Saturday, July 20, 2013

என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?

’வா’ வென்று ஆவலோடு
வரவேற்று; நட்பை எலாம்
‘தா’  வென்று யாரிடத்தும்
தயவு செயக் கேட்டதில்லை!
’போ வென்று ஒருவரையும்
புழுங்கிநான் சொன்னதில்லை!
‘சீ’என்று சொல்லாமல்;
சினம்கொண்டு தள்ளாமல் -

அகம் கொண்டு பார்க்கின்றேன்:
அறிவுடைய யாரையும்நான்
இகழாமல் சேர்க்கின்றேன்;
இம்முகநூல் கூட்டத்தைத்
தகவுடன்தான் நினைக்கின்றேன்;
தமிழ் உணர்வுப் பண்போட்டம்
பகர்கின்ற நண்பரெலாம்
பகையின்றி மகிழ்வதற்கும்-

நற்றமிழைக் கற்றோரும்
நாட்டு நலன் மிக்கோரும்
குற்றமிலா வாழ்வதனைக்
கும்பிட்டு  நிற்போரும்;
சொற்பதங்கள் அறிவோரும்
சூதறியா நண்பர்களும்
சுற்றமெனக் கூடி யொரு
சொந்தமென ஆவதற்கும்!

இச்சுவரில் எழுதுகின்றேன்;
என் தமிழைப் பதிகின்றேன்;
அச்சமிலாக் கருத்துக்கள்;
ஆணவம் போல் தெரியுமெனில்-
கொச்சைமிகும்  பதிவுகளைக்
கொண்டிருப்போர் நட்பினையே
எச்சம் எனக் கொண்டு
ஏற்பதுதான் நல்லதென்பேன்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
20.07.2013

No comments: