Tuesday, June 5, 2012

செப்புப் பட்டயம்


ன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.                       
                
எனது வலைப் பதிவுகளின்
வாசகர்களாகப்
பல்லாயிரக் கணக்கானவர்கள்
உலகெங்கும் பரவி இருப்பதில்
எனதுள்ளம் மகிழ்கின்றது.

எனது எழுத்துக்கள்
பயன் கருதாப் படைப்புக்கள்.

ஆயினும்
அதன் பயன்
படிப்பவர்களிடையே
பரவ வேண்டும் என்னும்
ஏக்கம் கொண்டவை.

அந்த ஏக்கத்தின் தாக்கம் போல்
ஒரு மின்னஞ்சல்.

கடல்சார் ஆபரணப் பொருட்கள் ஆய்வில்
முனைவர் பட்டத்துக்கு முனைந்துள்ள
சகோதரி ஒருவர்
அனுப்பியிருந்த அஞ்சல் அது.

என்னுடைய படைப்புக்கள்
அவருக்கும் அவரது நண்பர்களுக்கும்
சிந்தனைத் தூண்டல் செய்யும்
காரணியாய் இருக்கின்றதென்று
கரம் குவிக்கின்றார் அதில்.

நான்
சிரம் நிமிர்கின்றேன்:
செம்மாந்த தமிழுக்கு
சிறப்பான வாசகர்களிடமிருந்து
கிடைத்த ‘செப்புப் பட்டயம்என.

தமிழ் எனும் பெருங்கடலில்
நான் ஓர் திமிங்கலமாய்த்
திரிகின்றவன்.;

இவர்
கடல்சார் ஆபரணப் பொருட்கள் குறித்துச்
செய்து வரும் ஆய்வுகளில்
சிக்கி இருக்கும் பொருள்;
இந்தத் திமிங்கலத்தின்
மூச்சுக் காற்று போலும்!

எனக்கு மின்னஞ்சல்
செய்தவருக்கு
நான் பதில் அஞ்சல் செய்தேன்.

எனது நண்பர்கள்
அனைவருக்கும்
அதைப் பகிர்ந்து
இங்கே
பதிவு அஞ்சலும் செய்கின்றேன்
அது இது:
-------------
அன்புக்குரிய சகோதரி,
வணக்கம்.

நாம்,
நம் தமிழை நேசித்தலும் வாசித்தலும்
நம்மை ஈன்று இவ்வுலகிற்குத் தந்த 
அன்னையை ஆராதிப்பது போல.

நமது 
சாதனைகளுக்கும்
போதனைகளுக்கும்
வித்தே தாய் மொழிதான்.

சொல்லப் போனால்,
உலகில் உள்ள மொழிகளில் 
அநேக மொழிகளுக்குத்
தமிழே தாய்.

தமிழுக்கென்று தனித் தன்மை மிக்க
தெய்வீக ஆற்றல் உண்டு.

தமிழில் படைக்கப்பட்டுள்ள
இலக்கிய- இலக்கணங்கள் போன்று
உலகில் 
வேறு எந்த மொழியிலும் 
உரைக்கப் பட்டிருக்கவில்லை;
அப்படி உரைக்கப் பட்டிருந்தால்
தமிழ் மொழியிலிருந்து 
எடுத்தாளப் பட்டவையாக 
இருக்குமே அன்றி
தனிச் சிறப்புள்ள 
ஆளுமைக் கருத்தாக இருக்க முடியாது..

ஏனெனில் 
கால வரலாறுகளைக்
கடந்து நிற்கும்,
உலகின் மூத்த குடிமக்களால்
புழங்கப்பட்டு வந்த மொழி இது..

பல லட்சம் ஆண்டுகளுக்கு 
அகத்தியனைத்
தென் பகுதிக்கு அனுப்பி
இங்கு 
பேசப்பட்டும் பாடப் பட்டும் 
வந்த மொழிக்கு
இலக்கண ஆராதனை செய்ய
ஈசன் ஆணையிட்டதாக
இயம்பப்படும் செய்திகளை
எவரும் மறுக்க முடியாது.

அத்தகைய-
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய  மூத்த குடிகள்
முழங்கிய தமிழை,

நான் 
உயிரும் உணர்வுமாய்க் கொண்டு
சொல் தோன்றச்
சுவை அமுது படைக்க 
எத்தனிக்கின்றேன்.

எனது படைப்புக்கள்
கற்றோருக்கும் கனிந்தோருக்கும்
களிப்புத் தரவும்

மற்றோருக்கு
மலர்ச்சியும் எழுச்சியும் தரவுமே
அன்னைத் தமிழின்
அடிமலர்ப் பாதம் பணிகின்றவன் நான்.

உங்களைப் போன்றோருக்கு
அது
உற்சாகம் தருகிறது
என்பதில் மகிழ்கிறேன்.

மகிழ்கிறேன் என்பதை விட-

எனது எழுத்துக்களை
எவரும் விஷய ஞானத்தோடு
விமர்சிப்பதை வரவேற்கிறேன்.

தங்கள் அன்புக்கு நன்றி.

வாழ்க.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
5.6.2012

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி இது:
--------------------------------------------------------------------

From: A. V. GUNA <.................>
Date: 2012/6/5
Subject:
To: krishnanbalaa@gmail.com

ஐயா மரியாதைக்குரியவரே !

KVG யில் இருந்து ஒரு சிறு பெண் எழுதுகிறேன் , வணக்கம் !
தவறுகள் இருப்பின், தயை செய்து மன்னியுங்கள் !

எனது பெயர் குணசுந்தரி ...
பிறந்த ஊர் நாமக்கல் / தம்மம்பட்டி
புரியும் செயல் ஆராய்ச்சி

தங்களின் 'உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்'
எங்களின்  (எமக்கும் என் தோழிக்கும்) மிக பிடித்த வலைத்தலம்!

நன்றி நவில்கிறேன் ஐயா !

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் !
கரம் உயர்த்தி ஆசிர்வதியுங்கள் அய்யா . . .

தங்களின் தமிழ் ஆர்வம்
எங்களுக்கு வழிகாட்டி . . .

உங்களின் பதில் உரைக்காக
உள்ளன்போடு காத்திருக்கிறேன் . . .

உங்கள் ஆசியுடன்

குணா . . .
-- 
With Warm Regards
V. GUNASUNDARI
Doctoral Research Scholar
Marine Ornamental Culture Unit
CASMB, Faculty of Marine Sciences
PortoNovo – 608 502
Tamil Nadu,INDIA



No comments: