Wednesday, August 18, 2010

எரிவது,நெஞ்சில் நெருப்பு!

கல்லும் மண்ணும் தோன்றா முனமே,
கனிந்தது நம்மொழி;உண்மை!
அல்லும் பகலும் இதையே சொல்லி
அளப்பதிலே,என்ன நன்மை?


முன்னம் யாவும் முன்னிலை வகிக்க,
மூத்த குடிஎனத் திகழ்ந்தோம்;
பின்னர்அவற்றைப் பெருமை பேசியே
பேணும் சாதனை மறந்தோம்!


உள்ளுணர்வோடு உலகத் தமிழரின்
ஒற்றுமை வேண்டித் துடிப்போம்;
உள்ளூர்த் தமிழர்மட்டும் இங்கே
ஒருவருக்கொருவர் கெடுப்போம்!


'செய்யும் தொழிலே தெய்வம்' என்றொரு
சிந்தனை தனையும் அறி வோம்;
உய்யும் வழியை மறந்தவர் ஆகி,
உருப் படாமலேதிரி வோம்!


'எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம்?'
என்கிற பெருமையை இன்று,
செப்படி வித்தை அரசியற் குழியில்
சேர்த்து விட்டோமே,கொன்று!


திறமையும் தெளிவும் கொண்டோர் நமது
தேசத்தை விட்டே ஓடுகின்றார்;
அறிவும் புகழும் செல்வமும்தேடி
அந்நிய நாட்டில் வாடுகின்றார்!


கூராய் எதையும் ஆரா யாமல்
கூட்டம் கூட்டமாய்ப் போனோம்;
யாரோ ஒருவன் பின்னால் செல்லும்
ஆட்டுமந்தை நாம் ஆனோம்!


அரியா சனங்களின் கீழே நம்மை
அடிமைகள் ஆக்கிக் கொண்டோம்:;
தெரியா சனங்கள் நாம்'என, நமக்கே;
'திலகம்' தீட்டிடு கின்றோம்!


பொய்யும் புரட்டும் புண்மொழிப் பேச்சும்
பூத்திடும் மேடைகள் முன்னே;
கையொலி செய்தே மெய்ம் மறப்பதில்நாம்,
கலங் காதிருப்பது, என்னே?


'தலைவனின் பின்னே 'தறுதலை'போலத்
தாழ்ந்துவிட்டோமே, இன்று!
உலகினில் இந்த அவலத்தை மாற்றி,
உயரும் நிலைதான்,என்று?


இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால்
எரிவது நெஞ்சில் நெருப்பு;
'என்னது,நமக்கு,இப்படிக் கேடு?'
என்பதுதான் கை இருப்பு!


தமிழா,தமிழா,தலை நிமிர்வாயா?
தவறுகள் களைந் திடுவாயா?
நமைத் தாழ்த்திடும்இக் கொடுமைகள் சாக
நல்லறி வுணர்ந் திடுவாயா?

-கிருஷ்ணன் பாலா-

(இது வாழும் தமிழ் உலகம் மாத இடழில் 1984-ல் பிரசுரம் பெற்றது)

No comments: