Sunday, July 28, 2013

கற்றோர் சபையில்…..





றிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

’கணினியைத் தட்டினால் தமிழ் தானாக உருவெடுக்கிறது’ என்ற வசதி வந்த பின்பு  'கணினியைத் தொட்டவன் எல்லாம் தமிழ் எழுத்தாளன்’  என்ற நினைப்புக்கு வந்து விட்டான்.

இது ஒருவகையில் நல்லதுதான்.

’உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தங்களிடையே உள்ள நட்பை.உறவை, எண்ணங்களைப்  பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்உலகெல்லாம் தமிழ்என்ற சித்தாந்தத்தை நுகர்ந்து கொள்ளவும் கிடைத்திருக்கிற வாய்ப்பு இதுஎன்று நாம் எண்ணிப் பூரித்து  மகிழலாம்.

ஆனால், இதைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் எழுத வருகின்ற ஆயிரக்கணக்கானோர், தமிழ்ப் பண்பாட்டின் ஒப்பற்ற ஆளுமையை அசிங்கப்படுத்திக் கொண்டு  தங்களையும் மானமற்றவர்களாக  அடையாளப் படுத்திக் கொண்டு சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள்.

இவர்களின் எழுத்தில் உள்ள ஆபாசம்; ஆபாசத்தைத் தூண்டும் கருத்துக்கள்;காம விகாரமான கமென்ட்ஸ், அர்த்தமற்ற ஆங்கிலக் கலவை கொண்ட  அரைகுறைத் தமிழ்; எப்போதும் காதல் பற்றிய புலம்பல்கள்; கவிதை என்ற பெயரில் கிறுக்கப்படும் கேவலமான  பதிவுகள் ……….

இவையே மிஞ்சிப் பரவி நிற்க, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கின்ற இளைஞர்களும் இளிஞிகளும்தமிழை இப்படியும் எழுதப் பயன் படுத்தலாமேஎன்ற உற்சாகத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.

வள்ளுவன்,கம்பன், அவ்வை,இளங்கோ, பாரதி முதலான தெய்வப் புஅவர்களின் செந்நாக்களில் தவழ்ந்து, ‘உயர் தனிச் செம்மொழி’ யென விரிந்து,நிமிர்ந்து  தரணியெல்லாம் வியந்த தமிழ், தறுதலைகளின் தவறான புரிதலுக்குத் தள்ளப் படுவதும் இதே கணினி வசதிகளால்தான்.

தவறான சிந்தனை கொண்டோரால் தமிழ் அவமான மிக்க படைப்புகளில் வெளிப்படுவதை நான் கடுமை கொண்டு சாடுகிறவன்.

தமிழன்னையின் தலை நிமிர்ந்த மைந்தர்எனத் தரச் சான்று கொண்டிருப்போர் யாராயினும் அவர்களுடை வரிசையில் முன் நிற்கத் துடிக்கின்றவன்  நான்.

தரமற்ற பதிவுகளையும் தரம் கெட்ட சிந்தனைகளையும் புகுத்தி அன்றைய கால கட்டத்தில்சரோஜா தேவிபுத்தகங்கள்  எனப் பலரும் பல பதிவுகளாக எழுதி வெளியிட்டனர்.

அன்றைய இளைஞர்கள் அப் புத்தகங்களை பள்ளி,கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து படித்துப்பேரின்பம் காண்பர்;வயோதிகர்களோ பகவத் கீதைகளுக்குள்ளும்; புராண நூல்களுக்குள்ளும் புதுக்கி வைத்துப் படித்து பரவசம் கொள்வர்.

அதாவது அன்றைய காலகட்டத்தில் மறைத்து வைத்துப் படித்த  


காமஞ்’சரிகள்இன்று கணினித் தமிழாய்  உருவெடுத்துப் பரவுவதை உண்மைத் தமிழ்ப் பண்பாடு காப்போர் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன் வர வேண்டும்.

இதுதான் தமிழனின் தலையாய கடமை;பொறுப்பு.

உங்கள்  தலைமுறை ’முறைகெட்ட’தென உரை செய்யாதிருக்க, புதிய தலைமுறை பழுதற்று வளர  தமிழ் மொழியின் தனிச் சிறப்பை அனைவரும் உணரும் வண்ணம் எழுத வேண்டும்;சிந்திக்க வேண்டும்.

தமிழையும் தமிழனின் பண்பையும் சீரழிக்கின்ற சிந்தனைகளுக்கு எதிரான சிறுமைத்தனத்தைப் பொறுத்துக்  கொள்வது  பொறையுடைமை’ எனின் அது நம்மை நாமே இடுகுழிக்கு இட்டுச் செல்லும் ஏமாளித்தனம் என்பதை அனைவரும்  உணரவேண்டும்.

இதன் பொருட்டு நான் தொடர்ந்து எழுதி, ‘அறிவிலக்கிய ஆளுமை வேண்டும்’ என்று வலியுறுத்தினால்  எழுத்துச் சுதந்திரத்துக்கு முட்டுக் கட்டை போடும் சர்வாதிகாரத்தனம்என்று எழுத்தறியாப் பேதைகள் எதிர்க் குரல் இடுகிறார்கள்.

கணினியின் கரையற்ற சுதந்திரத்தைப் பயன் படுத்தி,சமூக வலைத்தளங்களில் கறைமிக்க தமிழை எழுதுகின்றவர்கள் சிந்திக்க வேண்டியவை இவை:

எழுத வரும் நோக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்;

அது எழுதுகின்றவரின் குடும்பத்துக்கும் படிக்கின்றவர்களுக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்என்று சிந்திக்கின்ற அறிவு தனக்கு இருக்கிறதா?’ என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கணினியைத் தட்டினால் தமிழ் வருகிறதுஎன்பதற்காக எழுதாதீர்கள்.

’உங்கள் எழுத்துக்கள் ஒரு கோமாளியினுடையது ’ என்றோ ,’கிறுக்கனுடையது’ என்றோ,’கடைந்தெடுத்த காமுகனுடையது’ என்றோ, ’கவிதை என்பது இன்னதென்று அறியாத கடை கெட்ட முட்டாளுடையது’  என்றோ, இங்கு படிக்கின்றவர்கள்  சொல்லாதிருக்க எழுதுங்கள்.

எழுதச் சுதந்திரம் உண்டுஎன்பதற்காக கக்கூஸ்களின் சுவர்களிலும் ரயில் கழிப்பிடங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிற அரிப்பாளர்களின் வரிசையில் நில்லாதிருங்கள்.

’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்ற தமிழ்ச் சான்றோரின் வரிசையில் நிற்க முயலுங்கள்.

உங்கள் எழுத்துச் சுதந்திரத்தைப் பண்பட்ட தமிழில் பயனுள்ள சமூகக் கருத்துக்களை வடிக்கப் பயன்படுத்தி, கற்றோர் சபையில் கர்வத்தோடு நில்லுங்கள்என்று விழைவது தங்களைக் காயப்படுத்தி, அடிமைப் படுத்துகிற விஷயம்என்று எண்ணுகிற மேதாவிகளுக்கு எனது அனுதாபங்கள்.

வேலியின் ஓரத்தில் நின்று கொண்டு எனது பதிவுகள் குறித்து ஓலமிடும் நண்பர்களுக்குத்தான் இது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.7.2013

No comments: