Friday, September 12, 2014

யாவரும் அறிய.....


நண்பர்களே,

முகநூலில் அறிமுகம் ஆகி என்பால் அன்பும் நட்பும் செலுத்தும் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாவரும் அறிய,இது:

என்னைக் கவிஞர் என்றும் பாவலர் என்றும் சந்தக் கவி என்றும் மதிப்பீடு செய்து,அவ்வண்ணமே என்னைச் சிறப்பு மொழிகளில் விளிப்பதை அன்பு கூர்ந்து தவிர்க்க வேண்டுகின்றேன்.

நான் தமிழ் இலக்கணத்தை முழுமையாகக் கல்லாதவன். கவிதைகள் என்று என் எழுத்துக்களுக்குத்  தகுதிச் சான்றிதழ் எதையும் வழங்கிக் கொள்ளாதவன்;இலக்கண வரம்புகளைத்தேடிப்பிடித்துக் கவிதைகள் என்று எழுதாதவன்.

இச் சமூகத்தின் இழிநிலையைக் கண்டு சினமுறும்போதோ தேசத்தின் சத்தான விஷயங்களில்  சஞ்சரிக்கும்போதோ அன்பிலும் அழகிலும் இயற்கைப் பொலிவிலும் மனம்  ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்குள் ஓர் ஆத்மத் திருப்தி உருவாகிக் கொள்கிறது.

அதன் வசீகரத்தை நீங்கள் கவிதை என்று புகழ்ந்தாலும் புரியாமல் போனாலும் என்னைக் கவிஞன் என்றோ, பாவலன் என்றோ கதைத்தும் பாராட்டியும் விளிப்பதில் என் மனம் தன் தெளிவை இழக்கின்றது.

பொய்மையும் புரட்டு எண்ணங்களும்பெருகி,நேர்மையும் நிஜமும் அற்ற  தகுதிகளில் மலிந்து போன இலக்கியத் திருடர்கள் அவ்வாறு தங்களைச்  சுய புகழ் தீட்டிக் கொள்ளட்டும்; எனக்கு அவ்வாறான மதிப்பீடுகள் கட்டாயம் தேவை இல்லை. அவ்வாறு புகழப்படுவதற்காக  நான் எதையும் எழுதுவதில்லை.

உண்மையில் என்னைக் கவிஞன் என்று அழைத்துக் கொள்வதிலோ அப்படி அழைக்க வேண்டும் என்பதிலோ அருவெறுப்புக் கொள்கின்றவன் நான். பட்டங்கள் மற்றும் சிறப்புத் தகுதிச் சான்றுகள் எதிலும் என்னைப் புதைத்துக் கொள்ள விரும்பாதவன்.

என்னையும் என் எழுத்துக்களையும் நேசிப்போர் மற்றும் ,நட்பை விழைவோர் எல்லாம் என்னை என் பெயரைச் சொல்லி அழைப்பதிலும் விளிப்பதிலும்தான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி.

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.9.2014

No comments: