Saturday, August 25, 2012

யார்,தமிழினத்தின் எதிரிகள்?

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ஈழத் தமிழர்களின் ‘ஈழக் கனவுக்கு’நாங்கள்தான் ஒட்டுமொத்தக் குத்தகைதாரர்கள். இந்த உரிமையை வேலுப் பிள்ளை  பிரபாகரன் உயிர் விடுவதற்கு முன் எங்களுக்கு அளித்துச் சென்றுள்ளார்’ என்பதாகக் கதைத்துக் கொண்டு, இன்று தமிழகத்தில் பலர் காகிதப் புலிகளாக உருவெடுத்திருப்பதுடன், ஒருவரை ஒருவர் சினம் காட்டி உறுமிக் கொண்டு திரிகின்றனர்.

‘அவன்  யார் ஈழ உரிமை பற்றிப் பேச?’ என்று இவனும், ‘இவன் யார்;இவனுக்கு என்ன தகுதி, எனது தகுதியை எடைபோட்டுப் பேச?’ என்று அவனும் ஊடக யுத்தம் நடத்திக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

’தமிழன்’ -’ தமிழினம்’- ‘தமிழ்ப் பண்பாடு’- ‘தமிழ்த் தேசியம்’ என்றெல்லாம் தமிழின் பெயராலும் தமிழர்களின் பெயராலும் சிலர் தனித் தனி இயக்கங்களை  நடத்திக்கொண்டு,தங்களுக்குத் தாங்களே  ’மாவீரன்’ என்றும் ‘தமிழீழத்தின் விடிவெள்ளி என்றும் தாங்களே பிரபாகரனின் நெஞ்சில் இடம் பெற்ற ’தனி ஈழப் பிரதிநிதிகள்’ என்றும் ‘தம்’பட்டங்களப் பறக்க விட்டுக் கொண்டு மார்தட்டி வருகிறார்கள்.

’தமிழ் உணர்வாளர்கள்’ என்றொரு புதிய சாதியைத் தங்கள் சாதியெனச் சாதித்துக் கொண்டு முழங்கி.இங்கே சில்லறை வியாபாரம் செய்து வருகிறார்கள்.


சொல்லப் போனால் இந்தக் காகிதப் புலிகள் அந்த ஆயுதப் புலிகளை அடித்துத் தின்று வருகின்றன.

     
இவர்களுக்கு , ‘பார்ப்பனீய எதிர்ப்பு’  என்ற மாய்மாலச் சிந்தனை ஒன்றில் மட்டும்தான் ஒற்றுமை. மற்றதில் எல்லாம் ஒருவருக்கொருவர் பகைமையும் தாழ்மையும்  படுத்திக்கொண்டு செயல்படும் விவேகமற்ற  போக்குத்தான் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. 

தமிழைச் செம்மையாக எழுதத் தெரியாதவர்கள்கூட தமிழ் இயக்கம் என்ற பெயரில் தறுதலைக் கூட்டத்தை வளர்க்கும் வஞ்சக அரசியலே தவிர வேறில்லை இது.

தமிழுக்கு எத்தனை எழுத்துக்கள்? அதில்,உயிர், மெய்,உயிர்மெய்,ஆயுத எழுத்துக்கள் எவை?  அவற்றில் வல்லினம்,மெல்லினம், இடையினம்,குறில்-நெடில் என்றால் என்ன? என்று கேட்டால் விழி பிதுங்கும் வெட்டிப் பயல்கள் எல்லாம் தமிழியக்கம் என்று பேசும் அவலத்தை இங்குதான் காண முடிகிறது.

இவர்களின் புத்தியில்-பார்வையில் இங்குள்ள ‘அந்தணர்கள் எல்லாம் பார்ப்பனீயர்கள்;தமிழனுக்கு எதிரிகள்’ என்பது இந்த்த் தரம் கெட்டவர்களின் பிரச்சாரம்.

உண்மையான அந்தணன் எவரும் தமிழையோ,தமிழனையோ,தமிழ் இனத்தையோ கிஞ்சித்தும் கேலி செய்ததில்லை;கீறிக் காயப் படுத்தியதில்லை.

மாறாக,தமிழுக்கும் தமிழினத்துக்கும் தரமான சிந்தனைகளை அந்தணர்கள் அளித்துள்ளனர்.

காலம் காலமாக இம்மண்ணில் வாழ்ந்து,பிறருக்கு அறநெறியும் ஆன்மீக  நெறிகளையும் சொல்லி வரும் இனம் அந்தணர்கள்.

வேதம் படித்து அதன் வழி வாழும் அந்தணர்களை நிந்திப்பதும் அவர்களைத் தமிழினத்தின் விரோதிகள் என்று  சிந்திப்பதும் நமது தமிழ்ச் சமுதாயத்தில் விஷ விதைகளைத் தூவி, தமிழினத்தையே வேரறுக்கும் மூடர்களின் செயலாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் உயர் நிலையையும்  உன்னத நெறிகளையும்  பாரம்பரியமாகக் கட்டிக் காத்து வருவதில் அந்தணர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

நம் மூதாதையர் அந்தணர்களை சமூகத்தின் உயர் மதிப்பில் வைத்து பன்னெடுங் காலமாக பணிவும் கனிவும் காட்டிப் போற்றி மதித்து வந்தனர்.

நம் அப்பனும் பாட்டனும் காட்டிய  இந்தப் பண்புக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தில் இனத் துவேஷத்தை எழுப்பி வரும் கேடர்கள் அறிவிலிகளே.

’இந்த அறிவிலிகளின் கூட்டத்துக்கு தலைவனாக எவன் வேண்டுமானாலும் இருக்கட்டும்; நாம் அவர்களுக்கு எதிர்த் திசையில்  இருப்போம்’என்கிறவனே உண்மைத் தமிழன்.

“யாதும் ஊரே;யாவரும் கேளிர்”

என்று கணியன் பூங்குன்றனார்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
சொன்ன இணையற்ற சமூக உறவுப் பண்பு மொழியைப் பாழ்படுத்தும்
தமிழினத்துரோகிகளாகச் செயல்படுபவர்கள்தான் நம்மிடையே பிரிவினையை வளர்க்கும் பித்தலாட்டத்லைவர்களாய் பலர் முளைத்து, சாதீயை வளர்த்துக் கொண்டு அதில் குளிர்காயத் தலைப்பட்டுள்ளனர்.

சாதி இல்லை என்று சாதிப்பதும்
சாதியாலேயே சாதித்துக் கொள்வதும்
இந்தத் தலைவர்களின் சாதிதான்.

இவர்களுக்கு தமிழின் மாண்பும் புரியாது;மானுடத்தின் நோன்பும் தெரியாது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே;அவர்
சிந்தையில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந் நாடே’

என்று பாரதி பாடிய  பரம்பரைப் பண்பை எதிர்வரும் சந்ததியினரும் உணரும் வண்ணம் தமிழ்ச் சாதிகளிடையே  நல்லிணக்கமும் நட்பும் பேணி வருவோம்.

இனத் துவேஷம் காட்டிப் பேசி எவரேனும்  இந்தப் பதிவுக்கு எதிராக இங்கே எழுத்தின் மாண்போடு எதிர் வரட்டும்;நாம் நமது எழுத்ததிகாரத்தின்  ஆட்சியை நிலை நாட்டுவோம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.8.2012

3 comments:

Anonymous said...

உங்கள் கருத்துக்கள் முரணாக இருக்கின்றது வள்ளுவனை சமணர் என்றும் சொன்னார்கள்.குறள் என்ன சொல்கின்றது எ.யா.வா.கே.மெ.பொ.கானதுதானே அறிவு அப்படியானால் அவர்கள் கூற்றுக்கும் உங்கள் பதிலுக்கும் முரண்பாடு வருகின்றது.2வது அந்தனர்கள் என்பவர்கள் யார்?விளக்கம் தேவை மேற்கு வங்கம் கொதித்தாதால் வங்காள தேசம் பிறந்தது.தமிழகம் கொத்தித்திருந்தால் தமிழீழம் பிறந்திருக்கும் உங்களைப்பார்த்து நாங்கள் கேட்கின்றோம் எங்கிருந்தீர் இவ்வளவு காலமும்.சிவன் முத்தமிழ்ச்சங்கத்தின் தலைவன் புராணம் சொல்கின்றது கும்பிடப்போகும் நான் தமிழன் வீற்றிருக்கும் சிவனோ தமிழன் இடையில் எதற்கையா சமஸ்கிருதம் புரியாத மொழியில் பூசை விளக்கமுடியுமா உங்களால்?இழத்தமிழன் உரிமைப்போராட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே அனேகமானவர்களுக்குத்தெரியாது ஏன் யார் காரணம் ஊடகங்கள் காரணம் யார்கையில் உடகங்கள்? தமிழகத்தைத்தாண்டவில்லை ஈழ உரிமைப்போராட்டம் ஏன்?பதில் உண்டா உங்களிடம் தமிழனின் அழிவுக்கு முக்கிய காரணம் இந்து மதம் சாதியைவளர்ப்பது இந்து மதம் பிரிவினையை வளர்ப்பது இந்துமதம்.நாங்களோ சைவசமயத்தவர்கள் சைவமும் தமிழும் சேர்ந்தவர்கள் நாங்கள் இந்தியாவின் மதம் இந்துமதம் மதம் என்றாலே வெறி என்பது தமிழ் அய்யா.இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற முடியுமா உங்களால் முடியுமென்றால் தமிழ் பற்றிப்பேசுங்கள் இல்லையேல் நீங்களும் உலகத்தமிழரை ஏமாற்றவரவேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம் அய்யா தமிங்கிலீஸ் பேசும் தமிழ் நாட்டவர்களே இதுவரை ஈழத்தமிழர்களை ஓரங்கட்டியது போதும் எனிமேலாவது உலகத்தமிழரை உலகத்தமிழினமாக வாழவிடுங்கள்.நன்றி.ம.பிள்ளை.M.PILLAI

ulagathamizharmaiyam said...

சென்னை,லட்சுமிபுரம் (கலாக்‌ஷேத்ரா காலனி) அவர்கள் இக்கட்டுரை பற்றி அனுப்பிய கருத்துரை இது:


From: malar mannan
Date: 2012/9/25
Subject: Re:
To: krishnanbalaa@gmail.com


அன்புள்ள நண்பருக்கு,
நீங்கள் அனுப்பிவைத்த கட்டுரையைப் படித்தேன். மிகச் சரியான அவதானிப்பு. உங்கள் வலைத் தளம் பற்றிய விவரங்களையும் அறிந்துகொண்டேன். ஒருமுறை அங்கு சென்றும் வந்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. அதில் கருத்தையோ எதிர்வினையையோ பதிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லாததால் என் பாராட்டைப் பதிவு செய்ய இயலவில்லை. தாங்கள் செய்துள்ள எந்த ஏற்பாடும் வாசகர் கருத்தைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பைத் தருவதாக இல்லை. விதண்டா வாதங்களையும், வெட்டிப் பேச்சுகளையும் நீங்களே தணிக்கை செய்துவிட்டு பயனுள்ள வாசகர் கருத்துகள் இடம் பெற வாய்ப்பளிப்பது தங்கள் வாசகர் வட்டம் விரிவடைய வசதி செய்யும் என்பது என் கருத்து. உதாரணமாகக் கூடன் குளம் பற்றி என் கருத்தைப் பதிவு செய்ய எனக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இன்றைய சூழலில் சரியான சிந்தனைப் போக்கை புதிய தலைமுறையினரிடமும் கடந்த தலைமுறையினரிடமும் உருவாக்குவது உங்களைப் போன்றவர்களின் கையில்தான் உள்ளது.

அன்புடன்,
மலர்மன்னன்

ulagathamizharmaiyam said...

நண்பர் திரு.மலர் மன்னன் அவர்களுக்கு,
வணக்கம்.

//விதண்டா வாதங்களையும், வெட்டிப் பேச்சுகளையும் நீங்களே தணிக்கை செய்துவிட்டு பயனுள்ள வாசகர் கருத்துகள் இடம் பெற வாய்ப்பளிப்பது தங்கள் வாசகர் வட்டம் விரிவடைய வசதி செய்யும் என்பது என் கருத்து. // என்ற உங்கள் கருத்து, நல்ல வாதங்களை அழகுபடுத்தி அதை மற்றவர்களும் மதித்து உணர்வதற்கான ஓர் உத்தி’ என்பது சரிதான்.

ஆனால் அவ்வாறு செய்துவது,தற்பெருமைக்கான உத்தி என்பதும் அது, இந்த தேசத்தின் மீதும்,தெளிவான நெறிகளின்மீதும் பற்றுடையோர் குழுவை நாம் விரிவடையச் செய்துகொள்வது போலும் இருப்பினும்,அத்தகை உயர்ந்த நெறிகளில் ஈடுபாடில்லாமல் ‘தான் தோன்றித்தனமாக’ சிந்தித்து விதண்டாவாதம் செய்வோரின் முகம்,அங்கு படித்துத் தங்கள் ஆதரவுக் கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்ற நண்பர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடும் உத்தியாகவும் ஆகக் கூடாதல்லவா?

அத்தகையோரின் கருத்துக்களை நாம் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களைக் குட்டவும் நெறிப்படுத்திச் சிந்திக்க வைக்கவும் நாம் தயாராக இருப்பதுதான் எழுத்துக்கும் மரியாதை;படைப்புக்கும் மரியாதை.

ஒரு சார்பான எதிர்பார்ப்புடன், அதாவது எல்லாம் பாராட்டுரையாகவே இருக்க வேண்டும் என்று இருப்பது எழுத்தின் நேர்மையைச் சிறுத்துப் போக வைத்து விடும் என்பதென் எண்ணம்.

சரி,தாங்கள் நேரிடையாகவே உங்கள் கருத்துக்களை அதில் பதிவுசெய்யும் வகையில்தானே எனது வலைத்தளத்தை வைத்திருக்கின்றேன்? மறுபடியும் முயன்று பாருங்கள்,

உங்கள் அன்பிற்கும் அறிவார்ந்த நட்புக்கும் மகிழ்கின்றேன்.

தொடர்ந்து சந்திப்போம்;பேசுவோம்.

மீண்டும் நன்றி.

தங்கள் அன்புள்ள,
கிருஷ்ணன்பாலா
25.9.2012