Friday, June 6, 2014

ஆண்டவன் பிரதிநிதி,மோதி!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ஒரு தேசத்தை ஆளுகின்றவர்களின் கடமை என்ன? என்பதை நம் தேசத்தின் இளைய தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது; மூத்த குடிமக்களுக்கோ மரத்துப்போயிருந்தது.

ஆளுகின்றவர்களுக்கோ ’தாங்கள் எப்படி வேண்டுமானாலும் அதிகாரம்  செய்யத்தான் மக்கள்  வாக்களித்திருக்கிறார்கள்’என்ற மமதை.

அவர்கள் இந்த  நாட்டைச் சுரண்டி ஊழல் மலிந்த தேசமாய், குட்டிச் சுவராய் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இதை எதிர்த்து-
’மக்களுக்கான நல்லாட்சியும் நாட்டுக்கு மரியாதையும் ஏற்படுத்துவேன்’ என்று முழங்கியவரைக் கேலியும் கிண்டலும் செய்தனர்.

தனி ஒரு மனிதனாக வீறு கொண்டெழுந்த அவர், ஆட்சியின் தலைவனாக வந்து விடக்  கூடாது’ என்பதில் அவர்கள் அனைவருமே ஒத்தக் கருத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பதில் ஒவ்வொருவரும் பேராசைக் கொண்ட பேயாய்த் திரிந்தனர்.

’அந்தத் தனிமனிதன் கடவுளின் பிரதிநிதி’ என்பதறியாது, பதவிப் பித்துக் கொண்டு அவர்மீது பல்முனைத்தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

“பரித்ரா னாய ஸாது நாம்:
விநா ஸாய ச துஷ்க்ருதாம்;
தர்ம ஸம் ஸ்தாப னார்த்தாய:
ஸம்ப வாமி யுகே யுகே”

என்று  கீதையில் சொன்ன கண்ணனின் வார்த்தைகள் இவர்களுக்கு மறந்து போயிருந்ததால் அவர்களால் நாட்டில்  அக்கிரமங்களும் அநியாயங்களும் மலிந்து துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் தோள்தட்டிக் கொண்டிருந்தார்கள்.

’பரமாத்மா,  நரேந்திர மோதியின் வடிவிலும் வருவான்’ என்பதை ஏனோ இவர்கள் நம்பாதிருந்தனர்.

நல்லவர்களைக் காக்கவும்
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டவும்
உரிய நேரத்தில் நான் அவதரிக்கின்றேன்’என்று சொன்னவன்
மோதியாக முன்னெழுந்து நின்றான்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுப் பின் ஆஷாடபூதிகளிடம் குற்றுயிரும் கொலை உயிருமாய்ப் போய்க் கொண்டிருந்த இந்த தேசம், இப்போதுதான் மோதியால்  மீட்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு விளங்கத் தொடங்கி, ‘நாட்டை ஆள்பவனின் நேர்மையும் கட்டுப்பாடும் முன்னுதாரணச் செயல்பாடுகளும் இதுவல்லவோ? என்று இறும்பூதெய்தவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

’நாட்டை ஆள்பவன் அரசன்;அந்த அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்கிறது நீதி நெறி சாத்திரம்.

இதுவரை சாத்தான்கள் ஆண்ட தேசமாய் இருந்த இந்தியா,இனி ஆண்டவனின் பிரதிநிதி ஆளுகின்ற நாடாய் அவதானித்துள்ளது.

சண்டாளர்களுக்கும் சண்டாளத் தனங்களுக்கும் இனி இந்தியாவில்  இடம்  இருக்கக்கூடாது. இதற்காகச் சாதுவாய் இராமல் சண்ட மாருதமாய் மாறவும்  மோதி தயங்க மாட்டார்’ என்பதன் அறிகுறிகள் தோன்றியுள்ளன.

கடந்த ஒருவார காலத்தில் ஒவ்வொரு நாளும் மோதி எடுத்து வரும் நடவடிக்கைகளும் அவரது அறிவிப்புக்களும் இதைத்தான் அடையாளப்படுகின்றன.

”வலிமை கொண்ட தோளினாய் வா, வா, வா!’
என்று
அமரகவி பாரதி பாடிய புதிய பாரதத்தவனை
வாழ்த்துவதோடல்லாமல், தோள் கொடுக்கவும்
நாம் ஒன்றுபடுவோம், நண்பர்களே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.6.2014

No comments: