Tuesday, June 11, 2013

பிழைபட ஒழுகேல்!

பிழை என்பது என்ன?

நாம் எழுதும்போது வார்த்தைகளில் வரும் எழுத்துப் பிழைகள் பிழை அல்ல!

’நல்ல நெறிகளைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதும்; கற்றிருந்தால் அவற்றின் வழியிலேயே கசிந்துருகி நடக்க  வேண்டும்’ என்ற கருத்தின்றி   இருப்பதும்; நமது செயல்கள்தான் நாளைய நம் சந்ததியினரை வழிநடத்தும் பாடங்கள் என்பதை உணராமல், இறைவனின் பெயரைச் சொல்லாமல் வாழ்நாளை வீழ் நாளாக்கிக் கொண்டு, ’அப்படி வீண் நாளாக்கிவிட்டோமே’ என்று நினைக்காதிருப்பதும்; வணங்கி வாழும் நெறியற்றிருப்பதுமாகியவைதாம் பிழைகள்’  என்ற சுய தரிசனத்தோடு தனக்குத் தானே சுட்டிக் காட்டிப் பாடி இருக்கிறார்,பட்டினத்தார்

அவர் அவ்வாறு சுட்டியிருப்பது இந்த மானுடத்துக்கு.

சுயதரிசன அறிவுடையோர் அவரது பாடலை மெய்யுருகப் பாடி, தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்;அப்பாடல்:

//கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும்நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய், கச்சி ஏகம்பனே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.6.2013

No comments: