களாகத்தான் 
இருக்கவேண்டுமென்பதில்லை;

எதிர்ப்பாளர்களாகவும் 
இருக்கலாம்;

என்னோடு முரண்படுவதால்
நான்
உங்களை 
எதிரி என்று
ஏற்றுக் கொள்பவன் அல்லன்.

ஏனெனில் -
எனக்குச் சரியான
எதிரியை
நான்
இன்னும்
அங்கீகரித்துக் கொள்ளவில்லை.


68
தாழிப்படாத கதவு;

பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் மணி பர்ஸ்;

பெண்ணின்
மார்பகத்தை விட்டு
விலகியிருக்கும் முந்தானை...

இவை-

குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!


69

பிஞ்சிலே பழுக்கும் பழம்;
அஞ்சிலே அரும்பும் காதல்;
பஞ்சிலே வைக்கும் நெருப்பு!
நெஞ்சிலே நிறுத்தல் நலம்!


70
பெட்டைக் கோழிகளுக்கு
அழகே கேவுதல்;
முட்டை இடுதல்;
அடைகாத்தல்;
குஞ்சு பொரித்தல்கள்தாம்!

ஆனால்
பெட்டைக் கோழிகள்
கேவினால் போதும்-
சேவல்கள்
அவற்றை ஆராதித்துக்
கூவி அடைகாத்துப்
பொறிக்கின்றன:
தங்கள் காமத்தை மட்டும்.

எங்கே?
இந்த முகநூலில்தான்.


71
இன்று
வள்ளுவனை
எல்லா மதத்தினரும்

தங்கள் சித்தாந்தங்களுக்கேற்ற
குறளை முன் மொழிந்து
விளக்கம் சொல்லி
அவர்
தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்
என்று
உரிமை கொண்டாடுவது
பெருகி வருகிறது.

இதிலிருந்து
நாம்
பெருமைபட்டுக் கொள்ள வேண்டியது:

‘வான் புகழ் வள்ளுவத்தை
எல்லா மதங்களும் ஏற்கின்றன‘
என்பதைத்தான்.


72
அரசியலில்
எம்.ஜி.ஆர் அவர்கள்
கலைஞருக்கு நாமம் போட்டார்;
கலைஞர் அவர்களோ
தமிழருக்கு நாமம் போட்டார்;
தமிழருக்கு நாமம் போட்ட
கலைஞர் அவர்களுக்கு
மேடம் ஜெ. அவர்கள்
நாமம் போட்டார்.

ஆனால்
காலம் செய்த சூட்சுமத்தால்
இவர்கள்
எல்லோரும் ஓர் அணியில்
திரண்டு நிற்கின்றார்கள்

எப்படி?

அண்ணா அவர்கள்
திராவிடம் என்ற பெயரில்
பெரியாருக்குப் போட்ட
நாமத்துக்குப்
பழிக்குப் பழியாக
இவர்கள் மூவரும் ஓரணி திரண்டு
அண்ணாவுக்குப் போட்டு வரும்
நாமக் கூட்டணிதான்.

73
Really I am a beggar;
but
bigger than anybody.
நான்
உண்மையான
பிச்சைக்காரன்தான்;

உங்கள்
எல்லோரையும்விட
பெரிய பிச்சைக்காரன்.


74
சுடரை
ஏந்திக் கொண்டு
இருளைச் சுட்டெரிக்கத்
துடித்தது
மனது.

பிறகுதான்
தெரிந்தது:

சுடரை ஏந்தியபோதே
இருள்
செத்து விட்டது என்பது.



75
அனுபவங்களுக்காகக்
காத்துக் கிடந்தது
அறிவு.

பிறகுதான் தெரிந்தது

‘காத்திருப்பதே
நல்ல அனுபவம்’
என்று.


(சொற்கள் சுடரும்)