Wednesday, August 18, 2010

இதுவே நாம்!

எழுதத் தெரிந்த நண்பர்கள் யாரும்
எனது பொது உடைமை;பதில்
எழுதத் தெரியாதிருப்பது எல்லாம்
அவரவர் தனி உடைமை!

இங்கே எனது கருத்தில் பதியும்
எண்ணம் எது வெனினும்; ஒரு
தங்கு தயக்கம் இல்லாமல்தான்
தமிழில் எழுது கின்றேன்!

உருப்படியான கருத்துக்களோடு
உங்கள் பதிவிருந்தால்;நான்
விருப்பத்தோடு பதிவுரை செய்யும்
வேட்கை கொள்ளு கின்றேன்!


வெட்டித் தனமாய்  எழுதி இங்கு
வேடிக்கை செய்வதற்கும்;பொய்
நட்டுக் கொண்டு  நரகல் எழுத்தில்
நடவுகள் செய்வதற்கும்  

காமடி,சினிமா,காதல் பித்து,
கவிதை எனும் பெயரில்
யாம் இன்புற்று எழுதுவ தில்லை;
என்னைப் புரிந் திடுவீர்!

ஒருசில விஷயம் உருப்படியாக
உணர்ந்தால் ஏற்றிடுவேன்;
'கரு' இருந்தால் அது எது என்றாலும்
கரங்களை நீட்டிடு வேன்!

அவரவர் எண்ணம் அவரவர் சுமக்க
அதை நாம் வெறுப்பதில்லை;
'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்லை!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
12.08.2010

No comments: