Saturday, September 27, 2014

இன்றுதான் தீர்ப்பு நாள்!


றிவார்ந்த நண்பர்களே,

’சத்தியத்தின் குரலை எந்தச் சக்தியாலும் அடக்கி, அழித்து விட முடியாது’ என்பதற்குநீதியின் தீர்ப்பு நாளாய், இந்த நாள் மலர்ந்திருக்கிறது.

எப்பேர்ப்பட்ட  தகிடுதத்த வாய்தாக்கள்?  எப்படிப்பட்ட அதிகாரத் துஷ் பிரயோகங்கள்?  எப்படிப்பட்ட இழிநிலை அரசியல் நிர்வாக குத்தாட்டங்கள்? பாவம், ’பிள்ளை இல்லாக் குறையை நீக்க வந்த பெருங்கருணைப் பிள்ள இஃது’ எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு, அதைத் தத்தெடுத்து,  உடனேயே அதற்குத் தமிழகமே தலை கிறுகிறுத்து போகும் அளவுக்குப் பலகோடிகளில் செலவு செய்து, பிரமாண்டத் திருமணமாய்  நடத்திப் பிரலாபித்துக் கொண்டவர் நமது மேடம் ஜெ.அவர்கள். ‘

இந்த பாமரத் தமிழகத்தில் தன்னைத் தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற அதிகாரத் தோரணை மிஞ்ச நடந்து கொண்டவராய் வலம் வந்தவர் அல்லவா?

’அவரது அக்கிரமமான, ஆணவ அரசியல் முறைகேடுகளுக்கெல்லாம்
பின்புலமாக இருந்தவர்களை மிஞ்சி, அம்மையாருக்கு எதுவும் போகாது;என்ன செய்தாலும் பருப்பு வேகாதுஎன்ற நிலையை அம்மையார் அவர்களே அரண்போல் உருவாக்கிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் பரிபாலனம் செய்தார்.

இவரது ஒழுங்கீனமிக்க நிர்வாக ஊழல்களுக்கு எதிராக, சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு 18 ஆண்டுக் காலம் பல்வேறு வாய்தாக்களில் வழுக்கிக் கொண்டே இருந்தது

அதன் பின்னணியில்தான் எப்பேர்ப்பட்ட  தகிடுதத்த வாய்தாக்கள்? எப்படிப்பட்ட அதிகாரத் துஷ் பிரயோகங்கள்? எப்படிப்பட்ட இழிநிலை அரசியல் நிர்வாகக் குத்தாட்டங்கள்

நீதியைக் காக்க வேண்டியவர்களே அது நிலை குலைந்து போகும் அளவுக்கு அதிகாரத்தைப் பயன் படுத்தி அதன் முதுகில் குத்திய காயங்களை எல்லாம் பொறுமையோடு சகித்துக் கொண்டு வந்தாள், நீதி தேவதை.

’இனி, ’இந்தியாவில் நேர்மையான வழியில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாதோ?' என்று ஏங்கியவர்களை எல்லாம்  நிமிர வைத்து,
நீதிதேவதை சிலிர்த்துக் கொண்டு  வெளிப்பட்டிருக்கின்றாள், இன்று..

தாமதம் ஆயினும் தட்டாத  நீதி!

இந்தத் தீர்ப்பினால் மேடம் ஜெ. அவர்கள் தண்டிக்கப்பட்டு ஒழிந்து போக வேண்டும்’ என்தல்ல, என்னைப் போன்றோரின் நோக்கம்..

மாறாக, மேடம் ஜெ,போன்ற அரசியல்வாதிகள் யாராயினும் ஊழல் மற்றும் நிர்வாகக் குற்றங்கள்ஆட்சி அதிகாரத் துஷ் பிரயோகங்கள் புரியும் எவரும் சட்டத்தின் முன்பு  ஒருநாள் தலைகுனிந்தே ஆக வேண்டும்’ என்ற நீதியின் ஆட்சிக்கு அஞ்சிநாட்டையும் மக்களையும் ஆளும் உண்மை ஜனநாயகம் காக்கின்றவர்களாக மாற, இந்தத் தண்டனை ஒரு வரலாற்றுப் பாடமாக இருக்க வேண்டும்’ என்பதே விருப்பம்.

பொறுப்பேற்ற  நாள் முதலே  தகிடுதத்த வாய்தாக்கார வக்கீல்களுக்கெல்லாம்  சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து, நீதியின் நெறிமுறைகள் குன்றாது வழக்கை நடத்தி, குறுகிய நாட்களில் 18 ஆண்டுக்கால இழுவையை
நிலைநிறுத்தி,  இந்தியாவில் நீதி தேவதையின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்கள்’ என்பதைக் காட்டிய மைக்கேல் டி குன்ஹா, இந்திய நீதித்துறையின் இணையற்ற நீதிமானாய் நிலை பெற்று விட்டார்.


நீதிபதி
மைக்கேல்டி குன்ஹா
ஊழலில் திளைத்து ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் இஷ்டம்போல் வளைத்து அளவற்ற செல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்டு, அரசியல் செய்யும் அத்தனை பேருக்கும் நீதிபதி குன்ஹாவைப்போல் தண்டனை வழங்கும் நீதிமான்களாக தேசமெங்கும் நிமிர்ந்து  நிற்க வேண்டும்’ என்று,  தேசத்தை நேசிக்கும் அத்தனை பேரின் ஆசையும் எண்ணமும் விரிந்து நிற்கின்றது இந்த நாளில். 

இதோ, அவரது திசை நோக்கி நேர்மை மிக்க உள்ளங்கள் எல்லாம் வணங்குகின்றன.

*
மேடம்  ஜெ. அவர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை

அவரை விடவும் மோசமான ஆட்சியை நடத்தி, அவரை விடவும் பெரும் ஊழல்கள் புரிந்து, இன்று அவருக்குக் கிடைத்திருக்கும் தண்டனையில் தாங்கள் சாதனை படைத்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறவர்களின் மகிழ்ச்சியோடு எனது மகிழ்ச்சியையும் சேர்த்துக் கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை.

*
இன்றைய தீர்ப்பை ஒட்டி,ஏற்பட்டுவரும் வன்முறையில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட அறிவிலிகள் என்பதை நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள்.  ‘தங்களின்  வன்முறை நீதியின் தீர்ப்புக்கு எதிரானது’  என்பதை அறியா மூடர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

காட்டுமிராண்டிகள் போல் கட்டுப்பாடின்றி வன்முறையில் இறங்கி அரசுப்பேருந்துகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கி வரும் மிருகங்களான இவர்களின் ஓட்டில் அல்லவோ?,ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்? என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
*

என்ன செய்கிறது, மத்திய அரசு?
--------------------------------------------------
‘தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற முக்கிய நாள் இது’ வென சாதாரணக் குடிமகனுக்கே தெரியும்.

தீர்ப்பு, முதல்வருக்கு எதிராக அமையும் தருணத்தில் ஆடு மாடுகள்போல் அடிமைப் பட்டுப் பழகிப்போயிருக்கும் அதிமுக வினர் எப்படிச் செயல்படுவார்கள்?’ என்பது ஒரு சாதாரண கான்ஸ்டபுளுக்கே தெரியும்.

ஆனால், ‘தமிழகத்தை சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக வைத்திருக்கிறேன்என்று சட்ட மன்றத்தில் முழங்கிய முதல்வர் ஜெ. அவர்கள்தன் பின்னால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் மந்திரிகளையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதன் மூலம், ’மாநிலத்தில் சட்டம் ஒழுக்கு எக்கேடு கேட்டேனும் போகட்டும்என்பதுபோல் நடந்து கொண்டதும் ’தான் பதவி இழந்து பல மணி நேரம் சென்றும்கூட சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் அமைதியான சூழ்நிலையை உருவாக்காமல் இங்கே சாலைகளில் வன்முறைகள் தலை எடுக்க விட்டதும்  அதை இந்த கவர்னர் அமைதியாக இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும்
ஏன் என்பதுதான் கேள்வி.

எல்லாவற்றையும் விட நாட்டின் அமைதிக்கும் நாட்டு மக்களின் உடைமைக்கும் முழு உத்தரவாதம் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டிய நரேந்திர மோதியின் மத்திய அரசு மவுனம் காப்பதும் ஏன் என்பது விளங்கவில்லை.

மோதிதான் அமெரிக்கா சென்று விட்டார்; உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எங்கே? உல்லாசப் பயணம் சென்று விட்டாரோ?

அதிமுக என்பது அம்மா இல்லாவிட்டால் எல்லாமே முட்டைகள்தானென்பது உலகறிந்த ஒன்றுதான்;அம்மா இல்லாமல் பிள்ளைகள் அனாதைகள் போல் அழுதுகொண்டிருக்கின்றனதான்.

ஆனால்,

மோதியின் நிர்வாகம் முழித்துக் கொள்ள வேண்டாமா?

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.09.2014

1 comment:

Anonymous said...

ஜனநாயக மனிதரின் பேதமில்லா நேர்மையான அருமை பதிவு.
நன்றி!

உறங்கியும்,விழித்தும் இருந்த 18 வருட ஊழலை முழுதாக கலைத்ததும் ஒரு முழிப்புதானே!