Tuesday, July 30, 2013

யார் வெகுளி? (நினைவுக் குறிப்புக்கள்:4)




1971களில் எனது வாழ்க்கைப் பகுதியில் தொடர்புடைய நினைவு ஒன்று இப்போது சுழல்கின்றது.

சரியான பட்டிக்காட்டுக் கிராமத்திலிருந்து பள்ளிப்படிப்பை முடித்தபின் ஒரு வருடம் கழித்து கிராமத்தில் அடிமை வேலை செய்ய இஷ்டம் இன்றி, மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறி வந்திருந்தேன்.

எனது லட்சியம்: “நமக்கிருக்கும் அறிவுத் தாகத்துக்கு ஏற்ற வேலையில் சேர்ந்து விட வேண்டும்” என்பதுதான்.

அதற்கு இரண்டே இரண்டு துறைகள்தான் அப்போது எனக்கு ஏற்றதாக இருந்தன.

ஒன்று சினிமா; மற்றொன்று பத்திரிகை.

அப்போது,இந்தச் சினிமா மோகம் கொஞ்ச காலமாக  என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

’எப்படியாவது சினிமாத் துறையில் நுழைந்து எனது எழுத்துக்கள் பிரபலமாகி விட வேண்டும்’ என்ற லட்சியப்  பயணத்தில் மனம் போனபோக்கில் எனது கால்கள் நடந்து அலைந்த நேரம் அது.

அப்போது எனது கனவுலக நாயகர்களாக இருந்தோர் கவியரசு கண்ணதாசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், இயக்குநர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்  ஸ்ரீதர் மற்றும் கதாசிரியர் மகேந்திரன் இவர்கள்தான்.

எனக்குப் பரிந்துரைக்க சினிமாத்துறையில் அப்போது யாருமே அறிமுகம் இல்லை. சென்னையில் அறிமுகம் ஆகி இருந்த நண்பர்கள் எல்லோருமே சினிமாவை ரசிப்பவர்களே தவிர,சினிமாக்காரர்களாக இல்லை.

அப்போதெல்லாம் எனது நோட்டு புத்தகத்தில் சினிமாவைச் சிந்தித்துக் கொண்டு ஐந்தாறு கதைகளை எழுதி வைத்துக் கொண்டு. ‘பாலச்சந்தரைப் பார்த்தால் எந்தக் கதையைச் சொல்வது?  கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தால் எந்தக் கதை? ஸ்ரீதரைப் பார்த்தால் எந்தக் கதை? என்று எனக்குள்ளேயே ஒரு ‘ஜட்ஜ்மென்ட்டை ஏற்படுத்திக் கொண்டு கற்பகம் ஸ்டுடியோ, ஏ.வி,எம் ஸ்டுடியோ,விஜயா ஸ்டுடியோ,பரணி ஸ்டுடியோ என்று அலைவது எனது லைஃப் பிரச்சினையாக இருந்தது.

எனது கதாச் சிந்தனையில் வார்க்கப்பட்ட இரண்டு கதைகளைப் பற்றிச் சொன்னால்’கதை விடுகிறான்’ என்றுதான் அநேகமாகப் பலரும் நினைப்பார்கள்.

(அப்படி எழுதப்பட்டு,எனக்குச் சினிமாக் கனவுகளைத் தூண்டிய அந்தக் கதைகளின் Manuscriptகள் இன்னமும் எனது கைவசம் மக்கிய நிலையில் உள்ளன)

நான்  அவற்றைப் பற்றி, இதுவரை மீள் நினைவு செய்யாதிருந்து விட்டேன்.

ஆனால் இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றில் ஒரு முக்கிய கதைக் கரு  பற்றிச் சொல்ல வேண்டிய வாய்ப்பும் தூண்டலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

சினிமாத் துறையில் வாய்ப்புத் தேடி அலையும் ‘அப்ரண்டீஸ்’ ஆர்வலர்கள் பிரபலமான சினிமா இயக்குநர்களையோ, சினிமா சம்பந்தப்பட்ட கலைஞர்களையோ,  ஏன், ஒரு அஸிஸ்டண்ட கேமிரமேனையோ சந்தித்தால்கூட  தாங்கள் வடிவமைத்திருக்கும் புதுமைக் கதை கருவை மனந் திறந்து ஒப்பிப்பதும் அதில் கனவுகளை வளர்த்துக் கொள்வதும் சகஜமானதுதான்.

’அதைவிட அவர்கள் சொல்லும் கதைக் கருக்களை அப்படியே காப்பி அடித்துக் கொண்டு ஒரு வருடத்துக்குள் வெள்ளித்திரையில் விசாலமான திரைச் சித்திரமாக  உலாவிட்டு லட்சங்களைக் குவித்து விடும் சாமர்த்தியம் பெரிய பெரிய இயக்குநர்களுக்கும் கூட இருக்கிறது’ என்பதற்கு, எனது சினிமா ஆர்வக் கோளாற்றில் நிகழ்ந்த இச் சம்பவமும் உதாரணம்.

இந்த உதாரணம் சாதாரணம் ஆனதல்ல; அப்போது எனக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக சதா ரணமாக- என்னுள் ஏமாற்றம் மிகுந்த வலியைத் தந்து கொண்டிருந்தது என்று சொன்னால் மிகையல்ல..

அந்தக் கதை.....

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கணவன் -  மனைவியாக வாழ்ந்த  இருவரின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.

அன்பான ,அழகான மனைவிதான்; ’குழந்தை இல்லை’ என்ற குறை; ஆனால் அந்தத் திருமதியின் தங்கையே ‘ஒரு குழந்தை போல்’பாவிக்கப்பட்டு செல்லப் பெண்ணாக  அந்த வீட்டில் உலாவந்து கொண்டிருக்கிறாள்;பருவம் எய்தியும் பக்குவ அறிவு இல்லாத அந்த மைத்துணி மீது முதலில் பாசம் கொண்ட அவள் அத்தான், அவளுடைய அங்க எழுச்சியோடு அறியாத்தனத்தில்,ஒரு குழந்தைபோல்   தன்னிடம்  நெருக்கமாகப் பேசுவதிலும் உணர்ச்சிகளைத் தூண்டியதிலும் பழகிய விதத்திலும் கள்ள உணர்வுகளை வளர்த்துக் கொண்டான்.

ஒரு சமயம் மனைவி வெளியூரில் இருக்க வேண்டிய காலகட்டத்தில் மைத்துனி மீது மோகமும் தாகமும்  கொண்ட அத்தான் அவளைக் கட்டிலில் கிடத்தி அனுபவித்து விடுகிறான்.

விளைவு: அவள் கர்ப்பிணி ஆகிறாள்.

அவள் கர்ப்பிணி ஆன அதிர்ச்சியில் அவளது அக்காள் துடிதுடித்துப் போகிறாள்.

உலகம் அறியாத,தனது தங்கையின் நிலை பற்றி ஒரு வெகுளியாகத் தன் கணவனிடமே சொல்லிக் கதறுகிறாள்

’என் தங்கை இப்படி ஒரு வெகுளியாக இருந்து விட்டாளே’ எப்படியாவது அவள் கர்ப்பத்துக்குக் காரணமானவனைக் கண்டறிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும்’என்று மன்றாடுகிறாள்.

அக்காவின் அன்பு மணவாழ்வைப் புரிந்து கொண்ட அவளது தங்கை தன் கற்பு யாரிடம் பறி போனதென்பதைச் சொல்வதில்லை.என்று சபதம் பூணுகிறாள்.
 
தங்கையின் வயிற்றில்  கரு வளர வளர அக்காவின் உடல்நிலை தளர்ந்து நோயாளி ஆகி விடுகிறாள்.

இறுதியில் உண்மை தெரிய வருகிறது.

உண்மையில் வெகுளிப்பெண் தான்தான் என்பதும், தங்கைக்கு வாழ்வளிக்க இதை விட சந்தர்ப்பம் வேறில்லை என்பதும் உணர்ந்து தனது கணவனை தங்கைக்கே கைப்படித்து மரணம் அடைகிறாள்.

இப்படி ஒரு கதையை வார்த்து T'Nagr G.N.Shetty Roadல் இன்றுள்ள BHEL REGIONAL OFFICEக்கு அருகில் அலுவலகம் நடத்தி வந்த அந்தப் பிரபலமான சினிமாக்காரரைச் சந்தித்துச் சொன்னேன்.

அப்போதுதான் அவர்,அந்தப் பிரபலக் கதாநாயகியைக் காதல் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்த இயக்குநராக தமிழ்த் திரையுலகம்  அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

நான் அவரைச் சந்திக்கும்போது ஏற்கெனவே ஒரு படம் தயாரித்து வெளியிட்டிருந்தார்.

எனது  கதையைப்  படித்து பார்த்து விட்டு என்னிடம் சொன்னார்; “ பிரதர் இதுபோலவே ஒரு கதை ரெடியாகிக் கொண்டிருக்கிறது; வேறு கதை இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

எனக்கோ பெரும் ஏமாற்றம்.நாவெல்லாம் வறண்டு விட்டது; பிறகு வருகிறேன் ஸார்’ என்று சொல்லி விட்டுத் திரும்பி விட்டேன்.

நண்பர்களிடம்  இந்தச் சந்திப்பைப் பற்றிச் சொன்ன போது.” ஆகா...சரியான வெகுளியப்பா நீ. உன்னோட கதையை இன்னும் கொஞ்ச நாட்களில் சினிமாவாகவே  பார்க்கலாம் ” என்று பரிகசித்தார்கள்.

ஏழெட்டு மாதங்களில் வெள்ளித்திரைகளில் அந்தப் பிரபல நடிகையின் காதல் கணவர் இயக்கிய   படம்  பளிச்சிட்டது.

படத்தை பார்த்துத் திடுக்கிட்டேன்.

நான் அந்த இயக்குநரிடம் எப்படியெல்லாம் சீன் போட்டுச் சொன்னேனோ அதில் 80 சதவீதம் அப்படியே சினிமாவாகச்  சிரித்தது.

கொஞ்ச நேரத்தில் தனக்குத்தானே ஆறுதல் கொண்ட எனது மனம்  ஒருவகையில் மகிழ்ந்தது:

“’எப்படியோ நம் கதை சினிமாவாகி விட்டது; இனி நமக்கு சினிமா ராசி வந்து விடும்”

அந்தப் படத்தின் பெயரே: வெகுளிப் பெண்

இயக்குநர்; தேவதாஸ்.

அந்தப் படம் வெளிவருவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை தேவிகாவைக் காதல் திருமணம் செய்திருந்தார் .

இந்தப் படத்தில் தேவிகா,ஜெமினி கணேசன் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்தது.

நடிகை கனகா இப்போது தேவதாஸ் பற்றி ’ஒரு அயோக்கியர்’ என்று வருந்திச் சொல்வது உண்மையென அந்த 1971களிலேயே- கனகா பிறப்பதற்கு முன்பே எனது விஷயத்தில் சாட்சியம் ஆகி விட்டிருக்கிறாரே!

சரி,’இதில் யார் வெகுளி? 

நானா? அவரா? என்பதில்தான் இன்னமும் எனக்குக் குழப்பம்....

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.7.2013


No comments: