Monday, March 19, 2012

தீர்மானமாக ஆதரி

அறிவு சான்ற தமிழர்களே,நண்பர்களே,
வணக்கம்.

தமிழர்களாகிய நமக்கு, உலக அளவில் நமது இனத்தின் ஒற்றுமையையும்,அதன் உணர்வுகளையும் இன்று ஒரே குரலில்
ஓங்கி உரைக்கவும்;அதன் வலிமை யாதெனக் காட்டவும் வாய்ப்பு வந்திருக்கின்றது.

இலங்கையில் மனித இனத்துக்கு எதிராக மிகப் பெரும் வன்செயல்களை;போர்க் குற்றங்களை அதன் ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்டு,முன் எப்போதும் இல்லாத வகையில் அங்கே இனப் படுகொலைகளை நடத்தி இருக்கின்றது.

ஹிட்லரின் ஆட்சியில் யூத இனத்துக்கு எதிராக நடத்தப் பட்ட இராணுவ வன்கொடுமைப் படுபாதகச் செயல்களை விடவும் 
பன்மடங்கு அதிகமாக ராஜ பக்‌ஷேவின் அதிகாரத்தின் கீழ், அவனது கொடூர எண்ணங்களின் பிரதிபலிப்பாக இலங்கையில் மனித இனம் வேட்டையாடப்பட்டிருக்கிறது.

அந்த மனித இனம், நம் ’தமிழர் இனம்’ என்பதைக் கேடு கெட்ட சோனியாவை- இன்னும் ’அன்னை சோனியா’ என்று ஆலாபித்துக் கொண்டிருக்கும் ஆதிவாசிகளான காங்கிரஸாரைத் தவிர- தமிழர்கள் மட்டுமல்ல,உலக சமுதாயமே உணர்ந்து விட்டது, 

தீவிரவாத எண்ணம் கொண்ட ஒரு சிலர், தங்கள் உயிரைத் துச்சமெனக் கொண்டு, ராஜிவ் காந்தியைக் கொன்று விட்டார்கள். ’அக்கொலை நம் தமிழ் மண்ணில் நிகழ்த்தப் பட்டது’ என்ற எமது மன்னிக்க முடியாத கோபத்தை இன்று மட்டுமல்ல; என்றைக்கும் குறைத்துக் கொள்ள இயலாது. அது ஒரு துடைக்க முடியாத ரத்தக் கறையாகத் தமிழ் மண்ணில் படிந்து விட்டதுதான்.

ஆனால், ராஜிவ் காந்தி, எவ்விதம் கொடூரமாகக் கொல்லப் பட்டாரோ, அவ்விதமே அதைவிடவும் இன்னும் கொடூரமாக, ‘இலங்கைத் தமிழர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டும்’ என்று வன்மம் கொண்டு, மதிப்பு மிக்க நமது தேசத்தின் மாண்பை எல்லாம் இன்னோரு தேசத்தின் குடிமக்கள் மீது ‘எந்த நாடும் இதுவரை செய்யாத ஈனச் செயல்களால்’ இழிவு படுத்தியிருப்பவர் இந்த சோனியா.


அவர் பெயரைக் காந்தி என்று சேர்த்துச் சொல்லி,உத்தமர் காந்தி என்ற அந்தப் புனிதரைக் களங்கப் படுத்திட மாட்டேன்.


’இலங்கையில் தமிழர் இனம் பூண்டோடு அழிக்கப் படவேண்டும்’ என்ற வெறி ராஜ பக்‌ஷேவுக்குக் கூட இல்லாதது; இந்த சோனியாவுக்கு இருக்கின்ற காரணத்தால்தான் அங்கு பாவம் செய்யாத தமிழர் இனம் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனது; இன்னமும் கொடுமைக்கு ஆளாகி வருகின்றது.

'நம் நாட்டின் வித்தாக இல்லாதது மட்டுமல்ல; இத்தாலி நாட்டின் ‘மனித நேயப் பண்பும்’ இல்லாதவர் இவர்' என்பதை இவருடைய கடந்த கால அரசியல்,அதிகாரப் பித்தச் செயல்கள் நிரூபித்துள்ளன.

ராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் அடைந்திருக்கின்ற ஆதாயத்தை விட, அவர் செத்துப் போனதால் இவர் அடைந்த ஆதாயம் ஆயிரம் மடங்கு; ஆனால் இந்தியா அடைந்த கேடு அதனினும் பல மடங்கு.

இந்தியா உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. தர்மத்தின் சின்னமாய்த் தலை நிமிர்ந்து நிற்கும் தேசம். இதன் மாண்பும் மரியாதையும் சோனியாவின் சுயநலத்தால் சூறையாடப் பட்டுச் சுரண்டப் படுகிறது.

இன்றைய பாராளுமன்றம் பலகீனமாய் இருக்கின்ற காரணத்தால் இவருடைய சூழ்ச்சிகளைக் கண்டும் செயலற்ற நிலையில் சூம்பிப் போய் இருக்கின்றது.

இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதென்றால்,விரைவில் பொதுத் தேர்தல் வர வேண்டும்; ’சுனாமி’ எனச் சீறி வரக் காத்திருக்கும் ’அது ஒன்றுதான் கடவுளின் கருணைக் கரம்’ என நாம் காத்திருக்கச் செய்கிறது.

நண்பர்களே,

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்ற பாவமானது அதற்கு காரணமானவர்களின் பரம்பரைக்கு ஏற்பட்டுள்ள தீராச் சாபம்; நீக்க முடியாக் களங்கம்.

அதிகாரத்தின் மமதையாலும் பணத்தின் பாவத்தாலும் சேரும் பலனே அதுதான்.

அதில் சிற்றின்பம் கண்டவர்கள் அதன் அழுக்கைத் தின்று வாழும் அவலத்துக்கு ஆளாகத்தான் நேரிடும்.

இதோ-
அமெரிக்கா என்ற தேசத்தின் மூலம் ஆண்டவன் செய்த ஏற்பாடுதான் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கான தீர்மானம். 


உலக நாடுகள் பலவும் இதற்கு ஆதரவு தெரிவித்தபோது, ’இந்தியா கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

இதை ஆளுகின்ற அற்பர்களுக்கு, இலங்கையில் செத்துப் போனது, மனிதர்கள் அல்ல; மாடுகள் என்ற நினைப்பு.

‘தமிழினம் தலை நிமிர்ந்து விடக் கூடாது’ என்ற துடிப்பு.

இந்தியாவில் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் பண்பாடும் பேசப்பட்டுவிடக்கூடாது என்ற வெறித்தனத்தின் கொழுப்பு.

இந்தியத் தேசியத்தில் எள்ளவும் இடைவெளி அற்ற இணக்கம் கொண்டு வாழும் தமிழர்களின் நேசிப்பை, நீக்கத் துடிக்கும் இத்தாலிய எண்ணத்தின் பிரதி பலிப்பு.

’சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ என்று பாடினானே பாரதி. 


அவன் சாடிய ’சிந்தை இரக்கம் கொள்ளாத இருடிகள்’ வாழுகின்ற  தேசமாய் ஆகி விட்டதே நம் தேசம்.

’தமிழ்’தமிழர் இனம்’ என்று சிந்து பாடிக் கொண்டு அதே மொழியின் பெயரால்,இனத்தின் பெயரால் ஓட்டுக்கள் வாங்கி, ஆட்சி அதிகாரத்தின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, அதே தமிழ் இனம் கதறிக் கதறிச் செத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவர்தானே இந்தக் கலைஞர் கருணாநிதி?

‘ஒரு காலத்தில் அமைதிப் படை’ என்ற பேரால் இலங்கையில்  தமிழருக்கு எதிராகச் செயல்பட்ட இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன்’ என்று முதலமைச்சராக இருந்து கொண்டு முழங்கியவர்தானே, கலைஞர் கருணாநிதி?


’இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்து கொண்டு மாநிலத்தின் ஆட்சிப் பீடத்தில் இருக்க முடியாது’ என்று காரணம் காட்டி, இந்திய அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவின் கீழ் ஆட்சிக் கலைப்புக்கு ஆளானவர் என்பதை அவர் மறந்து போனாலும் நாம் மறக்கவில்லை..

ஆனால், அதே கலைஞரின் ஆட்சிக் காலத்தில் இந்திய அமைதிப் படையால் நிகழ்த்தப் பட்ட கொடுஞ் செயல்களை விடவும் இப்போது ஆயிரம் மடங்குக் கொடுஞ்செயல்கள் ராஜ பக்‌ஷேவைக் கவசமாக்கிக் கொண்டு சோனியாவின் திட்டப்படி இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப் பட்டபோது முதல் ஆளாக இருந்து நின்று, தனது வீராப்பு வசனத்தை அப்படியே நேர்த்திசையில் கோணலாக்கிக் கொண்டு கொடி பிடித்தவர்தானே,இவர்?.

இவருடையை துணையினாலும் ராஜபக்‌ஷேவின் இணையினாலும்தான் இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக் கொடுமை நிகழ்த்தப் பட்டது.

கலைஞர் கருணாநிதி இப்போது, இலங்கைத் தமிழருக்கு எதிராக நிகழ்ந்த கொடுமை கண்டு கண்ணீர் சிந்துவது கோமாளிக் கூத்து.

அவரது முதலைக் கண்ணிர் கண்டு ஏமாந்தால் மீண்டும் தமிழன் தனக்குத்தானே குழிபறித்துக் கொள்வதாகி விடும்.

சரி....
இவர் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக,தன்னுடைய அனைத்து எம்.பிக்களையும்கொண்டு இப்போதாவது சோனியாவுக்கு எதிராக ஆதரவை உடனடியாக வாபஸ் வாங்கட்டும்.


‘இலங்கைத் தமிழ் இனத்துக்குச் செய்த துரோகத்துக் இனியும் நாங்கள் துணை நிற்க மாட்டோம்’ என்று சூளுரைத்துச் செய்து 
அதை நிரூபித்துக் காட்டட்டும்.

அப்போது,இவருடைய கடந்த காலப் பாவங்களை மன்னிக்க முடியாது என்றாலும் அவற்றை மறந்து கொஞ்ச காலம் இருப்போம்.

இப்போதைக்குத் தேவை:
1. இலங்கைத் தமிழருக்கு எதிராகச் செய்த வன் கொடுமைக் 
  குற்றத்துக்கு ‘ராஜ பக்‌ஷேவும் அவனுக்குத் துணை 
  நின்றவர்களும்  உலக அளவில் தண்டிக்கப் பட வேண்டும்.

2. சோனியாவால் இந்திய தேசம் இழந்து வரும் மரியாதைகள் 
  இதன் மூலம் நீக்கப் பட வேண்டும்

3. சொல்லொணாத் துயருக்கு ஆளாகி சொந்தம் பந்தங்களையும்
  சொத்துக்களையும் இழந்து அந்நிய தேசங்களில் அகதிகளாக  
  வாழும் எம் தமிழர்கள் கொஞ்சமாவது ஆறுதல் பெற வேண்டும்.

4. தமிழருக்கென்று ஒரு தேசம் உலக வரை படத்தில் உருவாக 
  வேண்டும்.

5. இந்திய ஒருமைப்பாடு இதன் மூலம் உறுதி செய்யப் பட 
   வேண்டும்.

எனவே,
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தைத் ‘தீர்மானமாக ஆதரி’ என்று இந்தியாவை வற்புறுத்துவோம்; இதை உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் ஏகோபித்த குரலாக உலக நாடுகளின் முன்னிலையில் ஓங்கி உரைப்போம் நண்பர்களே.

இவண்,
உலகத் தமிழர் மையம் சார்பாக,
கிருஷ்ணன்பாலா
19.3.2012 

1 comment:

chandru said...

தனி ஈழம் அமைவது உறுதி அய்யா.............