Friday, February 27, 2015

இவர்களே,கோடாரிக் காம்புகள்!


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

'தான் ஒன்றும் இறைப்பணி செய்யவில்லை; கிறிஸ்துவ மதம் இங்கே அதிக அளவில் பரவுவதற்காகவே பணி செய்ய வந்தேன்: அதைத்தான் முழுமூச்சாகச் செய்து வருகின்றேன்’ என்பது மதர் தெரசா அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்ட உண்மை.

அந்த உண்மையின் அடிப்படையில் “ இந்தியப் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழித்து, மதம் மாற்றும் வேலைகளைச்   செய்தவர் மதர் தெரஸா;அதனால் அவரை நாம் ’புனிதர்’  என்று ஏற்றுக் கொள்ள முடியாது; அவர் செய்தது இந்திய இறையாண்மைக்கு எதிரான சேவையைத்தான்’ என்ற பேருண்மையை,   ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக்’ அமைப்பின் இன்றைய  தலைவர் திரு மோகன் பகவத் அவர்கள் குறிப்பிட்டு, “ மதர் தெரஸா அவர்கள் இந்தியாவில் செய்து வந்த தொண்டுகள் அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்தக் கலாசாரப் பண்புக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் எதிரான ‘மத மாற்றத் தொண்டே தவிர அறப்பணி அல்ல’.என்பதையும் தீரத்தோடும் தெளிவோடும் உணர்த்தி இருக்கிறார்.

இந்தக் கருத்தில் தேச நலன் பேணுகின்றவர்கள் யாரும் மாறுபாடு
கொள்ள முடியாது.

மக்களின் பசியையும்  நோயையும் வறுமையையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களை மிக எளிதில் கிறித்துவத்தைத் தழுவச் செய்யலாம்’ என்ற  வாடிகனின் திட்டமானது நிச்சயம் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தைச் சீர் குலைத்து,அழித்து அதன் மக்களுக்குப் பணம்,பதவிகளைக் காட்டி அவர்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைக்கும் குரூரத் திட்டமே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மதம் மாற்றத்துக்காகச் செலவிடப்படும் பணமும் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளும் அளிக்கப்படும் சலுகைகளும் போகப் போக ஒரு தேசத்துக்கு எதிரான விளைவுகளைத்தான் தரும்.

எனவேதான், இந்தியாவில் ’மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் தேவை என்பது தேச நலன் பேணுவோரின் விருப்பமாக  இருக்கிறது..

நாட்டின் ஒட்டு மொத்த நலன் கருதி எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக,இங்கே மைனாரிட்டிகளின் ஓட்டுப் பிச்சைக்காகத் திருவோடு ஏந்தித் திரிகின்ற கட்சித் தலைவர்களும் நடுநிலையாளர்கள் என்று காட்டிக் கொண்டு இந்த மண்ணுக்கு எப்போதுமே கெடுநிலையாளர்களாக இருப்பவர்களும் கருத்துச் சுதந்திரம் என்ற  பெயரில் கண்டிப்பதும் விவாதம் என்ற பெயரில் மீடியாக்களில் வாந்தி எடுப்பதும் தங்கள் கடமை எனக் காட்டிக் கொண்டுள்ளனர்.

மதர் தெரஸா ஒரு மதப் பிரசங்கிதான்!
ஆனால் -
அவரைப் ’புனிதர்’ என்றும் ’விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்’ என்றும் பொங்கி எழுவோர் யாராயினும் அவர்கள் அதிகப்பிரசங்கிகள்.

அவர் செய்தது மதத்தைப் பரப்பும் தொண்டுகளைத்தான்.
அதற்காக அவருக்கு நோபல் பரிசும் புனிதர் என்ற போற்றுதலும் அளிப்பதெல்லாம் மதத் தொண்டினை ஊக்கும்விக்கும் ’ COMMERCIAL CONTRIBUTION' எனப்படும் ’வணிகநோக்க  வெகுமதி  ஊக்கு’விப்பே தவிர, உண்மையான மக்கள் தொண்டுக்கு அளித்ததாகாது.

உண்மையை உற்று நோக்காது மோகன் பகவத் சொன்னார் என்பதற்காகவே மதச் சாயம் பூசி அதற்கு உள் நோக்கம் கற்பிக்கின்றவர்களும் மதர் தெரஸாவின் உண்மையான நிலைக்கு மாறாகப்  பொய்யான புகழுரை வாசிப்போரும் கருத்துக் குருடர்கள் மட்டுமின்றி ,இந்தியப் பாரம்பரியத்தின் அழிவுக்கு ஆலாபணை செய்பவர்களும்தான்!.

இன்னும் சொல்லப்போனால் கோடாரிக் காம்புகள்.

அதாவது ஒரு மரத்தின் கிளையிலிருந்து செய்யப்பட்ட கோடரியானது அதன் தாயாகிய மரத்தையே  வெட்டுவதற்குப் பயன் ஆகிறதல்லவா?
அந்தக் கோடாரிக் காம்புகள்.

பிறந்த தாய் நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கின்றவர்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.2.2015

No comments: