Wednesday, September 26, 2012

தேவாரம் பெற்ற திருவாமாத்தூர்!


ன்று மாலை (25.9.2012) சென்னையிலிருந்து திருச்சிக்கு எனது அருமை நண்பர்  ‘தாம்பரம் கண்ணன்’  என்கிற திரு பாலசுப்பிரமணியம் அவர்களுடன் காரில் சென்றேன்.

விழுப்புரம் நெருங்கியதும், அங்கிருந்து சரியாக மேற்குத் திசையில்  (சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்துக்கு முன்னதாக பொன்னுசாமி ஓட்டல் அமைந்துள்ளதற்கு சரியாக மேற்கில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாமாத்தூர் ( திரு மாத்தூர்)  என்ற குக்கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.

திருஆ மாத்தூர் என்ற இக்கிராமம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசுக்கும் பின்னர்  பல்லவப் பேரரசுக்கும் உட்பட்டிருந்த ஓர் உன்னத பகுதி என்பது இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை திருக்கோவிலே சான்று.

அன்று மிகப் பெரும் ஊராகவும் கலை,ஆன்மீகம், விவசாயம் செழித்த முக்கிய நகராகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இத்திருக்கோவில் எழுப்பப்பட்டுள்ள கம்பீரமே காட்டிக் கொடுக்கும்.

‘ஆமாத்தூர் என்கிற இந்தப் பேரூர், காலச் சுழற்சியில் இன்று சிற்றூராகச் சிறுத்துப்போன காரணத்தை நாம் கண்டு பிடித்தாக வேண்டும்’ என்ற வரலாற்றுத் தேடலைத் தூண்டி நிற்கிறது இங்கு எழுப்பட்டுள்ள இத்திருக்கோவில். இப்போது சுமார் 60,70 குடும்பங்கள் மட்டுமே இங்கே வாழ்கின்றன.

மாணிக்க வாசகர் நீங்கலாக மற்ற மூவரும் (திருஞான சம்பந்தர்அப்பர்,சுந்தரர்) நேரில் இத்திருத்தலம் வந்து பாடிப் பரவிதேவாரம் கண்டிருக்கின்றார்கள் என்றால் இந்தத் திருவாமாத்தூரின் பெருமையை  என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ?

ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முன் நிற்பது, திருஞான சம்பந்தப் பெருமானின் காலம்.

அப்பெருமான் இங்கு எழுந்தருளி இந்த திருக்கோவில் ஈசனைப் பாடி, தேவாரம் சூடியிருக்கின்றார் என்றால் அதற்கும் முந்தியே இத் திருத்தலம் பலநூறு ஆண்டுகள் பெருமை கொண்டிருந்திருப்பது உண்மை அல்லவா?
.
அது மட்டுமின்றி, ’வண்ணச் சரபம்’ ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் 
ஜீவசமாதியுற்று எழுந்தருளி, ஆளும் திருத்தலமாகவும் இது அமைந்திருப்பதை இன்றுதான் நேரில் கண்டு நெகிழ்ந்தேன். 

‘இரட்டைப் புலவர்கள்’ என்று புகழ்பெற்ற இருவரால் கலம்பகம் பாடப் பெற்ற ஆலயமும் இது’ என்பது இன்னொரு கூடுதல் சிறப்பு.

(இரட்டைப் புலவர்களில் ஒருவர் குருடர்;இன்னொருவர் முடவர். முடவரைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு, அவர் சொல்லும் வழியில் குருடர் நடப்பார். குருடருக்கு வழித்துணையாக மட்டுமின்றி, குருடர் பாடும் முதல் இரண்டு வரிகளைப் பின்பற்றி முடவர் அடுத்த இரண்டு வரிகளைப் பாடி முடிப்பார். இவ்வாறாக இவ்விருவரும் வெண்பாவின் நாலடிகளை சரி சமமாகப் பகிர்ந்து பாடி முடிப்பதுடன் வாழ்க்கையையும் ஒன்றாகவே பங்கிட்டு வாழ்ந்தவர்கள். அவர்களுடைய பாடல்களைக் கேட்டு மன்னர்களும் செல்வந்தர்களும் மகிழ்ந்து தரும் பொற்கிழிகளையும் பகிர்ந்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள்தான் இந்த இரட்டைப் புலவர்கள்)
  
வண்ணச் சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள், வள்ளல் பெருமானார் மற்றும் – ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் காலத்தில் வாழ்ந்து அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த தலைசிறந்த மகான்.

ஸ்ரீஆதி சங்கரர் வகுத்தருளிய ஆறு சமயங்களில் ஒன்றான ‘கௌமாரம்’ என்ற குமார வழிபாட்டை (முருகனை முதற்பொருளாய் கொண்டு வழிபடும் நெறி) செழிக்கச் செய்து,அதைக் காத்துப் போற்றிய தெய்வ அவதாரம்தான்  வண்ணசரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள்.

‘வண்ணச் சரபம்’ என்ற அதிசயமான இலக்கண மரபில் இவரது பாடல்கள் அமையப் பெற்றிருப்பதை இன்று நாம் படித்து மகிழ்ந்து நெகிழலாம்.

இவருடைய நேரடிச் சீடர்தான் ஸ்ரீ ராமானந்த சுவாமிகள். தனது குரு ’வண்ணச் சரபம்’ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளின் வழியில் கோயம்புத்தூர் அருகே சரவணம்பட்டியில் கௌமார மடத்தை நிறுவிய சுவாமிகள்.

இவ்வாறு திருவாமாத்துரின் சிறப்புக்கள் இருப்பதை இவ்வூரை நெருங்க நெருங்க நண்பர் திரு கண்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல,அதில் எண்ணங்கள் விரிந்தவாறே திருவாமாத்தூர் கிராமத்தை நெருங்கினோம்.

அப்போது  சூரியன் செக்கச் சிவந்த பெரிய பந்தாக மேலை வானில் வீழ்ந்து மறையத் தொடங்கினான்;  அதன் பின்னணியில் ஆங்கே, கண்கொள்ளாக் காட்சியாக  ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோபுரம்  வானளாவித் தோன்றி எங்களை ‘வா’வென்று அழைத்து நின்றது.

இங்குள்ள முன்னவர்
திருமால் துயர் தீர்த்த ஸ்ரீவிநாயகர்
புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க  அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை ஆலயம் பச்சைப் பசேல்என்ற கரும்பு வயல்கள் கட்டியம் கூற  கருணை மிளிர காத்துக் கொண்டிருப்பது நம் எண்ணங்களைத் தூய்மைப் படுத்துவதாக இருந்தது. இங்கு இறை நம்பிக்கையோடு செல்வோர்தான் இதை உணர முடியும்.

நாங்கள் இந்த ஆலயத்துக்குள் புகுந்தபோது,சூரியன் சுத்தமாகக் கவிழ்ந்து போய் இருள் கவ்வியிருந்தது.  அந்த இருட்டை மேலும் வலுவாக்கியிருந்தது மேடம் ஜெ. அரசின் மின்வாரியம்.

அற்புதமான - நுண்ணிய கலைச் சிற்பங்கள் அந்த ஆலயச் சுவர்களின் ஆபரணம் போல் மிளிர, அந்தக் கலை நயம் மிக்க சிற்பங்களை இருட்டின் மாட்சிமையால் முழுமையாகக் காண முடியவில்லை.

இருட்டிலும் ஒளிர்ந்த
சிற்பங்களில் ஒன்று
ஆயினும், அவற்றை இருட்டிலும் வியக்கவைக்கும் தோற்றங்களாகக் கண்டு, வியப்பும் விந்தையும் மேலிட ஆலயத்துள் பிரவேசித்தோம்.

வேறு எங்கும் காண இயலாத விந்தையாக அபிராமேஸ்வர் ஒரு ஆள் உயரத்துக்குச் சற்று சாய்ந்த நிலையில் ஆவுடையில் இலிங்கமாக எழுந்தருளியிருக்கின்றார்.

இருட்டில் தட்டுத் தடுமாறித்தான் கருவறையை ச்சுற்றி வந்தோம்.

சுற்றிலும் உள்ள பரிவாரத் தேவதைகளும் தெய்வங்களும் கொள்ளை அழகுச் சிற்பங்களாகக் கொலுவீற்றிருந்தன.

எல்லாச் சிவன் கோவில்களிலும் அய்யனுடன் உடனமர் அம்மையாக இருக்கும் சக்தி, இங்கு சற்று வேறுபட்டுச் சிவன் கோவிலுக்கு எதிரே தனிக் கோவில் கொண்டிருக்கின்றாள். அதற்கு ஒரு தனிக் கதை உண்டு.

என்றாலும் பேரழகு கொண்ட கோலத்தில் நின்றவாறு அருள் பாலிக்கும் முத்தாம்பிகையாக இங்கே நாமகரணம் சூடி நிற்கின்றாள்; அம்மையை  அபிராமியின் வடிவாகவே என் மனம் தரிசித்தது.

உள்ளே எழுந்தருளியிருந்த அபிராமேஸ்வரரையும் இன்னொரு தனிக் கோவிலில் நின்ற நிலையில் அருள்பாலித்த அன்னையையும் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி, தனிப் பொலிவு காட்டி அற்புத வடிவங்களாய்க் காட்சி தர, தரிசித்தது இன்றைய நாளில் கிடைத்த தெய்வீக அனுபவம்.

மின் வெட்டுக் காரணமாக,வெளி ப்ரகாரத்திலும் வெளியிலும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்ததுகூட  ’ஒரு விதத்தில் நன்மையோ?’ என்று மனம் எண்ணியது.

அம்பிகையின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்த போது அதே அம்பிகையின் நுழை கோபுரத்தின் பின்னணியில் தோன்றிய ஈசன் திருக்கோவிலின்  தோற்றம் ஒரு தனிப் பொலிவுடன் காட்சி தந்தது. அதன் உச்சியில் இருந்த விளக்கு ஒருவிதமான ‘தெய்வீக ஜோதி’ யை உமிழ்வதுபோல் தெரிய, அதை அப்படியே  கையில் இருந்த சாதாரண மொபைல் காமிராவில் படம் பிடித்தேன்.

அதுதான் இங்கு அசாதாரண தோற்றத்தில் இடம் பிடித்துள்ளது.

என் அருமை நண்பர்
தாம்பரம் கண்ணன் அவர்கள்
ஸ்ரீ அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை திருக்கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அருகில உள்ள வண்ணச் சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளின் திருக் கோவிலை இருட்டுக்குள் சென்றவாறு நுழைந்தோம். ’மாலை 7 மணியுடன் கோவில் சாத்தப்பட்டு விட்டது’ என்பதை அறிந்த போதும் ’அம்மகானின் திருவடி பட்டும் திருவுளம் தொட்டும் எழுப்பப்பட்டுள்ள திருத்தலத்தைத் தொட்டு விட்டாவது திரும்ப வேண்டும்’ என்று நாங்கள் பேசிக் கொண்டது அங்கே சமாதி கொண்டிருந்த நிலையில்சுவாமிகளே கேட்டுவிட்டதுபோல் அங்கே அதிசயம் நிகழ்ந்தது.

அத்திருத்தலத்தின் மூடியிருந்த இரும்புக் கேட்டை ஓசைப் படாமல் விலக்கி நுழைந்த எங்களைத் திடீரென்று அங்கு கோவில் கொண்டுள்ள சுவாமிகளின் மகன் வயிற்றுப் பேரனும் இப்போதைய திருவாமாத்தூர் கௌமார மடாலயத்தின் நான்காவது மடாதிபதியுமான சுவாமிகள், எதிர்பாராத நிலையில்,வியக்க வைக்கும் அருள் வடிவில், ‘லாந்தர்’ விளக்குடன் வந்து எங்களுக்காக கருவறையைத் திறந்து காட்டினார்.

’முருகப் பெருமான் நின்ற நிலையில் பேரழகுதோன்றப் புன்னகைத்த காட்சியை வேறு எந்த ஆலயத்திலும் பார்க்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அத்துணை பேரழகுப் பெருவடிவம் இங்குள்ள முருகன் திரு உருவச் சிலைக்கு.

சுமார் 150 ஆண்டுகளுக்கு ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் தன் வாழ்நாள் முழுதும் பூஜித்து வந்த திருக்கைவேல் ஆங்கே கருவறைக்கு முன்பு தனியாக ஸ்தாபிக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகிறது. அதனை நெஞ்சார நினைந்து கையாரத் தொட்டுப் பணிந்து இன்புற்றேன்.

வணங்கித் திரும்பியதும் சுவாமிகள் அந்த இருட்டிலும் எங்களுக்கு முருகனுக்கு உகந்த பஞ்சாமிருதத்தை கை நிறைய வழங்கினார்.

நாங்கள் எதிர்பாராமல் திருச்சி செல்லும் வழியில் திருவாமாத்துர் தரிசனம் கண்டது வாழ்நாளின் வரலாற்றுக் குறிப்புத்தான்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
25.9.2012
·     

No comments: