Monday, June 30, 2014

மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி!



றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான்.

பிரிட்டிஷ் ராஜ்யம் உலகின் பரந்த பகுதிகளை எல்லாம் கைப்பற்றிய பின்னர்தான் அந்தந்த நாடுகளின் பழமையும் பூர்வ வரலாறுகளும் ஆராயப்பட்டன.

மேலை நாட்டு அறிவியலாளர்கள் ஒருங்கிணைத்த நவீன கல்வி முறையும் அறிவியல் சாதனங்களும் பண்டைய உலகின் மானுடவியலையும் பூர்வீக வரலாற்று உண்மைகளையும் ஆராய்ந்து வெளிக் கொணர வழி வகுத்தன.

பிரிட்டிஷ் பேரரசு உலகெங்கும் விரிவடைந்த போதே அந்தப் பேரரசின் மதக் கோட்பாடான கிறிஸ்துவமும் தனது ஆதிக்கத்தை அந்தந்த நாடுகளில் வேரூன்றத் தொடங்கி விட்டது.

‘கிறிஸ்துவ மார்க்கம் வலிமையாகப் பரவ வேண்டும்’ என்றால்  ’அந்தந்த நாடுகளில் உள்ள  கலாச்சாரப்பெருமைகள் மழுங்கடிக்கப்பட வேண்டும்’ என்ற சூத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர் பிரிட்டீஷ் ஆட்சியினர்.

அதன் மூலம் மக்கள் தங்களுடைய  கலாச்சாரச் சுதந்திரத்துக்காகப் பிரிட்டீஷ் அரசை எதிர்க்காமல் இருக்கவும் தங்கள் மதச் சின்னங்களைக் காட்டிப் புரட்சி செய்யாதிருக்கவும் பார்த்துக் கொண்டனர்.

மாறாக, பிரமாண்டமான சர்ச்சுகளையும் கல்விச் சாலைகளையும் எழுப்பினர்.

இதன் மூலம் பர்மா,சயாம் என்கின்ற தாய்லாந்து, கம்போடியா மற்றும் கொரியப் பகுதிகள்  தனித்தனி நாடுகளாகப் பாவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்குரிய மொழியும் வழிபாட்டு முறையும் அரசின் ஆதரவின்றி அனாதைகளாக்கப் பட்டன.

இப்படித்தான் காலப்போக்கில் இந்தியப் பரந்த கண்டத்தின் செழுமையும் கலாசாரப் பழமையும் சிதைந்து போய் முழுக்க முழுக்க பிரிட்டீஷாரின் சட்டமும் சம்பிரதாயங்களும்  ஆளுமை பெற்றன.

நமது சொந்தப் பூமியின் சொத்துக்கள் சுரண்டப்பட்டு வறுமையும் வாழ்வியல் தேவைகளும் மிஞ்சிப்போய்ப் பாழ்பட்டு நின்ற பாரத தேசத்தின் பரந்து பட்ட பெருமைகளும்  வரலாற்று உண்மைகளும் சிறுத்துப்போயின.

அப்படிச் சிறுத்து போன உண்மைகளின் சின்னமாக, மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக இருப்பதுதான் இன்றைய கம்போடியாவில்  உள்ள ‘அங்கோர்வாட்’ ஆலயம்.

அதன் பிரமாண்டத் தோற்றத்தைத்தான் இங்கே மேலே புகைப்படமாகக் காண்கிறீர்கள்.

முழுக்க முழுக்க இந்திய வழிபாட்டு முறையின் இறைமைச் சின்னமாகப் பண்டைய நாளில் அமைக்கப்பட்டதுதான் இந்த ’அங்கோர் வாட்’ ஆலயம்.

முன்பொருகாலத்தில் ’ஆசியா முழுமைக்கும் இந்தியப் பண்பாடும் கலாசாரமும்தான் பரவி இருந்தன’ என்பதற்குச் சான்று:  இந்த அங்கோர்வாட் ஆலயம்.

‘தொடர்பே இல்லாத ஒரு தேசத்தில் இந்தியப் பாரம்பரியத்தின் பிரமாண்டக் கோவில் பிரசித்தி பெற்றிருந்தது என்பது சரித்திரத்தின் சங்கிலித் தொடர்களை எல்லாம் நாம் அறுத்தெறிந்து வாழ்கின்றோம்’ என்பதற்கு மிகப்பெரும் சான்றல்லவா?

யுனெஸ்கோ ( UNESCO) வின் பார்வை பட்டு உலகத்தாரின் உணர்வுகளை ஈர்க்கின்ற இப்பழம் பெரும் ஆலயத்தைப் பற்றிய உண்மைகள் 90 சதம்கூட வெளித் தெரியவில்லை.

வெறும் பழமையின் பொக்கிஷமாக மட்டுமே இக்கோவில் யுனெஸ்கோவுக்குத் தெரிந்திருக்கிறதே தவிர, அதன் முழு ஆராய்ச்சியும் அதுபற்றிய அறிவும் அவர்களுக்குத் தெரியவே இல்லை.

இந்த அங்கோர்வாட் கோவிலைப்பற்றி வெளியான தகவல்களின் சுருக்கம் இது:

// உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் ’‎கம்போடியா‬’ நாட்டில் உள்ள “‪‎அங்கோர்‬ ‪‎வாட்‬” ஆகும்.  உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். 

இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. 


ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன், இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்தப் பிரம்மாண்ட கோயிலை இங்கு  எழுப்பினான். 

இந்த கோயிலிலை உருவாக்கும்  ஆரம்பக்கட்டப் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின.  இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தன.

சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள  இந்தக் கோவில் சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது.  இதை ஒரு கலைப் பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடிக்கபட்டுள்ளன. இந்த கோயிலின் ஒரு பக்கச் சுற்று சுவரே  ‘3.6 கிலோமீட்டர்கள் ‘என்றால் அதன் பிரமாண்டத்தை  யூகித்துக் கொள்ளலாம்.

சூரியவர்மன் இறந்தபின், ஆட்சிக்கு வந்த ஆறாம் ஜெயவர்மன் காலத்தில்   “புத்த” கோயிலாக மாறிய, இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐப் பொறித்துள்ளது. 

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால்  மக்களால் புறக்கணிக்கப்பட்டுச் சிதிலமடைந்த நிலையில்  ,1586 ஆம் ஆண்டுAntónio da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, 

அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து இக்கோவிலைப் பற்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பேசவும் எழுதவும் தொடங்கினர்.


Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 25 ஆண்டுகளில்  இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.. 


இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. //

இத் தகவல்கள் ’உலக தமிழர்கள் ஒன்று சேருவோம்’ என்ற முகநூல் பக்கத்தை ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.

நண்பர்களே,

‘இந்தியாவில் உள்ள ஆலயங்களை விட மிகப்பெரியது இது’ எனது உண்மையல்ல;  நமது திருவரங்கம்  கோவிலின் பரப்பளவைப் போன்றது எனக் கூறலாம்.

இன்றைய கம்போடியாதான் புராண காலத்து காம்போஜம்’ என்று கருதப்படுகிறது.

நமது புராண காலத்து தேசங்கள் 56 ல் இக்கோவில்  காம்போஜம் என்ற தேசத்துக்கு உரியதா அல்லது அங்கம் என்ற தேசத்துக்கு உரியதா?  என்பதை வரலாற்று ஆசிரியர்கள் கணிக்க முடியாது. யுக வரலாறுகள் மாறிப்போனபின், சரித்திரத்துக்குச் சான்று பகர யாரால்  முடியும்?

கால,வர்த்தமான உண்மைகளை ஒப்பிட்டு உணர்ந்து சொல்ல மகான்களால்தான் முடியும்.

எப்படி இருந்தாலும் அன்றைய அங்க தேசத்தின் கோவில் இது’ என்பதும் இங்குதான் கர்ணன் வழிபாடு செய்தான்   என்பதும் நமது  யூகத்தால் உணர முடியும்.(கர்ணனை த் துரியோதனன் அங்க தேசத்தின் மன்னனாக முடி சூட்டினான் என்கிறது மகாபாரதக் கதை) இப்போது கம்போடியா தேசத்தின் சொத்தாக இது மாறி இருக்கலாம்.

இந்த அங்கோர்வாட் ஆலயத்தைப் பற்றிய அரைகுறைத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு அரசன் சூர்ய வர்மன் கட்டியதாகவும் 25 ஆண்டுகள் தொடர்ந்து இதன் கட்டிடப் பணிகள் நடந்து முடிந்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.

உண்மையில் மேலே உள்ள தகவலின்படி,சூர்ய வர்மன்,ஜெய வர்மன் என்ற பெயர்கள் எல்லாம் இங்கு தமிழ் நாட்டு சேர சோழ,பாண்டிய அரசர்களின் பெயர்களாக இல்லை; குறிப்பாகப் புகழ் பெற்ற மன்னர்களின் வரிசையில் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை விடவும் பெரிதான அங்கோர்வாட் கோவில் இந்து கலாசாரத்தின் சின்னமான போதிலும் இந்துக் கலாசாரமே அற்றுப்போன இன்றைய கம்போடியாவில் இருப்பது, உலகின் எந்த
ஆராச்சியாளர்களுக்கும் ஓர் புதிர்தான்.

வரலாறுகள் மறைக்கப்பட்டதற்கும் தவறான வரலாறுகள் புகுத்தப்பட்டதற்கும் வரலாற்றையே உணராதிருப்பதற்கும் இந்த அங்கோர்வாட் உதாரணம்.

புராண காலத்தில் குறிப்பிட்டப்பட்ட அங்கம்,அவந்தி,கூர்ஜரம்,
காந்தாரம் முதலான 56 தேசங்கள் பற்றிய ஆய்வுகளை யாரும் எந்த மானுடவியலாரும் அக்கறையோடு செய்து  உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்து உலக வரைபடத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. ஆனால் பண்டைய உலகின் மொழியியலையும் கலாசாரம் மற்றும் சமூகவியலையும் அது முழுமையாகப் பிரசுரிக்கவில்லை. காரணம்,கிறித்துவத்தைப் பரப்பவும் அதன் பெருமைகளைப் போற்றவுமான  உத்திகளை  மட்டுமே இலக்காகக் கொண்டு  பிரிட்டீஷ் அரசு தன், குறுகிய ஆய்வுகள் மூலம் உண்மைகளைச் சொல்லாமல் இருப்பதுதான்.

மகாபாரத காலம் என்பது இன்றைய  சரித்திர காலத்துக்குச் சற்றே முந்தியது என்பதை வரலாறும் மானுடவியலும் அறிந்தோர்   புரிவார்கள்.

யுனெஸ்கோ இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வுகள் நடத்தி,
இந்திய இதிகாசச்  செய்திகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்தால்
அங்கோர்வாட் போன்ற வேறு தேசங்களிலும் இந்திய வழிப்பாட்டு முறைகள் எப்படி ஆட்சி கொண்டிருந்தன?’ என்ற உண்மைகளை உலகம் அறியும்.

அதற்கு அடிப்படையாகப் புராணம் கூறும் பழைய 56 தேசங்கள் எவை? அவற்றின் இன்றைய தேசப் பெயர்கள் எவை? என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இதை நமது இன்றைய நவீன உலகம் கண்டு பிடிக்குமானால்,நிச்சயம்”
உலகின் மூத்த கலாச்சாரமும் இந்தியாவினுடையதுதான். மூத்த பண்பட்ட குடிகளும் இந்தியர்தாம்” என்பதை உலகம் உணரும்.

உணர்ந்தால் இந்தியா மிகப்பெரும் போற்றுதலுக்குரிய நாடாக மதிக்கப்படும்.

உலகோர் தங்கள் பூர்வ குடிப் பெருமையில் பூரித்துப் போவார்கள்!

அதற்கு உத்தரவாதம் தரும்  சாட்சியாகத்தான்  இந்த மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக  இந்த ’அங்கோர்வாட்’ ஆலயம் திகழ்கிறது!


இவண்-
கிருஷ்ணன்பாலா
30.6.2014


No comments: