Wednesday, July 24, 2013

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:1


மகனே,

இன்று உன் மகனுக்கு
நீ வாங்கித் தந்து மகிழும்
அத்தனை பொருட்களையும்
அன்றே
உனக்கு வாங்கித் தந்து விட்டேன்!

நீ, அவனை
ஆடவும் பாடவும்
வைத்து மகிழ்வது போல்
நானும்
உன்னிடம் பார்த்து மகிழ்ந்து விட்டேன்.

நீ கேட்டதையெல்லாம்
மறுக்காமல் வாங்கித் தந்து
என் தந்தையின்
வருத்தத்துக்கு ஆளாகிப்
பிறகு நானே
வருத்தப்பட்டுப்
பாரம் சுமந்து கொண்டிருக்கிறேன்
இங்கு.

எப்போதும் உன் விருப்பத்துக்கு மாறாக
நான் இருந்ததில்லை;

கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்படாத
உன்மீது
நான் கொண்டிருந்த பாசத்தில்தான்
நான் வழுக்கி வீழ்ந்து விட்டேன்

அதன் விளைவுதான்:
இன்று
முதியோர் காப்பகத்தில் நான் வாழ்வது!.

உனது மனைவிக்கு
நான் இருப்பது சுமையாகிப் போனதால்-
அவள் சுமையை
இறக்குவதாகக் கருதிக் கொண்டு
எனது மகன்என்ற உறவிலிருந்து
நீ இறங்கி விட்டாய்.

மகன் - தந்தை உறவை
நிலைபெறச் செய்வதற்கு
சில கட்டுப்பாடுகளைத் தகர்க்கக் கூடாது
என்ற உண்மையை,
இந்த முதியோர் காப்பகம்
எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.!

நான் கற்றுக் கொண்டதையாவது
கடைசி முறையாகக் கேட்டுக் கொள்:

நான் எனது மகனுக்கு
விட்டுக் கொடுத்து வாழ்ந்ததைப் போல்

நீ உன் மகனிடம்
நடந்து கொள்ளாதே;

என்னைப்போல் வாழாமல்
என் தந்தையைப்போல்
வாழக் கற்றுக் கொள்.

அப்போதுதான்

இந்த முதியோர் காப்பகம்,
உன் மகனின
கண்ணுக்குத்
தெரியாத தூரத்தில் இருக்கும்!

இப்படிக்கு
முதியோர் காப்பகத்தில்
முதிர்ச்சியோடு வாழும்
உன் அப்பா

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.7.2013