Sunday, July 20, 2014

நாளைய சந்ததிக்கு...




அறிவார்ந்த நண்பர்களே,

தமிழுக்கென்று தனிச் சிறப்பும் அதன் மொழிவழிப்பண்பாடும் உண்டு.

உலக மொழிகளியேயே மூத்த இனமாக மட்டுமின்றி பண்பாட்டிலும் பக்குவத்திலும் முன் நிற்கும் சமுதாயமாகவும் தமிம் இனம் மதிக்கப்படுகிறது.

அறிவிலும்  நீதி நெறி சான்ற அரசியல் முறைமைகளிலும் பிற சமுதாயங்களை வழிப்படுத்துவதிலும் தமிழுக்குள்ள இலக்கியச் செழுமையும் இலக்கண மரபும் தொன்றுதொட்டுத் துலங்கியிருந்து, ஈடு இணையற்ற தவச் சான்றோர்களைப் பெற்றிருப்பது தமிழர் மரபு மட்டுமே.

காலம் தோறும் தமிழ் வளர்கிறது. தமிழை அழிக்கவும் அலங்கோலப்படுத்தவும்  அவ்வபோது அறிவிலிகள்கூட்டமும் அரைகுறைகள் கூட்டமும் ஆரவாரம் செய்தபோதும் தமிழன்னை, தனது தொன்மையாலும் தொடர்பு மாறா இலக்கணச் சிறப்பினாலும்  அறிஞர்கள் நெஞ்சிலும் கவிஞர்கள் நாவிலும் சான்றோர் மரபிலும் அருகெனத் தழைத்து ஆல்போல் வேரூன்றி  அரியாசனம் கொண்டிருக்கிறாள்.

உலக இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் மூத்த,முதல் நின்ற அவளது இலக்கியச் சீர்மையையும் இணையற்ற பண்பாட்டுச் செழுமையையும் கடந்த 40-45 ஆண்டுகளாக இம்மண்ணில் சிறுத்துப்போகச் செய்த திராவிடப் பதர்களாலேயே அழிக்க முடியாத அவளுடைய   ஆளுமையை இன்றுள்ள கவிஞர்களும் அறிஞர்களும் தமிழ் மரபு போற்றும் தகைசான்ற  சீலர்களும் புரிந்து கொண்டு தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்குச் சிந்தை கொண்டிருத்தலே நாம் நம் தமிழ் அன்னைக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும்.

முதலில் இம்முகநூலில் எது தமிழ்ப் பண்பாடு? என்பதை இங்கே எழுதுகின்ற ஒவ்வொருவரும் எண்ணிப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முற்படுதுவது அவசியம்.

ஒழுக்கத்துக்கும் உயர் நெறிகளுக்கும் ஊறு செய்யும் வகையில் பதிவுகள் செய்வோரையும் படங்களைப் பதிப்போரையும் கண்டிக்காமல், எதிர்க்காமல்,எதிர்க் குரல் கொடுக்காமல், இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள்   ‘சங்கம்  அமைக்கிறோம்;சபை கூட்டுகிறோம்’ என்றெல்லாம் தத்தமது பக்கங்களில் எழுதுவதெல்லாம் வீண்;வெற்று வேலை.

நமது பண்பாட்டைச் சீர்குலைக்கும் சிந்தனைப் பரவல் இம்முகநூலில்
ஒரு நோய் போல் தொடர்கிறது.முதலில் இது குறித்த கவலைகளும் அதைப் போக்குகின்ற அக்கறையும் துணிவும் இல்லாமல் ’தமிழ்’ தமிழ்’   என்று பேசுவதாலும் குழுக்கள் அமைத்துக் கூடிக் கலந்துரையாடுவதாலும் என்ன மாதிரியான பயன் விளைந்து விடும்’ என்று நம்புகிறீர்கள்?

சினிமா, போலி அரசியல் சிந்தாந்த வாதங்கள், கவர்ச்சி உரையாடல்கள், வெட்கமற்ற விரசப் பதிவுகள், மஞ்சள்தனமான விமர்சனங்கள்,’இவள் அவனுடன் கூத்தடிக்கின்றாள்; இவன் அவளுடன் ஆட்டம் போடுகின்றான்; நான் இப்படித்தான்” என்றெல்லாம் நரம்பில்லாமல் பேசும் நாக்கையும் வரம்பில்லாமல் எழுதும் எழுத்தையும் வெத்துப் பிழைப்பாகக் கொண்டுள்ள வீணர்களின் பின்னே மந்தைகள்போல் திரியும் கூட்டத்தைக் கண்டிக்கவும் திருத்தவும் வழி உண்டா?

அதையெல்லாம் சிந்திக்காமல் சாலையோரக் கடை திறப்பதுபோல்
ஆளாளுக்கு குழுக்களை அமைப்பதும் நான் இத்தனை குழுக்களில் இணைந்துள்ளேன் என்று பெருமை பேசுவதும் ஒவ்வொருவரும் தாங்கள் உளறுவதையெல்லாம் நாட்டின் புரட்சிகர மாறுதலுக்கான எழுத்துப் புரட்சி’என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதையும் தவிர இம் முகநூலில் எம் மாதிரியான முன்னேற்றம் கண்டு வருகிறோம்?

கண்டவர்கள் விளக்குவார்களாக!

நீங்கள் இன்றைய தலைமுறையின் பிரதிநிதிகள் என்பது மட்டுமல்ல; நாளைய சந்ததியின்  வித்துக்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

வித்து ஒன்றை நட்டுவித்தால் விதை வேறாக முளைக்காது நண்பர்களே.

அந்த வித்து சத்தான வித்தாக,சாரம் குன்றாதிருக்க உங்களை முதலில் நன்கு தீட்டிக் கொள்ளுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.7.2014

Saturday, July 19, 2014

தீவிர வாதத்தின் திசை!



                    


அறிவார்ந்த நண்பர்களே,

ரஷ்யா-உக்ரைன் எல்லைப் பகுதியில் வான் வழியில் பறந்த மலேஷியன் பயணிகள் விமானம் MH 17  சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது.

சர்வதேச விமான சேவையில் மலேஷியன் விமானங்களுக்கு இது இரண்டாவது பெரிய அடி;இடி.

இதன்மூலம் ‘விமானப் பயணம்’ என்பது  ‘உயிருக்கு உத்தரவாதமில்லாதது’ என்னும் அச்சம் விமானப்பயணிகளிடையே  வேரூன்றத் தொடங்கி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதே மலேஷிய நாட்டு MH 17 ரகப் பயணிகள் விமானம், சீனக் கடல் பகுதி அருகே ஆழ்கடலில் வீழ்ந்து எந்த அறிவியல் முயற்சியாலும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும் அவலம் நீடித்திருக்கும் நிலையில், இப்போது மறுபடியும் உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் உக்ரைன்-ரஷ்ய எல்லையில் இதே மலேஷிய நாட்டு இன்னொரு  விமானம் பயணிகளுடன் ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உலகில் தீவிரவாதத்தின் எல்லைகளும் உத்திகளும் வளர்ந்து வருவதற்கும் அதன் பலம் கூடி வருவதற்கும் இந் நிகழ்வுகள்  ஆதாரம்.

இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற போது பல்வேறு ஊகங்கள் சிறகடிக்கத் தொடங்கி உள்ளன.

அவற்றில் மூன்று முக்கிய ஊகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. மலேஷிய நாட்டுக்குள் தீவிரவாத இயக்கத்தின் வேர் பற்றி இருப்பது.அதை வெளி உலகம் அறியாதவாறு மலேஷியாவே மறைக்கின்றதோ என்னும் `யூகம்.

2.பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்வதற்கான ’வான் வழித் தாக்குதல் ஒன்றே தங்களுக்கு எளிதானது என்பதைச் செயல் படுத்திட, இந்தியாவுக்கு எதிரான  தீவிரவாதிகளின் சதித்திட்ட திட்டத்தின் முன் வரைகளோ இம்மாதிரியான வான்வழித் தாக்குதல்?’என்ற ஐயப்பாடு.

3. சர்வதேச அளவில் பலம் பெற்று வரும் அல்கொய்தாவின் ஆயுத பலத்துக்கு எடுத்துக் காட்டாக  இம்மாதிரியான பயணிகள் விமானங்களை வீழ்த்தி சர்வதேசம் சமுதாயத்தை அச்சுறுத்தும்  வேலைகளை அந்தத் தீவிரவாதிகள் இயக்கம் தொடங்கி உள்ளது’ என்ற செய்திகளின் உண்மைத் தன்மை.

இம்மாதிரியான தீவிரவாதச் செயலானது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்துக்கு அபாயகரமான எதிர் விளைவுகளின் வித்துக்களாய் வீறு கொண்டெழுந்துள்ளன என்பதையும் தீவிரவாதத்துகென்று ஒரு புதிய திசை வீசத் தொடங்கி இருக்கிறதென்பதையும் நாம் உதாசீனப்படுத்தி விட முடியாது,

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

Friday, July 18, 2014

ஒழிந்தது ஈனப்பிரச்சினை!

அறிவார்ந்த நண்பர்களே,

’’ஈழப் பிரச்சினையை ஈனப்பிரச்சினை ஆக்காதீர்’” என்று முன்பு நான் எழுதி இருந்தேன்.

இதோ அந்த ஈனப்பிரச்சினைக்கு முடிவு கட்டியாகி விட்டது.

“ஈழம் தேவையில்லை’ நாங்கள் .ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரித்து இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்கிறோம்’’  என்று இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று  அறிவித்து விட்டது.

இலங்கை நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவே கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்தக் கொள்கை முடிவானது உலகின் அனைத்து நாடுகளாலும் குறிப்பாக இந்திய மக்களால் சொல்லப்போனால் இலங்கைவாழ் தமிழர்தம் இன்னல் என்றுதீரும் என்று கவலை கொண்ட தமிழருக்கெல்லாம் தித்திப்பூட்டும் செய்தி.

இதுதான் இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கும் அவர்களுடைய அறிவுத் திறன் மேம்பாட்டுக்கும் சரியான அரசியல் நிலை.

’தனி ஈழம்’ தனி ஈழம்’ என்று நம் செவிகள் கிழிய கத்திக் கொண்டிருந்த வெத்து வேட்டுக் காகிதப்புலிகள் இனி தங்கள் உதார்களைக் காட்டிக் கொண்டு ஏமாளித் தமிழர்களை மிரட்ட முடியாது.

’நாயர் பிடித்த புலிவாலாய், ஈழப்பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பேந்தப்பேந்த முழித்துக் கொண்டிருந்த அரசியல் வியாபாரிகள் அப்படா இனியாவது நாம் தப்பித்துக் கொள்ள வழி ஏற்பட்டு விட்டதே” என்று உள்ளுக்குள் பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவரை ஈழப்பிரச்சினையைக் காட்டி,இலங்கைத் தமிழர்களைத் தேசியப் பயங்கரவாதிகளாய்ச் சித்தரித்து  இலங்கையின் ஆளும் கட்சி மகிந்தா ராஜ பக்‌ஷேவின் தலைமையில் நடத்தி வந்த காட்டுத் தர்பார் உலக அரங்கில் இனி எடுபடாது போய் விடும்.

தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்குச் சிங்களவர்களுக்குச் சமமான ஜனநாயக உரிமைகளையும் சட்டச் சலுகைளையும்  இலங்கை அரசு இலங்கைவாழ் தமிழர்களுக்கு அதன் அரசு தந்தே ஆக வேண்டிய நிலை உருவாகி விட்டது.

இதுவரை இலங்கைத் தமிழர்களை தங்கள் கைப்பாவைகளாகக் கொண்டு ஆட்டிப்படைத்த  பிரிவினை வாதப்பேய்களான தமிழ் நாட்டு அயோக்கிய அரசியல் எத்தர்களின் கொட்டம் அடங்கியாக வேண்டிய சூழ்நிலையை நரேந்திர மோதியின் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களின்  ஒரு தலைமுறையினரின்  வாழ்க்கையையே சீரழித்து,அடுத்த தலைமுறையை அகதிகளாக்கி, வரும் தலைமுறையினரை அடிமைகளாகவே ஆக்கிக் கொண்டிருந்த இந்த’ ஈழப்பிரச்சினை- ஒரு ஈனப்பிரச்சினை’ என்பதை இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டு துணிச்சலாக  அதைக் கைவிட்டதன் மூலம் இங்குள்ள ஈனர்களின் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதில் அளவற்ற பூரிப்புக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் இப்படியாக  நரேந்திர மோதியின்வெற்றிக்குப் பிறகு  வந்து விட்டது என்பதில் தமிழ் இனம் வாழ எண்ணும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டுகிறது நண்பர்களே.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

Thursday, July 3, 2014

‘மாஸ்டர் யோகா’வின் ’மாஸ்டர்’

றிவார்ந்த நண்பர்களே, 
இன்றைய நவீன உலகின் வாழ்க்கையில் மனிதனின் தேவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அவனது தேவைக்கேற்ப அறிவியல் கண்டுபிடிப்புக்களும் பெருகி வருகின்றன.

ஆனால்,பண்டைய மனிதனின் வாழ்வியல் முறைகளும் அவனது பழக்க வழக்கங்களும் இன்றைய மனிதனின் வாழ்வியல் முறைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்டதான வாழ்க்கைமுறையாக அமைந்து, முன்பில்லாத நோய்களும் பிரச்சினைகளும் புதிது புதிதாக உருவாகி, ஆரோக்கியம் என்பது மனித குலத்துக்கே சவாலாகி வருகின்றது.

மனிதன் அன்றும் பிறந்தான்; இறந்தான்.
இன்றும் அதே நிலைதான்

எனினும், அன்றைய மனிதன் ஆனந்தமாக வாழ்ந்தான்.

அன்று மெய்ஞ்ஞானம் தேடும் மேலான எண்ணங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தான் அவன்.

’மனம் செழுமையுற்றிந்தால் நோய்களும் கவலைகளும் தன்னை அண்டுவதில்லை’ என்ற உண்மை அவனுக்குத் தெரிந்திருந்தது.

இன்றைய மனிதன் கவலைகளும் சோர்வுமாகத் தன் வாழ்நாளைத் தூக்கத்தில் பாதியாகவும் நோய் கொண்டலைந்து நொந்து வாழும் துக்கத்தில் மீதியாகவும்தான் ஆயுளைத் தள்ளிக் கொண்டு நடக்கின்றான்.

காரணம்,
இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள் பெருகிவிட்டிருப்பது.

விஞ்ஞானம் வளர வளர மனிதனுக்குத் தேவைகளும் அதைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான போராட்டமும் பற்றாக் குறையும் அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பதால் அதன் ‘By-Product களாய் (அதாவது பக்க விளைவுகளாக) சோர்வுகளும் நோய்களும் உடலையும் உணர்வையும் வருத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைய மனிதர்களுக்கு ஏதோ ஒருவகையில் ஏதாவது ஒரு நோய் அல்லது மனக்கவலை பற்றிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்றைய கால கட்டத்தில், மருத்துவர்களைத் தேடிச் சென்று பணத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற அவல நிலை மனித குலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவ மனைகளும்  ஊர்தோறும் பெருகி விட்டபோதிலும் மனிதர்களுக்கு  ஏற்படும் நோய்களை முற்றாகக் குணப்படுத்துவதாக அவை இல்லை.

பணத்தைச் செல்விட்டுக் கொண்டே இருந்தாலும் நோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும்  நோயைக் கண்டுபிடிப்பதிலும் அதன் காரணத்தை அறிவதிலும் இன்றைய மருத்துவத்தால் இயலாத நிலைதான் தொடர்கிறது.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், எவ்வளவுதான் மருந்துகள்தான் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை எல்லாம் மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இருந்தபோதும் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் நவீன மருத்துவத்தையே நம்புகிறார்கள். நோய்களை வளரச் செய்யும் சூழ்நிலையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்களே தவிர இயற்கையாகவே ஆரோக்கியமாக உடலையும் மனதையும் வைத்துக் கொள்ள்ள வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் வாய்த்திருக்கவில்லை.

இன்றைய யுகம் ’கணினி யுகம்’ என்று அறியப்பட்டபோதும் நோய்களும் அமைதியின்மையும் பீடித்திருக்கும் காலமாகவே பரவி நிற்கிறது; மனிதனுக்குப் பணமும் வசதிகளும் பெருகி விட்டபோதிலும் அற்றொடு பெருகி நிற்கும் கவலையைப் போக்கி, மனித குலத்தைச் செழிக்கவைக்கும் மருந்தை மட்டும் எவராலும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதற்கு மாற்றாகத்தான், எளிய முறையில் இயற்கையோடு இயைந்து வாழும் ஆனந்த நிலையைக் கற்பிக்கின்ற யோகாப் பயிற்சி முறைகள் இருக்கின்றன.

நம் முன்னோர் நமக்குப் புராதனச் சொத்தாக அதைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான அறிவு ஞானத்தை நாம் உணர்வோமானால் அதுதான் நம்மை வளமும் நலமும் மிகுந்த மானுடர்களாக இம்மண்ணில் வாழ வைக்கும்; நம் சந்ததியினரையும் பெருமைபடப் பிறக்க வைக்கும்.

நமது இந்தியப்பாரம்பரியத்தின் முன்னோடிகளான ரிஷிகள், இம்மாதிரியான பிற்கால மனிதர்களின் பிசகான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டுதான் உலகில் வேறு எந்த நாட்டிலும் சொல்லப்படாத இந்த ’சூக்கும ஞானக் யோகக் கலை’யை அறிவுள்ள மாந்தர் கடைப்பிடித்து உய்யும் வகையில் உரைத்துச் சென்றிருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தையும் வென்று அதனைச் சரண் அடையவைக்கும்  மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை மையமாகக் கொண்டிருக்கும் ’யோகா அறிவு’ என்பது உலகின் அறிவு சான்ற மக்கள் யாவரும் வியக்கும் நமது இந்தியப் பாரம்பரியத்தின் இணையற்ற சொத்து.

வேதகாலம் தொட்டு ஈடிலா இறைஞான சக்தியை மனிதருக்குள் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த ‘யோகாப் பயிற்சி முறை’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைத்து நிரூபித்தவர்கள் நம்நாட்டு ரிஷிகளும் சித்தர்களும்தான்.

’யோகா சக்தி’ மூலமே அவர்கள் ’சாகாக் கலை’என்னும் காயசித்தியை அடைந்திருந்தனர்.

அதைக் கொண்டேதான்,’இறைவன், ஆன்மா (மனம்), உடல் மூன்றையும் ஒருமைப்படுத்திய ஒப்பரிய தெய்வீக ஆற்றலைப் பெற்றனர்.

’தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்ற பரந்த அன்பினோடு அவர்கள் ’யோக சித்தியின் மெய்ஞ்ஞானப் பயன்களை உலக மாந்தர்க்கு எடுத்துரைத்து,தூய்மையும் ஆரோக்கியமும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இம்மண்ணுலகை நிரப்ப முயன்றனர்.

அத்தகைய ரிஷிகள் காட்டிச் சென்ற ’முறையான யோகாப் பயிற்சிகளை’க் கற்று, அதைத் தெய்வீக ஞான ஈடுபாட்டோடு பிறருக்குக் கற்றுத்தரும் தெள்ளறிவு மிக்க யோகா மாஸ்டர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் யோகா மாஸ்டர்களில் எளிமையும் நேர்மையும் ஞானமும் கொண்ட தனிச் சிறப்புக்களோடு இன்று முறையான யோகாப் பயிற்சியைக் கற்றுத் தருகின்றவராகவும் மருந்தில்லாமலே சில அற்புதமான யோகா முறைகளை நோயாளிகளைச் செய்யவைத்து நோய் தீர்க்கும் ‘யோகா தெரபிஸ்ட்’டாகவும் எனது உற்ற நண்பராகவும் திகழ்கிறார் ஒருவர்.
 
வெளிநாட்டுப் பெண்மணிகள் மாஸ்டர் லாராவிடம் யோகா கற்கும் காட்சி
நான் பெற்றுள்ள நட்பை இதைப் படிக்கின்ற நண்பர்களும் பெற்று பயனுறு வாழவேண்டும் என்பது என் நோக்கம்.

நண்பர் லாரா அபிஷேக்.
தமிழ் நாட்டுக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய பொக்கிஷம்.
மாஸ்டர் யோகாவின் மாஸ்டர்
  லாரா அபிஷேக்
வியக்கத்தக்க யோகாக்கலை அறிவைப் பிறவியிலே பெற்றவராகி, அதைத் தனது சொந்த அறிவினால் விருத்தி செய்து கொண்டவர்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உயர் கல்வியைக் கற்கும் வசதி இன்றி அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றவர் கற்ற கல்விக்கும் மேலான வருவாயைத் தந்த வேலையில் சேர்ந்த போதும் இரவு பகலாக அவருக்குள் யோகாக் கலை அறிவு’ பற்றிய  உணர்வு மானசீகமாகத் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிழைப்புக்காக வாழும் சூழ்நிலையைக் கைவிட்டுத்  தாய் நாட்டுக்கே போய் உண்மையான யோகா ரகசியங்களை உரிய முறையில் தெரிந்து கொண்டு உலகத்தார்க்கு யோகாக்கலையின் உன்னதமான பயிற்சியாளர்களை உருவாக்கவும் தன்னை நாடிவருவோரின் நோய்களை யோகாப் பயிற்சிகள் மூலம் மருந்தில்லாமல் குணப்படுத்தும் மாஸ்டராக உயரவும் அந்த  ‘மானசீக உணர்வு தூண்டித் தூண்டி,’மாஸ்டர்யோகாவின் மாஸ்டராகும் ’காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; புறப்படு புறப்படு’ என்ற வலியுறுத்தலை உள்ளுணர்வு கட்டளையாக இட்டுக் கொண்டே இருந்தது.

அதன் அழுத்தம் அதிகமாகவே ஒருநாள் அரேபியாவில் கிடைத்திருந்த நல்ல வருமானம் தந்துவந்த வேலையை தோளில் போட்டிருக்கும் துண்டுபோல் உதறித் துணிவோடு தமிழ் நாட்டுக்கே வந்தார்.

சென்னைக்கு வந்த லாரா, இந்தியாவில் பிரசித்தி பெற்றிருந்த யாக்ஞவல்கியர் பாரம்பரிய யோகாப் பயிற்சி மையத்தை நடத்தும் மிகப் பிரபலமானவரிடம் சென்று தனது விசேஷமான யோகாப் பயிற்சி முத்திரைகளின் படத் தொகுப்பைக் காட்டினார்.

அதுவரை வேறு எவரும் செய்து காட்டியிராத அற்புதமான யோகா முத்திரைகளை லாராஅபிஷேக்கிடம் உருவாகி இருப்பதைக் கண்டு வியந்த அவர், இவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் அங்கு யோகாப் பயிற்சியாளராக இருந்த லாராவுக்கு அக்கலையின் வியக்கத்தக்க அறிவும் ஆராச்சியும்  கைகூடிக்கொண்டே வந்தன.

நண்பர்கள் பெருகினர்; நம்பிக்கையும் பெருகிற்று.

பிறரிடம் பணியில் இருந்து கொண்டு யோகாக் கலைஞானத்தை அடகு வைத்து வாழும் நிலையைத் துறந்தார்.

இறைஅருளால் தனக்குள் வாய்த்திருக்கும் யோகாக் கலையை உலக மாந்தர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அக்கலையினால் மனிதர்களுக்கு ஆரோக்கியமும் ஆனந்தமும் பெருக வேண்டும்; நோயற்ற உலகில்  மனிதர்கள் நடக்கப் பாதை அமைக்கும் பணியில் பங்கு கொள்ள வேண்டும்’ என்ற லட்சியத்தை வலுப்படுத்திக் கொண்டுவிட்டார்.

இதன் காரணமாகத் தனது யோகாப் பயிற்சிகளைப் போதிப்பதற்கென்று ஒரு யோகா மையத்தை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்.

’விநியோகா ஹீலிங் சென்டர்’ (Vinie Yoga Healing Center) என்பது இவரது யோகாமையத்தின் பெயர். சென்னையில் பெசன்ட் நகரில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

யோகாவின் ஆழமான நேர்த்தியான,எளிமையான பயிற்சி முறைகளை தன்னிடம் பயில வருகின்றவர்களுக்குக் கற்றுத்தருவது இவருடைய தனிச் சிறப்பு.

இம்மையத்தின் மூலம் ஒருவருடைய உடல் மற்றும் மன நிலைக்கேற்ப ஆசனப் பயிற்சி, பிராணயாமப் பயிற்சி, பிராணக் கிரியாப் பயிற்சி, தியானப் பயிற்சி முதலானவற்றைப் போதிக்கிறார்.

மனதினைத் தூய்மைப்படுத்தி உடலையும் உணர்வுகளையும் ஒன்றிணைத்து உற்சாகமுறச் செய்யும் அற்புதத்தை உருவாக்குவதில் இவர் ஒரு ’மாஸ்டர் ’என்பதை அனுபவத்தின் மூலம் எவரும் உணர முடியும்.

தன்னிடம் இயற்கையாகவே குடிகொண்டு வளர்ந்து வரும் யோகா ஞானத்தைக் கொண்டு உடலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நோய்களை எல்லாம் மருந்தே இல்லாமல் டாக்டர்களே வியக்கும்படி முழுமையாகத் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் நோய் தீர்க்கும் யோகா தெரபி முறையில் நோயாளிகள் எல்லோருக்கும் பொதுவான யோகா முறைகளைச் செய்ய வைக்காமல் ஒவ்வொருடைய உடல் அமைப்புக்கு ஏற்றவகையிலான யோகா உத்திகளை இவராக அனுமானித்துத் தருகின்ற பயிற்சிகள்தான் நோயாளிகளின் நோய் விரைவில் குணமாகக் காரணமாகின்றது.

இந்த முறையில் டாக்டர்களால் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராமல் நோயாளிகளின் தன்னம்பிக்கையைச் சிதைத்து வந்த நோய்கள், இவருடைய யோகாப் பயிற்சி முறையால் வியக்கத்தக்கவாறு ஓரிரு நாட்களில் கட்டுப்படுத்தப்பட்டு இரண்டு மூன்று மாதங்களில் முழுமையாகக் குணமாகி விடுவதுதான்.

குறிப்பாக முதுகுவலி, இடுப்பு வலி, ஜவ்வு விலகி இருத்தல், சியாட்டிகா (நரம்பு அழுத்தம்) கழுத்து வலி, தலைச் சுற்றல், தோள் பட்டை வலி, கை,கால் மரத்துப்போதல், ஆஸ்துமா,சைனஸ், உயர் ரத்த அழுத்தம்,தூக்கமின்மை,மன அழுத்தம்,குதிகால் வலி,ஒற்றைத் தலைவலி மற்றும் உடல் பருமன்,பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினகள் என்று பலவிதமான உடல் மற்றும் மனப் பாதிப்புக்களைத் தனது யோகாப் பயிற்சி முறைகள் மூலம் மிக எளிதில் தீர்த்து வைத்து அவர்களுக்குக் கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

உலகிலேயே வேறு எவரும் சொல்லாத முறையில் நவீன உத்திகள் மூலம் இவர் கற்றுத் தரும் யோகாப் பயிற்சிகள் வியப்பான ஆற்றல் கொண்டவை. தொடுவர்மக் கலையும் பாரம்பரிய யோகா முறைகளும் இணைந்த பயிற்சி முறையை இவராகவே கண்டுணர்ந்து போதித்து வருகிறார்; டாக்டர்களால் குணமாக்க முடியாத நோய்களை எல்லாம் குணமாக்கிச் சாதித்து வருகிறார்.

மாஸ்டர் லாரா அபிஷேக் அவர்கள் மற்ற யோகா மாஸ்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட யோகாக் கலை வித்தகர்; ’மாஸ்டர் யோகா’வின் மாஸ்டர்தான்..

அன்பும் எளிமையும் ஆடம்பரமற்ற நட்பும் கொட்டிப் பழகும் பண்பாளர்.

இக்கலை மூலம் மனிதர்களுக்கு நோயற்ற வாழ்வில் தலை நிமிர்ந்து வாழும் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் தனது நோக்கம் என்கிறார்.

யோகாப் பயிற்சியை உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கற்றுத்தந்து,அவர்களையும்  யோகாப் பயிற்சியாளர்களாக உருவாக்கும்  பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஐரோப்பா, ஆஸ்திரேலியா,மலேஷிய, சிங்கப்பூர் மற்றும் துபாய் முதலான அரபு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற் கொண்டு வருகிறார்.

விரைவில் பல நாடுகளிலும் தனது ‘விநியோகா ஹீலிங் சென்டரின்’ கிளைகளைத் தொடங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

டாக்டர்களாலும் தீர்க்க முடியாத உடல் பாதிப்புக்கள் கொண்டோரும் இவரிடம் யோகாக் ககலையைக் கற்க விரும்புவோரும் தொடர்பு கொண்டு, திரு லாரா அபிஷேக் அவர்களை நேரில் சந்திக்கலாம்.

தொடர்புக்கு:
----------------------- 
Lara Abhisheik
Vinie Yoga Healing Centre
(Centre For Higher Learning in Yoga and Yoga Therapy)
No.7, 25th Street, Besant Nagar
CHENNAI-600 090

mail: vhcyogatherapy@yahoo.in
   &  vhcyogatherapy@gmail.com

பயன் பெறுங்கள் நண்பர்களே! 

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
3.7.2014