Thursday, September 5, 2013

ஆசிரியர் போற்றுதும்!

றிவு சார்ந்த நண்பர்களே,


மாதா,பிதா,குரு, தெய்வம்    என்ற நான்கும்  மனிதனின் அடிப்படை அறிவில் உணர்ந்திருக்க வேண்டிய  மெய்ப் பொருட்கள் என்பதை பாரத தர்மம் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.

இந்தப் பாரதத் தர்மத்தை, பூர்வகாலம்தொட்டு இன்றுவரை நமது அறிவுக் கண்களைத் திறந்து கற்றுணர்த்தி நாம் அதனைப் பரம்பரை பரம்பரையாகப் பற்றிவரச் செய்து வருகிறவர்கள் ஆசிரியப் பெருமக்கள்தாம்.

'’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’   (குறள்:392)

என்று வள்ளுவன் சொன்னதற்கேற்ப வாழும் உயிர்களாகிய மனிதர்க்கு எண்ணும் எழுத்தும் என்ற இரண்டு கண்களைத் தந்தவர்கள் ஆசிரியர்களே அன்றி வேறு எவரும் இலர்.

மாதா,பிதா,தெய்வம் என்ற மூன்றின் பெருமைகளையும் நமக்கு விளங்கச் செய்து வருபவர்களும் ஆசிரியர்களே;
அவர்களைத்தான் நமது பாரதத் தர்மம் ’குரு’ எனக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

’குரு இல்லா வித்தை பாழ் ‘என்கிறாள் அவ்வை.

குருவே விஷ்ணு,பிரம்மா,மகேஸ்வரனாகிய ஈசன் என்கிறது நமது வேதம்.

நாம் வாய்திறந்து பேசும் மொழிக்கு அர்த்தம் சொல்லி உணர்த்தியவர்களும் நாம் உழைத்து வாழும் வழிக்கு வழிகாட்டியவர்களும்  நமது பெருமைகளுக்கெல்லாம் அடித்தளமாக இருப்பவர்களும் நமது சம்பிரதாயங்களைச் சரிந்து விடாமல் காத்து வழி நடத்தி வருபவர்களும் நம்மை இந்த உலகில்  மேம்பட்ட குடிமக்களாய் இருக்கும் நெறிகளைக் கற்பித்து வருபவர்களும் குருமார்களே.

//தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.//

என்கிறது குறள்,இவர்களை.

அதாவது, தாங்கள் இன்புறக் கூடிய விஷயங்கள் புற உலகில் பரவி இருத்தல் கண்டு பேரானந்த நிலையில் பரவசம் அடைகின்றவர்கள் அவர்கள்.

ஒரு ஆசியரிடம் பாடம் படித்த மாணாக்கர்களில்  தேசத்தின் தலைவர் முதலாக,ஒரு அலுவலகத்தின் ‘அட்டெண்டர்வரை’ அனைத்துமாய் வளர்ந்து பரவி,நிற்கிறார்கள்.

ஆசிரியன் ஆசிரியனாகவே தம் வாழ்நாளின் இறுவரை வாழ்கின்றார், ஆனால் அவர் மூலமே இந்த தேசத்துக்கும் உலகுக்கும் தேவையான தலைவர்களும் விஞ்ஞானிகளும்,நிர்வாகிகளும்,தொழில் துறையினரும், கலைஞர்களும், ஞானியரும் உழைப்பாளர்களும் நல்ல பெற்றோரும்  நலம்படக் கற்றோரும் உருவாகிறார்கள்.

பிறரை உயர்த்தி அவர்களின் உயர்வைத் தங்கள் உயர்வாய் எண்ணி மகிழும் தியாக சீலர்கள்தான் ஆசிரியப் பெருமக்கள்.

அந்த ஆசிரியப் பெருமக்களைத்தான் நாம் நமது குரு என்று மதித்துப்  போற்றி  வணக்கம் செலுத்தி வருகிறோம்.

’ஆசிரியன்’ என்றால் குற்றம் களைபவர் என்று பொருள்.

அத்தகைய உயர் மாண்புடைய குருமாரை இன்று நம்முள் சிலர் கேலியாகப் பேசுவதும் கிண்டல் செய்து எழுதுவதுமாக இருப்பதை  இங்கு காண்கிறேன்,

’வாத்தி’ சொன்னார்; வாத்தி எழுதினார்; வாத்தி திட்டினார்’ என்றெல்லாம் தங்கள் பள்ளீப் பருவகாலத்தை நினைவு கூரும்போது இங்கு தங்கள் நன்றி கெட்ட குணத்தையும் திமிர் பிடித்த  கொள்கையையும் காட்டிக் கொள்வதில் மகிழும் அவர்கள் ’தாங்கள் செய்யும் பாவம் இன்னது’ என்பதை அறியாதவர்கள்.

நமது குற்றங்களை நீக்கி நல்வழிப்படுத்தும் அறிவை நமக்குப் புகட்டிய அந்த ஆசிரியர்கள், நமக்குப் பல்வேறு வகைகளில் முன் நின்று வாழ்விக்கும் தெய்வங்கள்’ என்பதை இன்று, இந்த ஆசிரியர் நினைவு தினத்திலேனும் சிந்தித்து சேவிப்போம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.9.2013

No comments: