Saturday, May 14, 2011

நட்புடனும் நடுநிலையுடனும்! (எழுதுகிறேன்: தொடர்-5)

அறிவுசால் நண்பர்களே,
வணக்கம்.


"தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு,மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்” என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன்.


'தாங்க முடியாத அரிப்பைத் தீர்த்துக் கொண்டாக வேண்டும்’ என்ற தவிப்பில் கண்ணுக்குத் தட்டுப்படும் கொள்ளியை எடுத்துச் சொறிந்து கொள்வதைப் போல, தாங்க முடியாத கோபத்தைத் தீர்த்துக்கொள்ள,இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சிக்கே சரியாக வாக்களித்து விட்டனர் நம்பொது ஜனங்கள்.


அநீதியையும் அக்கிரமத்தையும் தண்டிக்கும் அஹிம்சை நெறியாக, ஜனநாயக முறையிலான வழியே தேர்தல் என்று வேண்டுமானால் நாம் பெருமை கொள்ள முடியுமே தவிர, அதுதான் ஒரே வழி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.


அஹிம்சை விவேகமானதுதான்; ஆனால், வீரமானது அல்ல;


ஏனெனில் முள்ளை முள்ளால் எடுக்கும் முட்டாள்தனம் அங்கே முளைத்துக் கொண்டிருக்கின்றது.


(செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டுகிறதே!)


நமது தேர்தல்கள், ஒரு திருடனைத் தண்டிக்கும் அதே சமயம் இன்னொரு திருடனையல்லவா மகா கெட்டிக்காரனாக மாற்றிக் கொண்டிருக்கின்றன?


’ஒரு திருடன் தண்டிக்கப்படும் திருப்தியில் இன்னொரு திருடன் திருந்தும்நிலை வருவதில்லை’ என்னும் வழக்கம் வந்து விட்டதே!


மானமும் வெட்கமும்கெட்ட கைதேர்ந்த நடிகர்களின் நாடகக் களமாக நமது அரசியல் முறைமை ஆகிவிட்டது.


காந்தியும் காமராஜர்களும் தேசமும் தேசபக்தியும் ஏட்டளவில் இடம் பெற்ற இலக்கண இலக்கியங்கள் ஆகி விட்டன; அவற்றைப் படித்துவிட்டு, இந்த நாடக அரங்கில் தங்கள் நடிப்புத் திறனைக் காட்டிக் கர கோஷத்தைப் பெற்றுவிடும் இந்த அரசியல்வாதிகளுக்கு ’பத்ம விபூஷண்கள்’ என்ன, ’பாரத ரத்னா’ விருதுகளையே வழங்கி விடுகின்றனர் மக்கள்.


இதற்கு அதிர்ச்சி வைத்தியம் தர எண்ணும் இந்திய இளைஞன் மாவோயிஸம் என்ற கூரிய கத்தியை எடுக்கும் புத்திக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளப் புறப்பட்டு விடுவதையும் நாடு பார்க்கிறதே!


நண்பர்களே,


ஒரு சுழற் காற்று சூறாவளியாக மாறிவிடும்போது, கோபுரக் கலசங்களும் சாயும்; குப்பைகளாகிய எச்சில் இலைகள்கூட கோபுரத்தின் உச்சியில் மண்டும்.


அதில் அந்த எச்சில் இலைகள் தங்களைக் கோபுரக் கலசங்களாக எண்ணி இறுமாப்புக் கொள்ளும் ஈனக்குணத்தை இங்கே இயல்பாகக் கண்டு வெட்கப்படுவதைவிட, நாம் வேறென்ன செய்து விட முடியும், இந்த ஜன நாயக்தில்?


அரசியலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலம், தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக,இறுமாப்புக் கொண்டு எக்காளம் இடுவதையே கடந்த காலங்கள் நிரூபித்து வந்ததைக் கண்டோம்; இனியும் அதையேதான் காண்போம்.


ஏனெனில், கலி காலம் முடிவுக்கு வரவில்லை;அது தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டு இயல்பாகத் தனது ஆட்சியைத் தொடர்கிறது.


எனினும்-


இந்தத் தேர்தலில் ஜன நாயகத்தின் பெயரால் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்; அது பண்புள்ளவர்களின் கடமை!


ஆனால், இன்று இவர்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் மக்களின் ஆரவாரத்தையும் அடுத்த தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்தி,கண்ணதாசன் சொன்ன வார்த்தைகளையே வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல நம் பொது ஜனங்களுக்கும் நினைவூட்டி நிற்போம்:


கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவைதான்:


’பணமும், பதவியும் மோசமானவை’ என்று ஞானிகள் ஏன் கூறினர்?
அவை வரக்கூடாதவனுக்கு வருவதாலும்; கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதாலும்தான்.


சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருப்பதால், சுடத் தெரிந்தவனும் அவனிடம் சரணடைகிறான்.


ஆட்சி, ஒரு முட்டாளின் கையில் இருந்தால், அறிவுள்ளவனும் அவனுக்கு
அடிமையாகிறான்.


விதை இல்லாமல் புல் முளைக்கிறது; வேரில்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேரும் இல்லாமல் அரசியல் முளைக்கிறது.


நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருப்தி செய்வதைத் தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஆனால்,ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே!


அழுத்தமான ஜனங்களைத் திருத்தியமைக்க அறிவுள்ள தலைவன் வேண்டும்.


நட்புடனும் நடு நிலையுடனும்-
கிருஷ்ணன் பாலா
14.5.2011

2 comments:

Barani said...

Pudiya vidiyalai tedi

Ellorum ondru seruvom...........

Indha therdhal ella arasiyal vadhikalukkum oru padam pukattivittadhu....

innium maradhor indha mannil tevai illai......

Jadhi katchigal kalayavendum........

Katchi pin odum thondar kootam nirutha padavendum......antha talaivan evalvu tappu seithalum avan pin odupavargal sindhikavendum......

ulagathamizharmaiyam said...

உங்கள் உணர்வு இங்கே பதிவு செய்யப்படுகிறது.
நன்றி.