Sunday, June 9, 2013

எனது நூல் அகம்!



எனது  நூலகம்
------------------------
இதுதான் என்றன் நூலகம்;
என்னை இயக்கும் தாயகம்!
மதுதான் மயக்கம் தந்திடுமோ?
மயங்கிடுவேன் நான் நூலென்றால்...

எங்கே சுற்றித் திரிந்தாலும்
எதுவும் எனக்குச் சுவையில்லை:
இங்கே என்றன் நூலகத்தில்
இருப்பதைப் போன்ற சுகமில்லை!

உலகை நினைத்துக் கவலையினால்
உள்ளம் தோய்ந்து கசக்கின்றது;
உலகை இங்கே மறக்கின்றேன்;
ஒவ்வொரு நொடியிலும் பிறக்கின்றேன்!

ஒவ்வொரு நூலிலும் என்அன்னை
உள்ளே இருந்து அழைக்கின்றாள்;
ஒவ்வொரு நூலிலும் என்மகிழ்வை
உயிராய்க் காத்து வளர்க்கின்றாள்!

வீடுகள் தோறும் நூல் தொகுப்பு
விரிந்து பரவி இருந்தாலே
கேடுகள் குறையும்; புத்தகங்கள்
கேள்வியும் ஞானமும் அருள்வதனால்! 

செல்வம் இதுதான் என்றுணர்த்தி
சிந்தையில் நின்றாள் கலைவாணி;
வல்லவள் அவளே  என்தாயாய்
வழி நடத்திடவே விரும்பு கின்றேன்!

அன்னை வாணி அடிமலரை
அணைந்தேன்;அன்றித் திருமகளின்
பின்னே சென்று ’பிழை’ வாழ்வைப்
பேணுவதில்லை’ என்பேன் நான்!

பிறந்தால் மீண்டும் மண்ணில்நான்
புத்தகப் புழுவாயப் பிறந்திடவும்;
இறந்தால் இந்தப் புத்த கங்கள்
என்னை மூட, இறந் திடவும்

வரம் தாஎன்றே வேண்டுகின்றேன்;
வழங்கிடுவாய் என் குருதேவே!
பரம்பொருள் வடிவில் வாழ்பவனே;
பாரில் இதுவே என் ஆசை!
  
இவண்-
கிருஷ்ணன்பாலா
9.6.2013 

No comments: