Wednesday, August 18, 2010

இணைய தளம்: ஓர் எச்சரிக்கை!





அறிவுடை நண்பர்க்கெல்லாம்
அன்புடன் வேண்டிக்கொள்ளும்
நிறை மனதுடையேன் வணக்கம்!
நெஞ்சிலே நினவு வைப்பீர்:

கணினியைக் கையில் கொண்டு
கற்றிடும் அறிவி னோடு
இணைய தளங்கள் தேடும்
இதயங்கள் அறிவ தாக!:

இதுவரை உலகம் காணா
இனியதாம்இம் 'முகநூலில்'
'எதுவரை செல்'வ தென்னும்
இலக்கினை வகுத்து கொண்டு-

'ஒருவருக் கொருவர் அறிவை
உணர்த்திடும் பரிமாற்றங்கள்
பருகிட மட்டும்' என்றே
பயன் கொளச் செய்தல் நன்றாம்!

இளங்கன்று போலே இங்கு
இளைஞரும் இளங் கன்னியரும்
களங்க மற்றிருந்த போதும்
கணினியோ களங்கம் செய்யும்;

காட்சிகள்;கருத்துக் கெட்டக்
காமத்தைத் தூண்டும்;தீய
சாட்சிகள்; சண்டா ளர்தம்
சமத்துவக் கொள்கை எல்லாம்-

தடை யின்றிப் பார்ப்பதற்கும்
தயவின்றிச் சேர்ப்பதற்கும்
கடைவிரித் திருப்ப தாலே
கவனம்நாம் கொள்ள வேண்டும்!

நல்லதைப் பார்க்க வேண்டும்;
நல்லதைப் படிக்க வேண்டும்;
நல்லதை எழுத வேண்டும்;
நல்லதே அனுப்ப வேண்டும்!

படித்தவர்;பண்பு மிக்கோர்;
பழுதிலாக் குடும்ப வாழ்வு
படைத்தவர்; பாரம் பரியம்
பார்க்கவே நினைப்போ ரெல்லாம்-

கருத்திதைப் பதிய வைப்பீர்;
கவனமோ கவனத்தோடு;
உரைத்திடும் எனக்கு உண்மை
ஒருபடி மேலே தெரியும்!

புதுமையைப் பகிர்ந்து கொள்வோம்;
புகுவதில் நிமிர்ந்து செல்வோம்;
எதுவெல்லாம் மனித நேயம்
ஏற்குமோ,எடுத்துக் கொள்வோம்!

நல்லதைச் சொல்லு கின்றேன்;
நாட்டுக்கே சொல்லு கின்றேன்;
இல்லையேல் எதிர் காலத்தில்
இந்தியா மரித்துப் போகும்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
09 08 2010

1 comment:

ulagathamizharmaiyam said...

நண்பர்களே,
திரிசக்தி குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘தேவதை’- திங்கள் இருமுறை இதழில்(Vol: Issue:5 - செப்டம்பர் 16-30,2010), இந்த,“இணைய தளம்: ஓர் எச்சரிக்கை” கவிதை 35-ஆம் பக்கத்தில் பிரசுரம் பெற்றுள்ளது.

தேவதை இதழ் தரம் மிகுந்த இதழ்;மகளிர் நலன் கருதிப் பிரசுமாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தேவதை இதழ் ஆசிரியருக்கும்,அதன் வெளியீட்டாளருக்கும் எனது நன்றியை இதன் மூலம் பதிவு செய்கின்றேன்.
-கிருஷ்ணன் பாலா