Friday, January 11, 2013

எக்காலம்?
























வாழ்க்கைஎனும் நீள்பாதை
வார்த்திருக்கும் காலடிகள்
ஊழ்வினையின் உறுத்தலெனெ
உணர்ந்திருப்ப தெக்காலம்?

பின்னாள் விளைவுகளைச்
பிழையற்ற வாழ்வாக்க
முன்னாள் அறிவோடு
மூழ்குவது எக்காலம்?

செய்யாத செயல்களுக்குப்
சிறிதளவும் உண்மையின்றிப்
பொய்யாய்ப் புகழ்வதைநாம்
புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லாத மானிடர்பால்
காட்டுகின்ற அக்கறையில்
இல்லாத பொருளுரைக்கும்
இலக்கொழிப்ப தெக்காலம்?

பொய்யை, புனைசுருட்டைப்
போற்றுகின்ற கூட்டத்தார்
கையொலியை மறுத்துக்
கையெடுப்ப தெக்காலம்?

நீதிநெறி முறைகள்
நில்லாத சிந்தனையை
ஓதி மகிழ்வோரை
ஒதுக்குவது எக்காலம்?

சாதிக் கண்ணோட்டம்
சண்டாளர் சகவாசம்
தீதென்று சொல்லி,அதை
தீ வைப்பதெக் காலம்?

போதிக்கும் பொய்யரெலாம்
புறவேஷ தாரி எனும்
சேதிசொல்லி நாற்றிசையும்
சிந்திப்ப தெக்காலம்?

தோல்,சதையில் மயங்கித்
துவளுகின்ற பேய்மனதைக்
காலால் உதைத் திங்கு
கட்டிவைப்ப தெக்காலம்?

வீட்டுக்குள் இருந்தாலும்
வெளிஉலகில் மனம்திரியும்
கேட்டுக்குள் வீழ்வோரைக்
கேடறுப்ப தெக்காலம்?

வீட்டு நினைவுக்குள்
வீழ்ந்தாலும் நாம் அதனை
நாட்டுநலன் ஆக்கி,
நாடுவது எக்காலம்?

இறக்காமல் பிறக்கின்ற
எண்ணத்தை வளப் படுத்தி
மறக்காமல் வாழுகின்ற
மனம்பெறுவ தெக்காலம்?

வையம் அழிக்கின்ற
வன்செயல்கள் புரிந்திங்கு
தெய்வம் தொழுவோரைத்
திருடரென்ப தெக்காலம்?

நீதிசெயும் ஆசனத்தில்
நிமிர்ந்திருக்கும் நேர்மையின்றிச்
சாதிக்கும் சபை ஒழித்துச்
சாற்றுவது எக்காலம்?

ஓட்டுக்கள் வாங்குதற்கு
ஊழல்பணம் நீட்டும்
நோட்டுப் பேய்களைநாம்
நோகடிப்ப தெக்காலம்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.1.2013

1 comment:

Unknown said...


இது கலி காலமென்றெண்ணி
கலங்குதலெதற்கு?
காட்சியிருந்தும் பார்வையின்றி
பேச்சுகளெதற்கு?
ஊசியிலே ஒட்டகத்தை நுழைக்கும்
சாகசமெதற்கு?
வாக்கினிலே சுத்தமின்றி புவியில்
வாழ்வதெதற்கு?
கடல்பாசியதன் கசப்பணிந்தவராய்
கூடுகையெதற்கு?
போகசல்லாபங்களின் சாபமணிந்து
பயணமெதற்கு?
மாற்றமது மனதில் வேண்டும் இல்லை
தடுமாற்றமது அழிவேந்தி வந்துசூழும்!