Sunday, October 9, 2011

நான் எழுதும் சுவிசேஷங்கள் (பகுதி:1)

 


சுவிசேஷம்:1
----------------------------

கண்ணுடையோர் காணுங்கள்;
காதுடையோர் கேளுங்கள்;
எண்ணமுடையோர் எழுதுங்கள்;
இதயம் உடையோர் திறவுங்கள்.


நல்ல கருத்துக்கள்
நாலா திசைகளிலும் பரவட்டும்!
§ 




சுவிசேஷம்:2
----------------------------------
முன்னோர் முறைமைகளையும்
வார்த்தைகளையும்
நம்புவதில் நான் ஒரு மூடன்;
கேள்வியே கேட்க மாட்டேன்.


பின்னோருக்கு அதை எடுத்துச் சொல்வதில்
ஒரு கண்டிப்பான ஆசிரியன்;
தேவையற்ற கேள்விகளை அனுமதிக்க மாட்டேன்.

உண்மையை அறிந்து கொள்வதில்
நான் மாணவன்.
கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

§ 

சுவிஷேம்:3
----------------------
நான்
விதைகளைத் தூவினேன்:


அவற்றில் பல
களிமண்னில் வீழ்ந்து
வீணாய்ப் போயின…


இன்னும் பல
பாறைகளில் வீழ்ந்து
பட்டுப் போயின…


மேலும் சில
களர்நிலத்தில் வீழ்ந்து
கருகிப் போயின…


சில
நல்ல நிலத்தில் வீழ்ந்து
கவிதைகளாய்
நிறைந்த விளச்சலைத் தந்தன!

§
சுவிசேஷம்-4
--------------------------------


காதலில் மூழ்கியோர்
கரை சேருவதில்லை;
ஏன்…
அதுஓர் சுழல் நீரோட்டம்;
அதன் சுழலில்
அடித்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள்.
                     
§


சுவிசேஷம்:5
-------------------
புகழ்வது என்பது
கலைஞர்களுக்குப் பிடிக்கும்;

புகழாமல் இருப்பது
கருமிகளுக்குப் பிடிக்கும்;

புகழாமல் புகழ்வது
புலவோர்க்குப் பிடிக்கும்;

புகழையே விரும்பாதிருப்பது
ஞானியருக்குப் பிடிக்கும்!

§
சுவிசேஷம்:6
-----------------------


அன்பை விதைத்தவன்,
ஆனந்தத்தை அறுவடை செய்கிறான்;


வம்பை வளர்த்தவன்
வழக்கை அறுவடை செய்கிறான்;

பணத்தைப் புதைத்தவன்

பாவத்தை அறுவடை செய்கிறான்.


§

சுவிசேஷம்-7
-----------------------------------

முட்டாள்களுக்கு நடிக்கத் தெரியாது;
சபையில் கூட அவர்களின்
இயல்பு மாறாது;


அறிஞன் அவனிடமிருந்தும்
கற்றுக் கொள்கிறான்!


அறிஞர்களுக்கு நடிக்கத் தெரியும்;
சபையில் கரகோஷம்
பெறத் தெரிந்த அவர்கள்
முட்டாள்கள் முன்னிலையில்
நடிக்கத் தெரிந்தவர்கள்!

§



சுவிசேஷம்:8
---------------------------
வேல் உள்ளவன் ’வேலன்
சரி....
அப்படியென்றால்-
வில்லை வைத்திருப்பவன்
வில்லன் ஆகிறான்;
அதேபோல்-
மூடு உள்ளவன்:
மூடன் தானே?
§   



சுவிசேஷம்- 9
--------------------------------

‘எப்பொழுதும் கவலைகளில்
இணங்கி நிற்பான் பாவி’
என்றான் பாரதி.

கடந்த காலக் கவலையைச்
சிந்திப்பவன், அதன் ஆழத்தில்
மூழ்கி மடிகின்றான்;அவன் பாவி.


நிகழ்காலத்தை நிர்வகிக்கத்
தெரிந்தவனே
எதிர்கால மாளிகைக்கு
அடித்தளம் இடுகின்றான்;அவன் அறிவிஜீவி!

§  
             

சுவிசேஷம்:10
---------------------------------

மூடர்களின் சபையில்
முதல்வனாய்
இருப்பதை விடவும்-
அறிஞர்களின் பின்னே
அடிமையாய்
இருப்பதில் பெருமைப் படுகிறேன்.

                           §


சுவிசேஷம்:11
----------------------------


“தோல்விகளைப் பற்றிக்
கவலைப்படுபவன் கோழை;
வெற்றிகளில்
மூழ்கி விடாதவனே வீரன்


§ 

சுவிசேஷம்-12
-------------
உண்மையற்ற புகழ்ச்சியில் மயங்குவதும்;
நேர்மையற்ற நடத்தைகளில் நீந்துவதும்
தற்கொலைக்கு நிகரானது.
அதில் உங்கள் மனசாட்சி
தூக்கிட்டுக் கொள்கிறது’
§ 

சுவிசேஷம்:13
-----------------------------------
அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம்
அரசியல்தான்;
இது அந்தக் காலம்.
இப்பொழுது ஆன்மீகம்.
§  

சுவிசேஷம்:14
------------------------------------
செல்வத்தின் சிறப்பு
அது சேர்வதில் அல்ல;
எப்படிச் செலவிடப் படுகிறது
என்பதில்தான்.

§ 






சுவிசேஷம்:15
------------------------------
சிரிக்கத் தெரிந்தவன்,மனிதன்;
சிந்திக்கத் தெரிந்தவன் அறிஞன்;
சிந்தித்ததை எண்ணிச் சிரிப்பவன்:ஞானி

§ 


சுவிசேஷம்:16
-------------------------------
‘எண்ணற்ற நண்பர்கள் எனக்கு’
என்பது பெருமையன்று;
எண்ணிப் பார்க்கும் நண்பர்கள்
வட்டமே பெருமைக்குரியது!
இவண்-
கிருஷ்ணன்பாலா
9.10.2011

1 comment:

V.Rajalakshmi said...

சுவிசேஷம்:2 அருமை!
சுவிசேஷம்:4 நல்லவே இல்லை!
சுவிசேஷம்:5 உண்மை!
சுவிசேஷம்:8 ஆஹா!
சுவிசேஷம்:15 மனிதானாக பிறந்து, அறிஞனாக வளர்ந்து,ஞானியாக "அமர்"ஆகிறான்