நண்பர்களே,
முகநூலில் கருத்துப் பதிவு இடுகின்றவர்களும் அந்தக் கருத்துக்களுக்குப்
பதிலூட்டம் இடுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது; தெரிந்து கொண்டால்மட்டும் போதாது கடைப்பிடிக்க வேண்டியதும் கூட.
இது முகநூலுக்கு மட்டுமின்றி முகநூலுக்கு வெளியிலும்
பதிப்பிக்கப்படுகின்ற நூல்களுக்கும் பொருந்தும்.
நீங்கள் எழுதுவதும் பதிவிடுவதும் உங்கள் சொந்தக் கருத்து எனில்
அதை எவ்வித மேற்கோள் குறியீடுகளும் இன்றிப் பதிக்கலாம்.
ஆனால்-
பிறர் சொன்ன கருத்துக்களை அப்படியே ‘காப்பி’ செய்து தங்கள் பக்கங்களில் போட்டுத்
தங்கள் அறிவுச் சிந்தனைபோல் பலரும்
போட அதை ’ஆகா’ ஓகோ’
என்று ஒரு பெரிய கூட்டம்
துதிபாடிப் போற்றுவதும் புகழ்வதும் அதிகம் காண்கிறேன்.
உண்மையில் அந்தக் கருத்தைச் சொன்னவரின்
பதிவில் ஒருசிலரே Likeம் commentsகளும் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது
நம் சினம் பன்மடங்கு
பரவ, அவர்களைக் காறித் துப்புகிறது மனம்.
கருத்துச் சொன்னவனை விட அதைத் திருடி,
தனது கருத்துப்போல் காட்டிக் கொள்பவனுக்கு வரவேற்பும் மரியாதையும் அதிகம்.
பிறர் கருத்தை வெட்கமில்லாமல் கையாள்வதில்தான் தான் ஒரு பெரிய
இலக்கியவாதி ஆக முடியும் என்ற துணிச்சல் நமது எழுத்தாளர்கள்
பலருக்கும் வந்து, அது வளர்ந்து கொண்டிருக்கிறது, சுயஅறிவுக்குப் பதிலாக
.
இன்னும் சொல்லப்போனால்,
இங்கு கருத்துத் திருடர்களின் கூட்டத்தை விட, அதை ஆதரித்து
ஆரவாரம் செய்யும் அரைகுறைச் சில்லுவண்டுகளின் கூட்டம் மிகுதிதான்.
அரைக்கால் ‘ட்ரவுஸர்’ பையன்களின் அரைவட்டத்துக்குள்ளேயே முக்கால் வட்டம் அடித்துக் கொண்டு தங்களின்
மெய்சிலிர்ப்பைத் தாங்களே சொறிந்து கொள்ளும்
இந்த அரைவேக்காட்டு எழுத்தாளர்களின் திருட்டுக் குணத்தை நாம் திருத்த
முடியாது.
ஏனெனில்,
அவர்கள் பிச்சையிட வருபவனிடம் கையேந்தாத ‘மானஸ்தர்களாக’க்
காட்டிக் கொண்டு ‘திருடித் தின்பதையே’ வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்.
‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ‘என்று பட்டுக்கோட்டையார் பாடிய பாட்டின் பொருள் இதுதான்.
அடுத்து-
பிறர் பதிவிட்டுள்ள கருத்துக்களில் உள்ள நல்ல விஷயத்தைப் பாராட்டவோ அதை எடுத்து ஆளவோ விரும்பும் அறிவுக் கூர்மையுடையோர்.
பிறர் கூறிய அந்த நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டி அதைத் தங்கள்
கருத்துடன் இணைத்து எழுதும் ஆற்றல்
இவர்களுக்கு உண்டு.
அப்படி,பிறர் கருத்துக்களைத் தங்கள் கருத்துக்களோடு இணைக்கும்போது
குறைந்த பட்சம் பிறர் சொன்ன கருத்து அது’ என்பதை எவ்வகையிலேனும்
சுட்டி எழுதுவதே எழுதுபவனையும் பெருமைப் படுத்தும்; ஒரிஜினலாக
எழுதியவனையும் பெருமைப் படுத்தும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
இதுதான் பண்பட்ட எழுத்தாளர்களின்/சிந்தனையாளர்களின்
உயர் தகுதி;இலக்கிய மரபு.
அவ்வாறு செய்யாமல் எவ்வித மேற்கோள் குறிப்பும் இன்றித் தங்கள்
பதிப்புக்களில் தாங்கள் எழுதும் சொந்தக் கருத்துக்கள்போல் காட்டிக்
கொள்வார்களனால், அது குற்றம்; அதாவது அது, ‘இலக்கியத்திருட்டு’ என்ற பழிக்கும் கேவலத்துக்கும் ஆளாகும் குற்றம்.
பதிப்புக்களில் தாங்கள் எழுதும் சொந்தக் கருத்துக்கள்போல் காட்டிக்
கொள்வார்களனால், அது குற்றம்; அதாவது அது, ‘இலக்கியத்திருட்டு’ என்ற பழிக்கும் கேவலத்துக்கும் ஆளாகும் குற்றம்.
‘பிறர் கருத்தைக் கோடிட்டுக் காட்டினால் தங்கள் சிந்தனைக்கு மதிப்புக்
குறைந்து விடும்’ எனக் கருதி,
பிறர் சொன்ன அர்த்தமுள்ள கருத்துக்களை
தங்கள் கருத்தோடு கலந்து தங்களுடைய ஒரிஜினல்
கருத்துப்போல் சொல்லி கரவொலி வாங்குவது
படிப்பவனை முட்டாளாகவே வைக்க விரும்புகிறவர்கள் அவர்கள்
என்பதும், அவர்கள், ‘இலக்கியத் திருட்டு’ என்னும் கயமையோடு கள்ள
உறவு கொண்டிருப்பவர்கள் என்பதும் உண்மையாகிறது.
‘இலக்கியத் திருட்டு’ படிக்கத் தெரிந்தவர்கள் செய்யக் கூடாத பாதகம்.
அதைச் செய்வார்களானால் அது:
பக்கத்து வீட்டுக்காரன் பத்து பிள்ளைகள் பெற்று வாழ்கிறான்; ‘தனக்கென்று ஒரு பிள்ளை கூட இல்லையே’ என்று ஏங்குகிறவன்
தன் பெண்டாட்டியைப் பக்கத்து வீட்டுக்காரனிடம் படுக்கவைத்துப்
பிள்ளைத் தாச்சி ஆக்கிப் பிள்ளை பெற்றுப் பெருமை கொள்கின்ற
ஈனத்தனத்துக்கும் பிறர் எழுத்தைத் திருடி ‘இலக்கியப் பிள்ளை’ பெற்றுக் கொள்கின்ற ‘ஞானத் தனத்துக்கும்’ நேர். அவற்றில் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை.
சில சமயம்-
தங்கள் அனுபவத்தின் நாட்டத்தாலும் அறிவுத் தீட்டத்தாலும் சிலர் எழுதும் கருத்துக்கள் ஏற்கெனவே யாரோ அல்லது மேதைகள் சொன்ன கருத்தின் அடிப்படையிலோ/அதையோ பிரதிபலிப்பதாகவோ இருக்கலாம்;அது அவருடைய தவறாகாது.
'Great men think alike' என்ற
சொல்லுக்குப் பொருளான கருத்தாய் அது
இருப்பது இயற்கையான விதிவிலக்கு.
பொதுவாக-
எல்லாப் படைப்புகளுமே நாம் கற்றுக் கொண்டிருக்கும்
பாடங்களின் பிரதிபலிப்புத்தான்.
எந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர்.எந்த எழுத்துக்களும் முன்பு எங்கும் எவராலும்
சொல்லப் படாத புத்தம் புதியவையும்
அல்ல.
அவை யாவும் எங்கோ,எப்பொழுதோ
நம் முன்னோடிகளும் முன் இலக்கியங்களும் மொழிந்திருக்கும்
கருத்துக்களின் சாரமாகவேதான் இருக்க முடியும்.
அவை ’இலக்கியத் திருட்டு’ என்பதாகாது;அவற்றை ‘இலக்கிய விருந்து’
என்றே ஏற்க வேண்டும்.
சர்க்கரை ஒன்றுதான்;அதைக் கொண்டு விதம்
விதமான பதார்த்தங்களைப் பலரும் பலவிதத்தில் செய்வதில்லையா?
‘இலக்கிய விருந்துகளை’ச் சுவைத்து மகிழ்வதில் நாம் எப்பொதும்
பந்திக்கு
முந்த வேண்டும்.
அது அறிவுத்தேடலின் அடையாளம்;தமிழனின்
தனிச் செறுக்கு.
அதேபோல் ஒருவருடைய கருத்துக்களுக்கோ.படைப்புக்களுக்கோ
நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தையே
சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்
சிந்தனையும் சொல் வளமும் பலமாக
விருத்தி அடையும்.
ஒருவர் கருத்துச் சொல்லும்போது அதற்குப் பதிலூட்டம் இடுகிறவர்,தனது
பார்வையை அல்லது தனது கருத்தைச்
சொல்லும்பொருட்டு, முதலில் கருத்துச் சொன்னவரின்
பதிப்பிலிருந்து சில பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ
’காப்பி ‘ செய்து,வேறு எந்த
இடுகுறிகளும் இல்லாமல் மொட்டையாக எடுத்துப் போடக் கூடாது. அதற்கென்றிருக்கிற இடு குறிகளை உரியவாறு இட்டு மேற்கோள் காட்டுவதில்தான்
‘சொன்னவனின் கருத்தோடு ஒத்துப் போகிற கருத்தூட்டம்’ அது என்று படிப்பவர் சிந்திப்பர்.
இல்லை எனில் ஒரிஜினலாகச் சொன்னவனின்
கருத்துக்குக் கிடைக்கும் Likeகளை விட அதையே
எடுத்துப்போடும் பதிவூட்டத்துக்கு அதிகப்படியான Likeகளை
நம் முகநூல் அறிஞர்கள் போட்டு
விடுவார்கள்.
அவர்களுக்குத்தான்
ஒரிஜினல் பதிவுகளைப் பார்க்கும் வழக்கம் இல்லையே?
‘செக்கு எது? சிவலிங்கம் எது?’ என்பதெல்லாம் நக்குகிற மாடுகளுக்குத் தெரியாது,நண்பர்களே.
இவண்-
கிருஷ்ணன்பாலா
23.11.2012
No comments:
Post a Comment