Sunday, December 11, 2011

இன்று- பாரதிதோன்றிய நாள்!





பாரதி பிறந்த நாள்!
--------------------------------------------
இந்தியர் நெஞ்சில் எல்லாம்
இமயமாய்த் தமிழை ஏற்றி
சுந்தரக் கவிதை செய்து
சுதந்திர முழக்கம் செய்த
மந்திரக் கவிஞன்;எங்கள்
மாகவி பாரதி;உலகம்
வந்தநாள் இன்று;அவனை
வணங்குதல் செய்வோ நாமே!



பாரதி போற்றி! பாரதி போற்றி!
---------------------------------------------------

பொய்யும் புளுகும் புனைந்தது உலகு
புரட்டும் திருட்டும் கலந்தது உறவு;
வையம் முழுவதும் தேடியலைந்தும்;
வாழ்வில் நேர்மை உள்ளோர் குறைவு!

கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்சொல் திறனறிந்து
பூட்டி,மனதில் பேணு கின்றோம்!

செவியில் அறைந்து அவன் உரைத்த
சிந்தனை யாவும் கொண்டிடு வோம்!
அவையில் ஒன்று;மறைவில் ஒன்று
அறியார் நாமெனக் கண்டிடு வோம்!

பாரதி தன்னைப் படித்தோர்;நமது
பாரில் பைந் தமிழ்ச் சொந்தம்;
வாரீர்,அந்தப் பாரதி உணர்வை
வாழ்த் திடுவோமே, நாம் இன்று!


இவண்-
கிருஷ்ணன் பாலா
11.12.2011



No comments: