Thursday, December 27, 2012

வள்ளுவ நீதி!




ண்பர்களே,
இன்று (27.12.2012) தலைநகர் டெல்லியில்  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கவுன்ஸில் வளர்ச்சிக் கூட்டத்தில் அதிரடியாக தமிழகத்தின் முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளிநடப்புச் செய்து தேசியச் செய்திகளில் தலைப்புச் செய்திக்குரியவாராக ஆகியிருக்கிறார்.

தேசிய வளர்ச்சிக் கவுன்ஸில் கூட்டத்தில்  தமிழகத்தின் தொழில் வளம் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

இந்தியாவின்  வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தின் பங்கு
என்ன ?
இதை மேலும் வலுப்படுத்த,மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி வசதிகள்,சலுகைகள் எவை என்பது பற்றியெல்லாம்
கம்பீரத்தோடும் கண்ணியத்தோடும் பேசி, நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டிய நம் முதல்வர், தான் 10 நிமிடங்கள்  பேசியதும்,  ‘பேச்சை முடிக்கும்படி மணியடிக்கப்பட்டதால் தனது பேச்சை முழுவதுமாக பேச அனுமதிக்கவில்லை’ என்று காட்டமாகக்  குறிப்பிட்டுவிட்டு, அதைக்  கண்டிக்கும் வகையில்  கூட்டத்திலிருந்து  வெளிநடப்புச் செய்து இன்றைய ‘தலைப்புச் செய்திகளின் முதல்வராகி’ விட்டிருக்கிறார்.

இந்த வெளிநடப்பு என்பது ஏதோ ஒருவகை அரசியல் ஆதாயத்துக்காகவே அன்றி நிச்சயம் மாநிலத்தின் நன்மைக்காகவோ, கண்ணியமான அரசியல் தர்மத்தின்  நடைமுறைகளைக் காக்கவோ அல்ல.

அறிவு சார்ந்த அரசியல் நோக்கர்கள் முகம் சுளிக்கவும்  பாமரர்கள் கூட்டம் மேடம் ஜெ. அவர்களின் துணிச்சல் பற்றி வெற்றுப் புகழாரம் சூட்டவும் இந்திய அளவில் மீடியாக்களில் பேசப்படவும்தான் இந்த வெளிநடப்பு உதவி இருக்கிறதே தவிர, தமிழகத்தின் நலன் சார்ந்த வெளிநடப்பாக  உணர முடியவில்லை.

இது எந்த வகையிலும் முதிர்ந்த ராஜதந்திரமாகவோ தமிழகத்துக்குப் பெருமை தருவதாகவோ அமையவில்லை.

மாறாக, ‘மேடம் ஜெ, அவர்களை அகில இந்திய அரசியல் அரங்கில் பக்குவமற்றவர்’  என்பதையே   காட்டிஅரசியல் நாடகத்தின்  அரைவேக்காட்டுத்தனமான அரங்கேற்றம் இது’என்பதையும் உணர்த்தியிருக்கிறது.

கோபத்தைக் காட்டவேண்டிய இடம் வேறு; சூழ்நிலை வேறு.
இது, நமக்கெல்லாம் பெருத்த அவமானத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கும் நிகழ்வு.
               
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

என்பது வள்ளுவ நீதி.

அரசியலுக்கு சூழ்ச்சி,முடிவு எடுத்தல்,துணிவு மூன்றும் இலக்கணம்தான். ஆனால் அவை தவறான பாதையில் அமைந்து விட்டால் அது கேடாகவே முடிந்து விடும் என்று வள்ளுவப் பெருமான் ‘அமைச்சியலில்’ ’வினை செயல்வகை’ அதிகாரத்தில் இது பற்றிய நீதியை இடித்துச் சொல்கிறான்.

இன்றைய அரசியல் தலைவர்கள்-குறிப்பாக ஆளும் தலைவர்கள் வள்ளுவத்தைப் படித்தால் மட்டும் போதாது; அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.12.2012

No comments: