Friday, October 24, 2014

பொய்யுரை வேண்டேன்!



வானத் தா ரகைகள் போல்                 
வரிசைகட்டி வாழ்ந் திருக் கும்  
கேனத்  தமிழ்க் கவி தைக்
கிறுக் கர்கள் கூட்டத் தில்
நானு மொரு கவிஞ னென
நத்து கின்ற  பெயரெ டுத்து
ஈனப் புகழ் சுவைக் கும்
எண்ணம் எனக் கில்லை!

அங்கொன் றும்இங் கொன் றும்
அவர் உரைத்த பாட் டென்றும்
பங்கிட் டுமெடுத் துரைத் தும்
பலவீட் டுச்சோ றுண் டும்
தங்கு  தடை  இல் லாமல்
தமிழ் வாந்தி  எடுத் திங்கு
சங்கப் புலவன்  என்று  
சாதிக்க  ஆசை இல்லை!

ஆலை யில்லா ஊ ருக்கு
இலுப் பைப்பூ, சர்க்க ரைதான்;
வேலை யில்லா  வெட்டிகட்கு
வீண்பொழுது  பெருஞ் சுகந் தான்;
வேலி  இல்லாப் பயிர் கட்கு
வெள்ளா டே எஜ மானன்;
காலி களின் கூட்டத் தில்
கைத் தடிகள் கவிஞ ரடா?

குயிலி சையின் ராகத் தை
கூட்டுகின்ற தமிழ்ச் சுவை யை;
மயிலா டும்பே ரழ கை
மறக்கவைக் கும்அதன் நடை யை
உயிர்ப் போடு பிணைத்திந்த
உலகிற்கு எடுத் துரைக் கும்
நயமா னசிந் தனை யை
நாட்டுவதே கவிதை யடா!

சொல்ல  வரும் கருத்தி னிடை
சொக்க வைக்கும் சுவை கூட்டி
வெல்ல வரும் கருத்துக் கள்
வீழ்ந்தொழியும்  தமிழு ரைத்து
வெள்ளைத்  தா மரை மீது
வீற்றிருக் கும் அன்னை யவள்
’செல்லப் பிள் ளை’ எனச்
சேதி சொலக் காத்திருப்பேன்!

கூகை களின் கூவல் களைக்
குறிப் பாகக் கண்டு ணர்ந்து
ஏக லைவன் வில் வித்தை
இன்ன தெனும் காலம் வரும்!
ஆகை யினால் நண்பர் களே,
அதுவ ரையில் எனை யிங்கு
நோக வைக்கும் பொய் யுரையில்
நுடங் கவைக்கப் பார்க் காதீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2014

Saturday, October 18, 2014

இந்தப் பென்சில் ஓவியம்….!

பென்சில் ஓவியத்தில்  நான்
ஓவியம் :Bhahavath Kumar
ண்பர்களே,

எனது உள்ளுணர்வின் எதிர்பார்ப்புத் தோற்றம்இனி இப்படித்தான் இருக்க வேண்டும்என்ற உணர்வைத் தூண்டும்படி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னை பென்சில் ஓவியமாக்கி அதைத் தனது பக்கத்தில் கமுக்கமாகப் பதித்துக் கொண்டிருக்கிறார் நண்பர்,திரு.Bahavath Kumar அவர்கள்

அது எனது  கண்களுக்கு Feed ஆனதும் என்னுடைய பதிவுதான் அந்தப்படத்தில் முதலில் பட்டது;பிறகு படம். அது எனது தலை முடியை கரும்பென்சிலால் தீட்டப்பட்டிருந்ததால் பக்க வாட்டில் முடி நீண்டுள்ளதுபோன்ற தோற்றம் அமைந்து (அழகாக,சொல்லப்போனால் அழகைக் கூட்டித்தான்) கிட்டத்தட்ட 1980களின் ஜெயகாந்தன் அவர்களை நினைவு படுத்தி விட்டது.

என்னுடைய மதிப்பிற்கும் நட்புக்கும் உரிய இலக்கிய ஆசான் களில் ஒருவர் அவர்

1977களில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை TTK சாலையில் உள்ள அவருடைய ஞானச் சபையில் அவருடையை இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் தொடர் தொடர்பாக அநேகமாக தினசரி சந்தித்துக் கொள்கின்ற வாய்ப்புப் பெற்றவன் நான்

இப்போது-முடி சூடா மன்னன் எனத் திகழும் நான் அவ்வாறு முடியைச் சிலுப்பிக் கொள்ள என் செய்வேன்?

இருந்தாலும் நண்பர் திரு பஹவத் குமார் அவர்கள் தீட்டிய இந்த (சதி :-) ) ஓவியத்தைப் போன்றே  எனது தலையின் பக்கவாட்டில் இருக்கின்ற தலைமுடி நீண்டு தவழ்ந்திருக்க இன்று முதல் முயற்சி எடுப்பதுஎன்ற தீர்மானத்தை முன் மொழிகின்றேன், இன்று.

வழி மொழிபவர்கள்  மொழியலாம்! :-)

இவண்-
கிருஷ்ணன்பாலா

18.10.2014

Friday, October 17, 2014

நீதியின் நிபந்தனை!

றிவார்ந்த நண்பர்களே!

மேடம் ஜெ.அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் நிபந்தனை
ஜாமீனும் அதற்கான கட்டளைகளும் நீதி தேவதையின் நேர்மைமிக்க தீர்ப்பு.

அரசியல் விருப்பு வெறுப்பின்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஊன்றிக் கவனிப்போர் ‘இந்தியா நீதி முறைமையில் நேர்கொண்ட துணிவோடு நிமிர்ந்து நிற்கின்றது’ என்று பெருமை கொள்கின்றார்கள்.

பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை; நிபந்தனையோடு இடைக்காலத்துக்கு, அதாவது இரண்டு மாத காலத்துக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

இந்த இடைக்கால ஜாமீன் தீர்ப்பின் சாராம்சங்கள் சுருக்கமாக:
  • வரும் 18.12.2014 க்குள் இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (அவை 30,000, 40,000 பக்கங்களாக இருப்பினும்) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேடம் ஜே அவர்களின் தரப்பு சமர்ப்பித்தாக வேண்டும்.
  • எந்தக் காரணத்தையாவது காட்டி அதற்கு ஒருநாள் தாமதம் செய்தாலும் அதை இந்த உச்ச நீதி மன்றம் ஏற்காது. ஜாமீனை   அன்றே ரத்து செய்யும்.
   ·    கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நடைபெறவிருக்கும் மேல் 
      முறையீட்டு வழக்கைத் தாமதமின்றி நடத்தி முடிக்க ஜாமீன்
      மனுதாரர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். கர்நாடக உயர்
      நீதி மன்றம் இந்த மேல் முறையீட்டு வழக்கை மூன்று 
      மாதத்துக்குள் நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.

  •  இனி,நீதித் துறையை அவமதிக்கும் வகையில் நீதிபதி மைக்கேல்  குன்ஹா மற்றும் உயர்நீதிமன்ற நீதி அரசர்  சந்திரசேகரா  ஆகியோருக்கு எதிராகக் காட்டு மிராண்டித்தனமாக விமர்சனங்கள்  எழுப்பப் பட்டாலோ சுவரொட்டிகள் வைக்கப்பட்டாலோ ஜாமீனை      ரத்து செய்வதற்கான ஆதாரமாக உச்ச நீதிமன்றம் கருதும்.
  •  இனியும் அதுபோன்ற நிகழ்வுகள் இருக்காதென ஜெ.  அவர்களின் உத்திவாதத்துடன் அவரது வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்  உறுதி அளித்துள்ளதை ஃபாலி நரிமன் அவர்களின் தனிப்பட்ட    உயர்மதிப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்று. இந்த ஜாமீன்  வழங்கப் படுகிறது.
  •  இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட்ட சுப்பிரமணியம்சுவாமியை  எவராவது அவமானப்படுத்த முயன்றாலோ,அச்சுறுத்தினாலோ  தாக்கினாலோ சுப்பிரமணியம் சுவாமி இது குறித்து மனு அளித்தால்  அன்றைக்கே ஜாமீனை ரத்து செய்ய இந்த உச்ச நீதி மன்றம்  தயங்காது.
மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையில் ஜெ, அவர்கள் பெற்றுள்ள இடைக்கால ஜாமீன் மிகக் கடுமையான நெருக்கடிகளை  ஜெ அவர்களுக்குத் தந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, மேடம் ஜெ. அவர்களும் அவரது கட்சியினரும்.

இன்று (17.10.2014) உச்ச நீதிமன்றத்தில் ’மேடம் ஜெ. அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்மனுதாரராக வாதிட்டவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி.

அவரது வாதத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதும் சுவாமி அவர்களின் வாதத்தின் மையக் கருத்தின் அடிப்படையிலேயே  இடைக்கால ஜாமீனின் நிபந்தனைகளாக விதித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஜெ. அவர்களின் ஜாமீனுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் அவர்களுக்கு உச்ச நீதி மன்றம் தந்திருக்கும் அதே உயர் மரியாதையை டாக்டர் சுப்பிரமண்யம் சுவாமி அவர்களுக்கும் தந்திருக்கிறது.

அதாவது, ஜாமீனில் வெளியில் இருக்கும் கால அவகாசத்துக்குள் (18.10.2014) மேல் முறையீட்டுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் அளிக்க வேண்டும்; அந்த வழக்கு இடைவெளியின்றி நடத்தப்பட்டு மூன்று மாததங்களுக்குள்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெ.தரப்பு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதில் சுப்பிரமணிய சுவாமி அவர்களின் பாதுகாப்புக்கும் முழு உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

அவருக்கு அச்சுறுத்தலோ மிரட்டலோ, அவமானம் தரும்வகையிலான எந்தச் செயல்களோ நிகழ்த்தப்படுமானால் அது குறித்து சுவாமி, உச்சநீதி மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும் பட்சத்தில் ஜாமீனை ரத்து செய்யத் தயங்க மாட்டோம்என்று எச்சரித்துள்ளது.

இதன் மூலம் அருவறுக்கத்தக்க ஆர்ப்பாட்டங்கள் மூலமோ தாக்குதல்கள் மூலமோ சுப்பிரமண்யம்  சுவாமியை எவரும் தாக்க முடியாது. இதையும் மீறி சுவாமியைத் தாக்க முயல்வோர் உண்மையில் மேடம் ஜே அவர்களின் விசுவாசிகளாக இருக்க முடியாது. அவரை உண்மையிலே சிக்கலில் வைக்க விரும்பும் சதிகாரர்களின் கைப்பாவைகளாகவே இருக்க முடியும்.

இவற்றை  ஜெ. அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கவனத்தில் 
கொண்டு, நேர்மையான பார்வையோடு சிந்தித்து, சட்டம் வழங்கி இருக்கும் தார்மீக உரிமையைப் பயன் படுத்தி, சிறப்பு நீதி மன்றம் வழங்கி இருக்கும் குற்றத் தண்டனையில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்வதற்குத் தடை ஏதும் இல்லை.

ஆனால்,ஜாமீனில் வெளிவந்திருப்பதைக் காட்டிஜெ.குற்றவாளியே இல்லைஎன்பதாகக் குதூகலித்துக் கொண்டு அவரது கட்சியினர் ஆரவாரிப்பதும் போஸ்டர்கள் போடுவதும் பிரச்சாரம் செய்வதும் ரசிக்கத் தக்கதாக இல்லை

மிகவும் அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் மேடம் அவர்களின் ஜாமீன் வாய்ப்பைக்  கட்சியினர் கொண்டாடுவதே கவுரவமானது.

மேடம் ஜெ. அவர்களின் வழக்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் மற்றும் அவருடைய எதிர் விமர்சிகர்களுக்கும் இடையிலான அரசியல் போர் அல்ல.

நீதிமன்றம் கையில் எடுத்திருக்கும் வழக்கு

நீதித்துறை வகுத்துத் தந்திருக்கும் சட்ட நெறிகளின் வழியேதான் அதனை எதிர் கொண்டு வாதிட வேண்டும் என்ற ஞானம் கட்சித் தொண்டர்களுக்கு இல்லாது போகலாம்; ஆனால்,இந்த வழக்கை நடத்தும் வக்கீல்களுக்குமா அது இல்லாது போகும்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.10.2014

Wednesday, October 15, 2014

மரபு வழிச் சிந்தனை போற்றுமின்!

றிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

பலரும் படிக்கின்ற சமூக வலைத்தளங்களில்
’எதை எழுத வேண்டும்: எதை எழுதக் கூடாது’ என்ற  சமூக
அக்கறை சார்ந்த இலக்குத்தான்  சமூகச் சிந்தனையாளனின் கடமை.

அதுவே அவனுடைய எழுத்துக்கும் பெருமை.

’இலக்கு இல்லாத எழுத்து சமூகத்தின் அழுக்கு’

அந்த அழுக்கில் உருளவும் புரளவும் பொழுது போக்குவதில் ஆர்வம் கொண்டிருப்போரும் அக்கறை கொண்டிருப்போரும் திறமையைக் காட்டுவோரும் இளைய சமுதாயத்துக்கு   இன்னல் விளைவிப்பவர்கள்.

எழுத்தின் அருமையை உணராது, கண்டபடி மேயும் எருமை மாடுகளான அவர்களுக்கு,’மரபுவழிச் சிந்தனை’ என்னும் சாட்டை அடி இங்கே தேவைப்படுகிறது.

ஆம்.நண்பர்களே!,

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”
என்பது சங்கத் தமிழ் வளர்த்த அவ்வைப் பெருமாட்டியின் மரபுச் சிந்தனை.

கல்வியின் பயனே வாழுகின்ற உயிர்களுக்கு அறிவுக் கண் திறக்கும் பொருட்டே; உயிர்கள் என்ற  சொல்லுக்கு ’மனித உயிர்’ என்பதே முன்னுரிமை பெறும்.

எப்படி,’உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றுரைக்கப்பட்டதோ, அப்படி.

அதனால்தான் வள்ளுவப் பெருமானும்-

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என்று

மனித உயிர்களையே முன்னிலைப்படுத்திச் சுட்டினான்.

’வாழுகின்ற உயிர்கட்கெல்லாம்  எப்படி இரண்டு கண்கள் இன்றியமையாதவையோ அப்படி எண்ணும் எழுத்தும்
மனிதர்களுக்கு  கண்களைப் போன்ற அடையாளம்’ என்கிறாள் அவ்வைப் பெருமாட்டி.

அத்தகைய எண்ணும் எழுத்துமாகிய அறிவுக் கண்களைப்பெற்று வாழ்கின்றவர்களே உயர்ந்தோர் எனப்படுவர்.

உயர்ந்தோர் என்பது, இந்த உலகிற்குப் பயன் தரும் சிந்தனைகளை விதைப்பவர்களாவும் மாந்தர்களின் நலனுக்காகச் சுயநலமற்று சிந்தித்து கருத்துக்களைச் சொல்பவர்களாகவும் இருக்கின்றவர்கள்.

அநீதியான செயல்களைப் புரிவோர் எவராயினும்   அவரைக் கண்டிக்கவும் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் பண்பற்ற வகையில் சிந்தித்தாலும் செயல்பட்டாலும்  அவர்களைத் தண்டிக்கவும் தயங்காத  நேர்மை உள்ளம் கொண்டோராகவும் இருப்பவர்கள் மட்டுமேதான் உயர்ந்தோர்’ என்று நூலோராலும் மேலோராலும் குறிப்பிடப்படுகின்றவர்கள்.

அந்த உயர்ந்தோர், இந்த உலகில் இருப்பதனால்தான் அவர்கள் பொருட்டு இவ்வுலகம்  இயங்குகிறது.

அத்தகைய உயர்ந்தோர் ஆகிய நல்லவர்களைப் பற்றி  விளக்கவே அவ்வை-

”நெல்லுக்கு இரைத்த நீர்,வாய்க்கால் வழி ஒட்டிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல்;அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’’

என்று மிக அழகாக மூதுரைத்தாள்.

நண்பர்களே,

நாம் நெற்பயிராக இருக்கவே விழைவோம்.

நம்மைச் சுற்றி களைகளும் காளான்களும் புற்களும் மிகுந்திருப்பினும் அவற்றுக்கு வாய்க்கால் வழியே வழிந்து வரும் நீர்  பொசியுமாயினும் நெல்லாய் விளைந்து உயிர்கள் வாழ்வதற்கு உணவாய் இருப்போம்.என்றே விழைவோம்.

இல்லை யெனில்-

”கண்ணுடையர் என்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர்  கல்லா தவர்”

என்று வள்ளுவன் சாட்டையால் அடிப்பதுபோல்,

எழுத்தின் பயனான அறநெறிச் சிந்தனைகளில் செயல்படாமல், அந்த அற நெறிகளைக் கேலி செய்யும் வகையில்  புற வழிகளில் புத்தியைச் செலுத்தி, இங்கே எழுதுகின்ற புறக்கடைகளாக, தமிழ் மரபுச் சிந்தனைகளைச் சிதைக்கின்றவர்களாக, கண்கள் இருந்தும் அவற்றை முகத்தில் இரண்டு புண்களாகவே வைத்திருக்கின்றவர்களாக, இங்கே உலா வரட்டும்.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்”

என்று வள்ளுவன் காறி உமிழும் செயலைப் புரிவதில் நாட்டம் கொண்ட அத்தகையோனை -.

’பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்’

என்ற குறளின் கோபத்தையும் புரிந்து கொண்டு புறந்தள்ளுங்கள்.

சொல்லுக, சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லிற்  பயனிலாச் சொல்.

என்று வள்ளுவன் இட்டுள்ள கட்டளைபடி
பயனுள சொல்லிப் பயன் பெறுக நண்பர்களே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
15.10.2014

Friday, October 10, 2014

இந்தக் கவிதைக் கிறுக்கர்களால்...


றிவார்ந்த நண்பர்களே,

எனது நூலகத்தில் பலதரப்பட்ட நூல்கள்.
அவை சங்க இலக்கியம்,சமூக இலக்கியம்,ஆன்மீக இலக்கியம், சித்தர் இலக்கியம்,மொழியியல்,இலக்கணம், ஜோதிடம், மருத்துவம்,வரலாறு,கவிதைகள் என்ற வரம்புகளுக்குள் அணி வகுத்திருப்பவை.

ஜோதிட நூல்களில் பழம் பதிப்புக்கள் மட்டுமே அதிகம் எனது கவனத்தையும் கருத்தையும் ஈர்ப்பவை என்பதால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளும் பண்டிதர்களும் விளக்கவுரை  நல்கிய  ஜோதிட அறிவியல் சித்தாந்த நூல்களே எனது நூலகத் தொகுப்பில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன.

அபூர்வமான பழம் ஜோதிடப் பதிப்புக்கள் எனது கவனத்துக்கு வந்தால் அவற்றை எப்படியும் விலை கொடுத்து அல்லது நகல் எடுத்து அவற்றை நூல்களாக அடுக்கி வைத்துக் கொள்ளும் தாகம் ஏனோ நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

கவிதை நூல்கள் என்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படைப்புக்கள் இருக்கின்றன.

கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரின் கவிதை நூல்கள் அவை.

’இலக்கியத் தேட்டமும் சமூகச் சிந்தனையும் மிகுந்துள்ளவர்களின் எழுத்துச் சித்திரத்திரங்களை அழகுபடுத்தும் தூரிகைகளைத் தாங்கி இருக்கும் தூளிகள்தாம்  நூல்கள்’  என்பதென் ஆழ்மனம் கொண்டிருக்கும் கொள்கை.

அவற்றிலிருந்து புதிய புதிய சிந்தனைப் பரிமாணங்களில் சிந்தை வடிவெடுக்கத்தான் செய்கின்றது.

சரியான கவிதையை நேசிக்கவும் யோசிக்கவும்,வாசிக்கவும் சுவாசிக்கவும் கற்றுத் தந்தவை மகாகவி பாரதியின் படைப்புத் திறம்தான்.

’எட்டாம் வகுப்பை எட்டும் முன்பே எனக்குள் கவிதா உணர்வுகள் எட்டி நின்றன’ என்றால் பாரதி எனது மானசீகமான குருவாய் உருவாகி இருந்த காரணம்தான்.

அவனது கவிச் சிந்தனைகளின் வீச்சு,என்னைக் கவியரசு கண்ணதாசனின் படைப்புத் திறனை ஆழ்ந்து சிந்திக்கவும் வந்திக்கவும் உசுப்பேற்றி விட்டது.

அவ்வை முதல்  சங்கப் புலவர்களின் படைப்புக்களும் பாரதி உள்ளிட்ட சென்ற நூற்றாண்டின் சிறந்த புலவர்களின் படைப்புக்களும்தான் எனது கவிதை இலக்கிய நாட்டத்தின் reference நூல்கள் என்று சொல்வேன்.

நவீன இலக்கிய வீதியில் பழமையின் மரபுச்சுவையைக் குன்றாமல்,குறையாமல்  நாம் பருகிட, கவிதை மற்றும் உரைநடைத் தமிழுக்குப் பெருமை சேர்த்த கவியரசு கண்ணதாசனை நவீனக் கம்பனாகவே காண்கிறவன் நான்.

’இந்த நவீனக் கம்பன்  உமர்கயாம்,ஷெல்லி,பாரதி, கவி காளமேகம் ஆகியோரின் கலவையாகவும் இருக்கின்றவன்’ என்பதில் எனது ரசனை பெருகி நிற்கிறது.

எனவே,  கவியரசு கண்ணதாசனின் படைப்புக்கள் அனைத்தும் எனது இலக்கியப் பொக்கிஷத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

”பாரதியும் கம்பனும் கண்ணதாசனும் உங்கள் நூலகத்தில் இருக்க அங்கு உப்புச் சப்பில்லாத கவிதைப் படைப்பாளர்களின்
நூல்களையும் வைத்திருக்கிறீர்களே?”என்று ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அவருக்குச் சொன்ன பதிலையே, இங்கு சொல்வது மிகச் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்:

நண்பர்களே,
புற்றீசல்போல் ’பொல பொல’ எனப் பெருகி,’கவிஞர்’ எனக் காட்டிக் கொள்வதில் கிறுக்குப் பிடித்துப் போய் அலைந்து கொண்டிருக்கிறவர்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிற இடமாகி விட்ட இம்முக நூலில், கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் அரைகுறைத் தமிழ் எழுத்தாளர்களாகிக் கவிதையின் மாண்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலக்கணப் பண்பும் மரபும் மாறாத தமிழன்னையின் உருவம் இவர்களால்தான் சிதைக்கப்பட்டு அரைகுறை ஆடை அணிந்தவளாகவே, இன்றைய இளைய சமுதாயம் இவளைக் கற்பித்துக் கொண்டிருக்கும் அவலம் உருவாகி இருக்கிறது.

கவிதையின் மேன்மையான தரத்தை உணரமுடியாதவர்களால் உரைநடையில் சற்று முரண் தொடைகளையும் முக்கல் மொழிகளையும் புகுத்தி அதற்கு ‘புதுக் கவிதை’என்று பேரிட்டு, பின்பு அதையே வழக்கப்படுத்திக் கொண்டபிறகு  உருவான கவிஞர்களின் நூல்களை விலைக்கு  வாங்கி இங்கே மகாகவி பாரதி கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் நூல்களின் வரிசையில் வைத்துள்ளேன்.

இந்நூல்களைக் கொண்டு நான் கவிதை எழுதும் யுத்திகளைப் பின் பற்றுவதில்லை என்றாலும் இவை ஒருவகையில் எனக்குப்  பயன் தரும் நூல்கள்தாம்.

'எப்படியெல்லாம் கவிதை எழுதக் கூடாது?’ என்கிற விழிப்புணர்வைத் தருவதில் இந்நூல்களை நான் குப்பையில் எறியாதிருக்கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.10.2014

மேலும் காண்க:
http://ulagathamizharmaiyam.blogspot.in/2013/06/blog-post_8300.html

Thursday, October 9, 2014

புத்தியுள்ளோர் புரிந்து கொள்க!

அறிவார்ந்த நண்பர்களே,

றியாமையாலும் அருவெறுக்கத்தக்க அரசியல் வெறித்தன்மையாலும் அவலம்மிக்க குருட்டுப்பார்வையினாலும்  மேடம் ஜே. அவர்களை விடுவிக்கக் கோரி  தெருக்களில் இறங்கி வன்முறைகளை நிகழ்த்துவோர், நீதியைக் கொச்சைப்படுத்துவோர், அரைவேக்காட்டு அரசியல் பித்தர்கள் எல்லோரும் எத்தனை நாட்களுக்கு இந்தக் கேவலமான காட்சியில் இடம் பெற்று வருவீர்கள்?.

நீங்கள் வன்முறையில் இறங்கி வெறி கொண்டு செய்யும் செயல்கள் மேடம்
ஜெ. அவர்களின் பார்வைக்குச் சென்றால் கட்சியில் பதவியும்  பணமும் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தானே இந்த ஈனச் செயல்களில் பங்கு கொள்கிறீர்கள்?

நீதியின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி சட்டவிரோதமாக நடக்கும் உங்கள் செயல், மேடம் ஜெ. அவர்களின் பார்வைக்குச் சென்றதோ இல்லையோ? உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம்.மத்தியப் புலனாய்வுத் துறை,  மத்திய உள்துறை என்று பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டது.

இவ்வாறு நடக்க அனுமதித்துக் கொண்டிருக்கும் மாநில அரசைக் கலைக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தத் தொடங்கி இருக்கிறது.

வழங்கப்பட்டுள்ள நீதியை எதிர்த்து அதற்குரிய நீதிமன்றத்தில் மட்டுமேதான் வாதாட முடியும்.

அரசியல் தொண்டர்களின் உணர்ச்சிகளைக் கூட்டி அதைத் தெருவில் கொட்டி, நீதி வழங்கிய பதிகளைக் கொச்சையாக விமர்சனம் செய்து மாரடிப்பதும் வசைபாடுவதும் போஸ்டர்கள் போட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக விசுவாசத்தை காட்டிக் கொள்வதும் பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடுவதுமாக வன்முறைகள் மூலம் நீதிபதிகளை மிரட்டுவதும் அவமானப்படுத்துவதும் பெரும் தண்டனைக்குரிய குற்றம்.

அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் விடுவது அந்தக் குற்றங்களை எல்லாம் மேலும் மேலும் ஊக்குவிக்கின்ற செயலே ஆகும்.

இதற்கு அம்மாவின் பாதச் சுவடுகளைத் தலையில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யும் மாண்பு மிகு பன்னீர் செல்வம் அவர்கள் தலையைக் குனிந்து கொண்டு நீதி மன்றத்துப் பதில் சொல்லத்தான் போகிறார்.

’தாங்கள் செய்வது இன்னதென அறிகிலார்;பிதாவே, இவர்களை மன்னியும்’ என்று உங்களுக்காக வாதாட எந்த ஏசு பிரானும் வர மாட்டார்.

உங்கள் செயல்களால் மேடம் ஜெ. அவர்களுக்கு மேலும் சிக்கல்கள்தான்.

ஊருக்கு நல்லது சொல்வேன்!

புத்தியுள்ளோர் புரிந்து கொள்ளட்டும்.

-கிருஷ்ணன்பாலா
9.10.2014

Wednesday, October 8, 2014

இது சுயபுராணத்தைச் சுட்டுவதல்ல!


முக நூல்  நட்பு வட்டத்தில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு எழுதினார்,இப்படி:

//thangalin pathivugal migavum arumai pathirikkail elutha muyarchi seiyavum thangalin samooga sinthanaikalukku en vanakkankal//

(தங்களின் பதிவுகள் மிகவும் அருமை;பத்திரிகைகளில் எழுத முயற்சி செய்யவும். தங்களின் சமூக சிந்தனைகளுக்கு என் வணக்கங்கள்)

நான் அவருக்குச் சொன்னேன்:

பத்திரிகைகள் அவ்வாறு எழுதுவதற்கு ஊக்கம் தருவதில்லை.
அப்படி எழுதத் தாகம் கொண்டு அலைகின்ற அவலம் என்னை ஆட் கொள்வதுமில்லை.

தன்மானத்தையும் தறுகண் ஆளுமையையும் இழந்துதான் இன்றைய பத்திரிகை ஊடகங்களில் பரிணமிக்கின்ற அவலத்தில் சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் இருக்கின்றார்கள், நண்பரே.

பத்திரிகைகளில் பணிபுரிந்து அவற்றின்  அறங்கெட்ட தகுதிகளில் சினமுற்றே நான் அவற்றைப் புறக்கணித்து வெளி வந்தவன்.

எனக்கென்று அமைந்துள்ள முகநூல் தளத்தில் வெகு சுதந்திரத்தோடு எழுதி வருவதையே சமூக அக்கறையின் முதன்மைத் தகுதியெனக் கொள்கின்றேன்.


சுயதரிசனம் தேவை

அறிவார்ந்த நண்பர்களே,

’மேடம் ஜெ. ஊழல் செய்து பணம் சம்பாதித்துத்தான் ஆட்சி செய்ய வேண்டும்’ என்ற நிலையில் இல்லை. ’தனக்கு வாரிசுகள் ஏதுமில்லை; மக்களே எனது
சொத்து’என்று சொல்லிச் சொல்லியே பாமர மக்களைத் தன் பின்னால் அணிதிரளச் செய்தவர், ஆட்சிக்கு வந்த முதல் சுற்றிலேயே கொஞ்சமும் யோசிக்காமல் முறைகெட்ட  வழிகளில் பணம் சம்பாதித்ததை ஆவணங்களே காட்டிக் கொடுத்து விட்டன.

ஆவணப்படி சம்பாதித்த ஊழல் சொத்துக்கள் கொஞ்சம்தான;
கணக்கில்லாமல் சம்பாதித்தவை அதைவிட ஆயிரம் மடங்கு.

இவரது அரசியல் பலமும்  கொள்ளை அடிக்கும்  பலமும் கலைஞரை விடப் பல மடங்கு அதிகம் என்பது தொழில் அதிபர்கள், சர்க்கரை-சாராயத் தொழில் அதிபர்கள், பேருந்துத் தொழில் அதிபர்கள்,கல்லூரி வியாபாரிகள் கிரானைட் தொழில் அதிபர்கள், இரும்புத் தொழில் அதிபர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் முனகல்களாக இருக்கின்றது..

ஊழல் புரிவதில் ஒப்பற்றவராக இருந்தும் சட்டத்தின் பிடியில் சிக்காமல், கலைஞர் மிகச் சாமர்த்தியமாகத் தப்பி வந்துள்ள போதிலும் அவரைத்தான் ஊழல்வாதி என்று பாமரர்களும் அதிமுகவினரும் பலமாகப் பேசி ஆதாயம் அடைந்துவருவது தமிழகத்தின் விசித்திரமான அரசியல் நிலை.

கலைஞர்  மகாபுத்திசாலிதான். கெட்டிக்கார அரசியல்வாதியாக வலம் வருகிறார். கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு’ என்பதுபோல் இவரது ஆட்சியின் அவலங்களும் ஊழல் விஷயங்களும் நீதியின் முன்பு அம்பலம்  ஆகும் நாள் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அம்மையாரோ, அரசியல் முதிர்ச்சி யின்மையாலும் முகஸ்திதியில் மயங்கும் பலவீனமான குணத்தாலும் கூடாநட்பின்   குருட்டுத்தனமான நம்பிக்கையாலும்இன்றைய நிலைக்கு அடித்தளம் இட்டுக் கொண்டு செய்த ஊழலுக்குத்தான்  தண்டனை அடைந்திருக்கிறார்.

இதற்கு அடிப்படை அவரைச் சுற்றி இருந்த கூட்டத்துக்கு அவர் கொடுத்திருந்த முக்கியத்துவம்தான்.

’தன்னை மீறி சட்டமும் இல்லை;நீதி மன்றமும் இல்லை’ என்ற வரம்பற்ற நம்பிக்கை அவரை வீழ்த்தி விட்டது.

சட்டத்தை மதி நுட்பத்தோடும் கண்ணியத்தோடும் அணுகி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவராகத்தான் இன்று தலை குனிந்து போயுள்ளோம்’ என்று சுய தரிசனம் கொள்வதற்க்குக் கூட அவருக்குத் தெரியாத நிலைதான் தொடர்கின்றது போலும்.

தன்னைச் சுற்றி மிகப்பெரும் மாயவலையைத் தானே பின்னிக் கொண்டதன் காரணமாகவும் அப்படிச் சூழ்ந்துள்ளவர்களின் பேராசை மற்றும் நாட்டின் மானம் மரியாதையைக் கருதாத கயமைக் குணம்  காரணமாகவும்  அவர்கள் மட்டுமே அம்மையாரை அணுகிக் காரியம் சாதிப்பவர்களாக இருக்க வைத்துக் கொண்டதன் விளைவாகவும்தான்  தனது சட்டப்போரட்டத்துக்குத் தோல்வி என்பதை அவருக்கு யார் புரிய வைப்பது?

ஆனால்,இந்தக் குற்றப்பின்னணியை ஒப்புக் கொள்ளாமல் அவரை உத்தமத் தலைவராகவும் தெய்வத் தாயாகவும் வர்ணித்து, ஒப்பாரி வைப்பதிலும் நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்துவதிலும் காட்டு மிராண்டிகள்போல் நடந்து கொள்ளும் அவருடைய  பாமரத்தொண்டர்களை எப்படிப் புரிய வைப்பது?.

அதைவிட அதிமுக வக்கீல்கள் சட்டத்தின்  தீர்ப்பை மதிக்காமல் குத்தாட்டம் போட்டு அந்தப் பாமர்களைவிடக் கேவலமாகப் போராட்டம் நடத்துவதை சகிக்க முடியவில்லை;ரசிக்க முடியவில்லை.

நீதியை அவமதித்து விட்டு நீதிக்காக வழக்காடும்  தொழிலை வைத்திருக்கும் இவர்கள் நீதித்துறையின் அவமானச் சின்னங்களாக இருப்பதைப் பார்த்து ‘ நீதி மன்றம் தண்டிக்க வழி இருக்கிறது’  என்பதைத் தெரிந்தும் கூட இப்படிப் போராட்டத்தில் தலையைக் காட்டும்  இந்த அரசியல் பித்துக்குளிகளின் கீழ்மைநிலையை என்னென்று சொல்வது?.

சுய தரிசனம் தேவை;
மேடம் ஜெ. அவர்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடிகளுக்கும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.10.2014

Thursday, October 2, 2014

மகா மனிதர்

’பத்மபூஷண்’
மகாமனிதர்,டாக்டர்  நா.மகாலிங்கம்


காந்தியக் கொள்கைகளின் ஈர்ப்பினால் அரசியலுக்கு வந்தார்; அதே கொள்கைகளின் தீர்ப்பினால் போலி அரசியலைத் துறந்தார்.

கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் சர்க்கரைத் தொழிலின் சார்புத் தொழிலான சாராய உற்பத்திக்கான மூலப்பொருள்  (மொலாஸஸ் தயாரிப்பு) தொழிற்சாலையை ’வேண்டாம்’ என்று மறுத்து விட்டு, வள்ளலார்-காந்தி அறக்கட்டளையை உருவாக்கி அதைப் பல்லாண்டுகளாக நடத்தி வந்த ஒரே தொழில் அதிபர்; இந்தியாவிலேயே ஒரே ஒருவராக நாட்டுக்கு அறிமுகம் ஆனவர், ‘அருட் செல்வர்’ என்று அனைவராலும் மதிக்கப்பட்ட ‘கொங்கு நாட்டு வள்ளல்’’ ’பத்மபூஷண்’ டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்.

வெறும் விவசாயத்தையே நம்பி இருந்த பொள்ளாச்சியில் பிறந்த நாச்சி முத்துக் கவுண்டர் அவர்களின் ஒரே செல்ல மகனாகப் பிறந்து செல்வ மகனாக வளர்ந்தும் செல்வச் சீமானாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் காந்திய நெறிகளின் தாளாளராகவே தன்னை மாற்றிக் கொண்ட மகாமனிதர் வணக்கத்துக்குரிய அய்யா டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள்..

அண்ணல் காந்தி அடிகளின் தூய்மையான அரசியல் பண்புகளையும் வாழ்வியல் நெறிகளையும் மேடைதோறும் பேசி வந்தார்.

பேசியவாறு நடைமுறையில் வாழ்ந்தும் காட்டினார்.

‘அடாது மழையிலும் விடாது குடைபிடிக்கும் கொள்கை’ போல் ஆண்டுதோறும் அக்டோபர் பிறக்கும்போது இவரது நிதியில் இருந்து வள்ளலார் காந்தி விழா சென்னையில் ஏ.வி.எம் ராஜேஸ்வரி மண்டபத்தில் தவறாமல் நடத்தப்பட்டு வருவதை சென்னைவாழ் அறிஞர் பெருமக்களும் ஆன்மீக- இலக்கிய நேயர்களும் தமிழிசைவாணர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்று,கலந்து இன்புற்று மகிழ்ந்து வந்தனர், இன்றுவரை.

இன்று காந்தி பிறந்த நாள். அவரது பெருமையையும் கொள்கைகளையும் மேடையில் அறிஞர்கள் பலரும் பேசி வந்ததைக் கேட்டவாறு சாய்ந்தவர், சாய்ந்தவாறே வள்ளல் பெருமானின் ஜோதியில் காந்திய ஒளியாகக் கலந்து விட்டார்.

இவரிடம் நிதி உதவி பெறாத தமிழ்ச் சொற்பொழிவாளர்களும் தெய்வீகப் பணியாளர்களும் இருக்க முடியாது. 'உதவி' என்று கோரிக்கையோடு வந்தவர்க்கு ’இல்லை’ என்று சொல்லாத நாவின் சொந்தக்காரர்.

நூற்றுக் கணக்கான மொழியியல், ஆன்மீக ஆய்வு நூல்கள், இலக்கண,இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் என்று இவரது உதவியால் வெளிக் கொணரப்பட்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் மெய்ஞ்ஞானவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும் கல்வியாளர். இவர்தம் புகழை எழுத்தில் சொல்ல பலநூறு பக்கங்கள் வேண்டும்

இந்திய அரசியல் வரலாற்றில் காமராஜர் காலத்து காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர். மூன்றுமுறை தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பெரும் தொழில் அதிபராக மட்டுமின்றிச் சிறந்த தேசியப் பொருளாதாரச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து விவசாயம்,விவசாய உற்பத்தி, தேசிய நதிநீர்க் கொள்கைகளில் முன்னோடிக் கருத்துக்களை விதைத்தவர் இவர் என்பதை இன்றுள்ள பலரும் அறியார்.

பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து நாட்டுக்குத் தேவையான கட்டுரைகளை நூற்றுக் கணக்கில் எழுதி இருக்கிறவர்.

தேசிய நதி நீர் இணைப்பை முதன் முதலில் நாட்டுக்கும் அரசுக்கும் தெரிவித்த தீர்க்கதரிசி இவர்தான். அய்யா அருட்செல்வரின் கீழ் 1981களில் இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்த நானே இந்த உண்மைக்குச் சாட்சி. அன்றைய நாட்களில் அருட் செல்வர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இதன் ஆவணங்களாக இருக்கின்றன..

நிகரற்ற மொழியியல், மானுடவியல், அறிவியல்,ஆன்மீகவியல்,அரசியல் என்று அனைத்து துறைகளிலும் மேதைமை கொண்டிருந்த மேன்மகன் இந்த ’அருட்செல்வர்’ என்பதைச் சரித்திரம் கூறும்.

ஏ.பி.டி (ABT) என்றால் இந்தியச் சாலைகள் அனைத்தும் முகமன் கூறிப் பெருமைப்படும் அளவுக்கு பொருள் போக்குவரத்துத் தொழிலுக்கே (Transport Industry) முகவரி எழுதிய இந்தக் கோமான், கொங்கு நாட்டு வெள்ளாளக் கவுண்டர்களின் .உயிரில் கலந்த சொந்தம்; உணர்வில் வாழும் தெய்வம்.

இன்று தேச வரலாற்றின் திசைகாட்டியாக மாறி விட்டார்.

”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”.            (குறள்:336)

வாழ்க நீ எம்மான்.!


இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2014