Tuesday, May 1, 2012

எழுத்துச் சாசனம் (சீறும் செந்தமிழ்க் கவிதை)




எழுத்து என்றால் என்னவென்று இங்கு காட்டுவோம்;அது
என்ன’வென்று கேட்பவர்தம் புத்தி தீட்டுவோம்;
கொழுப்பெடுத்து எழுதுவோரை அடங்க ஓட்டுவோம்:ஞானம்
கொண்டு இங்கு நாடுவோர்க்கு விருந்து ஊட்டுவோம்!

சமய நெறி தத்துவங்கள்,வாழ்க்கை நலன்களைச்
சரம்தொடுக்கும் எழுத்துக்களாய் இனிமை கூட்டுவோம்;
எமை எதிர்க்கும் எழுத்துகளை எதிர்த்து வெல்வதில்,
இரக்கமின்றி வாளெடுத்து வலிமை காட்டுவோம்!

எவர் எதிர்த்தபோதும் அதில் அச்சம் இன்றியே; நம்
எழுத்துக்களில் உண்மை கொண்டுஅவரை வெல்லுவோம்!
தவறு செய்து எழுதுவதில் வெட்கமின்றியே;இங்கு
தமிழன் என்று சொல்லுவோரை எழுதிக் கொல்லுவோம்!

அக்கினியின் குழம்பெடுத்து அமுதமாக்கியே; அதை
அழகுத்தமிழ் உரைநடையில் பூசி மெழுகுவோம்;
சக்கரையில் தேன் பாகும் மூன்று கனிகளும்;நாம்
சாற்றுகின்ற முத்தமிழாய்ச் சாறு பிழியுவோம்!.

செறிவு மிக்கதமிழ் மொழியின் அமுதம் உண்டவர்;இங்கு
சிறுமைகொண்டு திகழ்வதில்லை;உள்ளம்திறக்கிறோம்;
தறுதலைபோல் எழுதுகின்ற சிறுமை மனத்தவர்;தாம்
தமிழன் என்று சொன்ன போதும் நட்பை மறுக்கிறோம்!

நமையறிந்து கொண்டவர்முன் அடங்கி நெகிழ்கிறோம்;ஒரு
நச்சுமனம் கொள்பவரை அடக்கி மகிழ்கிறோம்:
இமைப் பொழுதும் நேர்மை தவறா திருக்கிறோம்;எம்
எழுத்துக்களில்தான் இவற்றை எழுதி வைக்கிறோம்!

எழுதுகின்ற இலக்கணத்தின் எல்லை கண்டு நாம்
ஏறி நிற்கும் உச்சியின் கீழ் இமயம் காணுவோம்:
பழுது வென்ற பைந்தமிழின் சொத்துரிமையில்;நம்
பண்புமிக்க பரம்பரையைக் கட்டிப் பேணுவோம்!

--------------------------: கிருஷ்ணன்பாலா :--------------------------------
                    1.5.2012

No comments: