Wednesday, October 26, 2011

மகிழ்வித்து மகிழும் திருநாள்

அறிவுசால் நண்பர்களே,


வணக்கம்.


எம்மதமும் சம்மதமாய் எண்ணி,பிறரை மகிழ்வித்து நாம் மகிழும் வாய்ப்பைத் தரும் திருநாள் கொண்டாட்டங்களில் தீபாவளி நாள் தலையாயது.


இன்று அதிகாலை (4:00 மணி) என்னை தீபாவளி மரபுப்படி வீட்டின் பெரியவர்-அவருடைய மாமியார் கரத்தால் வீட்டிலுள்ள ஒவ்வொருவர் உச்சந் தலையிலும் பூவில் நனைந்த எண்ணெய்யை வைத்து, உண்மையிலேயே கஙகா ஸ்நானம் செய்ய வைத்து, புத்தாடை அளித்து மகிழ்ந்தார்,எனது அன்புக்கும் நட்புக்கும் இணையற்ற ஒருவராய்த் திகழும் நண்பர்,மூத்த பத்திரிகையாளர் திரு ராவ் அவர்கள்.(ஆம். காசியிலிருந்து கொண்டு வந்திருந்த புனித நீரை வீட்டுக் குழாயின் மெட்ரொ நீரில் கலந்து குளிக்கச் செய்தார்.)


பத்திரிகை உலக ஜாம்பவான் திரு.ராவ்
ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றி, அக் குழுமத்தின் பெருமைக்குரிய ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தைக் கொண்டு வந்ததிலும் இன்று பத்திரிகை உலகில் பேசப் படும் ஜூனியர் விகடன் மற்றும் அதன் பிற கிளைப் பத்திரிகைகளின் உருவாக்கத்துக்கு, சிற்பியாகவும் இருந்து ‘கழுகுப் பார்வை’ கொண்டு எழுதியும் பத்திரிகை நிர்வாகத்தைத் திறம் பட நடத்தியவர் ’’ராவ்” என்று தமிழ்ப் பத்திரிகை உலகம் மதிக்கும் ’திரு ராகவேந்திரா கவாலெ’ அவர்கள்.


இவரால் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள்தான், இன்று ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் ஜொலிக்கிறார்கள்.பிற பத்திரிகைகளையும் நடத்துகிறார்கள்.


திரு ராவ் அவர்கள்,விகடன் குழுமத்தின் பணியிலிருந்து விலகிய பின், குமுதம் இதழ்களின் ஆசிரியர்-பதிப்பாளர் என்ற இரு பெரும் பொறுப்புக்களையும் ஒரு பீஷ்மரைப் போல்,விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றியவர்; பிறகு குங்குமம் இதழிலும் சில ஆண்டுகள் ஆசிரியப் பணியில் இருந்தவர்.


தமிழ்ப் பத்திரிகை உலகில் அரும் பெரும் சாதனையாளராகவும் அறிவு ஜீவியாகவும் அனுபவம் செழித்தவராகவும் எவரும் மதிக்கும் பண்பாளராகவும் வாழும் திரு,ராவ் அவர்களின் ’அகத்தில்’ இன்று எனக்குத் தீபாவளி!.


அவருடைய அன்புப் பிடியில் சிக்கி நழுவி விடாப் பந்தத்தில் கட்டுண்ண்டு போன நான் இன்று அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்தேன். எனது தலையில் கங்கை பிரவாகம் எடுத்தபோது மனதில் தீபாவளி பற்றிய கருத்துக்கள்- கவிதையாகப் பிரவாகம் எடுத்தன.


அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.இதோ அந்தக் கவிதை:




மகிழ்வித்து மகிழும் திருநாள்!
----------------------------------------------------------


'கங்கா ஸ்நானம் ஆச்சு;நம்
கவலை எல்லாமே போச்சு!
மங்காப் பெருமையைக் கொண்டு;நாம்
மகிழ்ந்திடும் திருநாள் இன்று!


பாரதப் பண்பின் அடையாளம்;இந்தப்
பண்டிகைத் திருநாள் ஆகும்:
நீரதன் மக்கள் அன்றோ?;இதை
நினைத்தால் வேற்றுமைஉண்டோ?


எங்கும் வெடிகளின் சத்தம்;இது
இந்திய மண்ணில் மட்டும்;
உங்களின் இந்தப் பெருமை;இந்த
உலகினில் எவருக்கு உரிமை?

தூங்கும் யாவரும் இன்று;
தூக்கம் கலைந்தார் என்று;
ஓங்கும் வெடிகளின் சத்தம்; அது
உரக்கச் சொன்னதைக் கேட்டோம்!

பண்டிகை கள்நம் மரபின்
பதிவுகள் ஆகும் காணீர்;
தண்டம் அதுவெனச் சொல்வோர்
தலைமுறை இழப்பார்,பாரீர்!


முன்னோர் வகுத்த நெறியில்
முழுமனம் செலுத்தி நாமும்
பின்னேர் பிடிப்போம்,வாரீர்
பெருமை அதுதான் உணர்வீர்!


சிந்தையுடையோர் மகிழச்
செய்தியைச் சொன்னேன்,இங்கே
இந்தியர் என்பதில்தானே;நாம்
இங்கொன்றாக வாழ்வோம்?


அன்புடன் –
கிருஷ்ணன்பாலா
26.10.2011 / தீபாவளித் திருநாள்.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அருமையான கவிதை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்