Wednesday, November 7, 2012

ஞானபீடக் கவிதை

முகநூல் நண்பர் Jeevitha Rajan அவர்கள்படித்ததில் பிடித்தது
என்று தனது பக்கத்தில் எடுத்து எழுதியிருந்த கருத்தைத் தழுவி நாம்புனருத்தாரணம்செய்து எழுதுகிறோம்,இங்கே:
--------------------------------------------------------

ஞானபீடக் கவிதை


அடடா…,
அழகென்றால் அழகு;
ஆராதிக்கின்ற அழகு.

தேவதைதானோ?’
என்று
தேக்கி வைத்துக் கொண்டுள்ள அழகு.

அவளைக்
கொஞ்சம் கொஞ்சமாக
நான் சுவீகாரம்
செய்து கொண்டிருந்தேன்;

அவளோ
தன் அழகான அனலில்
என்னைப் பலகாரமாகிக்
கொண்டிருந்தாள்.

என்னைத் தன்
ஓர் விழிகளால்
பார்த்துக் கொண்டே
அந்த ஆற்றின் கரையில்
தேரென அசைந்து நகர்ந்த போது...
.

அய்யோ.....

அந்தத் தேவதை 
என் கண்முன்னே
ஆற்றில் தவறி விழுந்து விட்டாளே,,!

என் செய்வேன்..? என் செய்வேன்?’

துடிதுடித்துப் போனதென்
நெஞ்சம்.

அய்யகோ...
கண்முன்னாலேயே
ஆற்றில் அடித்துச் செல்லப்படும்
அவளுடைய
அழகின் அசைவுகளையெல்லாம்
கண்டு களித்துக் கொண்டிருக்கிறானே
அவன்...

ச்சீ..அவன் ஒரு மனித மிருகம்.

அதோ:-
ஆபத்து ஆபத்து
என்று
அலறுகிறார்களே நாலுபேர்?   

யாராக இருக்கமுடியும்?

....
அவர்கள் ’பொது ஜனம்
என்பது
புரிந்து விட்டது

அய்யோ...
இன்னும் என் தேவதை
தண்ணீரில் தத்தளிக்கின்றாளே.....

ஆகா
அதோ ஒருவன்
கைகளைத் தூக்கிக் கொண்டு
அய்யையோ அய்யையோ;
கடவுளே காப்பாற்றுஎன்று
கதறுகின்றானே...

யார் ? என்று
துறு துறுத்த என் மனதுக்குப்
புரிந்து விட்டது:
அவன் ஒரு பக்தன்
 என்பது.

புத்தி பேதலித்துப் போய்
தண்ணீரில்
தத்தளித்துக் கொண்டிருந்த
அந்தத் தத்தையின் 
உயிர்ப்போராட்டத்தில்
உறைந்து கொண்டிருந்தது
என் மனது.

செய்வதறியாது
செத்துக் கொண்டிருந்தேன்...

நல்ல வேளை...
பெண்ணியம் பேசும்
புரட்சிகர சீர்திருத்தச் செம்மல்
அங்கே வந்து
உயிருக்குபோராடும்
என்னவளைப் பார்த்தார்:

இதற்குத்தான் சொன்னேன்;
பெண்கள் பப்ளிக்காகவே
நீச்சல் கற்றுக் கொள்ள
இந்த ஆணாதிக்க சமூகம்
ஒப்புக் கொள்ள சட்டம் தேவை

முழங்கினார் அவர்.

அவர் முழக்கத்தைக் கேட்டு
அங்கு வந்தார்;
எதிர்க் கட்சித் தலைவர்,

என்னய்யா?
சட்டம் கிட்டம்ன்னு
இப்போ பேசுவது?

பெண்கள் ஆற்றில்
குளிப்பதற்குக் கூட 
பாதுகாப்பில்லை;
இந்த துப்புக் கெட்ட அரசில்

என்று
சத்தமாகக்
கொளுத்திப்  போட்டார்.

அவருடைய சத்தம் கேட்டு
நான்கு டன்
.சி.அறைக்குள்
 ஃபைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த
முதல் அமைச்சர் அவர்கள்
நல்ல வேளை,
இந்த வறண்டுபோன கரண்டைப்
பற்றிப் பேசாமல்
ஆற்றில் பாதுகாப்பில்லை
என்று
அந்த ஆள் பேசிவிட்டான்
என்று முனுமுனுத்ததோடு-

ஆற்றில் விழுந்த பெண்ணுக்கு
எவ்வளவு இழப்பீடு
என்பதற்கு
மதிப்பீடு செய்ய
எனது அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளேன்.

அதற்குள்
அப்பெண் இறந்து விட்டால்
இழப்பீடு இரட்டிப்பாக
வழங்கப்படும்
என்று அறிக்கை விட்டு விட்டார்.

இதைக் கேட்டுத் தாங்காமல்
தடாலெனத் தண்ணீரில்
குதித்தொருவர்
செத்தும் போனார்.

அவருக்குத் தியாகி
என்று பட்டமளித்து
சாகாமல் இருக்கிற
அவரது
குடும்பத்துக்குஅவார்டு
வழங்கப்படும் என்றும்

முதல்வர்
அறிவித்துக் கொண்டிருந்த
வேளையில்

எங்கிருந்தோ
ஒரு மனிதர்
யாரிடமும்  சொல்லாமல்
ஆற்றில்  அடித்தார்டைவ்’;
அடுத்த நிமிடம்;
அவர் தோளில்
என்னவள்.’லைவ்

அவளை அப்படியே
கரையில் அமர்த்தி விட்டு
தான் யார்?’
என்று காட்டிக் கொள்ளமலேயே
போய் விட்டார் அம்மனிதர்.
.

அவரை 
மர்மயோகி என்பதா?
கர்மயோகி என்பதா?
அல்லது 
தர்மயோகிதான் என்பதா?

என் மனதின் குழப்பம்
அகலவே இல்லை.

என்
உயிரில் கலந்து
உணர்வில் நிலைத்து விட்ட 
அந்தப் 
பேரழகியை மட்டும்
அந்த யோகி
கரை சேர்க்காமல் போயிருந்தால் 
எனது கவிதையும்
கரை சேர்ந்திருக்க முடியாது;
சமுதாயமே,
நீயும் 
எனது நிஜக் கவிதையைப்
படித்திருக்க முடியாது;

என்று 
உண்மைச் சம்பவத்தை
எழுதிய
அந்தக் கவிஞனுக்கு
ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டு விட்டது.

-கிருஷ்ணன்பாலா
  7.11.2012

No comments: