Friday, July 26, 2013

சட்டமும் நீதியும்!



றிவார்ந்த நண்பர்களே,

சட்டமும் நீதியும் வேறு வேறு பார்வைகளையும் பாதைகளையும் உடையவை.

மக்களைப் பாதுகாத்து நியாயங்கள் வழங்கப்படத்தான் சட்டம் தேவைப்படுகிறதே தவிர, நீதியைக் காக்க அல்ல.

மக்கள் எண்ணிக்கை பெருகிவிட்ட சமுதாயத்தில்,நாட்டில் மக்கள் தொகை பெருகப் பெருக குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நீதி எது? நியாயம் எது என்று சிந்திக்கத்தெரியாத, சிந்திக்காது மனிதர்கள் தங்கள் சுய நலத்துக்காக செய்யும் கொலை,களவு, ஏமாற்றுதல் முதலான குற்றங்களைத் தண்டிக்கவும்  தேச நலனுக்கு விரோதமான சாதி மோதலைத் தூண்டல், சதி செய்தல், அந்நிய சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படல், இன வெறி சாதி வெறி அரசியல் செய்தல்,பேசுதல், எழுதுதல் முதலான குற்றங்களைத் தடுக்கவும் சட்டத்தால் முடியும்.

சட்டம் என்பது  நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக  சமுதாயத்துக்குப் பாதகமான நடைமுறைகளைக் களைந்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டோடு வாழும் வகையில்  மனிதரால், படித்த மேதைகளால் வகுக்கப்பட்டது; அது நாட்டுக்கு நாடு வேறுபடும்;படலாம்.

ஆனால் நீதி என்பது யாராலும் இயற்றப் படாதது. அது இயல்பாகவே மனித நேயமும் இறை நேயமும் கொண்ட ஒவ்வொருவரின் இயல்பான உயர்பண்பு.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதுதான் நீதி.

அந்த நீதியின் பிரதிநிதிகளாகத்தான் சட்டம் பயின்ற சான்றோரைத் தெரிவு செய்து  அவர்களை நீதி மன்றங்களில் நீதிபதிகளாக அரசு நியமனம் செய்கிறது. நீதிபதிகள் தங்கள் பாரபட்சமற்ற நீதிமையினால் உயர்ந்து ’நீதி அரசர்கள்’ என்று மதிக்கப்படும் நிலையை அடைகின்றர்கள்.

நண்பர்களே,

சட்டங்களையும் அதன் வியாக்கணங்களையும் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறலாம்.

ஆனால்,நீதியை எங்கும் படிக்க முடியாது.

அது பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறிவரும் தெய்வீகக் குணம்.

வாழுகின்ற சமூகத்தில் வகையாக வாழும் முறைமையை நீதி இயல்பாக உணர்த்துகிறது.

எது தர்மம்? எது அதர்மம்? என்ற நீதியை  ஒருவன் அடிப்படையாகத் தெரிந்து கொள்வானானால்,அவனுக்கு மனிதர்கள் எழுதிய சட்ட ஞானம் தேவையே இல்லை.

எது தர்மம்? எது அதர்மம்? என்ற நீதியை உணராதவனுக்கு எந்தச் சட்டத்தாலும் பயனே இல்லை!

சட்டங்கள் திருத்தப்படலாம்; நீதி, நீதிதான் அது திருத்தப்பட முடியாது.
ஆனால் சட்டம் பேசுகிறவன் தனது வாதத்தின் வலிமையினால் நீதியைக்கூட சிறைக்கு அனுப்பிவிடும் துர்பாக்கியம் உண்டு.

நீதியின் தீர்ப்போ சட்டத்துக்கும் அப்பாற்பட்டது; சட்டத்தால் செய்ய முடியாததை நீதி உணர்த்தி விடும்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சக்திமிக்க அரசியல்வாதி  ஒருவர் எம்.எல்..ஏ ஆக இருந்தார்.

திருச்செந்தூர் ஆலயத்தின் உண்டியல் பணம் அவர் தர்ம கர்த்தாவாக இருந்த காலத்தில் சுரண்டப்பட்டது. பணம் எண்ணப்படும்போது உண்மையான் பெரும்தொகை ம்றைக்கப்பட்டது வெட்ட வெளிச்சம் ஆனதில் ’கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளைதான் உண்டியல்பணத்தை மறைத்தார்’ என குற்றம் சாட்டப்பட்டு, எம்.எல். ஏ தனது அரசியல் அதிகாரத்தின் பலத்தால் அவரைக் கைது செய்ய வைத்தார்.

உண்மையில் ’எம்.எல்.ஏதான் அதைச் செய்து விட்டு பின், செய்தி வெளியில் வந்ததும் அதை கோவில் நிர்வாக அதிகாரி மீது சுமத்தி கைது செய்ய வைத்து விட்டார்’ என்று உண்டியல் பணத்தி எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மூலம் செய்தி கசியத் தொடங்கியது.

அவமானமும் அதிர்ச்சியும் அடைந்த கோவில் நிர்வாக அதிகாரி, அரசியல் பலத்தின் அசுரத்தனமான குற்றச் சாட்டில்  குமைந்து போனார்.

உண்மையில் என்ன நடந்தது? என்பதை  சட்டம் அதற்கு மேல் ஆராய இடம் வைக்காமல் அந்தக் கோவில் அதிகாரி கோவில் கழிவறையில் தூக்கில் தொங்கினார்,பிணமாக.

அது கொலையா,தற்கொலையா என்பது கூட தீர விசாரிக்கப்படவில்லை, ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகியும்கூட.

திருச்செந்தூர் முருகன் இருக்கின்றானா? அவன் திருடர்களின் பின்னே நின்று சிரிக்கின்றானா?

என்று நாத்திகரும் ஆத்திகரும் பட்டி மன்றம் நடத்தினர்.

ஒரே ஆண்டு!

எந்தத் தேதியில் சுப்பிரமணியப் பிள்ளை தூக்கில் தொங்கினாரோ
அதே தேதியில் அடுத்த ஆண்டில் நடு ரோட்டில் லாரி ஒன்று மோதி அந்த அரசியல்வாதி,எம்.எல்.ஏ. கொசு நசுங்குவதுபோல் நசுக்கபட்டுச்  செத்தார்.

அந்த லாரியின் முகப்பில் எழுதப்பட்டிருந்த வாசகம்: ‘திருச்செந்தூர் முருகன்!’

இது நீதி வழங்கிய தீர்ப்பு என்று எவரும் பேசத் தொடங்கினர்.


(நம்புங்கள்; தொலைக் காட்சியில் ஆங்கிலச் செய்தி ஒன்று ஒலிபபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திருச் செந்தூர் ஆலய உண்டியல்  சுரண்டல் வழக்கில்
நீதியை அந்த சுப்பிரமணிய சாமி கொடுத்து விட்டதைத் தொட்டு எழுதி முடிக்கும்போது, Here Subramanyam Swami says....' என்று செய்தி வாசிப்பாளர் சொன்னது மட்டும்  என்காதில் விழ, நான் எதேச்சையாக தொலைக் காட்சிப் பக்கம் என் பார்வையைச் செலுத்துகிறேன்.
அட...!  தொலைக் காட்சியில் மெய்யாகவே சுப்பிரமண்ய சுவாமி பேசிக் கொண்டிருந்தார்.  நம்ம சுப்பிரமண்யம் சுவாமிதான். இந்த CO-INCIDENT என்ற நிகழ்வு சில சமயம் தெய்வீகமானது என்று நினைக்கும்போது மெய் சிலிர்த்துப்போகிறது. நம்புபவர்களுக்குத்தான் இந்தச் செய்தி;கிண்டல் செய்பவர்களுக்கு அல்ல)

நீதியின் உந்துதலால்தான் மனிதன் அன்புள்ளவனாக,இரக்கம் உள்ளவனாக,பிற உயிர்களை நேசிக்கும்  கருணை உள்ளவனாக, உண்மையும் ஒழுக்கமும் உள்ளவனாக மனிதர்களில் மேம்பட்ட சிந்தனையும் உள்ளவனாக வாழ்கிறான்.

நீதியை உணர்ந்தவன் அதிக பட்சமாக இறைவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பான்.

சட்டத்தைப் படித்தவன்  அதிகபட்சமாக நீதிபதியின் அருகில் வழக்கறிஞனாகத்தான்  இருப்பான்.

இன்று -

நம் நாட்டில் நீதிக்கும் சட்டத்துக்கும்தான் போர் நடந்து கொண்டிருக்கிறது.

சட்டம் தெரிந்தவன்தான் நீதியை சட்டப்படி ஏமாற்றுவது எப்படி? என்று இரவு பகலாகச்  சிந்தித்து அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து சட்டப்படி குற்றம் அற்றவன் ஆகி வாழ்கிறான்.


என்னிடம் ஒரு நண்பர் மிகவும் நொந்து போய்ச் சொன்னார்:

“நான் கடவுளுக்குப் பயந்து மனசாட்சியோடு வாழ்கிறேன்; எனது தொழில் வசதிகள் நைந்து விட்டன; ஆனால் எனது கூட்டாளி என்னை ஏமாற்றிப் பெரிய மனிதனாக   உலாவந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் இல்லாத தீய ஒழுக்கங்கள் இல்லை; வயோதிக நிலையை அடைந்த போதும் வாலிப ஆசைகள் அவரை ஆட்டிப் படைக்கின்றன. அத்தனையிலும் அவர் புரண்டு எழுந்து கொண்டு பொய் வேஷம் இட்டுக் கொண்டுதான்  வாழ்கிறார்.

எங்கே நீதி இருக்கிறது?”

நான் சொன்னேன்:

நண்பரே,
‘ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  மனசாட்சி’ என்று ஒன்று காட்டாயம் இருக்கிறது. ஊருக்கு வேஷம் இட்டாலும் தன் மனச்சாட்சி முன்னால் நின்று கொண்டு எவரும் நிம்மதியாக இருக்க முடியாது.

நீதி என்பது ஒருவனுடைய  மனசாட்சியாய் இருந்து கொண்டு அவனுக்குள் எப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருக்கும். அதை அவன் இந்த சமூகத்தின் முன் மறைத்துக் கொண்டு பெரிய மனிதனாக உலா வந்து கொண்டிருந்தாலும்  அவனை காலத்தாலும் வயோதிகத்தாலும் வக்கிரமான குடும்ப உறவுகளாலும் அக்கிரமமான, அசிங்க நடத்தைகளாலும் தினம் தினம் தன்னைத் தண்டித்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்து கொண்டேதான் அவன் செயல்பட்டாக வேண்டும்.

நீதி என்பது ஒருவனைத் திருத்துவதல்ல: தண்டிப்பது.

‘தான் செய்வது பாவம்’ என்று ஒருவன் சிந்திக்கத்தெரியாத அறிவு உள்ளவன் என்றால் ’பெரும் தண்டனையை அனுபவிக்கப் போகின்ற விலங்குக்கு ஒப்பானவன் அவன்’ என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
விலங்குக்கு இணையாக வாழ்வனிடம்  எவ்வளவு பணம் இருந்தாலும் திருடித் தின்பவர்களும் முகஸ்துதி செய்பவர்களும்,அவனுடைய சிற்றின்பத் தேடலுக்குச் சேவை செய்பவர்களும் அவனைச்  சூழ்ந்திருந்து, பிணம் தின்னிப் பருந்துகளாய் இருப்பது தான் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிற தண்டனையாக இருக்க முடியும்!.

விலங்குகளைத் திருத்துவது மனிதனின் வேலை அல்ல; விலகி இருப்பதுதான் அறிவுடைமை. அதைச் செய்யுங்கள் உங்களுக்கு அமைதியும் ஆனந்தமும் தானே வரும்.”

எனவேதான் சொல்கிறேன்,நண்பர்களே.

நீதி வேறு; சட்டம் வேறு.

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.7.203

No comments: