Sunday, March 4, 2012

பொய்யரைப் புரிந்து கொள்ள...


நண்பர்களே,

உங்களுடைய நேர்மையையும் பண்பையும் அடுத்தவர் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக நீங்கள் வருத்தம் கொள்வதாயின், பிறகு மெல்ல மெல்ல அடுத்தவர்க் கேற்ப உங்கள் நேர்மையையும் பண்பையும் நீர்த்துப் போகச் செய்யத் தயாராகி விட்டீர்கள் என்று ஆகி விடும்.

பிறர் உங்களின் உள்ளப் பாங்கினைப் புரிந்து கொள்ளாமல் எதிர் வினையாடல் செய்கின்றார் என்பதற்காக சினம் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் பிடிவாதக்காரர் என்று அர்த்தம்.

அப்போது நீங்கள் தலைக் கனம் கொண்டவர்போல் விமர்சனத்துக்கு ஆளாகத்தான் வேண்டும். அந்தப் பிடிவாதமும் சினமும் நேர்மை காக்க எடுக்கப் படும் வாள் எனக் கொண்டு நிமிருங்கள்.

அது பொய்தான் என்றாலும் ஒருவகையில் வாய்மைக்கு இவ்வுலகில் - குறிப்பாக அது இல்லாதவர்களிடமிருந்து கிடைக்கும் மதிப்பீடு என்பதையே உணருங்கள்; அத்தகைய மதிப்பீட்டை ஏற்று மகிழுங்கள்.

பொய்யர்களின் புகழ்ச்சியும் சம்மதமும் ஒருபோதும்
சந்தோஷத்தின் கரையில் நம்மைச் சேர்ப்பதில்லை.

வாய்ம்மைக்கு எதிரான பொய்யர்களின் தீர்ப்பும் புல்லர்களின் சூழ்ச்சியும் உங்களுக்குப் புரியும் எனில் நீங்கள் உண்மையிலேயே மகிழ்வோடு உறுதி குலையாமல் இருப்பீர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்வேன்.அதாவது அத்தைய சந்தர்ப்பங்களின் மூலம்தான் வாய்மையும் நேர்மையும் வலுவோடு வரைமுறை செய்யப் படுகின்றன.பொய்ம்மை என்பது வாய்ம்மையைப் பட்டை தீட்டும் ஓர் ’உரைகல்’ என கருதிக் கொள்ளுங்கள்.

நான் சினம் கொள்கின்ற சந்தர்ப்பங்களும் பிடிவாதக்காரனாகி நிற்கின்ற நேரமும் எனக்கு நிறைய நேர்ந்தததுண்டு.

”பொய்யர்களின் எதிர்வினைகள் கண்டு நீ வருத்தம் கொள்ளாது வாழ்வாயாக”  என்று வள்ளுவப் பாட்டன் வந்து எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போய் இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

”பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

என்று ஒரு குறளைத் தன் குரலால் சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
4.3.2012

No comments: