Monday, June 3, 2013

கலைஞர்-அகவை’90

அறிவார்ந்த நண்பர்களே,

கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஜூன் 3 ஆம் தேதியோடு அகவை 90ஐ எட்டி நிற்கிறார்.

தி.மு.க வினரும் கலைஞரின் சார்பான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களும் அவருடைய அகவை 90ஐ முன்னிலைப் படுத்திப்
பட்டிமன்றம், பாட்டுமன்றம் என்று அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆட்சிக் களத்தில் இல்லாத நிலையிலும் இப்படி அமர்க்களப் படுத்துவது மக்கள் மன்றத்தில் மீண்டும் அமர,’ களம்’ காணும் முயற்சியாகத் தி.மு.கவுக்குத் தேவைப்படலாம்;நமக்கல்ல.

எனினும்,90 வயதிலும் துவண்டு போகாமல் கலைஞர் அவர்கள் 
துடிப்புடன் அரசியல் செய்யும் மனஉறுதியை நாம் ஒவ்வொருவரும் பேராச்சர்யத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளில் மறைக்க முடியாதவராக அவர் திகழ்வதை இவரது எதிரிகளேகூட மறுக்க முடியாது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் அவரை நிந்தித்தோ, வந்தித்தோ வசைபாடி அல்லது இசைபாடிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

”கலைஞருக்கு வாக்களித்தால் நாட்டுக்கு கேடு;
அவருடைய வீட்டுக்குப் பேறு’ 
என்று -
முத்திரை குத்தப்பட்ட அனுபவம் மக்களுக்குக் கிடைத்த போதும், 
மேடம் ஜெ. அவர்களின் புண்ணியத்தால் இரண்டு முறை  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அதிர்ஷ்டசாலிதான் கலைஞர் என்பது கசப்பான உண்மை. 

‘கலைஞரின் அரசியலாலும் ஆட்சியாலும் தமிழர்களுக்கு நன்மை’ என்பதைவிட, ‘அவருடைய குடும்பத்தாருக்கும் அவர்தம் அனைத்து வாரிசுகளுக்கும் கோடி கோடி நன்மை’ என்பது நமக்குத் தெரியும்; நாட்டுக்கும் புரியும்.

இன்று -
தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க ‘கோடீஸ்வரப் பரம்பரை’ என்று பேசப்படும் அளவுக்கு அவருடைய பேரன் பேத்திகள் அத்தனைபேரையும் ஆக்கி விட்ட ’மிகப் பெரும் ராஜதந்திரி’ கலைஞர்  என்பதில் எள்முனை கூட சந்தேகம் இல்லை.

‘இந்தியாவே அதிரும்படி வெளித்தெரிந்த 2ஜி ஊழலை எப்படி அவர் அமுக்கிக் கொண்டிருக்கிறார்? என்பது ’அவருக்கும் சோனியாவுக்கும் மட்டுமே தெரிந்த ’ராஜ ரகசியம்’ என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர்..

அவர் எதிர்க்கட்சியில் இருந்த சமயங்களிலெல்லாம் அதிசயிக்கத்தக்க 
ராஜதந்திரியாகவும்; ஆட்சிக்கட்டிலில் இருந்தபோதெல்லாம் ’அருவறுக்கத்தக்க சின்னப் புத்திக்காரராகவும் இருந்தார்’ என்பதற்கு அவருடைய குடும்பப் பித்தும் சினிமா விழாக்களிலேயே அதிகம் கலந்து கொண்டு ஆனந்தப்பட்ட சில்லறைக் குணமுமே  சான்றுகள்;

வேறு சாட்சிகள் எதுவும் தேவையில்லை.

இவரிடம் எனக்குப் பிடித்ததெல்லாம்  எத்தகைய தோல்விகரமான சூழ்நிலையிலும் இலக்கியத் தமிழைக் கையில் எடுத்துக் கொண்டு படிப்போரை சொக்க வைத்து விடுகின்ற தமிழறிவும், சமயோசிதப் புத்தியும், இரவுபகலாக எந்நேரமும் எதையாவது எழுதி அதைப் புத்தகமாகப் போட்டு அதிலும் காசு பார்த்து விடுகின்ற சாமார்த்தியமும்தான்.

இவரால் எந்த நிலையிலும் துடைக்க முடியாத களங்கம்:
’உலகத் தமிழினக் காவலர்’ என்று தன்னை வெட்கமின்றி அறிவித்துக் கொண்டு தமிழினம் இலங்கையில் கொசுக்கள் போல் நசுக்கப் பட்டபோது கோட்டையில் கோலோச்சிக் கொண்டு சோனியாவோடு சொக்கட்டான் ஆடிப் பதவி சுகம் பேணிய பச்சைத் துரோகம்தான்.

‘செம்மொழித் தமிழ் மாநாடு’ என்று ஒரு மிகப்பெரும் ஜால்ரா மாநாட்டைக் கோவையில் நடத்தி, அதில் தங்களைக் ‘கொம்பேறி மூக்கன்’களாகக் காட்டித் தமிழ் வீரம் பேசித் திரிந்த கவிஞர்களையெல்லாம் காக்கைக் கூட்டங்களாக மாறச் செய்தது கலைஞரின் அறிவுத் திறனா? அல்லது அரசுப்பணத்தை அள்ளி இரைத்த அயோக்கியத் தனமா? என்று பட்டிமன்றம் நடத்தாமல் அதிமுக அரசை அமுக்கி வைத்திருக்கிறாரே, அந்த சாகசம் கலைஞரைத் தவிர யாருக்கும் வராது.

’பிறன்மனை விழையாப் பேராண்மை’ குறித்து குறள் எழுதிய வள்ளுவனுக்குத் தனிப் பெரும் சிலை எழுப்பியதைக் கொண்டு,’அய்யன் வள்ளுவனின் அறிவு வாரிசு கலைஞர்’ என்று கழக உடன் பிறப்புக்களையெல்லாம் உணர்ச்சிப் பிழம்பாய்க் குலவையிட வைத்திருப்பது கண்டு எம்போன்றோர் உணர்ச்சியற்ற ஜடங்களாய் நிற்கிறோம்.

‘தமிழைக் காக்கும் சக்தி தனக்கு மட்டுமே உண்டு’ என்பதாகக் கழக உடன்பிறப்புக்களை எல்லாம் முடுக்கி விட்டு, ஊர் ஊராக மேடைகளில் முழங்கச் செய்து, அதன் மூலம் அறிவு வளராதவர்களையும் ஏமாளித் தமிழர்களையும்  தன்பின்னே அணிவகுத்து நிற்கச் செய்த ஆற்றலும் அறிவும் இவரது ஈடில்லாத சொத்துக்கள்.

நானும் கூட1972களிலும் 1997 களிலும் கலைஞரை வாழ்த்தி அற்புதமான கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றால், அந்த ’அறிவு வளராதவர்களின் கூட்டம்’  எப்படிப்பட்டதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி அதிகாரம் இருந்தால் ’முடவனைக்கூட மூங்கில் மரம் ஏறினான்’ என்று இந்த முட்டாள் உலகம் சொல்லும்; அதிகாரத்தின் இனிமை எத்தகைய காரத்தையும் சோரம் போகச் செய்துவிடும்’ என்பதை  கலைஞரின் அரசியல் வெற்றிகள் காட்டும்.

தெய்வப் பற்றில் தேர்ந்த திருக்குவளை முத்துவேலருக்குப் பிறந்த தட்சிணாமூர்த்தி, தெய்வ நிந்தனையில் நாத்திகம் பேசிய கூட்டத்தில் இளம் பிரச்சாரகராகத் தன்னை இணைத்துக் கொண்டு ’கருணாநிதி’ என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டு அரசியலில் மிகப் பெரும் வெற்றிகளை அடைந்தபோதிலும்  இவரது வாழ்க்கை வரலாறு சகதியும் சேறும் நிறைந்தது.

அந்தச் சகதியிலும் சேற்றிலும் முளைத்த குவளை மலர் இந்தத் ’திருக்குவளை மலர் ’என்று கவிஞர்களும் பேச்சாளர்களும் கல்வியாளர்களும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும் இன்று போற்றி வருவதைக் காண்கிறோம்.

அன்று-
வறுமையிலும் பற்றாக்குறையிலும் வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு மூலதனமே நாக்குத்தான். அந்த நாக்கு, அரசியலில் வாக்கு வங்கிகளை வளைத்து போடும் வல்லமை கொண்டதாக இருந்த காரணத்தாலேயே-

”பொய்யுடையொருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே; மெய் போலும்மே!’
என்றாகி விட்டது.

சுயநலமும் குடும்பப் பாசமும் மிக்க தலைவர் ’இவரை விட இன்னொரு தலைவர் தமிழ் நாட்டில் பிறக்க முடியாது’ என்பதை விடவும் ‘பிறக்கக் கூடாது’ என்றே வேண்டுவோம்.

இவரை வாழ்த்துவதற்காக ‘தமிழுக்கு வயது 90’ என்றெல்லாம் புகழ்கிறார்கள்.

தமிழ்ப் பண்பாட்டின் காரணமாக நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வரை, திருக்குவளை முத்துவேலர் கலைஞர் ருணாநிதி அவர்களை நாமும் வாழ்த்துவோம்:

’தமிழுக்கு வயது 90;’ என்றல்ல; ’தவறுகளுக்கு வயது 90’ என்று.

இனியும் தவறுகளாக வாழாமல், செய்த தவறுகளுக்கு பிராயச் சித்தம் தேடும் வாழ்வில் நீண்ட காலம் வாழ்வாராக!

உலகத் தமிழர் மையம் சார்பில் வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
3.6.2013


4 comments:

Anonymous said...

pithatral

ramesh said...

migavum sariyaaga sonneergal. Avargal serthu vaitha sotthukkal yaavum thamizukka selavida pogiral. thangal kudumbangalukku thaan murai attra vazhigalil serthu vaikiraargal.

ramesh said...

Thaangal muraiyatru serthu vaitha sotthukalai kaapatrave arasiyal, thamiz endru thisai thirupubavargal

Anonymous said...

(தமிழ்) உணர்வு செத்தவனுக்கு இதெல்லாம் உரைக்காது!
-தமிழர் மைன்ட் வாய்ஸ்