அறிவார்ந்த நண்பர்களே,
ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்புக்களும் அதிகாரப்பற்றும் ‘அரசியலரங்கில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதை விட ‘இருக்கின்ற கட்சிகளை ஒழிக்க வேண்டுமென்பதாகவே இருக்கிறது.
நடைமுறையில்இப்போதைய சூழ்நிலையில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புக்களை அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன் வெளியிடுவது ஒரு அதிரடி விளம்பரமாகவும் தன்னை எப்படியும் மக்கள் மனதில் உயரத்தில் வைக்கின்ற உத்தியாகவுமிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் முன்வரைவுகள் வரவேற்கப்படக் கூடியவை என்றாலும் அவற்றை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளையும் அவர் உணர்ந்து கொண்டு சிந்திப்பதாகத் தெரியவில்லை.
இதுவரை, இந்தியாவை ஆண்ட காங்கிரஸாகட்டும் சரி; சிறிது காலம் ஆண்ட பி.ஜே.பியாகட்டும் ஊழலை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தைத் தர முடியவில்லை.
அரசியலே மாசுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாஜ்பேய் அல்லது ஒரு அரவிந்த கெஜ்ரிவால் நினைத்தாலும் ஊழலற்ற நிர்வாகத்தைத் தர முடியாது.
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்தலில் நிற்பவர்களும் வெல்பவர்களும் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தாலொழிய ஆட்சியில், நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயலாது.
ஆகவே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோதிக்கு இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதால் அவர், தனது வேட்பாளர்களாக நிற்பவர்களை ஒழுக்கமும் உயர் நோக்கங்களும் உள்ளவர்களாகவும் நிஜமாகவே மாற்றத்தைக் கொண்டு வருவதில் லட்சியமுள்ளவர்களாகவும்இருப்பவர்களையே தேர்தலில் நிற்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்.
பதவி சுகத்தை அனுபவிப்பதில் தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைவோரை ஒதுக்கி வைக்கும் துணிவை அவர் கையாள வேண்டும்.
தேசத்தைப் புனர் அமைப்பதில் ஆர்வமும் வேட்கையுமுள்ளோரை கட்சித் தகுதிகளைப் பார்க்காமல் தனிப்பட்ட யோக்கியதாம்சங்களின் அடிப்படையில் தனது வேட்பாளராக நியமிப்பாரானால்,மிகப்பெரும்வெற்றியைத் தர மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.
இதுதான் மோதியின் முன் நிற்கும் இன்றைய முக்கியப் பிரச்சினை.
இதில் மாற்றுக் கருத்துள்ளோர் உண்மையில் மோதியின் ஆதரவாளராக இருக்க முடியாது.
இவண்-
கிருஷ்ணன்பாலா
25.12.2013
No comments:
Post a Comment