Wednesday, August 18, 2010

அடடா,அந்த நிலை...?

சிந்தனை லயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்த நிலையினில் இருந்தது என்பதை
எண்ணிப் பார்த்ததைச் சொல்கின்றேன்:

புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல
தொகுப்பெனத் தோன்றும் படித்துப் பாரும்;
தூண்டும் உங்களைத் தாண்டும்!

எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்
தனிநிலை உணர்ந்து எழுதுகின்றேன்!

எழுதுதல் எனக்கு மிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில் எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம் புதிது!




பேனா, திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...

கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!

எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதை நான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!

விதையில்லாமல் முளைக்கின்றது;
வித்தில்லாமல் விளைகின்றது;
வதையில்லாமல் வதைக்கின்றது;
வரவேற்பின்றி நுழைகின்றது!'

சாதாரணமாய்க் கடிதம்' எனச்
சற்றே எழுத நினைத்தாலும்
தோதாய் எதுகை,மோனைகளைத்
துரத்தித் துரத்தித் தருகின்றது!

உரைநடை வேகம் எங்கெங்கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழிகின்றது!

இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுய மரியாதை என்பதெல்லாம்
சூக்கும அறிவாய் விரிகின்றது!

எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கிது புரிகின்றது?

எழுதும் போதொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக்கின்றேன்!

அடடா,இதுதான்: கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?

-நட்புடன்,
கிருஷ்ணன்பாலா 
10.08.2010

No comments: