Saturday, October 9, 2010

அன்னை தெரசாவின் மைந்தர் (எழுதுகிறேன்:2)

நண்பர்களே,


உலகில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் இருக்கும்; அல்லது குறைந்த பட்சம் கனவாவது இருக்கும்.


லட்சியப்படி வாழ்கின்றவர்களும்; கனவு நிறைவேறி வாழ்பவர்களும் எத்தனை பேர்?


அதிலும் கோடானு கோடி மக்களில் எத்தனை பேர், பிறர் வாழ்வதற்கு-


குறிப்பாக-


ஏழை,எளியோர்,கைவிடப்பட்ட முதியோர்,நரிக்குறவர் சமுதாயம்,பாம்பு பிடிப்போர் குடும்பங்கள்,மூளைவளர்ச்சி  குன்றிய குழந்தைகள்,மாற்றுத் திறனாளிகள் என்று சமூகத்தில் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் பிரிவினருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கிறார்கள்?


எத்தனை பேர் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வசதி எல்லாம் வந்த பின்னரும் தங்கள் வாழ்க்கைப் பாதையை மறக்காமல் நினைவு கூர்ந்து எளிய வாழ்விலேயே இதயம் நிறைவு கொள்கிறவர்கள்?


எத்தனை பேர் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இன்றி அடக்கமாக வாழக் கற்றுக் கொண்டனர்?


எத்தனை பேர், சமூக நலனில் அக்கறை கொண்டு தங்கள் வாழ்வில் கறை படியாமல் காத்துக் கொள்கின்றனர்?


எந்த நேரமும் இறைவனின் கருணையை மறவாமல், வறுமை நிலையில் இருந்த காலத்தில் எப்படி அவனிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்து வந்தாரோ, அப்படியே இப்பொழுதும் – காலக் கொடையாலும் கடின உழைப்பாலும் செல்வமும் தேவையான வசதிகளும் வந்த பின்னரும், அதே பிரார்த்தனையுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவதும் ஒவ்வொரு நாளும் முடியும்போது இறைவனுக்கு நன்றி சொல்வதுமாக வாழ்பவர்கள் இந்த மண்ணில் எத்தனை பேர்?


ஒரு மனிதன், தான் வசதியோடு வாழ்வதற்குரிய நல்ல வீடு, அமைதியும் அன்பும் வடிவான வாழ்க்கைத் துணை, அளவான ஆணும் பெண்ணும் ஆன மக்கட் செல்வம், கல்வி நிறுவனங்கள், மற்றும் எந்தத் தொழிலையும் மேற்கொள்வதற்கான இடம், பொருள் ஏவல் என்று வாய்ப்புக்கள் யாவும் அமைந்துள்ள நிலையிலும் அதன் வசதிகளில் மூழ்கிப் போகாமல், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,அவற்றை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு,சமூகத் தொண்டில், தான் தொடங்கி நடத்தும் தொண்டு பணிகள் குறித்து எந்நேரமும் சிந்தித்துச் செயல்படுவதிலேயே வாழ் நாளைக் கழிக்கும் விருப்பம் கொண்ட மனித நேயரைப் பார்த்துள்ளீர்களா?


இப்படி நமக்குள் வியந்து பல கேள்விகளை நாமே கேட்டுக்கொண்டு, அதற்கான பதிலையும் புளகாங்கிதத்தோடு உணர்ந்து,பெருமையோடு எண்ணிப் பார்க்கவும் நம்மால் முடிகிறது என்றால் அதற்கு இந்தக் கேள்விகளின் நாயகனும் அவற்றின் விடைகளுக்குரிய மனிதநேயரும் தென் தமிழ் நாட்டில்;திருநெல்வேலியில் வாழ்கின்ற; எனது கெழுமை நண்பரும்;ஏழை எளியவர்களின் ஒளிவிளக்கும் மனித நேயப் பண்பாளருமான டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள்தான்.


“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்”


 “மருந்தாகித் தப்பா மரத்தற்றால்;செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”.


வள்ளுவன் சொன்ன வாய் மொழி இவை.


வள்ளுவப் பெருமானார்,தமது திருக்குறளில் 1330 குறள் மொழிகளை எழுதியிருக்கிறார்; அத்தனையும் இந்த உலகத்துக்குச் சொத்து.


‘ஒப்புரவு அறிதல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட பத்துக் குறட் பாக்களில் இந்த இரண்டு குறள்களும் நூற்றுக்கு நூறு டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களுக்கே பொருந்தும் அர்த்தம் உள்ளவை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


மக்களுக்குப் பயன் படுகிற கனி மரங்கள் எங்கோ தூரத்தில் ஒரு வனாந்தரத்தில் அல்லது கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காட்டுக்குள் வளர்ந்திருந்தால் யாருக்குப் பயன்படும்? அதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனே இல்லை.அவ்வாறு யாரும் அணுக முடியாத இடத்தில் அம் மரம் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாமற் போனாலும் ஒன்றுதான்.


ஆனால்,பயன்மிகும் கனி மரமானது ஊருக்கு நடுவே வளர்ந்திருந்தால், கடும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அதன் நிழலில் தங்கிக் களைப்பாறவும், சுவைமிகுந்த கனிகளைப் பறித்து உண்டு மகிழவும் மக்களுக்கு எவ்வாறு உதவுகிறதோ,அதுபோல செல்வம் என்கிற மரமானது நயன் உடையான் ஆகிய நல்ல குணங்களை உடையவனிடத்தில் இருக்கும்போது மக்களுக்குப் பலவகையிலும் பயன் உடையதாக அமையும்.


அதேபோல,மருந்தாகப் பயன்பெறக் கூடிய மரம் ஒன்று மக்கள் வாழ்கின்ற பகுதியில் வளர்ந்திருந்தால் எப்படி பலருக்கும் பலவகையில் பயன்படுமோ,அதுபோல பெருந்தகையாளனிடம் அமைகின்ற செல்வமும் அவ்வாறே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்கள் நலத்துக்கென்றே செலவிடப்படும்’என்கிறது இரண்டாவது குறள்.


ஆக,மக்களுக்குப் பயன் படும் செல்வத்தை, நயன் உடையான்;கண் படின்’என்றும் ’”பெருந்தகையாளன் கண் படின்’ என்றும் சான்றோனை இரண்டு வகையாகக் குறளின் பெருமை கூறுகிறது. அந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவராக டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள் திகழ்வதைக் காண்கிறேன்.


ஆம்,நண்பர்களே,


அன்பும் இரக்கமும் கருணையும் இயல்பாக அமைந்து மனித நேயமிக்கவரான டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களிடம் செல்வமானது உள்ளூரில் பழுதுள்ள பயன் மரத்தைப் போன்றும்; மருந்துக்குப் பயன் படும் மரம் போன்றும் அமைந்து இருப்பதால் அது (அந்தச் செல்வம்) இன்று நூற்றுக்கணக்கான ஏழை,எளிய பாமர மக்களின் நலவாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சுகாதாரம்,கல்வி முன்னேற்றம், இயற்கைச் சூழல் பராமரிப்பு, கிராமப்புற மகளிர் முன்னேற்றம் முதலான பல்வேறு அறப்பணிகளுக்கும்,உயர் தரமான பள்ளிகூடங்கள் (Matric Hr.Secondary Schools),பொறியியற் கல்லூரிகள் (Engineering Colleges),தொழில் நுட்பப் பயிற்சிக் கல்லூரிகள் (Polytechnic Colleges) ஆசிரியர் கல்வியியற் கல்லூரி,ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,தொழிற் பயிற்சி மையங்கள் (ITIs) என்று பல நிலைக் கல்விக் கூடங்களை உருவாக்கி, பிற்பட்ட பகுதியாகத் திகழும் திருநெல்வேலிச் சீமையில் கல்வி வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்பட்டு வருவதைக் கண்கூடாக யாரும் காணலாம்.நண்பர் டாக்டர் எஸ். கிளிட்டஸ் பாபு அவர்கள், சமூக ஆய்வியலில் காந்தி கிராம் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சிப் (DOCTORATE-முனைவர்) பட்டம் பெற்றவர்.


கிராமப் பகுதியில் வாழும் பிற்பட்ட நிலையில் வாழும் எளிய, பாமர மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் பொறிதட்ட,சொந்த மாவட்டமான கன்யாகுமரியை விட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் SCAD (Social Change And Development) என்ற,அதாவது,சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தைக் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர், இன்று ’ஸ்காட்’ (SCAD) என்றால் தென் இந்திய மாவட்டங்கள் முழுவதும் அனைவருக்கும் அறிமுகமான பெரிய நிறுவனமாய் வளர்த்து,நிமிரவைத்துள்ளார்.


SCAD குழுமத்தின் சமூக நல அறப்பணிகளும்,கல்வி வளர்ச்சிப் பணிகளும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றிப் பரவி,இப்பகுதியின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு நிற்கின்றது.


இதன் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் அவற்றின் நிறுவனரான டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களின் ஒழுக்கம் மிகுந்த கடின உழைப்பும் முழுமையான தொண்டும் தியாகமும் அவருடைய வாழ்க்கைத் துணையான டாக்டர் அமலி கிளிட்டஸ் பாபு அவர்களின் அதே தியாக மனமும் தெளிந்த ஒற்றுமையும்தான் காரணம்.


உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு இத் தம்பதியின் வாழ்வும் நோக்கும் பணிவும் அடக்கமான பண்பும் ஒற்றுமையும் உயர்வும் ஒரு முன் உதாரணமாகத் திகழக் கூடியவை.


இறைக் கல்வியில் தேர்ந்த ஞானமும் புலமையும் பெற்ற டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களின் சேவை மனப் பான்மை ஒரு கிறித்துவத் தந்தையாகத்தான் தொடங்கிற்று.


‘ஜாதி,மதங்களைக் கடந்து ஏழை,எளிய மக்கள் எல்லோருக்கும் உதவ வேண்டும்’ என்ற சமூக நல்லிணக்கச் சிந்தனையின் பரிணாமத்தில்


“இல்லறம் அல்லது நல்லறமில்லை”
என்று அவ்வைப் பெருமாட்டி சொன்னவாறும்;


“துறந்தார்க்கும்;துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை”


என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குப்படியும்


டாக்டர் அமலி அவர்களை வாழ்க்கைத் துணையாய் ஏற்று, இல்லற நெறிப்படியே அறத்தொண்டு புரிந்து வரும் இவர், புறத்திலே பிறரைப் போல் வாழ்ந்தாலும்; அகத்திலே ஒரு துறவிக்கு ஒப்பானவராய்த்தான் வாழ்கிறார் என்பதை இவருடைய அன்றாட வாழ்வியல் காட்டும்.


தனக்கென, தன் குடும்பத்துக்கென, தன் உறவுச் சொந்தங்களுக்கென எவ்விதப் பயனும் கருதாமல்,நிறுவனம் அதன் ஊழியர்களின் நல்வாழ்வு,சமூகத் தொண்டில் முழுமையான ஈடுபாடு என்று தன்னலம் கருதாமல் வாழ்கின்ற மனதின் பரிபூரண உரிமையாளராகத் திகழ்கிறவர் டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு என்பதை வியப்போடும் பெருமையோடும் பார்க்கிறேன்,இன்று.


இவருடைய சமூகத் தொண்டுணர்வின் தாக்கம் என்ன என்பதை உற்றுப் பார்த்தால், அன்னை தெரசா நம் மனதில் புன்னகை பூத்து அருளாசி புரிவது தோன்றும்.


நண்பர்களே,
டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள், அன்னை தெரசா அவர்களின் இறை நேசம்,அன்பு, இரக்கம்,கருணை, தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகியவற்றை முழு மனதோடு பின்பற்றி,அவரது மானசீகப் புதல்வனாய்த் தன்னை உருவகப் படுத்திக் கொண்டு அன்னை தெரசாவின் அறவழியில் உன்னதமாய் நடக்கும் ஒழுக்கசீலர் என்பதை இவரோடு நெருங்கி பழகுபவர்களுக்குப் புரியும்.


அத்தகைய வாய்ப்பை,டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களுடன் நான் நெருங்கிப் பழகி, அவருடைய அறப் பணிகளை நேரில் உணர்கின்ற சந்தர்ப்பத்தை, மூத்த பத்திரிகையாளரும்,தமிழ்ப் பற்றாளரும்,எனது 30 ஆண்டுக்காலப் பத்திரிகைத் துறை உற்ற நண்பருமான திரு ஆர்.நூருல்லா அவர்கள் ஏற்படுத்தித் தந்ததன் மூலம் பெற்றவன் நான்.


அன்னை தெரசாவின் நினைவை என்றென்றும் போற்றும்வகையில் ’அன்னை தெரசா பொறியியற் கல்லூரி’ என்று பொறியியற் கல்லூரி ஒன்றைத் தூத்துக்குடி அருகே டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள் சென்ற ஆண்டுமுதல் தொடங்கி இருப்பதை நாடறியும்.


இவர் உருவாக்கிய ‘ஸ்காட்’ நிறுவனத்தின் சமூகத் தொண்டுகள் யாதெனப் பட்டியல் இட்டால், உண்மையிலேயே நம்பமுடியாத அளவுக்கு அதன் அறப்பணிகள் தொடர்கின்றன.


ஒரு அரசாங்கம் பாமர மக்களுக்கு என்னவெல்லாம் சமுதாய நலன் குறித்த திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்துமோ,அதைப் போலவே, பல்வேறு சமுதாய நலத் திட்டங்களைத் தீட்டி, தமிழ் நாட்டின் தென்பகுதி மக்களுக்கு-குறிப்பாக ஏழை, எளிய, பாமர மக்களுக்குப் பயன்படும்படி அவற்றை நிறைவேற்றியும் வருகிறார்.


12.10.2010 அன்று அவருடைய பிறந்த நாள். இந்த நாள், ’ஸ்காட்’ குழுமங்களின் நிறுவனரும் தலைவருமான (CHAIRMAN: SCAD Group of Institutions, Tirunelveli) டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்களின் பிறந்த நாள் என்பதை விடவும்,மனித நேயத்தின் மகத்தான நாள் என்றுதான் கூறுவேன்.


இவரது மனித நேயமிக்க சமூகத் தொண்டுகளைக் கவிதை வாழ்த்தாகவே இங்கே அமைக்கின்றேன்.அது உண்மை,உணர்வாக உங்கள் உள்ளங்களில் உட்காரும் என் நம்புகின்றேன்.


டாக்டர் கிளிட்டஸ் பாபு அவர்களின் எளிமையிலும் இனிய பண்பிலும் நட்பிலும் திளைத்த மனதின் கவிதை வாழ்த்து இங்கே வாசிக்கப் படுகிறது:

மனித நேயம் வாழ்க!
-------------------------------------------
மண்ணிற் பிறந்த மானிடர் எல்லாம்
மகிழ்ச்சியில் வாழ்வதைக் குறித்தே
கண்ணில் தெரியாக் கற்பனை மிகுந்து

கடல் போல் ஆசை கொண்டு


பெண்டு,பிள்ளைகள்,பெற்றோர்,வீடு
பெரும்பணச் சேர்க்கை யோடு

உண்டு,கழித்து,உறங்கி எழுந்து
உற்சாகத்தில் தினம் மிதந்து


ஆடம்பரங்கள்,அணிகல் மற்றும்
ஆலய வழிபா டெல்லாமும்
தேடும் விதத்தை விரும்பிடுவோர்;
தெளிவில்லாமல் முடிந்திடுவோர்!



வசதிகள் யாவும் இருந்தாலும்
வாழ்வில் அவற்றைக் கருதாமல்
கசடுகள் நீக்கி வாழ்வதையே
கற்றுக் கொண்ட ஓர் மனிதன்;



கிளிட்டஸ் பாபு எனும் பெயரில்
கீர்த்தியில் இங்கே வாழ்கின்றார்;
களிப்புடன் அவரை இறைவனவன்
கருணை செய்தே அருள்கின்றான்!

அடக்கம்,இரக்கம்,ஒழுக்கம் என்று
அறிவுடன் உணர்ந்து, அவை நாடி
நடக்கும் இவரை ஈன்றவர்கள்
நாடு மதிக்கும் சான்றோரே!

நல்ல மனைவி என்றமைந்து
நாளும் இவரின் துணை நின்று
வெல்லும் வாழ்வைப் பெற்றதெல்லாம்
வேதன் இறைவன் நற்கருணை!

ஏழை,எளியோர்,பாமரர்கள்;
எவரும் இல்லா முதியவர்கள்
வாழும் வழிக்கே தன் உழைப்பை
வழங்கும் மனிதர் இவர் வாழ்க!

தொழுநோய் உற்றுக் கலங்கிடுவோர்;
துயர்ப்படும் குவாரித் தொழிலாளர்;
நழுவிய சமூக நரிக் குறவர்;
நாதி இல்லாத உப் பளத்தார்:

பிள்ளைகள் கல்வி பெறுவதற்கும்;
பெண்கள் அறிவு பெறுவதற்கும்
உள்ளம் நெகிழ்ந்து, அதற்கென்று
உதவிகள் ஆயிரம் செய்கின்றார்!

பசுமைக் காட்சி பரவி, எங்கும்
பச்சைக் காய்கறி கிடைத்திடவும்
புசிக்கும்குடிநீர் தூய்மையுறப்
புனைந்தார் திட்டம் பலவாறே!

கல்விச் சாலை நிறுவனங்கள்
கணக்கில் வாரா அறப்பணிகள்;
அல்லும் பகலும் இவர் உழைப்பு
அவற்றின் பெருமை காப்பதற்கே!

எண்ணில்,பெரிய மனதுடையார்;
எதிலும் கவலை கொண்டுடையார்!

மண்ணின் மைந்தர் இவர் வாழ்ந்தால்
மனித நேயம்தான் வாழும்!

நீண்டஆயுள் இவர் கொண்டு
நிறுவனம் யாவும் புகழ் பெருகி
ஆண்டுகள்தோறும் அவை வளர்ந்து
அனைத்தும் வாழ்ந்திட வாழ்த்துகின்றோம்!
--------------------------------------------



இவர் வாழ்வது மனித நேயத்தின் அடையாளம்; இவரை வாழ்த்துவது,மக்களுக்கு அறத் தொண்டு புரிவோரை நாம் அங்கீகரித்துக் கொண்டுள்ளதற்கான அடையாளம்.


இந்தப் பெருந்தகையாளனை,பிறர் நன்மைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வாழும் இறை நேசனை எனது மன நிறைவோடு மனித நேயம் போற்றுகின்ற தமிழ் உறவினர்கள் சார்பாகவும்,'உலகத் தமிழர் மையம்' சார்பாகவும் (http://ulagathamizharmaiyam.blogspot.com) உங்கள் அனைவரின் நட்பார்ந்த உறவு சார்பாகவும் வாழ்த்துகின்றேன்! வாழ்த்தி,அவருடைய அறத் தொண்டுகளைப் போற்றி வணங்குகின்றேன்.


நாம் அனைவரும் ஒருமனதாக, இறைவனை வணங்கி,மக்களுக்கு. தன்னலம் கருதாது நற்பணி ஆற்றும் டாக்டர் கிளிட்டஸ் பாபு மற்றும் அவர் குடும்பத்தினரை நலமோடும் வளமோடும் வைத்திருக்க வேண்டுவோம்.


வாழ்க நீடூழி!
வாழ்க டாக்டர் எஸ்.கிளிட்டஸ் பாபு அவர்கள்!
வாழ்க இவர் தொண்டு!


அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
09:10.2010 / 02:03

No comments: