Sunday, October 23, 2011

வெடிக்காத வெடிகள்!

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல சரவெடி ஒன்றைப் பரிசளிக்கின்றேன்; இதோ:இதைப் பத்திரமாகக் கொளுத்திப் போடுங்கள்.


வெடிக்காத வெடிகள்
--------------------------------------                                                                 
தேனும் பாலும் ஆறாய் ஓடும்;
திருவாளத்தான் தென்நாட்டில்;
நானும் நீயும் நம்புகிறோம்;
நம்தலைவர்கள் சொல்கின்றார்!


மானம் கெட்ட அரசியலை
மாய்ந்து மாய்ந்து தினம் பேசி
நானும் நீயும் மகிழ்ந்திருந்தால்
நமக்கேன் துன்பம்? சொல் தோழா!


தானம் தரவோர் அரசாங்கம்;
தரித்திரம் எப்படி வந்து விடும்?
ஞானம் பெறத்தான் தொலைக் காட்சி
நம்குறை எங்கே? சொல் தோழா!


உழைப்பில்லாமல் உட்கார்ந்து
உண்ணத் திண்ண,மதி மயங்க,
களைப்பைப் போக்கச் சாராயம்
காட்டுதுபார் நம் ராஜாங்கம்!


ஆள்வோர்,அரசியல்வாதி என
ஆளக் கனவு கொண்டிருப்போர்
வாழும் மாளிகை,வசதி எலாம்
வறக் காட்டுக்குள் வந்திடுமா?




கேனப் பயலே,கருப்பையா
கிட்டுச்சாமி, பாப்பையா
ஈனப் பயல்கள் ஏய்ப்பதைதான்
எட்டிப் பார்த்து ரசிக்கின்றாய்!

மேடு திருத்திக் காடாக்கி;
மேழி பிடிப்போர் இல்லையெனில்,
கேடு கெட்ட அரசியலின்
கீழ்மைத் தனத்தின் வாழ்வேது?

போடா, போ; உன் சந்ததிகள்
பிழைக்கும் வழியைப் பார்;அவர்க்கு
மாடாய்,ஆடாய் நீ இருந்து
மண்டியிட்டுப் போகாதே!

திருடர் கூட்டம் இந் நாட்டைத்
திருத்தி ஆட்சி செய்கிறதாய்க்
குருடர் முன்னே முழங்குவதைக்
                               கொளுத்திப் போட்டு வெடிப்பாயே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

No comments: