Wednesday, March 4, 2015

அறியாமையின் விளம்பரம்!

தமிழ் உணர்வாளர்களைத் ’தட்டி’ (?) எழுப்பும் கவிஞர்  தாமரையின் பேனர்

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எந்தத் தமிழால் பேர் பெற்றாரோ,  அந்தத் தமிழால் வாழ்வில்  கெட்டேன்
என்று  தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்  பெண் கவிஞரின் வாழ்க்கையை எள்ளி நகையாடுவதல்ல, இக்கட்டுரையின்  நோக்கம்.

தனது இன்றைய அவலநிலைக்குக் காரணம்என்றுதமிழ் நேசிப்பைக் கேவலப்படுத்தும் தாமரை அவர்களின் விபரீதமான, அறியாமையைக் கிள்ளி எறியவும் தமிழை நுனிப்புல் மேய்ந்து கொண்டுகவிஞர் என்றும் அறிஞர் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவர்கள் இவர்போல் இன்றைய இளம் சமுதாயத்துக்குத தவறான வழியைக் காட்டுகின்ற அதர்ம வழியை எச்சரித்து இடித்துரைக்கவும்தான் இதை எழுதக் காரணம் என்பதை முன் அறிவித்துக் கொள்கின்றேன்!

நண்பர்களே,

தமிழை நேசித்தேன்;  தெருவுக்கு வந்து விட்டேன்என்ற மிகப்பெரும்  பழியைத் தமிழ் மொழி  மீது சுமத்தி, விசித்திரமானதொரு  போராட்டத்தை, தெருவில் இறங்கி, நடத்திக் கொண்டிருக்கிறார் கவிதாயினி  தாமரை அவர்கள்.

சினிமாவில் சில நாட்கள் பாட்டெழுதி கவிஞர்என்று சுயபட்டம்
புனைந்து கொண்டு, தமிழ்த் தேசியம் பேசி அரசியல் நடத்தி வந்த தோழர் தியாகுவைக் கைத்தலம் பற்றியவர் இவர்.

இவர் தனது குடும்ப வாழ்வை அமைந்துக் கொண்ட விதமே தமிழ்கூறும்
நல்லுலகிற்கு ஏற்புடையதாக இல்லை.

பிறன்மனை விழையாதிருப்பதுபேராண்மை..
அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது அடிமுட்டாள்தனம்.
பெண்மைக்கும் சேர்த்தே அதைப் பெருமைப் படுத்திப் பார்க்க வேண்டும்.
மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன்பால் காமுற்று, அதன் மயக்கத்தில் அவனுடைய மனைவிக்குத் துரோகம் இழைத்து அவனைத்
தன் பக்கத்தில் இழுத்துக் கொள்ளும் ஒருத்திக்கு இச் சமூகம் தரும் பேர், ‘இரண்டாம் தாரம்’ என்பதுடன் ;இரண்டாம் தரப் பெண்’ என்ற தகுதிச் சான்றுரையும்தான்.

தமிழைத் தரம் தாழ்த்திப் பேசினால் அது மூன்றாம்தரப் பண்புள்ளோர் குணம்’என்றே சான்றோர் சபை சபிக்கும்.

அந்தச் சாபத்தைச் செய்யும் பாவத்தைக் கவிஞர் தாமரை அவர்கள் சற்றும் சிந்திக்காமல் செய்வது  நமக்கெல்லாம் சினத்தை ஏற்படுத்துகிறது!

நண்பர்களே,

நீதி நெறி பிறழா நேர்மையைக் குணத்தை உருவாக்கும் தெய்வத்
தமிழுக்கு அறத் தமிழ்’  என்றும்;  உயிர் போகின்ற நிலையிலும்
குன்றா வீரத்தையும் குறையா விவேகத்தையும் கொப்பளிக்கச் செய்யும்
தமிழுக்கு  ‘மறத்தமிழ்என்றும் இருவகைக் காரணப் பெயர்கள் உண்டு.

சிலர் தங்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கைக்காக, அதைப் பயன் படுத்திக் காணும் சுகத்தினால் அது ’காமத் தமிழ் ஆகி விடாது; அந்தக் காதல் வாழ்க்கை தோற்றுப் போனதால் பாவத் தமிழும் ஆகி விடாது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழை,’
சங்கப் புலவர்கள் போற்றிப் பணிந்த சாகாத் தமிழை,  புராண, இதிகாச
காலங்களையும் கடந்து நிற்கும் முப்பெரும் தமிழை தனது நெறிகெட்ட
வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணம்’ எனக் காட்டிக் கவிஞர் தாமரை அவர்கள் அனுதாபம் தேடுகின்ற அவலத்தை இடித்துரைக்காமலும் , எதிர்க்காமலும் இருப்பது தமிழ் உணர்வுடையோருக்கும் தமிழ்ச் சான்றோருக்கும் அவமானம்.

நமக்கெல்லாம் தாமரை அவர்களின் தற்குறித்தனமான அறிவிக்கை தன்மானத்தைக் கிளர்ந்தெழச் செய்கின்றது.  தற்குறித்தனம்
படித்தவர்களிடையே இருப்பது அந்த மொழியின் சீர்மரபுக்கே இழுக்கு.

நினைவில் கொள்வோம், நண்பர்களே:

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்
காணோம்’ என்று தலை நிமிர்ந்து முரசறைந்தவன்  நமது பாட்டன்
முண்டாசுக் கவிஞன்.

ஏதோ தமிழை மட்டுமே கற்றுக் கொண்டு அதன் போதையில் ஊறிப் போய், அவன் அப்படிப் புகலவில்லை; தமிழைப் புகழவில்லை.

ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், மராத்தி முதலான
பல மொழிகளிலும் வித்தகம் பெற்ற மகாகவி அவன்.

உலக மொழிகளில் ஒப்பற்ற மொழி, தமிழ்தான் என்று பன் பொழிகளிலும் புலமை பெற்ற மகாகவி பாரதி  சொன்னதுதான் மிகச் சரியான உண்மை; உலக மொழி ஆய்வாளர்கள் எல்லோரும் ஆமோதிக்கின்ற பேருண்மை.

உலகோர் வியக்கும் பண்பு நெறிகளைக் கற்பிக்கும் அந்த உன்னதத் கவிஞர் தாமரை கற்றுக் கொள்ளவும் இல்லை; நேசிக்கவும் இல்லை.

கற்றிருந்தாலோ அல்லது நேசித்திருந்தாலோ,
’தான் தெருவுக்கு வந்த அவலநிலை’க்குத் தமிழை நேசித்ததன் விளைவே காரணம்’ என்று அவர் கழிவிரக்கம் கொண்டு,  கதை எழுதித் ’தட்டி
(பேனர்) வைத்திருக்க மாட்டார். மாறாகத் தன் நாவைக் கட்டி வைத்திருப்பார்.

சினிமாவில் எழுதிப் பேர் வாங்கி விட்டதால், தன் வாழ்க்கையை ஒரு சினிமாபோல் சிந்தித்துக் கொண்டு ஏதோ ஒருவகையில் தனக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தமிழ் உணர்வாளர்கள் குவிக்க வேண்டும்’ என்று எதிர்பார்க்கும் அவருடைய முதிர்ச்சியின்மையானது, தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிற ஆபத்து மிக்கது.

பெற்ற அன்னைக்கும் மேலான தமிழை, தனது தவறான வாழ்க்கைப் பாதையின் வினை எச்சமாகக் கண்டு அதன்  வேதனைக்கு விளக்கம் தருவதற்காக தமிழ் மீது பழி சுமத்தும் இழிவை, உண்மைத் தமிழ் உணர்வுடையோர் உதைக்காமல் விடமாட்டார்கள்!

தவறான எண்ணங்களோடு தமிழைப் படித்துக் கொண்டு ’கவிஞர்’ என்று
கதைத்துக் கொண்டு, தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்ட தோழர் தியாகு அவர்களுடன் கொள்கை இணக்கமும் கூடல் இணக்கமும் கொண்டு குடும்பம் அமைத்துக் கொண்டவர் தாமரை அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது மண வாழ்வின் மன முறிவு பற்றியும் கணவர் தோழர் தியாகு மீது அவர் நெறிபிறழ்ந்த பாதை பற்றியும் தாமரை அவர்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி தந்ததை நாம்
மறக்கவில்லை.

அதைப் பல்வேறு ஊடகங்களும் பலபட எழுதி, தோழர் தியாகு-
கவிஞர் தாமரை இவர்கள் இருவரின் முரண்பாடுகளையும் முட்டல் மோதல்களையும் தமிழ் மக்களிடையே முழுமையாகத் தந்து விட்டன
என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த பழைய செய்திதான்.

என்றாலும்-
’இவ்விவகாரம் இந்த இருவருடைய சொந்த விஷயம்என்ற அளவில் பார்வையாளர்களாகிய நாம் அமைதியாக இருந்து விட்டோம்.

மறுபடியும் இப்போது இவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு விவகாரம் தெருவுக்கு வந்து விட்டது.

இதில் உண்மையாக யார் மீது குற்றம்? எதனால் குற்றம்?’ எதற்காகக் குற்றம்?’ என்றெல்லாம்  நாம் ஆராய்ச்சி செய்து தீர்ப்புக் கூறுவதற்காக இங்கு நாம் தலைப்படவில்லை.

ஆனால்கவிஞர் தாமரை, தன் துன்பத்துக்கான
குற்றத்தைத் தமிழ்மீது போட்டு,  ‘அது உங்களுக்குச் சம்மதம்தானா?’
என்று, தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற, சுவாசிக்கின்ற தமிழ் உணர்வாளர்களை எல்லாம் தட்டிக் கேட்கின்றாரே!’

அதற்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?

தனது கணவர் காணாமல் போய் விட்டார்’  என்றும் தன்னைக் கைவிட்டு விட்டு இரண்டு முறை வீட்டை வீட்டு ஓடிப் போனவர்என்றும் கடந்த சில நாட்களாக அவரைக் காணவில்லைஎன்றும் இவர் ஊடங்கள் முன்னிலையில் பேசி வருவதும் அப்படிப் பேசி வரும்போது அவர்  வேறு பெண்களுடன் கூடா நட்பில்இருக்கிறவர்’ என்று பட்டியல் போட்டுப் பேசுவதும் கண்கூடான நிலை.

இவ்வாறு,’தன்னோடு கணவனாக வாழ்ந்த ஒருவரை, இன்று கடுமையான குற்றச்சாட்டுக்களில் பேசி, ஏசி வருவதானது, ‘அவர் (தியாகு) இப்படிப்
பழிகளைச் சுமப்பதற்கு அஞ்சி மீண்டும் தன்னோடு சமாதானத்துக்கு வந்து சேர்ந்து வாழ வேண்டும்என்ற எண்ணத்தினாலா? அல்லது அவராக விரும்பினாலும் இனி வந்து தன்னோடு சேர்ந்துவிடக் கூடாது’ என்பதன் நோக்கத்தினாலா? என்றெல்லாம் கேள்விகளை எழவைக்கும் தாமரை அவர்களின் செயலும் சிந்தனையும் எத்தகைய அவலத்துக்கும் அறியாமைக்கும் உரியது?’ என்பதைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

உண்மையில்,-
வளர்ந்து கொண்டிருக்கிற ஆண் பிள்ளைக்குத் தாயாகி, ஓரளவுக்குக் கவிஞர் தாமரைஎன்ற பெயருடன் பிரபலமாகி  இருக்கும்  இப்பெண்மணி
இப்போது தட்டி வைத்துக் கொண்டு முதிர்ச்சியும் தன்மானமும் இல்லாத  தனது பலகீனமான அறிவை, ஊரறிய,உலகறிய விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்,

இவரது தனிப்பட்ட வாழ்வு தரம் கெட்டுப் போனதிலும் அதனால் இவரது பிள்ளையின் எதிர்காலம் தடுமாறும் நிலையில் இருப்பதிலும் எனக்கு
மிகமிக வருத்தம் உண்டு;  இரக்கமும் உண்டு.

 ‘எப்படியோ, இவரது குடும்ப வாழ்வில் அமைதியும் நிம்மதியும் சீக்கிரமே சேரட்டும்’ என்று என் மனம் எண்ணுகிறபோதும்  –

//தமிழை நேசித்ததால்
தெருவுக்கு வந்து விட்டேன்:
தமிழ் உணர்வாளர்களே. 
சம்மதம் தானா?//

என்று-
தட்டி (பேனர்) வைத்து, எம் போன்றோரைத் தட்டி எழுப்புகிற சிறுமை கண்டு,விசனம் கொள்ளவும் சினம் விமர்சிக்கவும் நேர்ந்திருக்கிறது.

தமிழ்ப் பெருமக்களே,

தமிழ், தன்னைப் பயின்றவனின் வயிற்றை நிரப்புகிறது’ என்பதைவிடவும்    ‘தன்னைக் கற்றவனின் வாழ்வை உன்னதமாக நிரப்புகிறதுஎன்பதே சத்தியம்.

இந்த உன்னதத் தமிழை  நேசிப்பவர்களும் வாசிப்பவர்களும்தான் சமுதாயத்தில் பண்பு மிக்க வாழ்வின் பயனாளிகள்; முளைக்கின்ற
இளம்பயிர்களுக்கு முன் ஏர் பிடிக்கும் தகுதியாளர்கள்; சான்றோர்கள் சபையை அலங்கரிக்கின்றவர்கள்.

அந்தத் தமிழையாஇப்பெண் கவிஞர் தாமரை நேசித்தார்?

தமிழை நேசித்தோர், தரம் தாழ்ந்து போவதில்லை; தரம் தாழ்ந்து போனவர் தமிழை நேசித்ததில்லை.

தமிழை அரைகுறையாகக் கற்றுக் கொண்டு பிழைப்புக்காகவும் பிழைபட்ட வாழ்வுக்காகவும் தவறான சித்தாந்தந்தங்களை சினிமாவில் அரைகுறைகள் ரசிக்க எழுதிப் பேர் வாங்கிய கையோடு, தனக்குத் தானே கவிஞர்என்று தம்பட்டம் கட்டிக் கொண்டு பரபரத்தவர்களின் வாழ்க்கை, சுழற் காற்றில்  அகப்பட்ட பட்டம்போல் ஆகி விடும்’ என்பதற்கு உதாரணம் ஆகி விட்டவர், இவர்..

தமிழை நேசித்தேன்; அதனால் தெருவுக்கு வந்து விட்டேன்; தமிழ்
உணர்வாளர்களே சம்மதம்தானா? என்று தட்டி வைத்துத் தனது அறியாமைக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் இவருக்கு  நாலுபேர்  கூடி,    உச்சுக் கொட்டவும் ஆதரவு கூட்டவும் இருக்கத்தான் செய்கின்றார்கள்’ என்பதில் தமிழன்னை வெட்கித் தலை குனிகின்றாள்.

தமிழ் உணர்வாளர்களே,

தமிழை நேசித்ததால் தெருவுக்கு வந்து விட்டேன் ‘என்கிறாயே? அப்படியானால் நீ தெருவுக்கு வந்ததற்கு உன்னைக் கைவிட்டவன் காரணமில்லையா? அல்லது உன்னைக் கைவிட்டவனைத்தான்   ‘தமிழ்’ என்கிறாயா?

உன்னைப்  போன்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிட்டு,
அவள் கணவனை  நீ  பறித்துக் கொண்டபோது, அதே கணவன், 
தனது மனைவியைக் கை விட்டு விட்டானே? அப்போது கைவிடப்பட்ட அவனது முதல் மனைவியின் மனம் எவ்வளவு கதறியிருக்கும்?

அந்தப் பெண் உன்னையும்  அவனையும் எப்படியெல்லாம் சுட்டிக் காட்டி அழுதிருப்பாள்? அவமானப்பட்டுக் குமைந்து  குமைந்து சபித்திருப்பாள்?
அப்போது, அந்த அபலையின் அவலத்தை, அவர் விட்ட கண்ணீரின்
தாக்கத்தை எல்லாம் சிந்தித்தாயா?

இப்போதேனும் அவற்றை உணர்கின்றாயா?

உனது பருவக் கிளர்ச்சிக்கு அவனை அடைய அன்று  உதவிய தமிழ்,
இப்போது உதவவில்லை’  என்பதற்காக, அன்னையினும் மேலான அந்தத் தமிழை  இழிவு படுத்துகிறாயே?’

//பிறர்க்கின்னா  முற்பகல்செய்யின்; தமக்குஇன்னா         
பிற்பகல் தாமே வரும்.//

என்று –

இன்னாசெய்யாமைகுறித்து எழுதிய வள்ளுவனின் அறத் தமிழை நீ நேசித்திருப்பது உண்மையானால்இன்று உனது முற்பகல் வினைகளின் வேதனைதான் இதுஎன்ற உண்மை உனக்கு விளங்கியிருக்க வேண்டும்’

என்று நீங்கள் இடித்துரைத்துக் கேட்க வேண்டாமா?

தமிழைக் கீழ்மைப்படுத்தும் எவரையும் எதிர்த்து நிற்கும் அறத்தமிழும் மறத்தமிழும் உங்கள் உணர்வுகளில் ஆர்த்தெழ வேண்டாமோ?

தமிழை உண்மையாகவே கற்றுக் கொள்ளாது அதை ஊனப்படுத்தும்
விதமாக, அன்னைத் தமிழைத் தனது பிழைபட்ட வாழ்வுக்கு காரணம்என்று தட்டிவைக்கின்ற இந்தப் பெண் கவிஞரைத் தட்டிக் கேட்கும் தமிழ் உணர்வாளர்களைத்தான் இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
4.3.2015

4 comments:

வடிவேல் கன்னியப்பன் said...

அன்பிற்கினியீர்! வணக்கம். தங்களின் கூற்று மிகச் சரியானதே!இந்த விளம்பரம் தமிழையும், தமிழரையும் விளம்பரப் பொருளாக்கியதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தக்க சமயத்தில் வந்த கண்டிப்பு.

Sriram Krishnaswamy said...

காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன் என்று வீரத்தமிழ் பேசியவன் எங்கே...இவர்கள் எங்கே...அடுத்த தலைமுறைக்கு தமிழை அறிமுகம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கும் தமிழைக் கொல்லாமல் இருந்தால் போதும்...சரியான நேரத்தில் சரியான பதிவு...நன்றிகள் பல

isaianban said...

மிகவும் சரியான கருத்துக்கள்...

Anonymous said...

மனங்கொள் !

தமிழால் வறுமை என
எண்ணாமை ! ...
Vetha.Langathilakam-